பாஞ்சாலி சபதம்/44. சகுனி சொல்வது

விக்கிமூலம் இலிருந்து
44. சகுனி சொல்வது

வேறு

‘செல்வம்முற் றிழந்துவிட்டாய்; -- தருமா,
தேசமுங் குடிகளுஞ் சேர்த்திழந்தாய்.
பல்வளம் நிறைபுவிக்கே -- தருமன்
பார்த்திவன் என்பதினிப் பழங்கதைகாண்!
சொல்வதொர் பொருள்கேளாய்; -- இன்னுஞ்
சூழ்ந்தொரு பணயம்வைத் தாடுதியேல்,
வெல்வதற் கிடமுண் டாம்; -- ஆங்கவ்
வெற்றியி லனைத்தையும் மீட்டிடலாம். 18

‘எல்லா மிழந்த பின்னர் -- நின்றன்
இளைஞரும் நீரும்மற் றெதிற்பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில் -- பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளைஞர் -- சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணயமென்றே;
சொல்லால் உளம் வருந்தேல்; -- வைத்துத்
தோற்றதை மீட்’டென்று சகுனிசொன்னான். 19

வேறு

கருணனும்சிரித்தான்; -- சபையோர்
கண்ணின் நீரு திர்த்தார்.
இருள் நிறைந்த நெஞ்சன் -- களவே
இன்ப மென்று கொண்டான்,
அரவு யர்த்த வேந்தன் -- உவகை
ஆர்த்தெழுந்து சொல்வான்;
‘பரவு நாட்டை யெல்லாம் -- எதிரே
பணய மாக வைப்போம். 20

‘தம்பி மாரை வைத்தே -- ஆடித்
தருமன் வென்று விட்டால்,
முன்பு மாமன் வென்ற -- பொருளை
முழுதும் மீண்ட ளிப்போம்.
நம்பி வேலை செய்வோம்; -- தருமா,
நாடி ழந்த பின்னர்,
அம்பி னொத்த விழியாள் -- உங்கள்
ஐவருக்கு முரியாள் -- 21

‘அவள் இழ்ந்திடாளோ? -- அந்த
ஆயன் பேசுவானோ?
கவலை தீர்த்து வைப்போம்; -- மேலே
களிநடக்கு’ கென்றான்.
இவள வான பின்னும் -- இளைஞர்
ஏதும் வார்த்தை சொல்லார்,
துவளும் நெஞ்சினாராய் -- வதனம்
தொங்க வீற்றிருந்தார். 22

வீமன் மூச்சு விட்டான் -- முழையில்
வெய்ய நாகம் போலே;
காம னொத்த பார்த்தன் -- வதனக்
களைஇ ழந்து விட்டான்;
நேம மிக்க நகுலன், -- ஐயோ!
நினைவயர்ந்து விட்டான்;
ஊமை போலிருந்தான் -- பின்னோன்
உண்மை முற்றுணர்ந்தான். 23

கங்கை மைந்தனங்கே -- நெஞ்சம்
கனலுறத்து டித்தான்;
பொங்கு வெஞ்சினத்தால் -- அரசர்
புகை யுயிர்த்திருந்தார்;
அங்கம் நொந்து விட்டான், -- விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் -- கொல்லுஞ்
செய்தி காண லுற்றே. 24