பாப்பா முதல் பாட்டி வரை/018-024

விக்கிமூலம் இலிருந்து

பிஞ்சு இதயத்துக்கு மறு உயிர் கொடுக்க முடியும்

உறவில் திருமணம், கர்ப்ப காலத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவைத் தாய் சாப்பிடாமல் இருத்தல், கருவுற்றிருக்கும்போது, முதல் 3 மாதங்களில், அம்மை போன்ற வைரஸ் நோய்களால் பாதிக்கப்படுதல். சில ஒவ்வாத மாத்திரைகள், தாய்க்கு இதயக் கோளாறுகள் இருத்தல், ஆகியவை காரணமாக, இதய நோய்களுடன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.

கருவில் 4-வது மாதத்திலேயே குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்தால், ஓரளவு தெரிந்து விடும். அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் கருவைப் பரிசோதனை செய்து, கோளாறுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ள முடியும்.

குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே ஏற்படும் இதய நோய்கள் ஆபத்தானவை. இதயத்தில் ஓட்டை, வால்வுகள் பழுதாக இருத்தல், ரத்தக் குழாய்கள் சுருங்கி இருத்தல், நுரையீரல்-இதயத்துக்கு இடையே, சுத்த அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள், இடம் மாறி இருத்தல், போன்ற கோளாறுகளுடன் குழந்தைகள் பிறப்பது உண்டு.

இதயக் கோளாறுகளுடன் குழந்தை பிறந்து விட்டால், குழந்தை வளர வளர சில கோளாறுகள் தானாகவே சரியாகி விடும். சில சமயங்களில் கருவில் இருக்கும்போது குழந்தையின் இதயத்தில் ஓட்டை இருந்தாலும் கூட பிறந்தவுடன் தானாகவே மூடிவிடும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், கோளாறு தீவிரமாக இருந்தால், அறுவை சிகிச்சை தான் தீர்வு.

இதய அறுவை சிகிச்சை ஆபத்தானதா? : இதய அறுவை சிகிச்சை ஆபத்தானதுதான். ஆனால் அறுவை சிகிச்சை செய்யாமல், குழந்தை உயிர் வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லை. எவ்வளவு நாள் என்ற கேள்விக் குறியுடன் தான் குழந்தை உயிர்வாழ முடியும் எனவே, அறுவை சிகிச்சை செய்யும் முடிவை, தைரியமாக எடுத்து, தீவிர கவனத்துடன் செய்தால், குழந்தைக்கு மறுவாழ்வு நிச்சயம் கிடைக்கும்.

அறிகுறிகள் : இதயக் கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, மூச்சு முட்டும். சரியாகப் பால் குடிக்காது, வளர்ச்சி இருக்காது. வறட்டு இருமல் இருந்துகொண்டே இருக்கும். நோய் தீவிரமாக இருந்தால், அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும்.

இடம் மாறும் ரத்தக் குழாய்கள்: ரத்தத்தைச் சுத்தம் செய்ய இதயத்துக்கு அனுப்பும் பணியை, நுரையீரல் செய்கிறது. நாம் சுவாசிக்கும் போது கிடைக்கும் ஆக்சிஜன் கலந்த சுத்த ரத்தத்தை, நுரையீரல் அனுப்புகிறது. இவ்வாறு சுத்தம் செய்வதற்காக, ‘பல்மினரி ஆர்ட்டரி’ என்ற ரத்தக் குழாய் மூலம், அசுத்த ரத்தம் நுரையீரலுக்கு வந்து சேருகிறது. நுரையிரல் சுத்தம் செய்து அனுப்பும் ரத்தத்தை உடல் முழுவதற்கும், அயோட்டா ரத்தக் குழாய் மூலம் இதயம் பம்ப் செய்கிறது.

தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் வேளையில், நுரையீரல் மிகச்சிறிய அளவில் இருக்கும். அப்போது அதற்குப் பணி கிடையாது. குழந்தை பிறந்து, முதல் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது தான் துரையீரல் அதன் பணியைத் தொடங்குகிறது. அதுவரை சிரைக்கும் மகாதமனிக்கும் இடையில் உள்ள இணைப்புக் குழாய் மூலம் தான் ரத்த ஒட்டம் நடைபெறும். குழந்தை பிறந்து துரையீரல் தனது பணியைத் தொடங்கிய அந்த நேரத்திலேயே இந்த இணைப்புக் குழாய், தானாகவே மூடிவிடும் அதிசயம் நடைபெறுகிறது. சில குழந்தைகளுக்கு இந்த இணைப்புக்குழாய், இதுபோன்று மூடாது. இதனால், சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் கலக்கிறது. இதற்கு ‘பேடண்ட்டக்டஸ் ஆா்ட்டிாியோசஸ்’ (Patene Ductus Arteriosus) என்ற பெயா்.

சில குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் இந்த இணைப்புக் குழாய் மூடிவிடும். ஒரு வாரம் கழித்தும் மூடாவிட்டால், பிரச்சினைதான். இக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு மூச்சுமுட்டும். இதயத்தில் ஸ்டெதஸ்கோப்பை வைத்தால் இயந்திரம் இயங்குவதுபோல் ஓசை கேட்கும். இந்த ஒசைக்கு ‘மெஷினாி மா்மா்’ (Machinery Murmur) என்று பெயா்.

இக் கோளாறு காரணமாக, அசுத்த ரத்தம் அதிகமாகப் போவதால், நுரையீரலின் பணிச்சுமை அதிகமாகிறது. அது இதயத்துக்கு இயல்பான அளவை விட, அதிக ரத்தத்தை அனுப்புகிறது. இதனால் இதயத்துக்கும் வேலை அதிகரிக்கிறது. சிறுநீர் சரியாகப் போகாத நிலை, அடிக்கடி சளி பிடித்தலும் ஏற்படும். குழந்தை சோர்வாகவே இருக்கும்.

எக்ஸ்ரே, ஈசிஜி (இதயச் செயல்பாட்டை மதிப்பிடும் கருவி) கம்ப்யூட்டர் திரைகள் கொண்ட கலர் டாப்ளர் கருவிகள் மூலம், இக் கோளாறை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இணைப்புக் குழாய் திறந்திருப்பதால் தான் கோளாறு என்பதை உறுதி செய்து கொண்டால், அறுவை சிகிச்சை மூலம், அக் குழாயை மூடிக் குணப்படுத்தி விடலாம்.

ஒட்டைகள் : இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. அவை மேலே இரண்டு அறைகளாகவும், கீழே இரண்டு அறைகளாகவும் பிரிக்கப்பட்டு உள்ளன. இதயம் சுருங்கி விரியும் போது, கீழ் அறையிலிருந்து தான் உடல் முழுவதுக்கும் ரத்தம் அனுப்பப்படுகிறது. இதனால் கீழ் அறையில், ஓட்டைகள் இருந்தால், ஆபத்து அதிகம். மேல் அறையில் ஓட்டை இருந்தால் அதிக ஆபத்து இல்லாவிட்டாலும், அறுவை சிகிச்சை அவசியம். அறுவை சிகிச்சை செய்து ஓட்டையை அடைக்க வேண்டும்.

சில குழந்தைகளுக்கு நுரையீரலுக்கு அசுத்த ரத்தம் வரும் குழாயோ, அல்லது இதயத்திலிருந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் வால்வுகளோ சுருங்கி இருக்கும். நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் வால்வு சுருங்கியிருந்தால், தேவையான ரத்தம் செல்லாத நிலை ஏற்படும். இதனால் குழந்தை அழ ஆரம்பிக்கும்போது நீல நிறமாக மாறும். குழந்தை பிறந்து இக் கோளாறு இருந்தால், ஒரு மாதத்துக்குள் இதுபோன்ற நிலை ஏற்படும். வால்வை விரிவுபடுத்த, உடடினடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்.

ரத்தத்தை உடல் முழுவதுக்கும் எடுத்துச் செல்லும் ‘அயோட்டா’ குழாயின் வால்வு சுருங்கியிருந்தால், இதயத் தசைகள் பெரிதாகிவிடும். இந்த வால்வையும் அறுவை சிகிச்சை மூலம் விரிவுபடுத்திக் குணப்படுத்தலாம்.

செயற்கை வால்வு : பிறந்த பிறகு, ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு நோய்கள் வரும்போது, பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கவனக் குறைவாக இருந்தால், இதய நோய்கள் வருதவற்கு வாய்ப்பு உண்டு. அடிக்கடி சளி பிடித்தல், வறட்டு இருமல், தொண்டை எரிச்சல், மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சல் (Rheumatic Fever) ஆகியவை காரணமாக, ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, இதய வால்வுகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் குழந்தைக்கு அடிக்கடி மூச்சு முட்டும்.

குழந்தைக்குச் சிரங்கு வந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது. சீழ் பிடிக்கும் அளவுக்குச் சிரங்கு மோசமான நிலைக்குச் சென்றால், அதன் காரணமாக இதய வால்விலும் சீழ் பிடிக்கும் நிலை ஏற்படலாம். அறுவைசிகிச்சை செய்து பழுதடைந்த வால்வுகளுக்குப் பதிலாகப் புதிய செயற்கை வால்வுகளைப் பொருத்தித் தான் குணப்படுத்த முடியும். ஒரு வால்வின் விலை ரூ.28 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை.

இதய உரை : பிறப்பிலேயே இதயத்தைச் சுற்றிக் கவசம்போல் ஒரு உறை இருக்கும். இதயத்துக்கும் இந்த உறைக்கும் இடையில், சீழ் உண்டானால், உயிருக்கு ஆபத்து. இதுபோன்று சீழ் உண்டாகும் நிலையில் அவசர அறுவைசிக்சை செய்து, உரையை நீக்கிவிடுவதே நல்லது. ஏனெனில், சீழின் அழுத்தம் காரணமாக, இதயம் சுருங்கி விரிவது நின்றுபோய், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந் நோய்க்கு ‘பையோபெரியார்டியம்’ (pyopercardium) என்று பெயர். குழந்தைகளுக்குத் தோல் நோய்கள் வந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது.

இதயமாற்று அறுவைசிகிச்சை: அம்மை போன்ற வைரஸ் நோய்கள் காரணமாக, சில குழந்தைகளின் இதயத்தசை பலவீனமடைந்து விடலாம். பலவீனமடைந்தால் இதயத் தசைகள் தளர்ந்து விடும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். சீராக இருக்காது. இதய மாற்று அறுவை சிகிச்சையே இதற்குத் தீர்வு. மூளை இறப்புக்கு உள்ளாகி, இதயம் மட்டும் இயங்கி கொண்டிருக்கும் குழந்தைகளின் இதயங்களைக் கொண்டு, இதுபோன்ற குழந்தைகளுக்கு மறு வாழ்வு கொடுக்க முடியும்.

இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் முக்கியக் கருவி: இதயத்தின் செயல்பாட்டையும், நுரையீரலின் செயல்பாட்டையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தே இதயத்துக்குள் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி என்று பெயர். இது போன்று இதயத்தையும் நுரையீரலையும் வெளியிலிருந்து செயற்கையாக செயல்பட வைக்க உதவும் ‘ஹார்ட்லங் மெஷின்’ (Heart Lun Machine) மிக முக்கியமானது. இந்தக் கருவி இல்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இதய அறுவை சிகிச்சையின்போது, இதயம் சுருங்கி விரிவதை நிறுத்தி, இந்தக் கருவி மூலம் வெளியிலிருந்து உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தம் சப்ளை செய்யப்டுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜனைக் கலக்கும் பணியையும், இந்தக் கருவி வெளியிலேயே செய்து விடுகிறது.

துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தின் செயல்பாடு அபூர்வமானது. விபத்து உள்பட, உயிருக்கு ஆபத்தான வகையில் சம்பவங்கள் நடைபெறும்போது, உடலில் அதிக அதிர்ச்சி ஏற்படுகிறது. அப்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாகச் சுரக்கிறது. இதனால், ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. ஆனால், அப்போதும் கூட உடலின் முக்கிய பாகங்களான மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் ரத்தக் குழாய்கள் சுருங்காமல், மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் மட்டுமே சுருங்குகின்றன. இதனால், மூளை, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றுக்கு இதயத்திலிருந்து அதிக ரத்தம் செல்கிறது. உயிரைக் காக்கப் போராடும் இந்த அற்புதத்தை இதயம் தானாகவே செய்கிறது.

நுரையீரல் : கருவிலேயே இரண்டு நுரையீரல்கள் இருக்கும். இவற்றில் சிறு சிறு காற்றுப் பைகள் இருக்கும். குழந்தை பிறந்து, முதல் மூச்சுவிடத் தொடங்கும்போது, நுரையீரல்கள் பெரிதாகும்.

சில குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள், கருவிலேயே பெரிதாக இருக்கும். இது நல்லது அல்ல. அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம், இதைக் கருவிலேயே கண்டுபிடித்து விடலாம். இது போன்ற கருவிலேயே கோளாறு இருந்தால், குழந்தை நீலமாகப் பிறக்கும். பிறந்தவுடன் அறுவை சிகிச்சை செய்து, பாதிக்கப்பட்டுள்ள நுரையீரலை அகற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும். இரண்டு நுரையீரல்களில், ஒரு நுரையீரலை அகற்றி விடுவதால், மீதம் இருக்கும் ஒரு நுரையீரலில் நோய் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

பொருள்களைக் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்வதால் : புளியங்கொட்டை, நிலக்கடலை போன்ற சின்னச் சின்னப் பொருள்களைத் தெரியாமல் குழந்தைகள் வாயில் போட்டுக்கொள்வதால், மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்பட்டுத் திணறும். இது போன்ற தருணங்களில், ‘பிராங்கோஸ்கோப்’ (Bronchoscoe) என்ற கருவி மூலம், குழந்தை விழுங்கிய பொருளை வேளியே எடுத்துவிட முடியும். ஆனால், சில சமயங்களில் குழந்தைகள் பொருள்களை விழுங்கி இருந்தாலும், உடனடியாகப் பிரச்சினை வராமல் இருந்து, கொஞ்ச நாள் கழித்துத் தெரியவரும் போது, அது நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அப்போது பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதியை, அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவதுதான் நல்லது.

நுரையீரல் சீழ் கட்டி : இதயத்துக்கு உறைகள் இருப்பதுபோல நுரையீரல்களுக்கும் உறைகள் உள்ளன. நுரையீரலுக்கும் உறைக்கும் இடையில் சீழ் கட்டும்போது சீழை வெளியற்றி விட்டு, நுரையீரல் உறையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.