பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/குடையும் செருப்பும்

விக்கிமூலம் இலிருந்து
குடையும் செருப்பும்


குடையும் செருப்பும் பேசின - பல
குறைகள் சொல்லி ஏசின.
நடையில் நடந்த நாடகம்!- இதை
நாமெல் லாரும் பாடுவோம்!

குடை: செத்த மாட்டின் உறுப்பே - தோல்
செருப்பே! உன்மேல் வெறுப்பே!
செருப்பு: முகத்தைப் பார்த்தால் கறுப்பே -
உடல் முழுதும் கம்பி விரிப்பே!
குடை: காலில் கிடக்கும் எருமை! - உன்
கதையில் என்ன பெருமை!
செருப்பு: நெருப்பின் மீது நடப்பேன் -
குத்தும் நெருஞ்சி முள்ளில் படுப்பேன்!
குடை: நிழலை என்றும் கொடுப்பேன் -
வந்து நனைக்கும் மழையைத் தடுப்பேன்.
செருப்பு: காற்றால் உனக்கு நடுக்கம் - நல்ல
கடும் இருட்டில் ஒடுக்கம்!
குடை: நீரைக் கண்டு நெருங்கி - நீ
நனைவாய் உடலும் சுருங்கி!
செருப்பு: இரவும் பகலும் நண்பன் -
யார்க்கும் என்னால் இல்லை துன்பம்!
குடை: கையில் பிடித்து மதிப்பார் -
உனைக் காலில் போட்டு மிதிப்பார்!
செருப்பு: உனையும் நானே சுமப்பேன் -
இதை உணர்ந்து கொள்ளு வாயே!
குடை: உனக்கும் நிழலைக் கொடுப்பேன் -
இதை உணர்ந்து கொள்வாய் நீயும்!
செருப்பு: மேலே நின்று காப்பாய் - கீழ்
மண்ணில் தங்கிக் காப்பேன்;
குடை: நமக்குள் எதற்குப் பகையே - இனி
நண்ப ராகிப் போவோம்!