பாப்பா முதல் பாட்டி வரை/003-024

விக்கிமூலம் இலிருந்து

குழந்தை நோய்கள்

வயது வந்தவர்களுக்கு வரக்கூடிய பல நோய்கள், குழந்தைகளையும் பற்றுகின்றன. எனினும், குழந்தைகளுக்கென வரும் சில தனிப்பட்ட நோய்களும் இருக்கின்றன. ஏனெனில் உடல் வளர்ச்சி, உறுப்புக்களின் அமைப்பு, நோய் தடுக்கும் சக்திப் பொருள் உற்பத்தி ஆகியவற்றில் குழந்தையின் உடல், வயது வந்த மனிதருடைய உடலினின்றும் மிகவும் மாறுபாடுடையது.

முதிர்ந்தவர்களுக்கு வரும் பல நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கும் போது, வெளியே தோன்றும் குறிகள், சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. உதாரணமாக, சாதாரண பேதி நோயினால் வயது வந்த மனிதனின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு விடுவதில்லை. ஆனால் அதே நோய், ஒரு சிறு குழந்தையை அரை வேகத்துடன் பாதித்தாலும், அக் குழந்தையின் உடல்நலம் மிகவும் கெட்டு, நோயின் சின்னம் மிகவும் தீவிரமாக வெளியே காணப்படும். இதன் காரணம்; குழந்தைப் பருவத்தில் மார்பின்மீது தசை வளர்ச்சி குறைவு; இதயம் முழு வளர்ச்சியடைந்து, ஒழுங்கான நிலையை அடைவதில்லை; தலையெலும்புகள் ஒன்றுடன் ஒன்று கூடாது, பிரிந்த நிலையில் இருக்கின்றன. இதனால் நோயின் சின்னங்கள், முழு வளர்ச்சியடையாத உறுப்புக்களின் வழியே வெளியே தோன்றும் போது, மிகவும் வேறுபாட்டுடனும், கொடுமையாகவும் காணப்படுகிறது. இரண்டாவதாகக் குழந்தையின் உடலானது, வளர்ச்சிப் பருவத்தில் இருக்கின்றது. புரோட்டீன், வைட்டமின்கள், உப்புக்கள் முதலியன, முதிர்ந்தவரின் தேவையை விட அதிக அளவில் குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு வேண்டியிருக்கின்றன. இவைகள் உணவாகவே குழந்தையின் உடலை அடைய முடியும். பேதி போன்ற நோய் ஏற்படுகையில், குழந்தை இரண்டுவித கஷ்டங்களுக்கு உள்ளாகின்றது. அளித்த உணவை ஏற்றுக்கொள்ள முடியாமல், குடல் அசீரண நிலையில் இருப்பது ஒன்று; உடலில் கொஞ்ச நஞ்சமிருக்கும் சத்துப் பொருள்களும், பேதி வழியே வெளியேறிவிடுவது மற்றொன்று. அதனால் நாலைந்து தடவைகள் பேதி ஆனதும், நாடி பலவீனமடைந்து, கண்கள் ஒளி மங்கி, உச்சிக்குழி பள்ளமாகித், தோல் சுருங்கிக் காய்ச்சலுடன் குழந்தை மிகவும் பலவீன நிலையை அடைந்துவிடுகிறது. குழந்தைகளுக்கெனத் தனிப்பட்டு வரும் சில நோய்களுக்குக் காரணம் குழந்தைகளின் உடலமைப்பே தான். இப் பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சியடையும் நிலையில் இருக்கின்றன. கணைநோய், சொறி கரப்பான் என்னும் நோய்கள் வேகமாக வளர்கின்ற எலும்புகளை எளிதில் தாக்கி, நோயை உண்டாக்கி விடுகின்றன. குழந்தைப் பருவத்தில் நோயைத் தடுக்கும் இயற்கையான சக்தி மிகவும் குறைவு. அதன் காரணமாகவும், சில நோய்கள் விரைவில் குழந்தைகளைப் பீடித்துக் கொள்கின்றன.

நோய்கள்: குழந்தை நோய்கள் பலவகைப்பட்டவை. சில நோய்கள், குழந்தை பிறப்பதற்கு முந்தியே அடிகோலத் துவங்குகின்றன. இவைகளைப் பாராம்பரிய நோய்கள் எனக் கூறுவார்கள். பெற்றோர்களிடமிருந்து காக்கை வலிப்பு (Epilepsy), மூளைமந்தம் போன்ற நோய்களும், மூளி உதடு (Hare lip) போன்ற பிறவிக் கோளாறுகளும் வரக்கூடும். தமிழ் நாட்டில் காணப்படும் ஈரல் குலைக்கட்டி எனப்படும் நோயும் ஒரு வகையில் பாரம்பரியமாக வரும் நோயெனக் கருதப்படுகின்றது.

இவ்வாறு குழந்தைகளுக்கு வரும் நோய்களைத் தடுப்பது எளிது. மணம் செய்து கொள்கின்றவர்கள், காக்கை வலிப்பு, பைத்தியம், மூளைமந்தம் போன்ற நோய்கள் இல்லாதிருக்கின்ற குடும்பமா எனக் கவனித்து மணம் புரிந்து கொள்வது நலம். க்ஷயம், குஷ்டம் இவைகள் உள்ளவர்கள் நல்ல திறமையான சிகிச்சையினால் முற்றும் குணமடைந்து விட்டனர் எனத் தெரிந்த பின்பு தான் மணந்து கொள்ள வேண்டும்.

கருப்பையில் இருக்கையில் குழந்தைகளுக்குச் சில நோய்கள் ஏற்படுகின்றன. தாயின் இரத்தம் கிரந்திப் புண் நோயினால் கெட்டிருந்தாலும், தாய் தகுந்த சுகாதாரப் பாதுகாப்புக்களைக் கையாளவிட்டாலும், கருப்ப காலத்தில் தாய் ஊட்டம் மிகுந்த உணவு உட்கொள்ளா விட்டாலும், குழந்தைகளுக்குச் சில நோய்கள் ஏற்படுகின்றன. இவைகளைத் தடுப்பதும் எளிது. உடல் நிலையை அப்போதைக்கப்போது ஆராய்ந்து, இரத்தம் கெட்டிருந்தால், உடனடியாகத் தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். கருப்ப காலத்தில் மருத்துவர் ஆலோசனையைக் கேட்டு, உடல் நலப் பாதுகாப்புகளை ஆராய்ந்து, நல்ல உணவுகளை உட்கொண்டால், குழந்தைகளை இந் நோய்கள் பாதிக்காது காப்பாற்ற முடியும்.

பிரசவிக்கும் பொழுது, சில நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கின்றன. தாயின் பிரசவ உறுப்பு, வெட்டை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், பிறக்கும் குழந்தையின் கண்களை வெட்டைநோய்க் கிருமிகள் தாக்கி, ஒருவகை நோயை உண்டு பண்ணுகின்றன. சில சமயம் பிரசவம் மிகத் துன்பமாகி விடுகிறது. பிரசவ சமயத்தில் ஆயுதங்களைக் கையாண்டதினாலும், நீண்ட நேரம் தாயின் கருப்பையில் தங்க நேர்வதினாலும், மூச்சு முட்டல், தலையில் காயம், மூளையில் இரத்தப் பெருக்கு போன்ற சில அபாயங்கள், குழந்தைக்கு ஏற்படுகின்றன. இவைகளைத் தடுப்பதும் எளிது. பிரசவ சமயத்தில் தகுந்தபடி கவனித்தால், குழந்தைக்கு இந்த அபாயங்கள் நேராது தடுக்க முடியும்.

குழந்தை பிறந்தவுடன், முதல் நான்கு வாரங்கள் சில நோய்கள் ஏற்படக்கூடும். கருப்பையினின்று வெளியே வந்ததினால் ஏற்படும் ஒரு புதிய சூழ்நிலையைச் சமாளித்துக் கொண்டு, அதற்குத் தக்கவண்ணம், தங்களைச் சரிப்படுத்திக் கொள்ளக் குழந்தையின் உடல் உறுப்புக்கள் முயற்சி செய்கையில, இம் முயற்சியில் சிறிது குறைபாடு ஏற்படுமாகில், குழந்தை சட்டென நோய்களுக்கு இலக்காகி விடுகின்றது. முழு வளர்ச்சியடையாது, குறை மாதத்திலே பிறக்கும் குழந்தைகளை நோய்கள் எளிதாகப் பீடித்துக் கொள்ளுகின்றன. மற்றும், பிறந்த, முதல் மாதத்தில் நோயினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாதி, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் தாம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள்.

முதல் இரண்டாண்டுகளில் குழந்தையின் உடல் விரைவாக வளர்ச்சியடையும். உடல் நலிவினாலும், ஊட்டக் குறைவினாலும், இருமல், சளி போன்ற நோய்கள், இந்த வயதில் எளிதில் ஏற்படுகின்றன. பொதுவாகத் தொற்று நோய்கள் இந்தப் பருவத்தில் குழந்தைகளை எளிதில் பீடிக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட நோய்களைத் தடுக்கும் சக்திப் பொருள்கள் முதல் நான்கு அல்லது ஆறு மாதங்கள் குழந்தையின் இரத்தத்தில் அதிக அளவில் இருக்கின்றன. அதன் காரணமாகத் தட்டம்மை (Meales), இளம்பிள்ளை (Diphtherial), வாதம் போன்ற குறிப்பிட்ட நோய்கள், முதல் வயதில் அதிகம் வருவதில்லை. ஆனால், பொதுவாக, அம்மை, நிமோனியா, இன்புளுயன்சா போன்ற தொற்று நோய்கள் இப்பருவத்தில் விரைவில் தாக்குகின்றன. இரண்டாம் மாதத்திலிருந்து முதல் வயது வரை குழந்தைகள் நோயினால் இறக்கும் எண்ணிக்கை, முதல் மாதத்தில் நோயினால் மரணமடையும் எண்ணிக்கையைவிடக் குறைவு. நோயினால் இறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் தான் அதிகம். குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளிலும், மரண எண்ணிக்கை அதிகம். நோய்களுக்கும், அவற்றால் ஏற்படும் மரணத்திற்கும் வறுமை ஓரளவு காரணமாகிறது.

பள்ளிப் பருவத்திற்கு முந்தி, அதாவது இரண்டு வயதிலிருந்து ஐந்து வரை, உள்ள குழந்தைகளுக்கு வரும் நோய்கள், முதல் வயதைக் காட்டிலும் மிகவும் குறைவு. இப் பருவத்தில் நோய்களைத் தடுக்கும் சக்திப் பொருள்கள் உடலில் உண்டாகி, இரத்தத்தில் கலந்து, எதிர்க்கத் துவங்கிவிடுவதினால் பல நோய்கள் குழந்தைகளை அண்டுவதில்லை. மற்றைப் பருவத்தில் போல் இந்த வயதில், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளைப் பாதிக்கலாம். க்ஷயம், குடல்வாலழற்சி போன்ற நோய்கள் தாம் இப்பருவத்துக் குழந்தைகளின் மரணத்திற்கும், பெரு வாரியான காரணமாக அமைகின்றன. இப் பருவத்துக் குழந்தைகள், நோய்களுக்கு இலக்காதலைக் காட்டிலும், தீ வண்டிகளினால் ஏற்படும் விபத்துக்களுக்கு அதிகம் இலக்காகின்றனர்.

பள்ளிப் பருவமான, ஐந்திலிருந்து பதினான்கு வயது வரை உள்ள குழந்கைளை, நோய்களும், விபத்துக்களும் சரி சமமான அளவில் பாதிக்கின்றன. இந்த வயதில் முக்கியமாக முடக்குக் காய்ச்சல் (Dengue) குழந்தைகளை அதிகம் பீடிக்கின்றது, பெனிசிலின், சல்பானிலமைடு போன்ற புதிய நோய் தடுக்கும் மருந்துகள் பல இருக்கும் இக் காலத்தில், இப் பருவத்தில், நிமோனியா, டைபாய்டு முதலிய நோய்களினால், குழந்தைகள் இறத்தல் மிகவும் குறைந்து வருகின்றது. இப் பருவத்தில் குடல்வாலழற்சி ஏற்படலாம்.

கண்வலி : தாயின் பிரசவ பாகத்தில் வெட்டை நோய் ஏற்பட்டிருந்தால், அதன் வழியே வெளியேறும் குழந்தையின் கண்களை, இந் நோய் பற்றுகிறது. இதைத் தவிர, ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெபிலோகாக்கஸ், பாசிலஸ் கோலை, தொண்டையடைப்பான் முதலிய நோய்க் கிருமிகளும் பிறந்த குழந்தையின் கண்களைத் தாக்கிக் கண்வலி உண்டாக்கக்கூடும்.

நோய்குறி : பிறந்த இருபத்து நான்கு அல்லது நாற்பத்தெட்டு மணிநேரம் சென்றபின், குழந்தையின் இமைகள் இலேசாகச் சிவந்து, தடித்துக் காணப்படும்; நீர் கசியும். இமைகளின் வீக்கம் அதிகரித்ததும், கண்ணின் ஒரத்தில் புளிச்சை கட்டிக் கொண்டு இமைகளைத் திறக்க முடியாது ஒட்டிக் கொள்ளச் செய்யும். இந் நோய் முதலில் ஒரு கண்ணில் தொடங்கி, மற்றைய கண்ணிற்கும் பரவிவிடும்.

சிகிச்சை : கவனிக்காது அசட்டை செய்தால், இந்நோய், பார்வையைப் பாதித்து விடும். இதை வராது தடுப்பதே நல்லது. பிறந்தவுடன் குழந்தையின் கண்களை போரிக் அமிலம் கரைத்த தண்ணீரால் பஞ்சினால் கழுவி, வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை ஊற்றினால் இந்நோய் ஏற்படாது தடுத்துவிடலாம். நோய் வந்துவிட்டால், கண் மருத்துவர் உதவியை நாடுவது நலம். இந் நோய்க்கு இக்காலத்தில் சல்பானிலமைடு, பெனிசிலின் டெமைசின் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன.

காமாலை : பிறந்த மூன்று அல்லது நான்கு நாளுக்கு மேல் குழந்தையின் உடல் மீது இலேசான மஞ்சள் நிறம் காணப்படுவதுண்டு. இதற்குக் காரணம், குழந்தையின் உடலில் தேவைக்கு மீறிய அளவில் சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கின்றன. வேண்டப்படாதவைகளை, இயற்கை போக்கிவிடும் பொழுது, அவைகளினின்று வெளிப்படும் மஞ்சள் நிறப்பொருள், உடலின் மீது இலேசான ஒரு மஞ்சள் நிறத்தை உண்டுபண்ணி விடுகின்றது. ஆனால் சில வேளைகளில், தோல் மட்டும்மின்றிக், கண்ணின் உட்புறமும் சிறு நீரும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்; மலம் களி மண்ணைப் போல் வெண்ணிறத்தில் காணப்படும். இத்துடன் காய்ச்சலும் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும். அப்போது இதைக் காமாலை நோய் என்பர். சிறு நீரும், மலமும், இதனால் பாதிக்கப்படுவதில்லை. இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. எவ்வித சிகிச்சையுமின்றி நாலைந்து தினங்களில் மஞ்சள் நிறம் மறைந்துவிடும். இவ்வாறு பிறந்த குழந்தைக்கு வரும் மஞ்சள் காமாலைக்குக் காரணங்கள் பின் வருபவை : சீரணக் கோளாறினால் பித்த நீர்க் கோளங்களின் உட்புறமுள்ள மெல்லிய தோலில் வீக்கம் ஏற்பட்டுப் பித்த நீர்த் தேக்கம் எற்படுவது ஒரு விதத்தில் நோய்க்குக் காரணம் பித்த நீர்க் குழாய் பிறவியிலேயே கோளாறாக இருந்தாலும், காமாலை நோய் ஏற்படக் காரணமாகின்றது. கொப்பூழ்க் கொடியில் சீழ் கட்டிக்கொண்டு, கொப்பூழ் வழியே நச்சுக் கிருமிகள் உள்ளே சென்று, கல்லீரலைப் பாதிப்பதாலும் காமாலை ஏற்படலாம். இதைத் தவிர சில குழந்தைகளுக்குப் பாரம் பரியமாகவே ஒருவிதக் காமாலை நோய் ஏற்படக்கூடும்.

சிகிச்சை : பாரம்பரியமாக வரும் காமாலை நோயும், பிறவியினால் ஏற்பட்ட கோளாற்றின் பயனாகப் பித்த நீர்க் குழாயில் ஏற்பட்ட காமாலை நோயும், பெரும்பாலும் மிகவும் கொடியவை; சிகிச்சை செய்யும் முன்பே, குழந்தையின் உயிருக்குக் கேடு விளைவிக்கும் வகையைச் சேர்ந்தவை. அசீரணத்தினால் ஏற்படும் காமாலையைத் தக்க சிகிச்சையால் குணப்படுத்த முடியும். ஒரு தேக்கரண்டி அளவு ஆமணக்கெண்ணெய் பேதிக்குச் கொடுத்தால், அசீரணம் சரியாகி, நோயும் சட்டெனக் குணமடைந்து விடுகிறது. பார்க்க : காமாலை.

வாய்ப்பூட்டு நோய்: (Tetanus) அபூர்வமானதொரு நோய். பிரசவ சமயத்தில் தகுந்த மருத்துவ உதவி இல்லாவிடில், குழந்தைகளுக்கு ஏற்படலாம். கொப்பூழ்க் கொடியை அறுக்கக் கையாளும் கத்தரிக்கோல் தூய்மை யாக இல்லாவிடினும், கொப்பூழ்க் கொடியில் உள்ள காயத்தை நன்றாக மூடி, மருந்து வைத்துக் கட்டிப் பாதுகாக்காமல் கிருமிகள் எளிதாக வந்து குடிகொள்ளுமாறு அசட்டைகயாகப் புறக்கணித்து விட்டாலும், வாய்ப்பூட்டு என்னும் நோய் ஏற்படலாம். இதை உடனே கவனிக்காவிடில், உயிருக்கு அபாயம் ஏற்படும்.

நோய்க்கிருமி : பிறந்த ஏழு அல்லது பத்து நாட்களுக்குப் பிறகு, குழந்தை வாயைத் திறக்க முடியாமல், மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கையையும், காலையும் இழுத்துக் கொண்டு வலிப்பினால் சிரமப்படும். தாடை, கழுத்து, மார்பு, வயிறு இவைகள் மீது உள்ள தசை மிகவும் கடினமாகக் கைக்குத் தென்படும்.

சிகிக்சை : வாய்ப்பூட்டு நோய் எதிர் மருந்து (Antetanus) எனப்படும் மருந்தை ஊசிமூலம் செலுத்தி, நோயைக் கண்டிக்க வேண்டும். வலிப்பு வராது தடுக்க, புரோமைடுகள் போன்ற மருந்துகளை ஊசி குத்த வேண்டும். இந்த நோய் வந்த குழந்தைகளை மருத்துவச் சாலையில் வைத்துச் சிகிச்சை செய்வதுதான் நலம்.

இழுப்பு : பிறந்த குழந்தைக்கும் இழுப்பு நோய் ஏற்படுவதுண்டு. நீண்ட காலம் கருப்பையில் தங்கியிருந்ததினால் ஏற்பட்ட மூச்சடைப்பு (Asphyxia), காய்ச்சல், அசீரணம், பிறவிக் கோளாறுகள் முதலியவைகளால் இது ஏற்படலாம். பார்க்க : இழுப்பு

இரத்தப் பெருக்கு (Haemorrhage) கொப்பூழ்க் கொடி பெண் உறுப்பு, குடல், தோல், முலைக்காம்பு ஆகிய உறுப்புக்களினின்றும் இரத்தப்பெருக்கு வெளிப்படக் கூடும். கொப்புழ்க் கொடியினின்று ஏற்படும் இரத்தக் கசிவு, இரண்டு வகைப்பட்டது. கொடியை நன்றாக இறுக்கிக் கட்டாததினால், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கொப்பூழிலிருந்து இரத்தம் கசிவது ஒரு வகை. இதை உடனே தடுக்க இயலும். இறுக்கமாகக் கொப்புழ்க் கொடி மீது இன்னொரு கட்டுப் போட்டுவிட்டால் இது நின்றுவிடும். கொப்பூழ்க்கொடி வாயில் காணப்படும் ரணத்தில் நச்சுக் கிருமிகள் குடிகொண்டு சீழ் கட்டிக்கொள்வதினால், கொப்பூழில் இரத்தக் கசிவு ஏற்படுவது மற்றொரு வகை. முதல் வகையைவிட, இது மிகவும் அபாயமானது, கொப்பூழ்க்கொடி பிரிந்த ஏழாவது, எட்டவாது நாள், கொப்பூழிலிருந்து இரத்தம் விரைவாகக் கசிந்து வந்தால் உடனே மருத்துவ உதவியை நாடுவது நலம். ஏனெனில், சில சமயம் இந்த இரத்தக் கசிவை, நிறுத்த கொப்பூழைச் சுற்றிலும் இறுக்கமாகப் பையைச் சுருக்குவது போல் ஒரு தையல் போடவும் வேண்டியிருக்கும்.

பெண் உறுப்பிலிருந்து இரத்தக் கசிவு : பிறந்த சில நாட்களுக்குப் பிறகு சில குழந்தைகளிடம் காணப்படும். தாயின் இரத்தத்தில் காணப்படும் ஈஸ்ட்டிரின் என்கிற சுரப்பு, குழந்தையின் இரத்தத்திலும் அளவுக்கு மீறி வந்து சேர்ந்து விடுவதினால், மாதவிடாயைப் போன்று கொஞ்சம் இரத்தக் கசிவு பெண் உறுப்பில் ஏற்படுகிறது. இது இரண்டு நாட்களில் தானே நின்று விடுமாதலால் தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை.

குடலில் இரத்தக் கசிவு : இது மலத்தின் வழியேதான் தெரியவரும். பிறந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, குழந்தை கழிக்கும் மலம், கருநிறமாக காணப்படும். சில சமயம் வாந்தியிலும் இரத்தம் வெளிப்படும். இந்தக் குழந்தைகளுக்கு இத்துடன் இழுப்பும் வந்துவிடலாம். பெரும்பாலும், கிரந்திப்புண் நோய் உள்ள பெற்றோர்க்குப் பிறக்கும் குழந்தைகள்தாம் இந் நோய்க்கு உட்படுகின்றன.

சிகிக்சை : தக்க சிகிச்சை செய்யாவிடில் மரணம் உண்டாகும். ஊட்டும் உணவை நிறுத்திவிட்டு, குளுக்கோஸ் நீர் மட்டும் கொடுக்க வேண்டும். இரத்தம் அதிகம் வெளியேறியிருந்தால், பதிலுக்கு இரத்தம் ஊட்ட வேண்டும். ஆதலால், இந்தக் குழந்தைகளை மருத்துவச்சாலையில் வைத்துச்சிகிச்சை செய்வது நலம்.

தோலில் இரத்தக் கசிவு : தோலில், அங்கங்கே நீல நிறமான புள்ளிகள் போல் இரத்தக் கசிவு காணப்படும். நச்சுக் கிருமிகளால் இரத்தம் கெட்டுப்போனால், அல்லது பாரம்பரியமாக இரத்ததைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை நோயினால் தோலிலே இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது பெரும்பாலும் அபாயகரமானதொரு நோய்.

முலைக்காம்பில் இரத்தக் கசிவு : சிலசமயம் பிறந்த குழந்தையின் முலைக் காம்புகளின்றும் கொஞ்சம் இரத்தம் வெளியே கசிவதுண்டு.

சிகிச்சை : தடித்து வீங்கிக் காணப்படும் மார்பின் மீது சூடான ஒத்தடம் கொடுக்கவேண்டும். கால்சியம் குளுக்கோனேட்டுப் பொடி ஒன்று அல்லது இரண்டு கிரெயின் அளவில், ஒரு நாளைக்கு மூன்று வேளை, தேனில் குழைத்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

சீரணக் கருவிகளைப் பாதிக்கும் நோய் : வாய்ப்புண்: வாயின் உட்புறத்தே அமைந்துள்ள மெல்லிய தோல், தனக்கு இயற்கையாக உள்ள நோயைத் தடுக்கும் சக்தி குறைந்து, நலிவடையும் பொழுது பல்வேறு நச்சுக் கிருமிகள் அதைத் தாக்கி, வாயின் உட்புறத்திலும், உதடுகளின் ஓரத்திலும் சிறு குழிப்புண்களை உண்டாக்குகின்றன. வாயில் புண் உண்டாகக் காரணம் : 1. குழந்தைக்கு அளிக்கப்படும் உணவில் ‘சி’ வைட்டமின் குறைவாக இருத்தல். 2. பல் முளைக்கும் பருவத்தில், வயிறு வீங்கிக் கனமாகி, பலவீனமாகி விடுதல். 3. பொதுவாகப் பலவித நோயினால் குழந்தையின் உடல் நலம் பழுதுபட்டிருத்தல். 4. குடலும், இரைப்பையும் அசீரணத்தினால் பாதிக்கப் பட்டிருந்தல். 5. டைபாய்டு, தட்டம்மை போன்ற நோயின் போது வாயைச் சுத்தமாக வைத்திருக்கத் தவறுதல். வாய்ப் புண்ணில் மிகவும் முக்கியமானவை இரண்டு : 1. திரஷ் வாய்க்கிரந்தி (Thrush), 2. நோமா (Noma) திரஷ், பால் குடிக்கும் பருவத்திலும், இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அதிக நாட்கள் காய்ச்சலாக படுத்திருந்தாலும், அல்லது உடல் நலம் குன்றி நலிந்திருந்தாலும் வரும்.

நோய்க் குறி : வாயின் உட்புறத்தில் நாக்கின் மீதும், மற்றைய பாகத்திலும் திரிந்து போன பால் சிறு கட்டிகளாகச் சிதறிக் கிடப்பது போன்று முத்தைப் போன்ற வெண்ணிறத்தில் பரவிக்கிடக்கும், எளிதில் துடைத்து அப்புறப்படுத்த இயலாது. அழுத்தி விரலால் துடைத்து அப்புறப்படுத்தினால் சிறிய வட்டமாக சிவந்த புண்களைக் காணலாம். இந்நோயினால் நாக்கில் வீக்கமோ, வலியோ காணப்படுவதில்லை.

சிகிச்சை : தட்டம்மை, டைபாய்டு போன்ற நோய்களில் குழந்தை அவதிப்படும் பொழுது, குழந்தையின் வாயை நாள்தோறும் மருந்து நீரால் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நலிவுற்ற குழந்கைளுக்கு, ஊட்டமான உணவு தரவேண்டும். பால் கொடுக்கு முன் தாயார் மார்புக் காம்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும். செயற்கை உணவு கொடுப்பதானால் பால் புட்டி, சுவைக்கும் ரப்பர் இவைகளை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்தியபின் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். வாயில் ஏற்பட்டிருக்கும் புண்ணைக் சுத்தமான பஞ்சினால் மெல்லத் துடைத்துவிட்டு, நாள்தோறும், இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு போரிக் அமிலத்துாள் ஒரு படி வெந்நீரில் கரைத்து, அந் நீரால் குழந்தையின் வாயைச் சுத்தப்படுத்துவிட்டு, நீரில் கரைத்த ஜென்ஷியன் வயலெட் (Gentian violet) என்னும் மருந்தைப் புண்ணின் மீது தடவ வேண்டும். கிளிசரின் எனும் திரவத்துடன் வெண்காரத்துகளைக் (Borax) கலந்து, புண்மீது பூசுவதும் ஒருவித சிகிச்சையாகும்.

நோமா : (Noma) இது வாய்ப்புண்ணில் மிகவும் அபாயகரமான நோய், டைபாய்டு, தட்டம்மை போன்ற நோய்களின் பொழுது, குழந்தையின் வாய் அசுத்தமாகக் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டால் நச்சுக் கிருமிகள் அங்கு சென்று, குடியேறி, விருத்தியடைந்து, வாயில் புண்ணை உண்டாக்குகின்றன. நலிவடைந்திருக்கும் உட்புறத் தோலைப் பாதித்து விரைவாகப் பரவும் இப்புண் சில சமயம் கன்னங்களில் துவாரம் உண்டாக்கி விடுவதும் உண்டு.

நோய்க்குறி : வயிற்றின் மீதும், கன்னங்களின் ஓரத்திலும் முதலில் சிறு குழிப்புண்ணாகத் தொடங்கிச் சில நாட்களில் பெரிதாகிக், கரும்பச்சை நிறமான புண்ணாகக் காணப்படும்: துர்நாற்றம் வீசும். இதைக் கவனித்துச் சிகிச்சை செய்யாவிடில் மரணம் உண்டாகும்.

சிகிச்சை : நோயுற்ற குழந்தைகளின் வாயைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுப் போன்ற மருந்து நீரில் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெனிசிலின், சல்பானிலமைடு போன்றவைகளைப் புண் மீது தடவிச் சிகிச்சை செய்வதுடன் சல்பானிலமைடு உள்ளுக்கும் கொடுப்பது நலம். பெனிசிலின் ஊசியின் மூலம் இதைக் குணப்படுத்துவது எளிது.

நாவில் வெடிப்புக்கள் : நாவின் மீது குறுக்கும் நெடுக்குமாகப் பிளவுகள் அல்லது வெடிப்புக்கள் காணப்படுவதுண்டு. டைபாய்டு, மேக நோய், செங்காய்ச்சல் (scare fever) போன்ற நோய்களின் பொழுது நாக்கில் சிறு சிறு பிளவுகள் காணப்படும்.

சிகிச்சை : பொதுவாக, எந்த விதமான நோயின் பொழுதும், வாயைச் சுத்தமாக வைத்திருந்தால், வாயில் புண்ணோ, வெடிப்போ ஏற்படாது தடுக்கலாம். வெடிப்புக்கள் மீது கிளிசரின் போராக்ஸ் என்னும் திரவத்தைத் தடவினால், சிறிது குணம் காணப்படும். மேக நோயினால் ஏற்படும் வெடிப்புக்கள், மேக நோய்க்குச் சிகிக்சை செய்தால் தான் மறையும்.

நோயின் போது நாவின் தோற்றம் : உணவில் எஞ்சிய கழிவுப் பொருள்களுடன், தேகத்தைப் பாதிக்கும் நச்சுக் கிருமிகள் கலந்து கொண்டு, நாவின் மீது வெண்மையாக மாவு படிந்து பரவியதைப் போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்குகின்றன. அசீரணத்தின் பொழுதும், குடல் மந்தமாக உள்ளபொழுதும் நா வெண்மையான மாவு பூசியது போல், சற்று ஈரமாகவும் காணப்படும். வாந்தி, தொற்று நோய்கள், இவைகளால் குழந்தை அவதிப்படும் பொழுது, உமிழ்நீர் வற்றிப் போவதினால் நா உலர்ந்து காய்ந்து, வெண்ணிற மாவு பூசியதொரு தோற்றத்தில் காணப்படும். செங்காய்ச்சல் நோயின் போது, நாவின் மீதுள்ள மெல்லிய தோல் நோயுற்று, நலிந்து, நாக்கு ரணமாக, இரத்தச் சிவப்பாகக் காணப்படும். இதைத் தவிர, உணவில் ரீபோபிளேவின் எனப்படும் 'பி' வைட்மின் போதாவிடில், நாவில் பலவிடங்களில் சிறு புண்கள் காணப்படலாம்.

பசியின்மை : குழந்தைகளுக்கு எளிதாக ஏற்படும் நோய்களில் இது ஒன்று. 1. சளிப்புப்போன்ற சாதாரணத் தொந்தரவு முதல், எல்லா விதமான காய்ச்சல்களும். 2. உணவில் தேவையான சத்துப் பொருள்கள் இல்லாமையால் உடம்பைப் பீடிக்கும் நலிவு. 3. பல் முளைக்கும் பருவம். 4. அம்மை குத்துவதால் ஏற்படும் காய்ச்சல். 5. செயற்கை ஊட்டத்தில், ஒரு குறிப்பிட்ட உணவின் மீது சலிப்புத் தட்டி விடுதல். 6. கணைநோய். 7. குடற்பூச்சிகள். 8. களைப்பு. 9. பிடிவாத அழுகை.

சிகிச்சை : காரணம் அறிந்து சிகிச்சை செய்தால் பசி ஏற்பட்டு விடும். உடல்நலத்தைப் புறக்கணிக்காது, ஊட்டமான உணவுகளை ஒழுங்கு முறை தவறாது அளித்தால், பசியின்மை ஏற்படாது. அதிகப் படிப்பினால் களைத்துப் போகும் குழந்தைக்குத் தக்க ஓய்வு கொடுத்தால் பசி ஏற்படும்.

வாந்தி : பிறந்தவுடன் குழந்தை வாந்தி எடுப்பதின் காரணம், பிறந்த குழந்தைக்கு வரும் நோய்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றவை இங்கே காணலாம்.

வாந்தியின் காரணங்கள் : 1. உணவு அளிக்கப்படும் முறைகளில் ஏற்படும் தவறுகள்: குழந்தை விரைவில் வளரவேண்டும் என்ற ஆர்வத்தில், தேவைக்கு மீறிய அளவு உணவு அளிப்பது, அளிக்கும் அளவில் ஒழுங்குமுறை இல்லாமை, ஒத்துக் கொள்ளாத உணவுகளை அளித்தல், உணவுடன் குழந்தை காற்றையும் விழுங்குதல். 2. பலவகைக் காய்ச்சல்கள், தொற்று நோய்கள். 3. அசீரணம். 4. சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே குடலின் வாய் மிகவும் குறுகலாக அமைந்துவிடுவதுண்டு. 5. குடல் ஏற்றம், குடல் வால் அழற்சி (Instussusception and appendicts) 6. மூளையில் கட்டிகள். 7. உள்நாக்கு நீண்டு வளர்வது. இதனால் இருமல் ஏற்பட்டு, வாந்தி ஏற்படலாம். 8. அவசரமாக உணவை விழுங்குதல். 9. குழந்தைகள் பயத்தாலோ, கோபத்தாலோ மனம் குழம்பியிருக்கும் நிலை. 10. வண்டி, கப்பல், விமானம் இவைகளில் பிரயாணம் செய்வதினால் ஏற்படும் ஒருவித மயக்கம். 11. காரமான நச்சுப் பொருளை விழுங்கிவிடுவது முதலியன. 12. மனத்துக்குப் பிடிக்காத உணவை வற்புறுத்தி உட்கொள்ளச் செய்தல். 13. பிறவிக் கோளாறாக அமைந்த குறுகிய இரைப்பை வாய்.

அதிக வாந்தி : இதைத் திரும்பத் திரும்ப வரும் நச்சு வாந்தி என்றும் அழைப்பதுண்டு. (Cyclic vomiting or periodic vomiting). இதை ஒரு தனிப்பட்ட நோய் என்பதைவிடப் பல்வேறு நோய்களின் அறிகுறி என்று கூறுவது பொருத்தமாகும். இந்த நோய் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றது. பயங்கொள்ளிக் குழந்தைகள், உணர்ச்சி வசப்பட்ட குழந்தைகள் ஆகியவர்களே, இதற்கு அதிகம் இலக்காகின்றனர். மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை, ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு தடவைகள் இந்நோய் குழந்தையைத் திரும்பத் திரும்ப வந்து பாதிக்கலாம். ஒரு தடவை வந்த வாந்தி நில்லாமல் தொடர்ந்தாற்போல், நாட்கணக்கில் வந்து உடல் நலத்தை மிகவும் கெடுக்கக்கூடும். இந்த வாந்தி நோய் வந்திருக்கும் சமயம், சிறுநீரில் கீட்டோன் என்னும் நச்சுப்பொருள் வெளியேறிக் கொண்டிருக்கும். ஆகவே இதை நச்சு வாந்தி என அழைப்பது மிக்க பொருத்தமாகும். காரணம் இன்னும் விளக்கமுறவில்லை.

நோய்க்குறிகள்: வயிற்றுவலி, மலக்சிக்கல், குமட்டல், உடற்சோர்வு, அசதி, பசியின்மை இவை போன்ற குறிகளுடன், வாந்தி தொடர்ந்து ஏற்படலாம்; அல்லது எடுத்த எடுப்பிலேயே வாந்தி ஆரம்பமாகலாம். முதல் வாந்தியில் சீரணமாகாத உணவு வெளிப்படும். தொடர்ந்து ஏற்படும் வாந்திகளில், கோழையும், பித்த நீரும் கலந்து காணப்படும். பின்னர் வெளியாகும் வாந்திகளில், கோழை, பித்தநீர் இவைகளுடன் இரத்தமும் சிறிது கலந்து காணப்படும். மிகவும் தீவிரமான சமயங்களில் அரைமணிக்கொரு தடவை வாந்தி நில்லாமல் வந்து கொண்டே இருக்கும். தாகம், தலைவலி, வயிற்று நோய் முதலியவை முக்கியமான அறிகுறிகள், நாவானது காய்ந்து வறட்சியாகக் காணப்படும். மூச்சில் ஒருவித புழுக்க வாசனை வீசும். தோல் வறண்டு, சிறிது சூடாகக் காணப்படும். கண்கள் குழி விழுந்து, விழிகளில் ஏக்கப்பார்வை காணப்படும்.

சிகிச்சை : குழந்தையை நடமாட விடாது, படுக்கையில் ஓய்வாகக் கிடத்த வேண்டும். உணவு கொடுக்கக் கூடாது. உலரும் வாயில் ஈரம் உண்டாக்கச் சிறிதளவு ஐஸ் அப்போதைக்கப் போது கொடுக்கலாம். நோய் அதி தீவரமாக இல்லாவிடில், குளக்கோசு கலந்த, ஆறிய வெந்நீர் அல்லது சுக்குப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறிய வெந்நீர், தேக்கரண்டி அளவு அரைமணிக்கொரு தடவை கொடுக்கலாம்.

இதைத்தவிர, உப்புநீரில் கலந்த 5 % குளுக்கோசு திரவத்தை, ஊசி மூலம் சுமார் 200-400 க.செ. கொடுக்க வேண்டும், கோடீன், சோடியம் பினோபார்பிடால் போன்ற மருந்துகளைக் கொடுத்து வாந்தியை நிறுத்த வேண்டும். கக்கல் : சில சமயம் குழந்தைகள் சாப்பிட்ட உணவை உடனுக்குடனேயே கக்கி விடுவதுண்டு. இது, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையிடமே அதிகம் காணப்படும்.

சிகிச்சை : உணவு உண்டவுடன் வாயை அழுத்தமாக மூடிச் சிறிது நேரம் பிடித்திருந்தால், குழந்தை உணவைக் கக்குவதில்லை. உணவு கொடுக்கும்போது, குழந்தையின் கவனத்தை விளையாட்டில் திருப்பி விடுவதும், இதைத் தடுக்கும் முறைகளில் ஒன்று.

பேதி குழந்தைப் பருவத்தில் தொந்தரவளிக்கும் நோய்களில் ஒன்று. இது முதல் வயதில் அடிக்கடி வருவது. இது 1. சாதாரண பேதி. 2. நச்சுக் கிருமிகளாலான பேதி. 3. பிற காரணங்களால் ஏற்படும் பேதி, என்று மூவகைப்படும்.

முதல்வகையின் காரணங்கள் : 1. உணவூட்டத்தால் ஏற்படும் தவறு: உணவில் கொழுப்புப் பொருள் மிகுந்திருந்தால், வெளுத்த வழுவழுப்பான பேதியும், புரோட்டீன் மிகுந்திருந்தால், தயிர்க்கட்டி போன்ற பேதியும், ஸ்டார்ச்சு அதிகமிருந்தால் கட்டியும் நுரையுமான பேதியும் உண்டாகும். 2. சோர்வு, களைப்பு, கோபதாப உணர்ச்சிகள். 3. தைராய்டு சுரப்புக் குறைவு. 4. சோகை. 5. இரத்தத்தில் அமிலம் மிகுதல். 6. வேகாத உணவுப் பொருள்கள், பழுக்காத கனிகள் முதலிய உண்ணுதல்.

இரண்டாவது வகை: முதல் வகை பேதியின் பொழுது, குடலின் நலம் குறைந்து, நலிந்து நச்சுக்கிருமிகள் தாக்கி, மேலும் பேதியை உண்டாக்கலாம்.

பிற காரணங்களால் ஏற்படும் பேதி : குடலை இயக்குவிக்கும் நரம்புகள், சில குழந்தைகளுக்கு முதல் வயதில் நல்ல உறுதியான நிலையில் இருப்பதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகள் உணவு உட்கொண்ட உடனேயே, ஒரு முறை நீராக மலம் கழிப்பதுண்டு. இதைத் தவிர டைபாய்டு, நிமோனியா போன்ற காய்ச்சலின் போதும் குழந்தைக்குப் பேதி வருவது வழக்கம். சாதாரண பேதியாகத் தொடங்குவது, பிறகு சீதபேதியாக மாறுவதும் உண்டு.

விஷக்கிருமிகளால் ஏற்படும் பேதி : பெரும்பாலும் கோடை காலத்திலே வருவதால், கோடை கால பேதியெனவும் அழைக்கப்படும் இந்த பேதிக்குக் காரணங்கள்: 1. கிருமிகளைக் கொல்ல உதவும் ஹைடிரோ குளோரிக் அமிலம் குழந்தைகளின் இரைப்பையில் குறைவாக இருப்பது. 2. பால் அல்லது வேறு உணவுப் பொருள் நன்றாகக் காய்ச்சிச் சுத்தப்படுத்தாது அளிப்பது. 3. நல்ல வெயில் அல்லது நல்ல மழை இவை இரண்டும், கிருமிகள் விருத்தியடைய உகந்த காலம்.

இந்த வகை பேதி, குழந்தையை மிகவும் கடுமைாகப் பாதிக்கின்றது. இதில் மூன்று வகைகள் உண்டு. 1. பத்துப் பதினைந்து தடவைகள் மலம் மட்டும் வெளிப்படும் சாதாரண வகை. 2. காய்ச்சலுடன் பேதி, 3. காலரா நோயைப் போல் நீரான மலம் வெளிப்பட்டு, அபாயம் விளைவிக்கும் கொடிய பேதி.

நோய்க்குறிகள் : திடீரென்று அடிக்கடி இளகலான மலம் கழிக்கத் துவங்கிப் பிறகு பேதியாக முடிவடையலாம். முதல் தடவை கெட்டியாக வெளிப்பட்ட மலம், அடுத்த முறை சிறிது நெகிழ்ந்து, முடிவில் நீராக வெளிப் படலாம். முதலில் மஞ்சள் நிறமாக இருந்த மலம், சிறிது பொழுதில் பச்சை நிறத்தை அடைந்து, முடிவில் இரத்தமும் சீதமுமாகக் காணப்படலாம். பேதி மிகவும் கடுமையாக மாறிவிட்டால், மலம் சாணிநீர் போன்ற தோற்றத்தில் மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும்.

பேதியினால், குழந்தையின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது. உடலில் உள்ள நீர் அதிகமாக வெளியேறி விடுவதனால், உடலுக்குத் தேவையான தண்ணீர் குறைந்துவிடுகின்றது. நச்சுக்கிருமிகளால் உண்டாகும் நஞ்சு எல்லா உறுப்புக்களையும் பாதிப்பதினால், அவை சோர்ந்துவிடுகின்றன. ஆகவே தோல் தளர்ந்து காணப்படும். நாடி மிகவும் மெலிவாகத் தென்படும். கண்கள் குழி விழுந்து, கண்ணிமைகள் விழியை முழுவதும் மூடச் சக்தியற்றுப் பாதி திறந்த நிலையில் இருக்கும். உடலின் வெப்ப நிலை குறைந்து காணப்படும். உதடுகள் கறுத்துவிடுவது பேதி மிகவும் கடுமையாகிவிட்டதன் குறியாகும்.

சிகிக்சை : கம்பளியால் உடலை நன்றாகப் போர்த்தி, உடல்வெப்பம் குறையாது காக்கவேண்டும். மிகவும் கடுமையான பேதிக்கு மருத்துவ சாலையில் வைத்துச் சிகிச்சை செய்வது தான் தகுந்த முறை. உடலிலிருந்து பிரிந்த நீரைச் சரிக்கட்ட, பிளாஸ்மா, 5% குளுக்கோசுத் திரவம், ஏற்கெனவே சோகையினால் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருந்தால், இரத்தம் முதலியவற்றைச் சொட்டு சொட்டாக ஊசிமூலம் ஏற்ற வேண்டியிருக்கும். உணவு சிறிதளவு ஏற்கும் நிலையில் இருந்தால் பால் போன்ற உணவுகளை நிறுத்திவிட்டுப் பார்லி நீர், குளுக்கோசு நீர் இவைகளை மட்டுமே கொஞ்ச அளவில் அரை மணிக்கொரு தடவை கொடுக்க வேண்டும். குடல் வேகமாக இயங்குவதை நிறுத்த, கேயோலின், பிஸ்மத்து முதலியவை உள்ளுக்குக் கொடுக்கவேண்டும். பேதி அதிகமாகி வலிப்பு ஏற்பட இருந்தால், கால்சியம் குளுக்கோனேட்டு மருந்தை ஊசி மூலம் ஏற்றவேண்டி வரும். இதைத் தவிர, வைட்டமின் சி, பி அகியவற்றை வேண்டிய அளவு ஊசி மூலம் ஏற்றவேண்டும். நச்சுக் கிருமிகளைக் கொல்லவல்ல சல்பானிலமைடு மருந்துகளையும் கொடுக்க வேண்டும்.

வயிற்றுவலி : காரணம் 1. பாலில் உண்டாகும் லாக்டிக் அமிலம் குடலின் உட்புறத்துள்ள மெல்லிய தொலை உறுத்துவது. 2. சீரணமாகாத புரோட்டீன் பெருங்கட்டிகளாகக் குடலில் தேங்கிக் கிடப்பது. 3. சீரணக் கோளாற்றினால் குடலில் வாயுத்தேக்கம் ஏற்படுவது.

நோய்க் குறிகள்: 1. குழந்தை திடீர் என்று அழும். சிறிது நேரம் அழுது துடித்த பின்பு தானே ஓயும். மறுபடியும் திடீரென்று வீறிட்டு அழும். பசி, காதுவலி, சிறுநீரகத்தில் கல், கணை நோய், மூளை மந்தம் முதலியன ஏற்படுகையிலும், குழந்தை மேற்சொன்னவாறு விட்டுவிட்டு அழக்கூடும். 2. வயிறு கல்போல் கடினமாகக் கைக்குத் தென்படும். 3. அழும் பொழுது குழந்தை கால்களிரண்டையும் மேலுக்குத் தூக்கிக் கொண்டு அழும். 4. அதிகமாகத் துடித்து அழுதால், இழுப்பு ஏற்படலாம். 5. வயிற்றில் தேங்கியிருக்கும் காற்று வெளிப்பட்டவுடன் சட்டென அழுகை ஒய்ந்து போகும்.

சிகிச்சை : வயிற்றின் மீது லேசாகச் சிறிதளவு டர்ப்பன்ட்டைன் எண்ணையைப் பூசி, வெந்நீர்ப் பையினால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வயிற்றின் மீது ஆளிவிதை அல்லது கடுகு அரைத்துப் பூசுவதும் நலம். மலத்தேக்கம் இல்லாமல் செய்யக் கிளிசரினும், வெந்நீரும் கலந்த எனிமா கொடுத்துக் குடலைச் சுத்தப்படுத்தல் நலம். குடலில் தேங்கியிருக்கும் வாயுவை வெளிப்படுத்த, இரண்டு அல்லது நான்கு சொட்டுப் பெப்பர்மின்டு நீர் கொடுப்பது நலம். ஆனால் அடிக்கடி வயிற்று வலி குழந்தைக்கு வராது தடுப்பது தான் உகந்த சிகிச்சையாகும். தாய்ப்பால் மட்டும் உண்ணும் குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் வேளைகளை ஒழுங்காகக் கவனித்துக் கொடுக்க வேண்டும். நினைத்த பொழுதெல்லாம் தாய்ப்பால் அளித்தல் தவறு. பால் எளிதில் சீரணமடைவதற்காக இரண்டு கிரெயின் அளவு சேடியம் சிட்ரேட்டு உப்பைத் தண்ணீரில் கரைத்துப் புகட்டி விடுவது நலம். மலக்சிக்கல் இல்லாமல் குழந்தையைக் கவனித்துக் கொள்வது, சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். இவ்வளவு கவனித்தும் தாய்பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டால், தாய்ப் பாலை நிறுத்திவிட்டு, வேறு உணவைக் கொடுப்பது நலம்.

செயற்கை உணவு தந்தால் உணவை மிகவும் சுத்தமாகத் தயாரிக்க வேண்டும். சோடா பைக் கார்பனேட்டு உப்பு 2% கிரெயின், அரொமாட்டிக் ஸ்பிரிட் ஆப் அம்மோனிய 2% சொட்டு, கிளிசரின் 2% சொட்டு, இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு பெப்பர்மின்டு நீர் கலந்து, உணவு தரும் வேளைகளுக்கிடையே சில நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைக்கு வரும் வயிற்று வலியை ஒருவாறு தடுக்க இயலும். ஒரு குறிப்பிட்ட செயற்கை உணவு ஒத்துக்கொள்ளாமல் வயிற்றுவலி ஏற்பட்டால், அதை மாற்றி வேறு வகை உணவைத் தரவேண்டும்.

மலச்சிக்கல் குழந்தைகளுக்கு வரும் சாதாரண நோய்களில் ஒன்று. இதைப்பற்றி வேறிடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

விக்கல் : குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில், உணவிற்குப் பிறகு விக்கல் வருவது இயற்கை. இதனால் அபாயம் இல்லை. ஆனால், அவசரமாகப் பாலைப் பருகும் பொழுது இதனுடன் காற்றையும் விழுங்கி விடுவதினால் அபாயம் ஏற்படுகின்றது. அதனால் அவசரப்படாமல், நிதானித்து அளிக்க வேண்டும். பால் குடித்ததும், குழந்தையைத் தோளின் மீது சார்த்திக் கொண்டு, மெல்ல முதுகில் நாலைந்து முறை தட்டிக்கொடுத்தால், விழுங்கியுள்ள காற்று வெளியேறிவிடும். கொஞ்சம் வெது வெதுப்பான வெந்நீர், குடிப்பதற்கு அளித்தால், சில சமயம் விக்கல் நின்று போவதுண்டு.

சீரணக் கருவிகளைப் பற்றிய பிற நோய்கள் : 1. பிறவிலேயே குடல் வாய் குறுகியிருத்தல். 2. குடல் தடை, குடல் வால் அழற்சி. 3. ஈரல் குலைக்கட்டி, 4. கல்லீரல், மண்ணீரல் வீக்கம். 5. குடல் இறக்கம். 6. மஞ்சள் காமாலை முதலியன. இவற்றைப்பற்றி வேறு இடத்தில் விவரம் உள்ளது.

இளைத்தல் : குழந்தை இளைத்துப் போவதின் காரணங்கள் பின்வருவன : 1. ஊட்டக்குறை (a) குழந்தைக்கு அளிக்கப்படும் உணவு வளர்ச்சிக்கு வேண்டிய அளவில்லாமல் குறைவாக இருப்பது (b) உணவை வேண்டிய அளவு உட்கொள்ள முடியாமல், மூளி உதடு, மூளி மேல்வாய் போன்ற பிறவிக் கோளாறுகள் இருப்பது. (c) தேவையான சத்துப்பொருள்கள் குறைந்த, செயற்கை உணவை அளிப்பது. 2. குழந்தை குறை மாதத்தில் பிறப்பது. இதற்குச் சீரண சக்தி குறைவு. தேவையான பாலைக் குடிக்க உடலில் சக்தி இருப்பதில்லை. உணவில் பெரும்பகுதி உடலின் வெப்ப நிலையைக் காக்கச் செலவழிந்து போவதினால் வளர்ச்சிக்குத் தேவையான அளவு உணவு கிடைப்பதில்லை. 3. குழந்தைக்கு அடிக்கடி வரும் பேதி நோய், 4. அசீரணம். 5. பிறவியிலேயே ஏற்படும் மேக நோய். 6. க்ஷயம். 7. எவ்விதக் காரணமுன்றி இளைத்துப் போகும் ஒரு தனிப்பட்ட நோய் . (Idiopathic wasting)

சிகிச்சை : இளைக்கும் காரணத்தைக் கண்டுபிடித்துத் தடுப்பதுதான் தகுந்த சிகிச்சை. ஊட்டமான உணவு, காற்றோட்டம், சூரிய வெளிச்சம் முதலியன இளைத்ததைத் தடுக்கும். இளைத்திருக்கும் குழந்தையைக் குளிப்பாட்டியதும், ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். நோயுற்று நலிந்துள்ள குழந்தைகளை மடியிலேயே வைத்துக் குழந்தைக்குச் சாந்தியை ஊட்டுவது மிகவும் முக்கியமானது. இத்தகைய குழந்தைகளுக்குத் தாயின் கவனிப்பு மிகவும் அதிகம் தேவை.

அசீரணம் : குழந்தைப் பருவத்தில், அசீரணம் மூன்று வகைப்படும். 1. இரைப்பை அசீரணம் (a) தீவிரவகை. (b) அடிக்கடி ஏற்படும் மிதமான ஒரு வகை. 2. ஈரல் அசீரணம். 3. குடல் அசீரணம்.

இரைப்பை அசீரணம் : (a) தீவிரமானது : இதைச் சாதாரணமாக வயிறு கெட்டுவிட்டது. பித்தம் கொண்டுவிட்டது என்று கூறுவார்கள்.

காரணம் : பழுக்காத காய்கள், தேங்காய் முதலியவைகளை அளவுக்கு மீறி உண்பது.

நோய்க்குறி : அசீரணப்படுத்தும் உணவு வகைகளை உண்ட சில மணி நேரத்தில், குழந்தை வயிற்று நோவில் துடித்துக்கொண்டு, வாந்தி எடுக்கும். சில சமயம் காய்ச்சலும் சேர்ந்து காணப்படும்.

சிகிச்சை : நோயாளியைப் பட்டினி போட்டுவிடுவது நல்ல சிகிச்சை முறை. வாந்தி எடுத்தவுடன் வயிற்று நோவு நின்றுவிடும். ஒரு கிராம் அளவு சோடா உப்பை, இருபது அவுன்ஸ் நீரில் கரைத்து, அந்த நீரை ஒரு தேக்கரண்டியளவு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும். எனிமா கொடுத்து குடலைச் சுத்தப்படுத்திவிட்டு, வயிற்றின் மீது வெந்நீர்ப்பை வைத்து ஒத்தடம் கொடுத்தால், நோவு குறையும். குழந்தை ஒருமுறை வாந்தி எடுத்த பின்பு, பிஸ்மத்துப் போன்ற மருந்துகளைக் கொடுப்பது நலம்.

அடிக்கடி ஏற்படும் மிதமான அசீரணம் : காரணங்கள் 1. தீவிர அசீரணம் குணமாகாமல், பிறகு அடிக்கடி தோன்றித் தொந்தரவு கொடுக்கலாம். 2. சிலவகை உணவுப் பொருள்கள், குடலின் உட்புறத் தோலுக்குத் தொந்தரவு கொடுப்பதனால் இந்த வகை அசீரணம் ஏற்படலாம். 3 அஸ்கா-சர்க்கரை அதிகம் கலந்த தித்திப்புப் பண்டங்கள். 4. உணவுப் பொருள்களை நன்றாக மென்று சாப்பிடாது விழுங்குதல். 5. அவசரமாகச் சுடச்சுட உணவைச் சாப்பிடுவது. 6. அதிகக் கொழுப்புச் சத்து மிகுந்த மிட்டாய்கள்.

நோய்க் குறிகள் : பசியின்மை, காலை வேளைகளில் தலைச்சுற்றல், குமட்டல், குடலில் காற்று நிறைந்து துன்புறுத்தல், சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, அடிக்கடி மூர்ச்சை, அடுப்புக்கரி, மண் போன்றவைகள் தின்னும் கெட்ட பழக்கம்.

சிகிச்சை : சீரணத்தை மந்தப்படுத்தும் பொருள்களை, உணவினின்றும் நீக்கிவிட வேண்டும். அடிக்கடி அசீரணம் ஏற்பட்டால், ஒரு முறை பேதிக்குக் கொடுப்பது மிகவும் நல்லது.

ஈரல் அசீரணம் : மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது.

காரணம் : 1. பரம்பரையாகச் சில குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மந்தமாக வேலை செய்யும் தன்மை காரணமாகலாம். 2. பால், வெண்ணெய் போன்ற பொருள்களை அதிகமாக உணவில் சேர்ப்பதால், கல்லீரல் அதிகமாக வேலை செய்து சோர்ந்து போகலாம்.

நோய்க்குறி : பசியின்மை, குழந்தையின் உடல் எடை குறைந்து கொண்டு வருவது, தூக்கமின்மை, விளையாட்டில் சோர்வு, கண் எரிச்சல், அழுகை, பிடிவாதம் முதலியன. இவற்றுடன் குழந்தையின் மூச்சில் துர்நாற்றம் வீசுவதையும், மலம் மஞ்சள் நிறமாக இல்லாது வெள்ளையாக இருப்பதையும் காணலாம். மற்றும், சில சமயம் தலைவலி, வாந்தி, காய்ச்சல் முதலியனவும் காணப்படலாம்.

சிகிச்சை : சீரணத்தைப் பாதிக்கும் உணவு வகைகளை நீக்கி, எளிதில் சீரணிக்கும் உணவு வகைகளைச் சேர்க்க வேண்டும். ஒழுங்கான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். மேலும் கிரெ பொடி (Grey powder) 12 கிரெயின் அல்லது ரூபார்ப் (Rhubarb) 1/2 கிரெயின் என்ற அளவில் படுக்கும்போது, ஒருவார காலம் கொடுக்கலாம்.

குடல் அசீரணம்: ஐந்திலிருந்து எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அதிகம் காணப்படும்.

காரணம் : 1. இரைப்பை, குடல் இவைகளில் அதிகப்படியாகக் கோழை உண்டாகி, சீரண நீர் கலந்து அதனுடைய உரத்தைக் குலைத்து விடுதல். 2. குடலில் கசியும் கோழை, அங்கே தங்கியுள்ள மலத்தின் மீது படிந்து விடுவதினால், குடல் மலத்தை வெளியே தள்ள முடியாமலாகி மலச்சிக்கல் ஏற்படுதல். மலச்சிக்கலால் ஏற்படும் நஞ்சு இரத்ததில் கலந்து அசீரணம் உண்டு பண்ணுகிறது. 3. உணவில் அதிக சர்க்கரையும் புரோட்டீனும் இருத்தல், அதிக வேலை, தொண்டையில் சதை வளர்ந்து புண்ணாகுதல்.

சிகிச்சை : குழந்தையின் உணவில் ஒழுங்குமுறை வேண்டும். குழந்தைக்குத் தகுந்த ஓய்வும், வேறு பொழுது போக்குகளும் வேண்டும். சீரணத்தைக் கெடுக்கும் சாக்லேட்டுப் போன்ற கொழுப்புக் பண்டங்கள் போன்றவற்றை நீக்க வேண்டும். ஒருமுறை பேதிக்குக் கொடுப்பது நலம். பசியைத் தூண்டும் கசப்பு மருந்துகள் (Bitters) சிலவற்றைக் கொடுப்பது நலம். இரவு வேளைகளில், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய், மலை வாழைப்பழம், அல்லது ஒர் அவுன்ஸ் பாரபின் எண்ணெய் போன்றவைகளைக் கொடுத்து, மலச்சிக்கலின்றிக் காப்பது நலம்.

சளிப்பு : மூக்கின் உட்புறமுள்ள மெல்லிய தோலைப் பாதித்து, அதைத் தொடர்ந்துள்ள துளைகளையும் பாதிக்கும் நோய், சளிப்பு என்றும், நீர்க்கோவை என்றும் அழைக்கப்படுகின்றது.

காரணம் : இந்த நோய்க்குக் காரணம், ஒரு வகையான வைரஸ் கிருமியாகும். இவை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோயைப் பரப்பும் ஆற்றல் கொண்டவை. நோயின் தொடக்கத்திற்கு வைரஸ் கிருமிகள் காரணம் எனினும், அதற்குப் பிறகு, மூக்கில் சளி கசிந்து கெட்டியாக வெளிப்படுவதற்கு, வேறு சளி நச்சுக் கிருமிகள் காரணமாகின்றன. இந்த கிருமிகள் வந்து குடியேறி, விருத்தியடைந்து, சளி நோயை உற்பத்தி செய்ய சில தனிப்பட்ட காரணங்கள் முக்கியமாக உண்டு. 1 வயது பிறந்ததிலிருந்து சுமார் ஐந்து மாதம் வரை சளிப்பு, குழந்தைகளுக்கு அதிகம் வருவதில்லை. இந்தப் பருவத்தில் மூக்கின் உட்புறத்தோல், வைரஸ் கிருமிகள் விருத்தியடைய ஏற்றதாக இருப்பதில்லை. இதுவே காரணம் என்பது ஒரு சாரார் கொள்கை. ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தை அடிக்கடி சளி பிடித்துக் கொள்வது இயற்கை. 2. ஊட்டக் குறைவு, வைட்டமின்கள், சிறப்பாக வைட்டமின் ஏ குறைவாக இருத்தல். 3. தொண்டைச் சதை, அடினாய்டு, மூக்கடித்துவாரங்கள் (sinuses) முதலியவைகளில் தொற்று ஏற்படுதல். 4. தூசியுள்ள இடத்திலும், குறைந்த காற்றோட்டமுள்ள இடத்திலும் வசித்தல். 5. அதிகக் குளிரில் இருத்தல், மழையில் நனைதல், கூட்டமான இடத்தில் அதிக நேரம் இருந்து விட்டு, சட்டெனக் காற்றோட்டமான திறந்த வெளிக்கு வருவது. 6. தலை முழுகிய பின்பு தலையை நன்றாகத் துவட்டாமல் ஈரமாக விட்டுவைத்தல். 7. பசி, குழந்தையின் உடல் நலத்தைக் கெடுத்துச் சளிக் கிருமிகள் குடியேறி விருத்தியடைய அனுகூலம் செய்தல்.

நோய்க் குறிகள் : ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை, அடிக்கடி அழும். முகம் சிவந்து காணப்படும். உடல் இலேசான சூடாகத் தென்படும். கண்களிலும் மூக்கிலும் நீர் கசிந்து கொண்டிருக்கும். பசி கெட்டு விடும். பெரியவர்களைப் போல் மூக்கில் கசியும் நீரை அப்புறப்படுத்த முடியாததினால், தேங்கியுள்ள சளி நீர் மூச்சைத் திணறச் செய்யும். மேலும், குழந்தையின் மூக்குத் துவாரம், பெரியவர்களுக்கு இருப்பதைவிடச் சிறியதாகையினால், உள்ளேயுள்ள தோல் உப்பிக் கொண்டு, துவாரம் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது.

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தை, காலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும். நடுப்பகலின் போது சோர்ந்து காணப்படும். சாயங்காலம் மூக்கைப் கைகளால் தேய்த்துக் கொண்டு, பிடிவாதமும் அழுகையுமாக மாறிவிடும். காய்ச்சல் 102 : பா. அல்லது 103 பா. வரை காணப்படும். கண்கள் சிவந்து, இமைகள் இடுங்கும். மூக்கிலும், கண்களிலும் நீர் சுரந்து, மூச்சுத் திணறும். சில சமயம் குழந்தைக்குக் சளி பிடிப்பது வாந்தியுடன் ஆரம்பமாவதும் உண்டு. காய்ச்சலில்லாமல் வெறும் சளிமட்டுமே காணலாம்.

சளிப்பினால் ஏற்படும் தொந்தரவுகள் : சளிப்பு அபாயரமான நோயாக இல்லாவிடினும், அதைத் தொடர்ந்து வேறு நோய்கள் தொடங்கக் கூடும். மூக்கின் உட்புறத் தோலைப் பாதிக்கும் நச்சுக்கிருமிகள் காது, தொண்டை, சுவாசக் குழல்கள், மூக்கடித் துவாரங்கள், கழுத்துச் சுரப்பிகள் முதலியவற்றிற்கும் பரவிப் பல்வேறு நோய்களை உண்டு பண்ணலாம். காதில் சீழ் வடிதல், தொண்டை ரணம், மூளைச் சன்னி, நிமோனியா, இருமல் போன்ற நோய்கள் சளி காரணமாக உண்டாகலாம்.

சிகிச்சை : குழந்தைக்குச் சளி ஏற்படாது தடுப்பது தான் தகுந்த சிகிச்சையாகும். கூட்டம் நிறைந்த நாடக, சினிமாக் கொட்டகைகளுக்குள் குழந்தையை எடுத்துப்போதல் கூடாது. சளி பிடித்திருப்பவர் குழந்தையை எடுத்துக் கொஞ்சி விளையாடி முத்தமிடுதல் ஆகாது.

குளிர்காலத்தில் கம்பளிச் சட்டைகளைப் போட்டு அதிகக் குளிர் காற்று மேலே வீசாது தடுத்தல் வேண்டும். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த உணவு, தேவையான ஓய்வு, சூரிய வெளிச்சம், நல்ல காற்று, இவைகள் சளி வராமல் பாதுகாக்கும் மருந்துகள். நோய் வாய்ப்பட்டிருக்கும் குழந்தையை, ஓய்வாகப் படுக்கையில் கிடத்தி வைப்பது நலம். ஒரு வயதிற்கு ஒரு கிரெயின் அளவு என்ற கணக்கில் ஒரு தடவைக்குச் சுமார் ஐந்து கிரெயினுக்கு மேற்படாத ஆஸ்பரின் (த.க) மருந்து உள்ளுக்குக் கொடுப்பது ஒருவித சிகிக்சையாகும். ஆனாலும், ஆஸ்பரின் மருந்தை நினைத்த மாத்திரம், தாறு மாறாகப் பயன்படுத்துவது தவறு. தூங்குவதற்குள் கோடீன் அல்லது பார்பிட்ரேட்டு ஏதேனும் கொடுக்கலாம். குழந்தைக்கு எனிமா கொடுத்துக் குடலைச் சுத்தப்படுத்துவது நலம். சளி சுவாசக் குழலுக்குள் போய் விடாதிருக்கப் படுக்கையில் கால்களை உயர்த்தி, தலையைத் தாழ்த்தி வைக்க வேண்டும்; குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்துத் தூங்கச் செய்வது நல்ல முறையாகும். சளி நீரை மெல்லிய பஞ்சுத் துணியினால் அப்புறப்படுத்த வேண்டும். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்குப் பார்லித் தண்ணீரும், குளுக்கோசு சர்க்கரையும் கலந்த எளிய உணவு போதும். அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்குக் கெட்டியான உணவை நீக்கிவிட்டுப் பால், பழச்சாறு முதலிய நீர்த்த உணவு அளிப்பது தான் நல்லது. சளி நோய்க்கு இக்கால வைத்தியர்கள், சல்பானமைடு, பெனிசிலின் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இம் மருந்துகள் சளியைப் போக்கும் மருந்துகள் என நிச்சயமாகக் கூற முடியாது.

இருமல் : இது ஒரு தனிநோய் அல்ல ; உடலைப் பாதிக்கும் நோய்களின் அறிகுறி. இதில் இரண்டு வகைகள் உள்ளன. தனியே வரும் இருமல். 2. காய்ச்சலுடன் காணப்படும் இருமல். இருமல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் நோய்களில் ஒன்று.

இருமலுக்கு காரணம் : 1. நுரையீரல்களுக்குச் செல்லும் சிறு குழல்களில் இரணம் எற்பட்டு, அதினின்று கசியும் சளி, குழலுக்குள்ளே தங்கி மூச்சு முட்டலை உண்டு பண்ணுகையில், உடல் அதை நிவர்த்திக்கச் சளியை அப்புறப்படுத்தச் செய்யும் முயற்சி இருமல். இந்த நோய் காய்ச்சலுடன் வரலாம்; தனியாகவும் வரலாம். 2. தொண்டையிலும், மூக்கிலும், சதை வளர்ச்சி ஏற்பட்டிருத்தல். 3. உள்நாக்கு நீண்டு வளர்ந்து இருப்பது. 4. பருவகால வேற்றுமையினால் தொண்டையில் இரணம் ஏற்படுவது.

நோய்க் குறிகள் : தொண்டைச் சதை, அடினாய்டு இவைகளின் வீக்கத்தினால் இருமல் ஏற்பட்டால், குழந்தை மூச்சுத் திணறக், கண்களில் நீர் பெருகி இருமும். இரவில்தான் இருமல் அதிகம் காணப்படும். இருமல் நின்றதும், சாப்பிட்ட உணவு வாந்தி எடுக்கும். தொண்டையில் இரணம் ஏற்பட்டதால் காணும் இருமல், சளியற்ற வறட்சியான இருமலாக இருக்கும். தொண்டையில் ஈரம் உலர்ந்தவுடன் அடிக்கடி ஏற்படும்.

உள்நாக்கு நீண்டதால் ஏற்படும் இருமல் ; குழந்தை படுத்துக்கொள்ளும் பொழுது, உள்நாக்கு வாயின் பின் பாகத்தின் மீது படிவதால், உறுத்தி இருமல் ஏற்படுகின்றது. இது சளியற்ற, வறட்சி இருமலாக இருக்கும். இரவு வேளைகளில் தான் அதிகம் காணப்படும்.

மூச்சுக் குழலற்சியால் ஏற்படும் இருமல்; சில சமயம் இருமலுடன் காய்ச்சலும் சேர்ந்து காணப்படும். இருமலுடன் கோழை வெளிப்படும். இருமி வெளியேறும் கோழையை வெளியே துப்பத் தெரியாத குழந்தை, அதை விழுங்கி விடுவதனால் மலத்திலும் வாந்தியிலும் கோழையைக் காணலாம். இதைத் தவிர தொண்டை, மார்பு, முதுகு முதலிய இடத்தில் கையை வைத்துப் பார்த்தால், கர்கர் என்ற ஒலியை உணரலாம். கோழை நிறைந்துள்ள மூச்சுக் குழல்களுக்குள் சுவாசம் சிரமப்பட்டு வெளியேறும் பொழுது, இவ்விதமான ஒலி உண்டாகிறது.

சிகிச்சை : இருமலின் காரணத்தைப் பொறுத்துள்ளது. தொண்டை காய்ந்து போவதினால், இருமல் வருவதாக இருந்தால், படுக்கப் போகும் முன் குழந்தைக்கு நல்ல சூடான பால் கொஞ்சம் கொடுக்க வேண்டும். மாண்டில் ஸ்பெயிண்டு, ரிசார்லான் பெய்ன்டு போன்ற தொண்டைக்குத் தடவும் மருந்துகளைத் தடவினாலும் இருமல் குறையும். குழந்தையின் உணவில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் இருந்தால் இந் நோய் வராமல் இருக்காது. இந்த இருமலில் அவதிப்படும் குழந்தைக்குத் தினசரி இரண்டு தேக்கரண்டியளவு மீன் எண்ணெய் படுக்கப்போகும் முன் கொடுப்பது நலம். உள்நாக்கு நீண்டிருப்பதால் ஏற்படும் இருமலுக்கு நீண்ட பாகத்தைக் கத்தரித்துச் சரிப்படுத்தி விட்டால் இருமல் நின்றுவிடும். தொண்டைச் சதையும், அடினாய்டும் வீங்கியதால் ஏற்படும் இருமலுக்குத் தொண்டை, மூக்கு, காது வைத்திய நிபுணரிடம் சிசிச்சை பெறுவது நலம்.

காய்ச்சல் : இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. பல நோய்களின் வெளிப்படையான ஒரு சின்னம். சளிப்பு நோயிலிருந்து தொற்று நோய்கள் வரை, எந்த விதமான நோயும், காய்ச்சல் சின்னத்துடன் தான் தொடங்குகின்றன. சில சமயம் குழந்தைக்குக் சாதாரணமாக உடல் வெப்பநிலை, மாலை வேளைகளில் 990 பா. அல்லது 1000 பா. வரை அதிகரித்துக் காணப்படுவதுண்டு. உடலின் எவ்விதமான நோயின் அறிகுறியும் இன்றி, இந்த விதமாக, இலேசாக உடலின் வெப்பம் அதிகரிப்பதுண்டு. குடலில் பூச்சி, கல்லீரல் மந்தமாக இயங்குதல், தொண்டையில் சிறிது இரணம், இவைகள் தினசரி வெப்ப நிலையைச் சற்று உயர்த்திக் காட்டக்கூடும்.

குழந்தைகளுக்குக் காய்ச்சல் உண்டுபண்ணும் நோய்கள்:

1. சளிப்பு. 2. தொண்டை அடைப்பான். 3. இன்புளுயன்சா. 4. மூளை உறை அழற்சி (Menngitis) 5. தட்டம்மை (Measles). 6. செங்காய்ச்சல் (Scarietiever). 7. மன்னைக் கட்டி (Mumps). 8. வைசூாி (Small pox) 9. கக்குவான் இருமல். (Wooping Cough) 10. மூச்சுக்குழலற்சி (Bronchtis). 11. நிமோனியா, 12. தொண்டைச் சதைப்புண் வீக்கம். 13. டைபாய்டு காய்ச்சல். 14. டைபஸ் காய்ச்சல். 15. சீதபேதி (Dysentry) 16. சிறு நீரகத்தில் நோய். (Nephritis). 17. கல்லீரல் நோய்கள். 18, முடக்குவாதம் (Rheumatism) 19. க்ஷயம். 20. சீழ்க்கட்டிகள், சொறி சிரங்கு. 21. இளம்பிள்ளை வாதம் முதலியன.

பொதுவாக முதல் வயதிலிருந்து ஐந்து வயதுவரை குழந்தைக்குக் சாதாரண சளிப்பு, மூச்சுக் குழலற்சி போன்ற நோய்களால் சில சமயம், காய்ச்சல் 1040 பா. வரை ஏறி விடுவதுண்டு. தொண்டை அடைப்பான், நிமோனியா போன்ற அபாயகரமான நோய்களில் காய்ச்சல் 1010 பா. வுக்கு மேலே காணப்படாமல் இருப்பதுண்டு. ஆகவே காய்ச்சல் அளவைக் கொண்டு நோயின் தன்மையை உணர்வது தகுந்த முறையல்ல. குழந்தைப் பருவத்தில் நரம்பு மண்டலம் உறுதியடையாத நிலையில் இருப்பதினால் உடம்பில் திடீரென்று அதிவெப்ப ஏற்பட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கசிவு ஏற்பட்டுவிடும். ஆகவே அதைத் தடுக்க நோய்களைக் சட்டெனத் தணிக்கும் உபாயங்களைக் கையாள்வது தகுந்த முறையாகும். குழந்தையின் தலையில் ஐஸ் பையை வைத்துக் காய்ச்சலைத் தணியச் செய்யவேண்டும். ஒரு வயதுற்கு ஒரு கிரெயின் எடை என்ற அளவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைக்கு, ஐந்து கிரெயின் அளவிற்கு மேற்படாதபடி ஆஸ்பரின் கொடுத்தால், காய்ச்சல் சட்டெனத் தணிந்து விடும். காய்ச்சல் வேறு பல நோய்களின் வெளிப்படையான சின்னமாதலால் அந்த நோய்களுக்குத் தகுந்தபடி சிகிச்சை செய்வது அவசியம்.

மன்னைக்கட்டி (Mumps) : இதைப் பொன்னுக்கு வீங்கி என்றும், புட்டாலம்மை என்றும் அழைப்பார்கள். இது தொற்று நோய்.

நோய்க்குக் காரணம்: ஒரு வித வைரஸ் கிருமிகள், உமிழ் நீர்ச் சுரப்பிகளைப் பாதிப்பதினால் அவைகள் வீங்குகின்றன. அச்சுரப்பிகளில் பரோட்டீடு (Parotid) என்ற கன்னச் சுரப்பி முக்கியமாக பாதிக்கப்படுகின்றது.

நோய்க் குறி: தொற்று ஏற்பட்ட பின், சுமார் 17 அல்லது 21 நாட்களுக்குப் பிறகுதான் இந் நோய் குழந்தையிடம் காணப்பெறும். வாய், கண், மூக்கு வழியே கிருமிகள் உள்ளே பரவிச் செல்கின்றன. குளிர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, இவற்றுடன் நோய் தொடங்கலாம். அல்லது கீழ்த்தாடையின் பின்பக்கம் இலேசாக வலிக்கத் துவங்கிப், பிறகு காய்ச்சல், தலைவலி, வாந்தியுடன் தொடங்கலாம். உமிழ்நீர்ச் சுரப்பியின் வீக்கம் முதலில் ஏதாவது ஒரு பக்கத்தில் தொடங்கும். ருெம்பாலும் இடப்பக்கத்துச் சுரப்பி முதலில் வீங்கத் துவங்குகின்றன. இடது காதின் அடியில் கீழ்த்தாடையின் பின்புறத்தில் சிறிதளவாக ஒரு வீக்கம் தோன்றத் தொடங்கிச், சுமார் மூன்று நாட்களில் பரோட்டீடு சுரப்பியும், சில சமயம் இரண்டு பக்கத்து பீஜங்களும் வீங்கிப் போவதுண்டு. இதைத் தவிர, ஆண் குழந்தைகளுக்கு மார்பு வீக்கமும், நோவும் ஏற்படுவதுண்டு. இதேபோல் பெண் குழந்தைகளுக்கு சூல்பையில் வீக்கம் ஏற்பட்டு வயிற்று நோயை உண்டு பண்ணலாம். சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டு, இடுப்பில் வலி ஏற்படுவதும் உண்டு. பெண் குழந்தைகளுக்கும் மார்பகம் வீங்கி நோவு கொடுப்பதுண்டு. இவைகளைத் தவிரக் கணையம், மூளை, காது, கண், மூட்டுக்கள், இதயம், சிறு நீரகங்கள் போன்ற எந்த உறுப்பும் இந்த நோயால் பாதிக்கப்படக்கூடும். பீஜங்களை பாதிப்பதினால் நோயாளி பிற்காலத்தில் மலடாகப் போகலாம்.

சிகிச்சை : இதற்கென தனிப்பட்ட மருந்துகள் இல்லை. படுக்கையில் ஓய்வாக இருக்க வேண்டும். வீக்கத்திற்குச் சூடான ஒத்தடம் போடவேண்டும். நோவு குறைய, ஆஸ்பரின் போன்ற மருந்துகள் ஏதேனும் கொடுக்கலாம். பிஜத்தில் வீக்கம் ஏற்பட்டால் அவைகளைப் பஞ்சினால் சுற்றி, வீக்கத்தின் கனம், அவைகள் மீது உறுத்தா வண்ணம் பாதுகாக்கவேண்டும். வீக்கம் குறைய ஐஸ் கட்டிகளை அவைகள் மீது வைக்கலாம். பிற்காலத்தில் இக் குழந்தைகள் மலடாகாதிருக்க முன் கூட்டியே இந்நோயின் போது டைஎதில் ஸ்டில்போஸ்டிரால் (Diety stiboestrol) எனும் மருந்தைக் கொடுக்கும் முறையைச் சில வைத்தியர்கள் கையாண்டு வருகின்றனர். நோயின்பொழுது வாயைச் சுத்தமாக அன்றாடம் கழுவி வரவேண்டும். நோயின் பொழுது பால், பார்லி, நீர், பழச்சாறு, போன்ற உணவைக் கொடுக்க வேண்டும். நோயினால் ஏற்படும் மற்றைய கோளாற்றிற்குத் தக்கபடி சிகிச்சை செய்வது முறையாகும். வீக்கம் வாங்கிய பின்பு, குழந்தை சுமார் மூன்று வார காலம் மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாதிருப்பது நோயைப் பாவாதிருக்கச் செய்யும் வழி.

மூளை உறை அழற்சி (Menngitis) : 1. போலி மூளை உறை அழற்சி. 2. மூளை உறை அழற்சி என இருவகைப்படும்.

போலி மூளை உறை அழற்சி : நிமோனியா, பெரியம்மை போன்ற கொடிய நோய்களின் போது, கிருமிகளால் உற்பத்தியாகும் நஞ்சு, மூளையையும் பாதிப்பதால், மூளை சன்னி கொண்ட நிலையில், மந்தமாகக் காணப்படும். இந்நிலை அதிக நேரம் நீடிக்காது, தானே குறைந்து சரியாகி விடும். ஆகவே இதைப் போலி மூளை உளை அழற்சி என்று அழைப்பது பொருத்தமாகும்.

மூளை உறை அழற்சி நோய்யிகுறிகள் : இதை மூன்று நிலையில் காணலாம். முதல் நிலை : தலைவலி, வாந்தி, மலச்சிக்கலுடன், சில சமயம் தொடங்கும். சில சமயங்களில் காய்ச்சல், வாந்தி, தலைவலி, வலிப்பு என வரும். இரண்டாம் நிலை : முதல் நிலையில் தொடங்கிய தலை நோவு மிகவும் அதிகமாகிக் குழந்தை அலறும். இதைச் சன்னி வேகம் என்று அழைப்பது வழக்கம். சிறு குழந்தைகளுக்குத் தலை ஊச்சியில் உள்ள குழி மறைந்து வெளியே வீக்கம்போல் உப்பிக் காணப்படும். காய்ச்சல் இந்நிலையில் மிகவும் அதிகமாக இருக்கும். கண்களில் உள்ள பாவை சிறுத்து காணப்படும். கழுத்தின் பின்புறமுள்ள தசைகளும், முதுகுத் தண்டும் கடினமாகக் காணப்படும். கைகால்களில் உள்ள தசைகள் துடிக்கும். மூன்றாம் நிலை : மூளையில் ஏற்படும் ரணத்திலிருந்த கசியும் நீரின் தேக்கத்தினால், மூளை அமுக்கப்படுவதினாலும், மூளை நீர் நன்றாப் பரவ ஓடமுடியாது தேக்கப்படுவதினாலும், பக்கவாதம் ஏற்படுகின்றது. மூளையில், எந்தப் பாகம் பாதிக்கப்படுகின்றதோ, அதற்குத் தக்கபடி, இந்நோயின் குறிகள் தென்படும். ஒன்றரைக்கண், முழுக்குருடு, செவிடு, முகத்து நரம்பு பாதிக்கப்படல், பக்கவாதம் முதலியன ஏற்படுகின்றன. அழற்சி மிகவும் கடுமையாகிப்போனால் காய்ச்சல் மிகவும் அதிகமாகி, நாடித்துடிப்புக் குறைந்து, மூச்சுத் தாறுமாறாக வெளிப்படத் துவங்கி, நினைவு குலைந்து, முடிவில் மரணம் உண்டாகிறது.

சிகிச்சை : பெரும்பாலும் குழந்தை இந் நோயினின்று குணமடைவது அபூர்வம். மூளையில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி முதுகுத் தண்டில் ஊசியினால் குத்தி நீர் எடுக்க வேண்டும் பொது வாக க்ஷயரோகத்திற்குத் தருகிற ஸ்டிரெப்ட்டோமைசின் போன்ற மருந்துகளைக் கையாளவேண்டும். மற்றக் கிருமிகளால் ஏற்படும் நோய்க்கு, சல்பானிலமைடு வகைகள், பெனிசிலின் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன. இந்த நோய் வந்த குழந்தைகளை மருத்துவச் சாலையில் வைத்துச் சிகிச்சை செய்வது நலம்.

நடக்க முடியாமை : பத்தாவது மாதத்தில் எழுந்திருந்து, சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கும் குழந்தை ஒன்றரை வயதிற்குள் நன்றாக நடக்கத் தொடங்கிவிடும். சில குழந்தைகள் வயது மூன்று ஆகியும் நடவா.

காரணம் 1. கணைநோய்: இந்த நோயில் எலும்பு மெலிந்து போவதினால், குழந்தை தாமதமாக நடக்கப் பழகுகிறது. 2. மூளை மந்தம். 3. பாரிச வாயுவினால் கால் பாதிக்கப்பட்டிருத்தல். 4. பிறக்கும் போது, இடுப்புப் பூட்டு நழுவியிருத்தல். 5. பல நாட்கள் நோயாகப் படுத்திருந்த குழந்தைக்கு நடப்பது மறந்துபோய் விடுதலுமுண்டு. 6. க்ஷயம், முடக்கு வாதம் முதலியநோய்கள், முட்டிகளைப் பாதிப்பதுண்டு.

சிகிச்சை : கணை நோய் வந்த குழந்தைகளுக்கு, ஊட்டமான உணவு, கால்சியம், வைட்டமின் டீ முதலியவை அதிகம் அளித்தால் விரைவில் எலும்பு உறுதியடைந்து, நடக்கத் துவங்கும். இளம்பிள்ளை வாதத்தினால் நடக்க முடியாது போகும் குழந்தைகளுக்கு, உரிய காலத்தில் தனிப்பட்ட சிகிச்சை அளித்தால், ஒரளவு அவைகளுக்கு நடக்கும் திறமையை ஏற்படுத்தலாம்.

பேச முடியாமை : மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு அநேகமாகப் பேசும் திறமை நன்கு ஏற்பட்டு விடுவதுண்டு. சில குழந்தைகள் வயது மூன்று ஆகியும், சிறிதும் பேச முயல்வதில்லை. காரணம் : 1. பிறவியிலே செவிட்டு, ஊமை. 2. மூளை மந்தம். 3. மூக்கடிச்சதை; தொண்டை சதை இவைகள் வீங்கி, ரணமாக இருத்தல். 4. நாக்குக் கட்டு (tongue tie)

சிகிச்சை : காரணத்தைக் கவனித்து ஏற்ற சிகிச்சை செய்வது நலம்.

அலெர்ஜி : இது நுரையீரல், மூக்கின் உட்புறத்தோல், இவைகளை பாதித்தால், காசம், வற்றாத சளி இவைகள் ஏற்படுகின்றன. தோலின் மீது காணப்படும் பொழுது, எக்சிமா என்னும் சிவந்த தடிப்புக்கள் காணப்படும். குடலைப் பாதித்தால், வாந்தியும் பேதியுமாக வெளிப்படுகின்றது. முட்டிகளைப் பாதிக்கையில் முட்டியில் வீக்கம் ஏற்படும்.

குழந்தைகளுக்குப் பயன்படும் கம்பளிச் சட்டைகள் சில சமயம், சில குழந்தைகளுக்கு எக்சிமா எனும் சரும நோய் உண்டுபண்ணுகின்றது. இதைத் தவிர, உட்கொள்ளும் உணவு சில சந்தர்ப்பங்களில் அலெர்ஜியை உண்டுபண்ணுவதுண்டு. முட்டை, பால், ஆரஞ்சுப் பழங்கள், மீன், கோழி இறைச்சி, சில தானியங்கள், வெண்ணெய் முதலியவை, குழந்தைகளுக்குக் கொள்ளாமல், அலெர்ஜி நோயை உண்டு பண்ணுவதுண்டு. அபூர்வமாகச் சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒத்துக்கொள்வதில்லை. பிறந்த குழந்தை, தாய்ப்பால் சாப்பிடத் துவங்கி, இரண்டு நாட்களில் சருமத்தின் மீது சிவப்பான சிறு புள்ளிகள் போன்ற எழுச்சிகள் காணப்புடும். இதைச் செவ்வாப்பு எனச் சாதாரணமாக அழைப்பார்கள். தாய்ப்பால் ஒத்துக் கொள்ளாது ஏற்படும் அலெர்ஜி நோய்க்குத் தாயின் பாலை நிறுத்திவிட்டு, வேறு செயற்கை உணவு கொடுக்கவேண்டும். அல்லது தாய்ப்பால் ஒத்துக் கொள்ளும்படி, உடல் நிலையை அபிவிருத்தி செய்யத்தக்க முறைகள் (Desentisation) கையாள வேண்டும். தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, புட்டிப்பால் அளிப்பதற்குப் பதில் தமிழ்நாட்டு வழக்கப்படிக் கழுதைப் பால் அளித்துக் குழந்தையின் உடல் நிலையை அபிவிருத்தி செய்யலாம்.

பிறவிக் கிரந்தி (Congeental syphils): கிரந்தி நோய் உள்ள பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தை, அந்நோயுடனேயே பிறக்கின்றது. பார்க்க : கிரந்தி.

நரம்பு நோய்கள் : குழந்தையின் நரம்பு மண்டலம், பெரியவர்களின் நரம்புமண்டலத்தைப் போன்று முற்று பெற்று உறுதியடையாது. வளர்ச்சி நிலையில் இருப்பதால் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகின்றது. இதனால் பல்வேறு நரம்புக் கோளாறுகள் குழந்தைகளிடம் காணப்படுவதுண்டு.

காரணம் : 1. பிறவி சில குழந்தைகள் பிறவியிலேயே மிகவும் பயந்த இயல்புடையவர்களாக இருப்பார்கள். சத்தம், அதட்டல் முதலியவை கேட்டதும் நடுநடுங்கிப் போவதுண்டு. 2. கணைநோய், முடக்கு வாதம் போன்ற நோய்கள்.

முகத்தசை அசைவு : இது தனிப்பட்ட ஒரு நோய் அல்ல. குழந்தையின் நரம்பு மண்டலம் மிகவும் மெலிந்த நிலையில் இருப்பதை, வெளிப்படையாகக் காட்டும் ஓர் அறிகுறி. முகத்தில், கன்னத்தின் மீது மெல்லத் தட்டினால், அங்குள்ள முக நரம்பு அதிர்ச்சியுற்றுக் கன்னத்துத் தசை துடிக்கத் துவங்கும். இந்த அறிகுறி தென்பட்டால், நரம்புமண்டலம் மிகவும் மெலிந்த நிலையில் உள்ளது என அறிந்து, தக்க சிகிச்சை செய்யவேண்டும்.

மாந்த இரைப்பு (Laryngsmus strdulus) : ) இது பல் முளைக்கும் பருவத்தில் காணப்படும். பெரும்பாலும் இதற்கு இலக்காகும் குழந்தைகள், ஏற்கெனவே கணைய நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

நோய்க்குறி : குரல்வளை வாயில் (Giots) இசிவுகண்டு வருவதால் நுரையீரலுக்குக் காற்றுப்போக முடியாது தடங்கல் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் மூச்சு நன்றாகச் சுவாசிக்க இயலாது, திணறல் ஏற்படுகின்றது. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென்று சுவாசிக்க முடியாது, தலையைப் பின்பக்கம் சாய்த்துக்கொண்டு, முகம் நீலமாகித் திடீரென்று கொளகொளவென்று விநோதமான ஒலியுண்டாக்கும். சிறிது பொழுது எதையோ கண்டு பயந்தது போல் அழுதுவிட்டுப், பிறகு மறுபடியும் விளையாட்டில் ஈடுபடும். இது மிகவும் அபாயகரமானதொரு கோளாறு. சில சமயம் மூச்சுத் திணறல் அதிகமாகி விட்டால், குழந்தை மரணமடைவதும் உண்டு. இதைத் தான் மாந்தம் என்கிறார்கள்.

சிகிச்சை : இசிவின்போது முகத்தில் குளிர்ந்த நீரைத் தெளிக்கவேண்டும். கழுத்தின் மீது சூடான ஒத்தடம் கொடுப்பதும் நன்மை பயக்கும். இசிவு மிகவும் மும்முரமாக இருந்தால், சிறிது குளோரோபாரம் மயக்கம் கொடுப்பதும் அதைத்தடுக்கும் ஒரு முறையாம். இத்தகைய இசிவு வராது தடுப்பதுதான் நல்ல சிகிச்சையாகும். இந்தக் குழந்தைகளை அடித்துத் துயரப்படுத்தி, மனச் சங்கடம் உண்டாக்காது பாதுகாக்கவேண்டும். நரம்பு மண்டலத்தை நிதானப்படுத்த, புரோமைடுகள், குளோரால் முதலிய மருந்துகள் உள்ளுக்குச் சாப்பிடக் கொடுப்பது நலம். கணைநோய் மூலகாரணமாக இருந்தால், அதற்குத் தகுந்தை சிகிச்சைகள் செய்வது தான் முறையாகும். மீன் எண்ணெய், ஆரஞ்சுப் பழச்சாறு, முட்டை, இரும்புச் சத்துள்ள டானிக்குகள், இவைகளைக் கொடுத்துப், பொதுவாக உடல் நிலையை நலமுற வைத்திருந்தால், அடிக்கடி இசிவு வராது காப்பாற்றலாம்.

பிறவிக் குறள்வளை நடுக்கம் (congenital Laryngeal stridor) : இதுவும் நரம்புபற்றிய ஒரு கோளாறு. பேச்சுக் குழல்களில் உள்ள தசை மாறுபட்டு இயங்குவதால், குழந்தை காற்றை உள்ளுக்கு இழுத்துச் சுவாசிக்கையில், குரல் நாண்கள் (Vocal chords) சட்டென விரிந்து கொடுத்துக் காற்றை உட்புறம் அனுப்பாமல் சிறிது தாமதிக்கின்றன.

நோய்க்குறி: பிறந்த சில வாரங்களில், குழந்தை மூச்சு விடுகையில் பூனை சீறுகின்றதைப் போன்ற ஒரு ஒலி எழும். ஆனால், தூங்குகையில் இத்தகைய ஒலி காணப்படாது. குழந்தை கோபப்படும் பொழுதும், எரிச்சலாக இருக்கையிலும், இந்த ஒலி மிகவும் அதிகமாகக் கேட்கும்.

சிகிச்சை : இது மந்த இசிவைப்போல், கொடியதல்ல. இது குழந்தையின் முதல் வயதில் தானே மறைந்துபோகும். ஆகவே தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை.

கை கால் இசிவு (Tetany) : இது, கைகளிலும் கால்களிலும் உள்ள சில தசைகள் திடீரென்று இழுத்துக் கொள்வதினால், ஏற்படும் இசிவு நோய்.

காரணம் : இந் நோய்க்கு மூலகாரணமாக உள்ளது, கணைநோயும், அதிக பேதியும் ஆகும். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தையிடம் கணைநோய் கர்ணப் படுகையில், இந்த இசிவு நோயையும் வரக் காணலாம். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை, பேதியில் கஷ்டப்படுகையில் இத்தகைய இசிவும் தோன்றலாம். ஆனால் இந்த இசிவுற்கு முக்கியக் காரணம், இரத்திலுள்ள கால்சிய அளவிற்கு வெகு குறைவாக இருப்பது. இரத்தத்தில் கால்சியம் கறைந்து போவதற்குக் காரணம் கேடயச் சுரப்பித்துணை (Prathyroikd) எனும் சுரப்பி ஒழுங்கீனமாக வேலை செய்வதுதான். இந் நோய் உயிருக்குக் கெடுதி செய்யாது, எனினும் மிகவும் வலி கொடுக்கும் நோய்.

சிகிச்சை : கணை நோய்க்கு உகந்த சிகிச்சை செய்தல், வேண்டும். கால்சியம் லாக்டேட்டு மருந்து, தினசரி 15 லிருந்து 30 கிரெயின் கொடுப்பதும் நலமாகும். அத்துடன் மீன் எண்ணெய் தினசரி ஒரு தேக்கரண்டி அளவு, காலையிலும் மாலையிலும் கொடுக்க வேண்டும். இசிவு நோயைக் குறைக்க, புரோமைடுகள், குளோரால் போன்ற மருந்துகள், அப்போதைக்கப்போது கொடுப்பது நலம்.

தலை ஆட்டம்: தலையாட்டும் பொம்மை போன்று, குழந்தை மேலும் கீழும் அல்லது இப்புறமும் அப்புறமுமாகத் தலையசைத்துக் கொண்டிருப்பது, ஒரு வித நரம்புக் கோளாறாகும். இத்துடன் சில சமயம், கண்களின் விழிகளும் கடியாரப் பெண்டுலம் போல் ஆடுவதும் உண்டு.

இது சுமார் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும். குழந்தை, எதையாவது ஒரு பொருளை ஊன்றிப் பார்க்க முயன்றவுடன், தலை கடிகாரப் பெண்டுலம் போல் ஆடத் துவங்கிவிடும். நரம்பு மண்டலம் ஒழுங்காக இயங்கும் கச்தி பெறாததினால், ஏற்படும் இது, விரைவில் தானே குணமாகிவிடும். ஆகவே சிகிச்சை தேவையில்லை.

தலைமோதல் : மேலே கூறப்பட்ட தலையாட்டம் போல், குழந்தை திடீரென்று அடிக்கடி தலையைக் கட்டில், சுவர், பெட்டி போன்ற கடினப் பொருள்கள் மீது தானே சென்று மோதிக் கொள்வதும், நரம்புக் கோளாறுகளில் ஒரு வகையாகும். சில சமயம் கொஞ்சம் அழுத்தமாக மோதிக்கொள்வதினால் சிறு காயம் ஏதேனும் ஏற்படுவதும் உண்டு.

காரணம் : முளைக்கும் பல் வேதனை செய்வதினாலும், காதில் வலி இருந்தாலும், குழந்தையின் நரம்புகள் வேதனை கொள்வதால், அதைத் தவிர்க்க, அவ்வாறு மோதிக்கொள்கிறது. தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை. புரோமைடு மருந்துகள் சிறிதளவு அவ்வப்போது அளித்தால் குணமாகிவிடும்.

இரவில் பயக்கோளாறு (Nightterrors) : இரவில் தூங்கும் குழந்தை, சடக்கென்று விழித்துக்கொண்டு, வீறிட்டு அலறி நடுங்குவதும், ஒருவகை நரம்புக் கோளாறாகும். அடிக்கடி இப்படி நேர்ந்ததால் குழந்தையின் நரம்பு மண்டலம் மிகவும் மெலிந்து போகக்கூடும். அதனால் தூக்கம் கெடும். உடல் நலம் அழிந்துபோகும். பயக் கோளாறுகளுக்குக் குழந்தை இலக்காவதற்கு உண்மையான காரணம், உடல்நலம் பழுதுபட்டிருப்பது தான். மலச்சிக்கல், தொண்டைச்சதை அடினாய்டு முதலியவை வீங்கி வளர்ந்து விடுதல், இவைகள் காரணமாகின்றன.

சிகிச்சை : தொண்டையில் ஏற்பட்டிருக்கும் தொண்டைச் சதை வளர்ச்சிக்குத், தகுந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதும் உத்தமம். மலச்சிக்கலுக்கு ஒருமுறை பேதிக்குக் கொடுப்பது நலம். இரவில் இருளாக இருக்கும் அறையில், தனியே குழந்தையைத் தூங்கவிடக் கூடாது. அறைக்குள் சிறு விளக்கை எரிப்பது நன்மையாகும். வயிறு நிறைய உணவு கொடுத்து உடனே தூங்கச் செய்யாது, சிறிது நேரம் விளையாட்டுக் காட்டி, உணவு சீரணமடையத் துவங்கிய பின்பு தூங்கச் செய்வது நன்மை பயக்கும்.

பற்களைக் கடித்தல் : தூக்கத்தில் பற்களைக் கடிப்பதும் உண்டு. இதற்கு அசீரணம், குடல் பூச்சிகள் முதலியவை காரணம். சிகிச்சை அங்கங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

படுக்கையில் சிறுநீர்ப் போக்கு : சிறுநீர்ப் பைக்குத் தன்னுள் சிறுநீரை அடக்கி வைத்துக்கொண்டு, இச்சை ஏற்படும் பொழுது மட்டும் கழிக்கும் தனித்திறமை, குழந்தைக்கு மூன்று வயதிற்குமேல், அநேகமாக இந்தச் சக்தி, எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடுவதினால், நினைத்த பொழுது சிறுநீரைக் கண்ட இடமெல்லாம் கழிக்காது கட்டுப்படுத்தும் சக்தி ஏற்பட்டு விடுகின்றது. ஆனால், சில குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பையைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை. இக் குழந்தைகள் இரவில் உறங்கும்போது சிறுநீர் கழித்துவிடும்.

காரணம் மூன்றுவகைப்பட்டது :1. (a) கீரைப்பூச்சி (Thread worm) குடலில் இருப்பது. இவை இரவு வேளையில் ஆசன வாயில் வந்து தங்கிக்கொண்டு அரிப்பை உண்டாக்குகின்றன. (b) தொண்டையிலும் மூக்கிலும் சதை வளர்ந்திருப்பது. (c) பெண் குழந்தைகள் மணலில் விளையாடிப் பெண் உறுப்பில் புண் ஏற்படுவது. ஆண் குழந்தைகளுக்கு ஆண் உறுப்பின் முன்தோல் (Peptice) சிறுநீர் துவாரத்தை மூடும் அளவு நீண்டு வளர்ந்திருப்பது. சிறுநீரில் அமிலம் அதிகமாக இருப்பது முதலியன. 2. சிறுநீர் பெய்யப் பயிற்சி அளியாதிருப்பது. 3. பயம், கோபம், வருத்தம், அதிர்ச்சி போன்றவை.

சிகிச்சை : புண், பூச்சித் தொந்தரவு இவைகளைக் கவனித்து, உடனுக்குடன் சிகிச்சை செய்தல் வேண்டும். சிறு பருவத்தில், அதாவது ஒரு வயதிலிருந்து குழந்தையை இரவில் ஒரு முறை நடுவில் எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்து, பயிற்சி அளித்தல் வேண்டும். இரவில் எழுப்பும் நேரத்தையும், கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போட்டுக் கொண்டுவந்தால், முடிவில் இரவு முழுவதும் எழுப்பாவிடினும், குழந்தை சிறுநீரைப் படுக்கையில் கழியாமல், விடிந்து எழுந்த பின்பு, தானே வெளியே சென்று கழிக்கத் துவங்கும். பயம், கோபம் முதலிய உணாச்சிகளின் காரணமாக ஏற்பட்டதாக இருந்தால், தனிப்பட்ட சிகிச்சை தேவையில்லை. மகிழ்ச்சியான மனநிலை, தாயின் ஆறுதல் மொழிகள், முதலியவையே குழந்தையிடம் காணப்படும் இப் பழக்கத்தை நீக்கிவிடும்.

அங்க சேஷ்டைகள் : முகத்தைச் சுருக்குதல், கண்களை இமைத்தல், மூக்கை உறிஞ்சுதல், கைகால்களை இப்படியும், அப்படியும் அசைத்தல் போன்ற காரணமற்ற, அர்த்தமற்ற செயல்கள், குழந்தைகளிடம் காணப்படுவது உண்டு. இதுவும் நரம்பு பற்றிய ஒரு கோளாறுதான்.

காரணம் : முடக்குவாத நோயினால் பீடிக்கப்பட்டு மெலிந்துபோதல், இரத்த சோகை, பள்ளிக்கூடத்தில் அதிக வேலை, பொதுவாக, நலக்குறைவு முதலியன ஆகும். இதைத் தவிர, சொத்தைப் பல், தொண்டையில் இரணம், கண்களில் பார்வைக் கோளாறு முதலியவைகளும் காரணமாகின்றன.

சிகிச்சை : ஓய்வு, நல்ல உணவு, இவற்றுடன் தொண்டை ரணம், கண் பார்வைக் கோளாறு இவைகளுக்குத் தனிப்பட்ட சிகிச்சை செய்தால், இந்தக் கோளாறு நீங்கும். இந்த மாதிரி அங்க சேஷ்டைகளை நிறுத்த முயல வேண்டுமென்று தாயார் மெல்லக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவதும் நலமாகும்.

மூர்ச்சை : பள்ளிப் பவருத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தமான நோய்.

நோய்க்குறி : விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, திடீரென்று முகம் வெளுத்து, வெறித்துப் பார்த்த நிலையில் திடீரெனக் கீழ விழுந்து மூர்ச்சை அடைந்து விடும். நினைவு பூரணமாக மங்கி விடுவதில்லை. சில சமயம் வாந்தி, குமட்டல் இவைகளும் காணப்படும். உணர்வு பாதி தவறிய இந்நிலை, சில விநாடிகளிருந்து அரைமணி நேரம் வரையும் நீடித்திருக்கும்.

காரணம் : இயல்பாகவே பயந்த குணம் கொண்ட மனநிலை, அசீரணம், பொதுவான ஆரோக்கிய நலிவு.

சிகிச்சை : நரம்புகளைத் தூண்டிவிடும் ஸ்ட்ரிக்னீன் கலந்த டானிக்குகள், நல்ல ஓய்வு, இடமாற்றம், ஊட்டமான உணவு.

இழுப்பு (Convulsion): இரு நரம்புமண்டலம் பற்றிய நோய்களில் மிகவும் கடுமையான வகையைச் சேர்ந்தது.

பார்க்க : இழுப்பு.

ஹிஸ்டிரியா: குழந்தைகளுக்கு ஹிஸ்டிரியா வருவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. 1. நோய் ஏற்பட அதிக காரணமாக இருந்த சூழ்நிலை. 2. நோயைத் தூண்டி உற்பத்தி செய்பவை. முதலாவதாக, மிகவும் மென்மையான தன்மையும் உணர்ச்சிகள் தாங்க முடியாத மெலிந்த நிலையுமுடைய பெற்றோர்களுக்குக் பிறக்கும் குழந்தைகள் ஹிஸ்டிரியா நோய்க்கு இலக்காகின்றன. இந் நோயைத் தூண்டி வரச் செய்யக் காரணமாக அமைவன சிறு காயம் அல்லது பயம் முதலியவைகள் ஆகும்.

குழந்தைகளிடம் ஹிஸ்டீரியா பலவகைத் தோற்றத்தில் காணப்படும். கைகால்களை நீட்டி மடிக்க முடியாமை, வாத நோயைப்போல் காணப்படுவது, கைகால்களை மடக்கிகொண்டு நீட்ட முடியாமை, ஊமை, இருமல், விக்கல், வீரிட்டு அலறி மூர்ச்சையுறுவது போன்ற, பலவிதமான அறிகுறிகளுடன் தோன்றலாம். இதை ஹிஸ்டீரியா தான் எனத் தீர்மானமாகக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்களால் தான் இயலும்.

சிகிச்சை : சூழ்நிலை மாற்றம் உகந்த சிகிச்சை, அதிகக் கண்டிப்போ, சலுகையோ காட்டாது, குழந்தையின் நோயைப் பற்றிச் சிறிது பாராமுகமாக இருந்தால், நோயைப்பற்றிக் குழந்தை மறந்துவிடத் துவங்கும். நடக்க முடியாதபடி வாத நோயல் படுத்துக் கிடக்கும் குழந்தையைத் தகுந்த மருத்துவரைக்கொண்டு சிகிச்சை செய்வது நலம்.