பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்/தாய்

விக்கிமூலம் இலிருந்து
தாய்

அழுதால் பாலை ஊட்டி,
அணிகள் வாங்கிப் பூட்டி,
பழுதில் லாமல் காப்பாள்!
பட்டுச் சட்டை போர்ப்பாள்!

மடியில் தூங்கப் பண்ணி,
முடியை வாரிப் பின்னி,
வெடித்த பூவைச் சூட்டி,
வளர்ப்பாள் அன்பைக் காட்டி!

இடையில் வைத்துத் தாங்கி,
இரவில் காத்துத் தூங்கி,
நடையைக் கற்றுக் கொடுப்பாள்!
நலிவை என்றும் தடுப்பாள்!

பெற்றாள்; காத்தாள் சேயை!
பணிவேன் அன்புத் தாயை !
கற்றுத் தந்தாள் கல்வி!
கண்ணைப் போன்ற செல்வி!