பாபு இராஜேந்திர பிரசாத்/இராஜன் பாபு மறைந்தார்! வாழ்க அவர் எண்ணங்கள்!

விக்கிமூலம் இலிருந்து
13. இராஜன் பாபு மறைந்தார்!
வாழ்க அவர் எண்ணங்கள்!

பாரதநாடு பழம் பெரும் நாடு! பகுத்த ஞான சித்தர்கள் பெருகிய நாடு மாபெரும் தேசபக்தர்கள் வாழ்ந்து மறைந்த நன்னாடு, இந்நாட்டிற்கான விடுதலையை காந்தி பெருமான் பெற்றுத் தந்தான் என்று சுதந்திரம் பெற்ற பாரத நாட்டிலே மக்கள் காந்திப் பள்ளுப் பாடினார்கள்.

சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பதவி குடியரசுத் தலைவர் பதவி, இந்த உயர்ந்த பதவியை முதன் முதல் ஏற்றவர் ராஜன் பாபு! இந்த உயர்வுக்கு டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை உயர்த்திய சக்தி எது?

குடியரசுத் தலைவர் பதவியால் ராஜேந்திர பிரசாத் பெருமை பெற்றாரா? அல்லது ராஜன்பாபுவால் குடியரசுத் தலைவர் பதவி புகழ்மாலை சூடிக் கொண்டதா? என்றால் இந்த நூலைப் படிப்பவர்களுக்கு அந்த பெருமையின் அருமையை உணர முடியும்!

அடக்கம் என்ற அகத் தன்மையால் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய பெருமைக்குரியவர் பாபு ராஜேந்திர பிரசாத் உயர்ந்த அவரது வாழ்க்கைக்கு அவரிடம் குடி கொண்டிருந்த பல நற்குணங்களைக் காரணமாகக் கூறலாம்.

கிடைத்த ஓர் அரசியல் பதவியை வைத்துக் கொண்டு, அது வேண்டும், இது வேண்டுமென்று அலைந்து திரிந்து, பிறகு எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று தேடி அலையும் பொருட் பித்தரல்லர் பாபு!

வானளாவும் பதவி பெற்றவன் என்று அவர் இந்திய உணவமைச்சராக இருந்த போது கூறியவருமல்லர் நடந்து காட்டியவரும் அல்லர் அவர்! கொஞ்சம் அதிகமாகக் கூறுவதானால், பீகார் மாகாண முதலமைச்சர் பதவி அவரை வலியத் தேடி வந்து வற்புறுத்தியபோதும் ‘எனக்கு வேண்டாம், எனது நண்பர்களுக்கு கொடுங்கள்’ என்று கூறிய பண்புக் கோமகனாக அவர் விளங்கியதால்தான், இமயச் சிகரம் போன்ற குடியரசுத் தலைவர் பதவி அவரிடம் சரணடைந்தது. அந்தக் காலகட்டத்தில், இவரை விடச் சிறந்த பாடறிந்து ஒழுகும் பண்பாளர் எவருமில்லை என்பதும் ஒரு காரணமாகும்.

நான்தான் உயர்ந்தவன், எல்லாம் அறிந்தவன், சிந்தனையினையே நான் தான் உருவாக்கிய காலச்சிற்பி, எதையும், செய்யத் தக்கவன் என்று தருக்கித் திரிந்த செருக்குடைய முறுக்கல் புத்தி அவருக்கு எப்போதும் ஏற்பட்டதல்ல.

நிலாவின் முழு ஒளியை நானிலத்தில் பொழிந்து, அன்பெனும் வழியைக் காட்டி, மக்களிடையே நற்பண்புகளெனப்படும் அருளை எதிர்நோக்கிய அருட்சீலராக வாழ்ந்து காட்டிய அற உணர்வாளர் ராஜேந்திர பிரசாத்! அதனால்தான், குடியரசுத் தலைவரென்ற பதவி, ராஜேந்திர பிரசாத்தை நாடி வந்து, அவர்தான் அதற்கு சிறந்தவர், தக்கவர் என்று பாராட்டுதல்களைப் பெற்றுத் தரும் பொறுப்பை ஏற்றுப் பெருமையும் பெற்றது.

இராஜன் பாபு, காந்தீயத் தத்துவக் கனிகளில் ஒன்றாகப் பழுத்தவர். ஆறுவது சினம். அவ்வை அவருக்காகவே எழுதினாரோ என்னவோ கனிச் சொற்களையே பேசுவாரே தவிர, காய்ச்சொற்கள் அவரை என்றுமே கவர்ந்ததில்லை. ஆபத்தைக் கண்டு என்றுமே அஞ்சியவரல்லர். அபாயம் அவரைக் கண்டு அஞ்சிப் பதுங்கிய சம்பவங்கள் பலவுண்டு.

ஏழைகளின் துயர் கண்டு கலங்கினவர். கண்ணீர் சிதறியவர். தனது குடும்பத்தில் மரணம் அடுத்தடுத்து வந்த போதும் கதறியழுதவர் அல்லர். தேசத் தொண்டுகளிலே அடுக்கடுக்காக இன்னல்கள் வந்த போதெல்லாம் கடமைகளைச் செய்யத் தவறியவரல்லர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தான் ராஜன் பாபுவின் தாரக மந்திரமாக இருந்தது.

மகாத்மாவுக்குக் கூட, மாபாவி, கோட்சே தொழுத கையுடன் துப்பாக்கி ஏந்தி வந்த பகையுண்டு. ஆனால், ராஜன் பாபுவுக்கு பகையே இல்லை எனலாம். அப்படி மீறித் தள்ளாடித் தடுமாறி ஏதாவதொன்று வருமானால், அதைக் கூட தனது நகைச் சொல்லால் நகர வைத்து விடுவார். அவர் நெஞ்சு அத்தகைய ஈரமிக்க பஞ்சு.

பிரிட்டிஷ் அரசு சிறைக்கு அனுப்பும் போதெல்லாம், சில நூல்களை எழுதிக் கொண்டே வெளிவரும் சிந்தனையாளர் ராஜன் பாபு! எடுத்துக்காட்டாக சில நூல்களைக் கூறலாம். குறிப்பாகக் கூறுவதானால், பாபுவின் பிரிக்கப்பட்ட இந்தியா (Divided India) என்ற நூல், நாட்டில் பிரிவினையால் ஏற்பட்ட கேடுபாடுகளையும், தலைவர்கள் இடையே அப்போது சமரசம் கண்ட சம்பவங்களையும் மிக அழகாக, நினைவாற்றல் சின்னமாக நிலை நிறுத்தியுள்ளது எனலாம்.

இராஜேந்திர பிரசாத் பழமையைப் போற்றும் பண்பாளர். அதற்காக எதையும் குருட்டுத் தனமாக ஏற்று நடப்பவரல்ல! காலத்துக்கேற்ற கருத்துடன் அவற்றுக்கு மறு உருவழங்கும் சீர்த்திருத்தச் செம்மல்.

கலப்பு மணம், தீண்டாமமை விலக்கு, அறிவியல் கல்வி ஆகியவற்றை ஆதரித்து அதற்கான முன்னேற்றங்களுக்கு காலநிலைக்கேற்ப உதவி புரிந்தார். அதே நேரத்தில் பசுவதைத் தடுப்பு, மிருகபலி இவற்றை எதிர்த்துத் தடுத்து நிறுத்த வழி கண்டார்.

வேலைகளைச் செய்யும் போது இது பெரியது அது சிறியது என்று பாராமல், எந்த வேலைகளானாலும் அவற்றைத் தொடர்ந்து செய்து வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார். தான் பேசும் பொதுக் கூட்டங்களிலும், கட்சிப் பணி கலந்தாலோசனைகளிலும், மாநாட்டுப் பேச்சுகளிலும் இதே எண்ணத்தைக் கூடியுள்ள மக்களுக்கு அறிவுரையாகச் சொல்லுவார்.

அதிகாலையிலே எழுந்திருப்பார், அலுவலகக் கோப்புகளைப் பார்த்து அவற்றிற்கேற்றவாறு குறிப்புகளை எழுதி முடித்து விடுவார். வந்துள்ள கடிதங்களுக்குரிய பதில்களையும் எழுதி அனுப்புவார். இந்து மதப் பண்பாடுகள் கெடாமல், தெய்வ பக்தி வழிபாடுகளைத் தவறாமல் செய்து வருவார்.

காலம் பொன்னானது, நேரத்தை வீணாக்காதே; காலத்தோடு கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவரது பொன்மொழியாகும்.

ராஜன் பாபுவிடம் பழகும் வாய்ப்பு ஒருமுறை பெற்றவர் கூட, பிறகு தவறாமல் வலிய வந்து காணுமாறு வந்தவர்களை இனிமையாக வாழ்த்தி அனுப்புவதை அவரது வழக்கங்களில் ஒன்றாகக் கடைபிடித்தார்.

இத்தகைய பண்பாளர், நாட்டுக்குரிய விடுதலை கிடைத்த பிறகும் கூட, ஓய்வு ஒழிச்சலின்றி மக்களும் பாரத நாடும் வளமாக வாழ்வதற்குரிய திட்டங்களோடு, அதற்கான முன்னேற்ற வழிகளை உருவாக்குவதிலும் அயராது உழைத்திட ஆசை கொண்ட அவர் ‘சதாகத்’ என்ற ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது இறுதி நாட்களை அங்கேயே கழித்து வந்தார்.

வயோதிகம் தனது வாசலிலே நின்று அவரை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருந்தது. நோய்கள் அவரை நொடி நொடிப் பொழுதாக நொறுக்கிக் கொண்டிருந்தன. இந்த நெருக்கங்கள் இடையே சிக்கி நலிந்த அந்த நெடிய மேனி, 1963 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் முதல் நாளன்று பாரத மாதா தாளிலே துவண்டு விழுந்து மரணமடைந்தது! காலத்தோடு இரண்டறக் கலந்து காலமானார் ராஜன்பாபுவின் ஆவி அமைதியைத் தேடி அடைக்கலமானது.

வாழ்க அவரது அரசியல் ஒழுக்க சீலங்கள்!
★ ★ ★