பதிற்றுப்பத்து/ஐந்தாம்பத்து
Jump to navigation
Jump to search
பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பாடியவர்: காசறு செய்யுட் பரணர்
பாட்டு - 41[தொகு]
- புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய
- வணர்அமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
- பண்அமை முழவும் பதலையும் பிறவும்
- கண்அறுத்(து) இயற்றிய தூம்பொடு சுருக்கிக்
- 5 காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்
- கைவல் இளையர் கடவுள் பழிச்ச
- மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு
- வரைசேர்(பு) எழுந்த சுடர்வீ வேங்கைப்
- பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
- 10 மாஇருஞ் சென்னி அணிபெற மிலைச்சிச்
- சேஎர் உற்ற செல்படை மறவர்
- தண்(டு)உடை வலத்தர் போர்எதிர்ந் தாங்கு
- வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
- மழைபெயல் மாறிய கழைதிரங்(கு) அத்தம்
- 15 ஒன்(று)இரண்(டு) அலபல கழிந்து திண்தேர்
- வசைஇல் நெடுந்தகை காண்குவந் திசினே
- தாவல் உய்யுமோ மற்றே தாவாது
- வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
- முர(சு)உடைப் பெருஞ்சமத்(து) அரசுபடக் கடந்து
- 20 வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர்
- மிள(கு)எறி உலக்கையின் இருந்தலை இடித்து
- வை(கு)ஆர்ப்(பு) எழுந்த மைபடு பரப்பின்
- எடுத்தே(று) ஏய கடிப்(பு)உடை வியன்கண்
- வலம்படு சீர்த்தி ஒருங்(கு)உடன் இயைந்து
- 25 கால்உளைக் கடும்பிசிர் உடைய வால்உளைக்
- கடும்பரிப் புரவி ஊர்ந்தநின்
- படுந்திரைப் பனிக்கடல் உழந்த தாளே. (41)
- பெயர்: சுடர்வீவேங்கை
- துறை: காட்சி வாழ்த்து
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
- செந்துறைப் பாடாண்பாட்டு
பாட்டு - 42[தொகு]
- இரும்பனம் புடையல் ஈகை வான்கழல்
- மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
- சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ஊசி
- நெடுவசி பரந்த வடுஆழ் மார்பின்
- 5 அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது
- தும்பை சூடாது மலைந்த மாட்சி
- அன்னோர் பெரும நல்நுதல் கணவ
- அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ
- மைந்(து)உடை நல்அமர்க் கடந்து வலம்தரீஇ
- 10 இஞ்சிவீ விராய பைந்தார் சூட்டிச்
- சாந்துபுறத்(து) எறித்த தசும்புதுளங்(கு) இருக்கைத்
- தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
- ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
- கோடியர் பெரும்கிளை வாழ ஆ(டு)இயல்
- 15 உளைஅவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்
- மன்பதை மருள அரசுபடக் கடந்து
- முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர்
- ஒளிறுநிலை உயர்மருப்(பு) ஏந்திய களி(று)ஊர்ந்து
- மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின்
- 20 தேரொடு சுற்றம் உல(கு)உடன் மூய
- மாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்து
- வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
- தண்பல வரூஉம் புணரியின் பலவே. (42)
- பெயர்: தசும்புதுளங்(கு) இருக்கை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 43[தொகு]
- கவரி முச்சிக் கார்விரி கூந்தல்
- ஊசல் மேவல் சேய்இழை மகளிர்
- உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
- பெரும்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
- 5 விருந்தின் வீழ்பிடி எண்ணுமுறை பெறாஅக்
- கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
- வடதிசை எல்லை இமய மாகத்
- தென்னங் குமரியொ(டு) ஆயிடை அரசர்
- முர(சு)உடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்(பு)எழச்
- 10 சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
- போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
- இரும்பணை திரங்கப் பெரும்பயல் ஒளிப்பக்
- குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ
- அருவிஅற்ற பெருவறல் காலையும்
- 15 அருஞ்செலல் பேராற்(று) இருங்கரை உடைத்துக்
- கடிஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
- வரைவில் அதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்(து)
- ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்(கு)
- உறுவர் ஆர ஓம்பா(து) உண்டு
- 20 நகைவர் ஆர நன்கலம் சிதறி
- ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல்
- பாடு விறலியர் பல்பிடி பெறுக
- துய்வீ வாகை நுண்கொடி உழிஞை
- வென்றி மேவல் உருகெழு சிறப்பின்
- 25 கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
- மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
- கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
- அகவலன் பெறுக மாவே என்றும்
- இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
- 30 தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
- தொலையாக் கற்பநின் நிலைகண் டிகுமே
- நிணம்சுடு புகையொடு கனல்சினந்(து) அவிராது
- நிரம்(பு)அகல்(பு) அறியா ஏறா ஏணி
- நிறைந்து நெடி(து)இராத் தசும்பின் வயிரியர்
- 35 உண்(டு)எனத் தவாஅக் கள்ளின்
- வண்கை வேந்தேநின் கலிமகி ழானே. (43)
- பெயர்: ஏறாவேணி
- துறை: இயன்மொழிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 44[தொகு]
- நிலம்புடைப்(பு) அன்னஆர்ப் பொடுவிசும்பு துடையூ
- வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
- பெரிய ஆயினும் அமர்கடந்து பெற்ற
- அரிய என்னா(து) ஓம்பாது வீசிக்
- 5 கலம்செலச் சுரத்தல் அல்லது கனவினும்
- களை(க)என அறியாக் கச(டு)இல் நெஞ்சத்(து)
- ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் காணியர்
- காணி லியரோநின் புகழ்ந்த யாக்கை
- முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
- 10 நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை
- சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
- புலம்பெயர்ந்(து) ஒளித்த களையாப் பூசற்(கு)
- அரண்கடா உறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
- மோகூர் மன்னன் முரசம் கொண்டு
- 15 நெடுமொழி பணித்(து)அவன் வேம்புமுதல் தடிந்து
- முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
- ஒழுகை உய்த்த கொழுஇல் பைந்துணி
- வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
- கவலை கவற்றும் குராலம் பறந்தலை
- 20 முர(சு)டைத் தாயத்(து) அரசுபல ஓட்டித்
- துளங்குநீர் வியல்அகம் ஆண்(டு)இனிது கழிந்த
- மன்னர் மறைத்த தாழி
- வன்னி மன்றத்து விளங்கிய நாடே. (44)
- பெயர்: நோய்தபு நோன்தொடை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 45[தொகு]
- பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்
- புற்(று)அடங்(கு) அரவின் ஒடுங்கிய அம்பின்
- நொசி(வு)உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
- களி(று)எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
- 5 விழுமியோர் துவன்றிய அகன்கண் ணாட்பின்
- எழுமுடி மார்பின் எய்திய சேரல்
- குண்டுகண் அகழிய மதில்பல கடந்து
- பண்டும் பண்டும்தாம் உள்அழித்(து) உண்ட
- நாடுகெழு தாயத்து நனம்தலை அருப்பத்துக்
- 10 கதவம் காக்கும் கணைஎழு அன்ன
- நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிப்
- பிணம்பிறங்(கு) அழுவத்துத் துணங்கை ஆடிச்
- சோறுவே(று) என்னா ஊன்துவை அடிசில்
- ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
- 15 முள்இடு(பு) அறியா ஏணித் தெவ்வர்
- சிலைவிசை அடக்கிய மூரி வெண்தோல்
- அனைய பண்பின் தானை மன்னர்
- இனியார் உளரோநின் முன்னும் இல்லை
- மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
- 20 விலங்குவளி கடவும் துளங்(கு)இரும் கமம்சூல்
- வயங்குமணி இமைப்பின் வேல்இடுபு
- முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே. (45)
- பெயர்: ஊன்துவை அடிசில்
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 46[தொகு]
- இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
- சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கைத்
- திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
- வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
- 5 தொடைபடு பேர்யாழ் பாலை பண்ணிப்
- பணியா மரபின் உழிஞை பாட
- இனிதுபுறந் தந்(து)அவர்க்(கு) இன்மகிழ் சுரத்தலின்
- சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி
- ஊர்பாட்(டு) எண்ணில் பைந்தலை துமியப்
- 10 பல்செருக் கடந்த கொல்களிற்(று) யானைக்
- கோடுநரல் பெளவம் கலங்க வேல்இட்(டு)
- உடைதிரைப் பரப்பில் படுகடல் ஓட்டிய
- வெல்புகழ்க் குட்டுவன் கண்டோ ர்
- செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே. (46)
- பெயர்: கரைவாய்ப் பருதி
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 47[தொகு]
- அட்(டு)ஆ னானே குட்டுவன் அடுதொறும்
- பெற்(று)ஆ னாரே பரிசிலர் களிறே
- வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
- வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்
- 5 சொரிசுரை கவரும் நெய்வழி(பு) உராலின்
- பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல
- நன்நுதல் விறலியர் ஆடும்
- தொல்நகர் வரைப்பின்அவன் உரைஆ னாவே. (47)
- பெயர்: நன்நுதல் விறலியர்
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 48[தொகு]
- பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
- ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
- கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
- கடலொ(டு) உழந்த பனித்துறைப் பரதவ
- 5 ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர்
- கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
- கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
- கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
- வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
- 10 முனைசுடு கனைஎரி எரித்தலின் பெரிதும்
- இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
- பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
- நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
- மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
- 15 பொழில்வதி வேனில் பேர்எழில் வாழ்க்கை
- மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
- தீம்புனல் ஆயம் ஆடும்
- காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே. (48))
- பெயர்: பேர்எழில் வாழ்க்கை
- துறை: இயன்மொழிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 49[தொகு]
- யாமும் சேறுக நீயிரும் வம்மின்
- துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்
- கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்
- களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க
- 5 ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
- எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்
- வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
- மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
- வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
- 10 நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
- நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடி
- மழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்
- படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
- படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
- 15 வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
- கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த
- பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே. (49)
- பெயர்: செங்கை மறவர்
- துறை: விறலியாற்றுப்படை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 50[தொகு]
- மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
- கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக்
- கரும்(பு)அமல் கழனிய நாடுவளம் பொழிய
- வளம்கெழு சிறப்பின் உலகம் புரைஇச்
- 5 செங்குணக்(கு) ஒழுகும் கலுழி மலிர்நிறைக்
- காவிரி அன்றியும் பூவிரி புனலொரு
- மூன்றுடன் கூடிய கூடல் அனையை
- கொல்களிற்(று), உரவுத்திரை பிறழ அவ்வில் பிசிரப்
- புரைதோல் வரைப்பின் எஃகுமன்ண அவிர்தர
- 10 விரவுப்பணை முழங்(கு)ஒலி வொணஇய வேந்தர்க்(கு)
- அரணம் ஆகிய வெருவரு புனல்தார்
- கல்மிசை யவ்வும் கடலவும் பிறவும்
- அருப்பம் அமைஇய அமர்கடந்(து) உருத்த
- ஆள்மலி மருங்கின் நா(டு)அகப் படுத்து
- 15 நல்இசை நனந்தலை இரிய ஒன்னார்
- உருப்(பு)அற நிரப்பினை ஆதலின் சாந்துபுலர்பு
- வண்ணம் நீவி வகைவனப்(பு) உற்ற
- வரிஞிமி(று) இமிரும் மார்புபிணி மகளிர்
- விரிமென் கூந்தல் மெல்அணை வதிந்து
- 20 கொல்பிணி திருகிய மார்புகவர் முயக்கத்துப்
- பொழுதுகொள் மரபின் மென்பிணி அவிழ
- எவன்பல கழியுமோ பெரும பல்நாள்
- பகைவெம் மையின் பாசறை மாணஇப்
- பா(டு)அரி(து) இயைந்த சிறுதுயில் இயலாது
- 25 கோடு முழங்(கு) இமிழ்இசை எடுப்பும்
- பீடுகெழு செல்வம் மாணஇய கண்ணே. (50)
- பெயர்: வெருவரு புனற்றார்
- துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
- தூக்கு: செந்தூக்கு
பதிகம்[தொகு]
- வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
- குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
- சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
- கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
- 5 கான்நவில் கானம் கணையின் போகி
- ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
- இன்பல் அருவிக் கங்கை மண்ணி
- இனம்தெரி பல்ஆன் கன்றொடு கொண்டு
- மாறா வல்வில் இடும்பின் புறத்(து)இறுத்(து)
- 10 உறுபுலி அன்ன வயவர் வீழச்
- சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
- அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
- பழையன் காக்கும் கரும்சினை வேம்பின்
- முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
- 15 வால்இழை கழித்த நறும்பல் பெண்டிர்
- பல்இருங் கூந்தல் முரற்சியால்
- குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
- ஆராச் செருவின் சோழர்குடிக்(கு) உரியோர்
- ஒன்பதின்மர் வீழ வாயில்புறத்(து) இறுத்து
- 20 நிலைச்செருவின் ஆற்றலை அறுத்துக்
- கெடல் அரும் தானையொடு
- கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு
- செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.
- அவைதாம்:
- சுடர்வீவேங்கை, தசும்புதுளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுநோன்றொடை,
- ஊன்றுவையடிசில், கரை வாய்ப்பருதி, நன்னுதல் விறலியர், பேரெழில்வாழ்க்கை,
- செங்கை மறவர், வெருவருபுனற்றார்.
- இவை பாட்டின் பதிகம்.
- பாடிப் பெற்ற பரிசில்:
- உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான் அக்கோ.
- கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.