பழைய கணக்கு/வ. ரா. வாக்களித்த நூறு ரூபாய்

விக்கிமூலம் இலிருந்து



வ. ரா. வாக்களித்த நூறு ரூபாய்

சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் திரு எஸ். வி. சகஸ்ரநாமம் ‘பைத்தியக்காரன்’ என்றொரு நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். விதவா விவாகம் பற்றிய நாடகம் என்பதால் அது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சமயம் என். எஸ். கிருஷ்ணன் சிறையில் இருந்ததால், நாடகக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் திரு சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. சகஸ்ரநாமம், என். எஸ். கிருஷ்ணனை சிறையில் சந்தித்து, “இந்த நாடகத்துக்கு வ. ரா. அவர்களைத் தலைமை தாங்கச் சொல்லப் போகிறேன். அவருக்கு இம்மாதிரி சமுதாயப் புரட்சியான கருத்துக்களில் ஈடுபாடு அதிகம்” என்றார்.

“ரொம்ப சரி; வ. ரா.வைத் தலைமை தாங்கச் சொல்வது ரொம்பப் பொருத்தம்” என்றார் கிருஷ்ணன். பைத்தியக்காரன் நாடகம் நூறு நாட்கள் நடைபெற்றது. வ. ரா.வுக்கு அந்த நாடகம் ரொம்ப ரொம்பப் பிடித்து விட்டதால் ஏறக்குறைய அந்த நூறு நாட்களுமே நாடகத்துக்குத் தவறாமல் ஆஜராகிக் கொண்டிருந்தார். இதனால் வ.ரா.வுக்கும் என். எஸ். கே. நாடக சபைக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

வ. ரா. ஒவ்வொரு நாளும் தியேட்டருக்கு முன் கூட்டியே போய் எல்லாவற்றையும் மேற்பார்வையிட்டு முடிந்ததும் முதல் வரிசையில் ஒரு மூலையாகப் போய் உட்கார்ந்து விடுவார்.

என்னையும் ஒரு நாள் நாடகத்தைப் பார்க்க வரும்படி அழைத்தார் வ. ரா. நான் அவரைக் காட்டிலும் வயதில் சிறியவன் என்பதால் “டேய்! இன்று மாலை ஒற்றைவாடை தியேட்டருக்கு வந்துருடா” என்று உரத்த குரலில் உரிமையுடன் பணித்தார். அன்றே நாடகம் பார்க்கப் போயிருந்தேன். நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததாக வ. ரா. விடம் சொன்னேன்.

“நீ ஏன் கல்கியில் ஒரு விமரிசனம் எழுதக் கூடாது?” என்று கேட்டார். வ. ரா.

“ஆசிரியரிடம் கேட்டுப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அதே சூட்டில் அந்த நாடகத்தைப் பற்றிய ஒரு விமரிசனத்தை எழுதி கல்கியிடம் காண்பித்தேன். கல்கி அதை அடுத்த இதழிலேயே பிரசுரித்து விட்டார். அந்த விமரிசனத்தால் நாடகம் இன்னும் பரவலாகப் பேசப்பட்டு நாடகத்துக்கு மேலும் கூட்டம் அதிகமாயிற்று.

விமரிசனத்தைப் படித்த வ. ரா. ரொம்பவும் மகிழ்ந்து போய், “உனக்கு நூறு ரூபாய் பணம் தருவதாய்த் தீர்மானம் பண்ணி இருக்கிறேன். சகஸ்ரநாமத்திடம் நூறு ரூபாய் வாங்கிக் கொள்!” என்றார். நான் எதுவும் பதில் சொல்லவில்லை. எனக்குப் பணம் தேவைதான். ஆனால் விமரிசனம் எழுதியதற்காகப் பணம் வாங்கினால் அது லஞ்சம் வாங்கியது போல் ஆகிவிடும் என்பதால் பேசாமலிருந்து விட்டேன். அதனால் வ.ரா.வையும், சகஸ்ரநாமத்தையும் அப்புறம் வெகுநாள் வரை பார்க்காமலே இருந்து விட்டேன்.

ந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து பேராசிரியர் கல்கி ஒரு நாள் ஏதோ பேச்சுவாக்கில், “வ. ரா. எப்படி இருக்கிறார்?” என்று என்னிடம் கேட்டார்.

“நிரந்தரமான வருமானமில்லை; ஆனாலும் அவர் முகத்தில் எதுவும் தெரிவதில்லை” என்றேன்.

“சிறுகதைப் போட்டி ஒன்றை கல்கியில் அறிவித்து அதற்கு வ. ரா.வை நீதிபதியாய் நியமிக்கலாமென்றிருக்கிறேன். அந்த வகையில் அவருக்கு ஏதாவது பண உதவி செய்யலாமே!. ஆனால் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வாரோ?” என்று. தயங்கினர் கல்கி.

“நான் வேண்டுமானல் போய்ப் பேசிப் பார்க்கட்டுமா?” என்று கல்கி அவர்களிடம் கேட்டேன். “சரி” என்று கூறிய கல்கி என்னை வ.ரா.விடம் தூது அனுப்பி, “சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க முடியுமா?” என்று விசாரித்து வரச்சொன்னர்,

வ. ரா.வைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொன்னேன்.

“அப்படியா? தமிழ்நாட்டில் பல பேர் ரொம்ப நன்றாகக் கதை எழுதுகிறார்கள். அவர்கள் எழுத்தையெல்லாம் படித்துப் பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாயிருக்கும். ஆனால் ஒரு நிபந்தன. கதைகள் அவ்வளவையும் நானே படிக்க முடியாது. முதலில் நீ படித்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி செய்வதாயிருந்தால் நான் சம்மதிக்கிறேன்” என்றார் வ. ரா.

கல்கியிடம் இதைச் சொன்ன போது, “சரி, போட்டிக் கதைகள் வந்தவுடன் அவர் விருப்பப்படி அவற்றை எடுத்துக் கொண்டு போய் நீயே கதைகளே வாசித்துக் காட்டு!” என்றார், ஒரு மாத காலம் வ. ரா. வீட்டுக்கு தினம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை உட்பட போய்க் கதைகள் முழுதும் படித்துக் கொடுத்தேன். அந்த முப்பது நாளும் வ.ரா. வீட்டில்தான் எனக்குச் சாப்பாடு. முருங்கைக்காயைத் தோல் சீவி சாம்பாரில் போடும் புதுமையை அவர்கள் வீட்டில்தான் பார்த்தேன். வ. ரா. வுக்கு முருங்கைக்காய் சாம்பார் ரொம்பப் பிடிக்கும்.

ஒரு நாள் வ. ரா. என்னிடம், “டேய், இந்த நீதிபதி வேலைக்காக கல்கி எனக்குப் பணம் கொடுப்பார் என்று நினைக்கிறேன். நீதானே இவ்வளவு கதைகளையும் எனக்குப் படித்து உதவி செய்தாய். ஆகையால் அந்தப் பணத்தில் உனக்கு நான் நூறு ரூபாய் தரப் போகிறேன். ஆகையால் தீபாவளிச் செலவுக்கு உன்னிடம் நூறு ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்” என்றார். கதைகள் அவ்வளவும் படித்து முடித்ததும் கல்கி ஆசிரியர் வ. ரா.வுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்தனுப்பினர். அந்தப் பணத்தை நான்தான் கொண்டுபோய்க் கொடுத்தேன். வ.ரா. நோட்டுக்களை எண்ணிப் பார்த்து விட்டு, “என்னடா நூறு ரூபாய் குறைகிறதே?” என்றார்.

“நீங்கள் ஏற்கனவே வாக்களித்த நூறு ரூபாயை நான் எடுத்துக் கொண்டு விட்டேன். கொஞ்சம் அவசரமாகத் தேவைப்பட்டது” என்றேன்.

“நான் உனக்குப் பணம் தருவதாகச் சொன்னது உண்மை. ஆனால் நீயே அதை எடுத்துக் கொண்டது தப்பு” என்றார் வா. ரா.

பைத்தியக்காரன் விமரிசனத்துக்காக நூறு ரூபாய் அவராகவே கொடுக்க முன்வந்த போது அதை நான் வாங்காமல் இருந்து விட்டேன். ஆனால் கதை படித்ததற்காக அவர் கொடுப்பதாக வாக்களித்த பணத்தை நானே எடுத்துக் கொண்டு விட்டேன். தீபாவளிச் செலவுக்கு உன்னிடம் நூறு ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்” என்று வ.ரா. முன் கூட்டியே சொல்லி விட்டதால் அந்த நூறு ரூபாயை நானாகவே எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று கருதி விட்டேன். ஆனாலும் அது தவறு என்பதை வ. ரா. சுட்டிக் காட்டியபோதுதான் உணர்ந்தேன். அப்புறம் வெகு நாள்வரை அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.