பாப்பா முதல் பாட்டி வரை/005-024

விக்கிமூலம் இலிருந்து

குழந்தைப் பாடல்

(Nursery rhymes) : பாட்டை விரும்பாத குழந்தையே இல்லை என்று சொல்லலாம். பச்சைக் குழந்தை தாய் பாடும் தாலாட்டுப் பாடலிலே இன்பம் காண்கிறது. அவள் பாடுவதைக் கேட்டுத் தானும் மழலை மொழியிலே என்னென்னவோ குதப்புகிறது. பேசக்கூடிய ஆற்றல் பெற்ற குழந்தை, ஓசை இன்பம், சந்த இன்பமும் கொண்ட சிறிய பாடல்களைப் பாடி மகிழ்கிறது. அந்தப் பாடல்களுக்குப் பொருள் இருக்கவேண்டும் என்பதில்லை; ஓசை இன்பம் இருந்தால் போதும்.

அக்கக்கா ஊர்க்குருவி
ஆலம் பழம்போடு
தின்னப் பழம் போடு
திருமுடிக்கோர் பூப் போடு

என்று, கிராமத்துக் குழந்தைகள் பாடும். இப்படி எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. அவற்றை உண்டாக்கியவர்கள் யாரென்று கூற முடியாது. எந்தக் காலத்தில் அவை தோன்றின என்று கூற முடியாது. குழந்தைகளுடைய மழலையிலிருந்தே, அந்தப் பாடல்களுக்குச் சொற்களும், சந்தங்களும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

குழந்தைகளின் பேச்சிலே, சில தனிப்பட்ட சொற்களைக் காணலாம். சந்திரன் அவைகளுக்கு, சந்தமாமா ஆகிவிடும்; சோறு சோச்சி ஆகிவிடும். இந்தச் சொற்களெல்லாம் குழந்தைப் பாடல்களிலே இடம்பெற்று விடும்.

குருவி, காக்கை, கிளி முதலிய பறவைகளும், மாடு, நாய், குதிரை முதலிய விலங்குகளும், குழந்தைப் பாடல்களிலே அதிகமாக இடம் பெறுகின்றன. சந்திரனைப் பற்றிப் பாடுவதிலே குழந்தைகளுக்குத் தனி இன்பம் உண்டு. குழந்தைகளுடைய விளையாட்டுக்களைப் பற்றிய பாடல்களும் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பாடல்களெல்லாம் அவற்றின் சூழ்நிலையையும், அனுபவத்தையும், அவை கேட்கும் கதைகள் முதலியவைகளையும், அவற்றின் விளையாட்டுக்களையும் பற்றியனவாக அமைந்திருக்கும்.

பொருள் அதிகமாக இல்லாத குழந்தைப் பாடல்களோடு, பொருள் நிறைந்த பாடல்களும் உண்டு.

குள்ளக் குள்ளனை
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
விநாயகனைத் தொழு

குள்ளன் என்றும், குண்டுவயிறன் என்றும் கைகளினால் காட்டி இப் பாடலைப் பாடுவதில் குழந்தைக்குத் தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது.

குழந்தைப் பாடல்கள் உலகமெங்கும் இருக்கின்றன. வேறு உயர்ந்த இலக்கியம் இல்லாத மொழிகளிலும், எழுத்து வடிவமே காணாத மொழிகளிலும் குழந்தைப் பாடல்கள் உண்டு.

ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலுள்ள குழந்தைப் பாடல்களைத் தொகுத்து, நூல் வடிவிலே வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றிற்கு மிக அழகான வண்ணப் படங்களும் தீட்டியிருக்கிறார்கள். நீண்ட காலமாக வந்துள்ள பாடல்களைப் பின்பற்றிப் பல கவிஞர்களும், புதிய குழந்தைப் பாடல்களை இயற்றியிருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள பழைய குழந்தைப் பாடல்களைத் தொகுத்துச் சிறந்த முறையில் இன்னும் வெளியிடவில்லை. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை (த.க.) முதலிய கவிஞர்கள் புதிய குழந்தைப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்.