பாரதியாரின் தேசிய கீதங்கள்/34. தொண்டு செய்யும் அடிமை

விக்கிமூலம் இலிருந்து

34. தொண்டு செய்யும் அடிமை

(சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேயஉத்தியோகஸ்தன் கூறுவது)

நந்தனார் சரித்திரத்திலுள்ள "மாடு தின்னும் புலையா! உனக்கு
மார்கழித் திருநாளா?" என்ற பாட்டின் வர்ணமெட்டு
தொண்டு செய்யும் அடிமை! - உனக்கு
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ ? - அதற்கு
பாத்திர மாவாயோ? (தொண்டு)
ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்! - கண்முன்
நிற்கொ ணாது போடா! (தொண்டு)
அச்சம் நீங்கி னாயோ? - அடிமை
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணு தலொழித் தாயோ? (தொண்டு)
கப்ப லேறு வாயோ? - அடிமை
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை
கொற்றத் தவிசு முண்டோ ? (தொண்டு)
ஒற்றுமை பயின் றாயோ? - அடிமை
உடல்பில் வலிமை யுண்டோ ?
வெற்று ரைபே சாதே! அடிமை!
வீரியம் அறி வாயோ? (தொண்டு)
சேர்ந்து வாழு வீரோ? - உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத் தீரோ? (தொண்டு)
வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
வெருவலை ஒழித் தாயோ?
உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம்
உனக்கில்லை மறந் திடடா! (தொண்டு)
நாடு காப்ப தற்கே - உனக்கு
ஞானம் சிறது முண்டோ ?
வீடு காக்கப் போடா! - அடிமை
வேலை செய்யப் போடா! (தொண்டு)
சேனை நடத்து வாயோ? - தொழும்புகள்
செய்திட விரும்பு வாயோ?
ஈன மான தொழிலே - உங்களுக்கு
இசைவ தாகும் போடா! (தொண்டு)