பாப்பா முதல் பாட்டி வரை/020-024

விக்கிமூலம் இலிருந்து

பழுதற்ற பல்லே பயனுள்ள செல்வம்

பல் ஒரு சிறிய உறுப்பு. பற்கள் ஒன்றாகச் சேர்ந்து வாயில் இருக்கும்போது, முகத்துக்குப் பொலிவு கொடுக்கின்றன. சொல்லுக்குச் சுவை ஊட்டுகின்றன. உணவுப் பொருள்கள் எளிதாக ஜீரணம் அடைவதற்குப் பற்களே உதவுகின்றன.

பல் உருவானது எப்போது? : தாயின் கருவறையில் உள்ள குழந்தைக்கு, 6-வது வாரத்தில் தாடை எலும்பில் பால் பற்கள் மொட்டாக வளரத் தொடங்குகின்றன. ஆக பல் பாதுகாப்பு கருவறையில் தொடங்குகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் கால்ஷியம் சத்து நிறைந்த உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தையின் பற்கள் நன்றாக வளரும். பால், பழங்கள், மீன், இறைச்சி ஆகியவற்றைக் கருவுற்றிருக்கும்போது அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

டெட்ரா சைக்ளின் வேண்டாம் : கர்ப்பத்தின்போது, தாய் நோய்வாய்ப்பட்டால், நோய்க் கிருமிகள் கருவில் உள்ள குழந்தையின் பல் மொட்டுக்களைத் தாக்கும். எனவே கர்ப்பத்தின் போது நோய் வந்தால், ‘டெட்ராசைக்ளின்’ மாத்திரைகளை அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இம் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டால் குழந்தை பிறந்து வளரும்போது, பற்கள் மஞ்சளாக முளைக்கும்.

தாய்ப் பாலே சிறந்தது : குழந்தையின் பல் வளர்ச்சிக்குத் தாய்ப் பாலே சிறந்தது. புட்டிப் பால் குடிக்கும் குழந்தைக்குத் தாடை வளர்ச்சியில் மாறுபாடு ஏற்படவும், விரல் சூப்பும் பழக்கம் வரவும் வாய்ப்புகள் உண்டு.

பயம் - வேண்டாம் : குழந்தை பிறந்தவுடன் 6-வது மாதத்தில், முதல் பால் பல் முளைக்கிறது. இது வாயின் முன் பக்கத்தில் முளைக்கிறது. பெற்றோருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி எனினும், பல் முளைக்கும் இடத்தில் குழந்தைக்கு வலி இருப்பதோடு, அந்த இடம் சிவந்தும் காணப்படும். சிறிது காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் இருக்கும். இதைக்கண்டு பெற்றோர் பயப்பட வேண்டியது இல்லை.

பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும் குழந்தைக்கு 2 வயது முடிவதற்குள், மொத்தம் இருக்கும் 20 பால் பற்களும் முளைத்து விடும், 2 வயது ஆனவுடன் மேல் தாடையில் 10 பால் பற்களும், கீழ் தாடையில் 10 பால் பற்களும் இருக்கும்.

நிலைப் பல் : குழந்தைக்கு 6 வயது ஆகும்போது, கருவில் 6-வது வாரத்தில் உருவான முதல் பால் பல், கீழே விழுந்து, நிலைப் பல் முளைக்கத் தொடங்கும். அதன் பிறகு ஒவ்வொரு பால் பற்களாக விழுந்து, நிலைப் பற்கள் முளைத்துக் கொண்டே வரும். 13 வயதில் 28 நிலைப் பற்கள் முளைக்கும். 22 வயதுக்குள் ஞானப் பற்கள் என்று அழைக்கப்படும் விஸ்டம் டீத் உள்பட மொத்தம் 32 பற்கள் நிலைப் பற்களாக முளைத்து விடும். பற்களை ஒழுங்காகப் பராமரித்தால், இறக்கும் வரை நிலைப்பற்கள் கீழே விழாது.

பல் பராமரிப்பு : குழந்தைகளுக்கு 6-வது மாதத்தில், முதல் பல் முளைத்த உடனேயே, பஞ்சைத் தண்ணீரில் நனைத்து அதைச் சுத்தம் செய்ய வேண்டும். காலை, இரவு என இருமுறை இதைச்செய்வது நல்லது. உணவு சாப்பிடுவதற்கு, முன்பும் , பின்பும், இது போன்று செய்வது நல்லது.

பால் பற்கள் அனைத்தும் முளைத்தவுடன், பற்பசை வைத்து சிறிய பிரஷ்ஷைக் கொண்டு, குழந்தையின் பல்லை, தாய் துலக்கிவிட வேண்டும். வளர, வளர, பல் துலக்கும் முறையைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நிறையப் பற்கள் முளைத்த உடன், கொஞ்சம் பெரிய பிரஷ்ஷை வாங்கித் தர வேண்டும்.

குழந்தைக்குப் பல்லைத் துலக்கிவிடத் தொடங்கியதிலிருந்தே வாய் கொப்பளிக்கும் பழக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். வாயில் தேங்கியுள்ள உணவுப் பொருள்கள் வெளியேற, இது உதவும். குழந்தைகளின் பற்களைப் பற்பசையால் துலக்கி, வாய் கொப்பளித்துப் பராமரித்தால் மட்டும் போதாது. காவ்ஷியம் சத்துள்ள உணவுகளை இடைவிடாது கொடுக்க வேண்டும். பாலில், கால்ஷியம் சத்து அதிகமாக உள்ளது. எனவே, காலையிலும் மாலையிலும், குழந்தைக்குத் தவறாது பால் கொடுக்க வேண்டும்.

நோய் வாய்ப்பட்டிருக்கும் போது குழந்தை சாப்பிட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தச் சமயத்தில், 6 வயதில் உருவாகும், நிலைப் பற்களுக்குத் தேவையான சத்துக் கிடைக்க, கால்ஷியம் மாத்திரைகள் கொடுக்கலாம். குழந்தைப் பருவத்தில் கால்ஷியம் மாத்திரைகளைச் சாப்பிடாமல், பெரியவர்கள் ஆனவுடன் பல் சொத்தை ஏற்படும் போது கால்ஷியம் மாத்திரைகளைச் சாப்பிடுவதால், எவ்விதப் பலனும் இல்லை. ஏனெனில் வயது வரம்பைத் தாண்டிய பிறகு நிலைப் பற்கள் முளைக்கப் போவதில்லை. அதன் பிறகு, எதற்கு கால்ஷியம்?

பல் சொத்தை : சர்க்கரை கலந்த உணவுப் பொருள்கள், பற்களில் தங்கும் போது, கிருமிகளால் தாக்கப்பட்டு, பல்லிலேயே அமிலம் உண்டாகிறது. அந்த அமிலம் பற்களைச் சிதைப்பதே பல் சொத்தை. ஆரம்பத்தில் இப் பல் சொத்தை, கரும் புள்ளியாகத் தோன்றும், பின்னர் பட்டையாக மாறி, குழியாகி, பல் நரம்புகளைத் தாக்கும்போது, கன்னத்துக்குக் கை செல்லும் அளவுக்கு, வலி ஏற்படுகிறது.

சொத்தை, கரும் புள்ளியாக இருக்கும்போதே, சிகிச்சை பெறுவது நல்லது. புள்ளியை அகற்றிவிட்டு, வெள்ளி உலோக (Silver amalgam) அடைப்பு வைத்தால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

தொடக்கத்தில் அலட்சியம் காண்பித்தால், பல் சொத்தை, நரம்புகளைத் தாக்கும். சொத்தை முழுவதையும் அகற்றிவிட்டு, தாற்காலிக மருந்து வைத்து அடைத்து விடலாம். எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்த்து, நரம்புகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தால், ‘ரூட் கேனல் டிரீட்மெண்ட்’ என்ற சிகிச்சை மூலம், மருந்து அடைத்து பல்லைக் காக்க முடியும்.

ஆனால், நரம்புகளையும் தாண்டி பல் எலும்பையும் சொத்தை தாக்கி இருந்தால், வலியிலிருந்து விடுதலை பெற, பல்லைப் பிடுங்கி விடுவதுதான் நல்லது. ஆக எலும்பு வரை சொத்தையைப் போக விடாதவர்களே புத்திசாலிகள்.

சொத்தைக்கு காரணம் : பல் பராமரிப்புக் குறைபாடுதான், பல் சொத்தைக்குக் காரணம். இதற்கு கால்ஷியம் காரணம் அல்ல. புளோரைடு பற்பசை பயன்படுத்தாமல், இருப்பதால் தான் பல் சொத்தை ஏற்படுகிறது என்ற கருத்து தவறு.

பற்புற திசு நோய் அல்லது பல் ஆட்டம் காணுதல்: இதுவும், பரவலாகக் காணப்படும் நோய். இது ஆங்கிலத்தில் ‘பயோரியா’ என்று அழைக்கப்படுகிறது. பற்களில் உணவுப் பொருள்கள் தேங்கும்போது பல் படலம் ஏற்படுகிறது. இந்தப் படலத்தையும் சுத்தம் செய்யாமல் இருக்கும்போது, உமிழ் நீரில் உள்ள கால்ஷியம் அப்படலத்தின் மீது படிந்து, காரையை உண்டாக்குகிறது. பற்களின் கழுத்துப் பாகத்தில், மஞ்சள் நிறமாகவும், பச்சை நிறமாகவும், காரை படிகிறது. இந் நிலையிலும் கூட வலி இருக்காது.

அப்போதும் கவனிக்காவிட்டால், ஈறுகளைக் காரை உறுத்தி, ஈறுகள் வீங்கும். பற்களுடன் ஒட்டியிருக்க வேண்டிய ஈறுகளில் வீக்கம் தெரியும். அடுத்த கட்டமாக, ஈறுகளில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கும். நோய் தீவிரமாகும் நிலையில் எலும்புகளுக்குப் பரவி எலும்புகளும் திசுக்களும் சிதைந்து, பல் பலம் இழந்து, அசையத் தொடங்குகிறது. மேலும் மேலும் எலும்பு சிதையும்போது பல் ஆடிக் கீழே விழுகிறது. இப்படி ஒரு நிலைப்பல் விழுந்தால், அந்தப் பல் மீண்டும் முளைக்காது.

பயோரியாவுக்குச் சிகிச்சை: படல நிலையில் உள்ள பற்களை நன்றாகத் தேய்த்து, படலங்களை மருந்துகள் மூலம் அகற்றினால், பிரச்சனை தீர்ந்து விடும். காரை படிந்துவிட்டால், கருவிகள் கொண்டு அகற்றி, சுத்தம் செய்துவிடலாம். காரை தீவிரமாக உள்ள நிலையில், அவற்றை அகற்றி, அசையும் பல்லைக் கம்பி கட்டி அசையாமல் செய்து விடலாம்.

பயோரியா நோய்க்கு, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்யாவிட்டால், ஈறுப் பாகங்களில் சீழ் கட்டி, சீழில் உள்ள நச்சுக் கிருமிகள், ரத்தம் மூலம், உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவும்.

வாய் துர்நாற்றம் : வாயிலே ஏற்படக் கூடிய தொற்று நோய்களே, வாய் துர்நாற்றத்துக்குக் காரணம். சரிவர பற்களைத் துலக்கிக் கொப்பளிக்காமல் இருப்பவர்களுக்கு, உணவுப் பொருள்கள், அழுகி துர்நாற்றம் வீசும். தொண்டை நோய், இரைப்பை நோய், சிறுகுடல் நோய், நுரையீரல் நோய் காரணமாகவும், துர்நாற்றம் வீசும். நோய்க்கான காரணத்தை அறிந்து தொடக்கத்திலேயே சிகிச்சை பெறுவதே நல்லது. துர்நாற்றம் வீசும் பிரச்சினை உள்ளவர்கள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை, பற்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

வேண்டாம் புகை : புகை பிடித்தல், புகையிலை போடுதல், பொடி வைத்தல், பான்மசாலா போடுதல் காரணமாகப் பற்களில் கறை படிகிறது.மேலும் வாயின் செம்படலத்தில் ரணம் ஏற்படுவது உண்டு. மேலும் வாயில் வெண் படலங்கள் தோன்றி, அந்த வெண் படைபெரிதாகி, வெடித்துப் புற்றுநோயாக மாறும். அதுவே வாய்ப் புற்றுநோய் வரக் காரணம்.

தீய பழக்கங்களால், பல் தேய்ந்து சிதைவு ஏற்படுகிறது. தேய்ந்த பல்லை பாலீஷ் போட்டுச்சரிசெய்ய முடியும்.

தெற்றுப் பற்கள் : விரல் சூப்புதல், பென்சில் கடித்தல், வாய் வழியாக மூச்சு விடுதல், ஆகிய குழந்தைப் பருவப் பழக்கங்கள் காரணமாகத், தாடைகள் முன்னோக்கி வளர்ந்து, பற்கள் கோணலாக வளர்ந்து, முகப்பொலிவு கெடுகிறது. கம்பிகளைப் பொருத்திக் கோணல் பற்களைச் சரி செய்துவிட முடியும். தெற்றுப் பற்களையும் வரிசைப் படுத்தி விடலாம்.

நிறம் மாறும் பற்கள் : மஞ்சள் கலந்த வெண்மையே பற்களின் இயல்பான நிறம். பல காரணங்களால், பற்களின் நிறம் மாறுவது உண்டு. சேலம், தர்மபுரி, பெரியார் மாவட்டங்களில் கிணற்று நீரில் அதிகமாக புளோரைடு உள்ளது. இந் நீரைக் குழந்தைப் பருவத்தில் பற்கள் முளைக்கும் காலத்தில் குடிப்பதால், பற்கள் காவி நிறமாக முளைத்து, ஆயுள் முழுவதும் காவி நிறமாகவே நீடிக்கிறது. பாலீஷ் செய்தாலும், இக் காவிப் பற்களை ஒன்றும் செய்ய முடியாது. கருவியைக் கொண்டு காவியை அகற்றிவிட்டு வெண்மை நிறத்தில் பல்லுக்கு மேல் உறை போட்டுப் பொலிவு கொடுக்கலாம். இம் மாவட்ட மக்கள், காவியைத் தடுப்பதற்கு, குழந்தைகளுக்காவது பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்க வேண்டும்.

வாய்ப்புண் : சிலருக்கு வாய்ப்புண் வந்து, வந்து போவது உண்டு. ரத்தச்சோகை, காசநோய், தொற்று நோய்கள், மருந்துகள் ஒவ்வாமை, காரணமாக வாய் புண்கள் வரக் கூடும். பி காம்ப்ளக்ஸ் சத்துக்குறைவு காரணமாகவும், வாய்ப் புண்கள் வரும். வாய்புண்ணுக்கு சிகிச்சை அளிக்க, மாத்திரைகள் உள்ளன. மணத் தக்காளிக் கீரையை வேகவைத்துச் சாப்பிடுவது, வாய்ப்புண் ஆற உதவும்

வாயும், பற்களும், உடல் உறுப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. இதனால் வாய், பல் நலம் பாதிக்கப்பட்டால், உடல் உறுப்புகளும் பாதிக்கப்படும். வாய் நலத்தைப் பார்த்துக்குங்க. உடல் நலத்தைக் காத்துக்குங்க.