பாரதியார் கதைகள்/ஆறில் ஒரு பங்கு
ஆறில் ஒரு பங்கு
முகவுரை
ஒரு ஜாதி ஓர் உயிர்: பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.
இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும், அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய: பத்தா வர்த்ததே அயநாய;” வேறு வழியில்லை.
இந் நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
ஆசிரியன்.
வஸந்த காலம்; நிலாப் பொழுது; நள்ளிரவு நேரம்; புரசபாக்கம் முழுதும் நித்திரையி லிருக்கும். இரண்டு ஜீவன்கள்தான் விழித்திருப்பன. நான் ஒன்று; மற்றொன்று அவள்.
கந்தர்வ ஸ்திரீகள் ‘வீணை’ வாசிப்பது போல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறிருக்கும். கதையை வளர்த்துக்கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தியெடுத்துக் கொண்டுபோய் அவள் வசம் ஒப்புவித்துவிட்டான். அடடா! அவளது இசை எவ்வளவு நேரம் கேட்டபோதிலும், எத்தனை நாள் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்திலே தோன்றுவதுபோல. அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தர ராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் ‘ராவ் பகதூர்‘ என்ற பட்டம் பெற்றவர். சுதேசீயம் தொடங்கு முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டவர். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறே னென்றால், அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசீயத் தலைவர்களின் மீது ‘ரிப்போர்ட்‘ எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினால் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ் விக்கினங்களில் பெரும்பான்மையானவை என்னாலேயே உண்டாயின.
நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன். “வேதகால முதலாக, இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகள் எல்லோரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாசனும், சங்கராசாரியாரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்றுவரையிருந்த பாரத தேசத்தா ரனைவரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திக ளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூட பக்திகள்” என்பது முதலான ஆங்கிலேய ‘சத்தியங்கள்’ எல்லாம் என்னுள்ளத்திலே குடி புகுந்து விட்டன. ஆனால் கிறிஸ்தவப் பாதிரி ஓர் வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக்கொண்டு வரும்போதே அவன் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்துவிடுகிறான், மத விஷயங்களைப்பற்றி விஸ்தாரமான விவகாரங்க ளெழுதிப் படிப்பவர்களுக்கு நான் தலைநோவுண்டாக்கப் போவதில்லை, சுருக்கம், நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி, ‘ஞான ஸ்நாநம் பெறவில்லை; பிரம் ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.
சிறிது காலத்திற்கப்பால் பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் போய், அங்கே பிரம் ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலை யொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன்: பிரம் ஸமாஜத்தாரின் ‘உபதேசி‘களில் ஒருவனாக வெளியேற வேண்டு மென்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப், ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாகச் சென்னப்பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி எனது ஜாதியார் என்னைப் பல விதங்களில் இமிசை செய்தார்கள். இந்த இமிசைகளினால் எனது சித்த வுறுதி நாளுக்குநாள் பலமடைந்ததே யல்லாமல் எனக்கு மனச் சோர்வுண்டாகவில்லை. எனது தகப்பனார் —இவர் பெயர் துபாஷ் ராமசந்திர நாயுடு — வெளி வேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தா ரெனினும், உள்ளத்தில் பிரம ஸமாஜப் பற்றுடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாசமும், எப்போதும் உபநிஷத்துகள் படிப்பதில் சிரத்தையும் கொண்டிருப்பது கண்டு இவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகை யுண்டாயிற்று. வெளி நடிப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரே யன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸவுகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்புப் பாராட்டினன். என் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக்கொள்வது வழக்கம். ‘15 ரூபாய்’க் குமாஸ்தாக்களுக் கென்று பிரத்தியேகமான அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக்கொள்ளுவதில்லை. இதுகூடத் தமையனுக்குக் கோப் முண்டாக்கும். “ரஜ புத்ருடு வீடு தொங்கவிதவா! தலலோ மஹா ஆடம்பரமுக பகடி வீடி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான். இப்படியிருக்க, ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக்குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டுமென்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டுமென்றான். பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்தபிறகு ஸ்மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் நடத்தி முடிந்த பின்பு, நான் எனது கொள்கைப்படி பிரம் ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடுவுக்கு என்மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்துவிட்டது. ஆதலால் விவாகம் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை யெப்படியேனும் சீர்திருத்தி, எனக்கே தனது மகளைப் பரணிக்ரஹணம் செய்துகொடுக்க வேண்டு மென்பது அவருடைய இச்சை.
வஸந்தகாலம், நிலாப் பொழுது, நள்ளிரவு நேரம். புரசபாக்கம் முழுமையும் நித்திரையி லிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே ஒன்று நான், அவள் மற்றொன்று. இன்பமான காற்று வீசிக்கொண்டிருந்தது. மேல்மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால், வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை. மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தனர். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுள்ளத்திலோ இரண்டு எரிமலைகள் ஒன்றை யொன்று சீறி யெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே ஒன்று காதல்; மற்றொன்று பின்பு தெரியவரும். வீணைத் தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில் எனது பின்புறத்தில் ஒரு ஆள்வந்து நிற்பதுணர்ந்து திரும்பிப் பார்த்தேன். மீனாம்பாள்!
இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோ மென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமென்றும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பல முறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் தானும் மஞ்சத்தின் மீது வீற்றிருந்தாள்,
‘மீனா! இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்’ என்றேன். ‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.
‘என்னது? சொல்லு.‘
‘நீ பிரமசரிய சங்கற்பம் செய்துகொள்ளப் போகிறா யென்ற விசேஷம்.‘‘ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்’ என்று கேட்டேன்.
‘வந்தே மாதரம்‘ என்றாள்.
மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமேயே தெரியு மாதலால், அவள் சொல்லியதி லிருந்து அதிக வியப்புண்டாகவில்லை!
அதன்பின் நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்:— ‘ஆம். பாரத தேசத்தை இப்பொழுது பிரமசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு. மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை யிருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைந்த ஒரு பாழுங் காடு இருப்பதுபோலாய் விட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வெளவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதைப் பிரமசாரிகளே, காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமஸாமி முதலியார் மகனாகவேனும் பிறக்காமல் நம் போன்ற சாதாரணக் குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்துகொண்டால் இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிப்போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பதுபோல இந்த நரிக்கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது அவனுக்குக் கண் பிதுங்கிப்போய் விடுகிறது. அவனவனுடைய அற்பக் காரியங்கள் முடிவு பெறுவதே பகீரதப் பிரயத்தனமாய் விடுகிறது. தேசக் காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரமசாரிகள் வேண்டும். ஆத்மஞானிகள் வேண்டும். தம் பொருட்டு, உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்த சுதேசீயம் கேவலம் ஒரு லௌகிக காரியமன்று; இது ஒரு தர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மயோகத் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரமசரிய விரதத்தைக் கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்—‘ மீனா— ‘ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேனென்று சொல்லுகிறாய்.’
‘பார்த்தாயா! பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய். நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை யேற்பட்டிருக்கிறது. அவ் விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்‘ என்றேன். அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற் புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
‘நாயன்னா வந்து விட்டார்; நான் போகிறேன்‘ என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள்.
குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளை யெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரைநாழிகைக் கெல்லாம் தமது தொழிலாரம்பித்து விட்டார். இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; அவள் மற்றொன்று.
அத்தியாயம் 2
மேலத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி நிகழ்ந்ததற் கப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்தில் பல மாறுபாடுகள் உண்டா யிருந்தன. ‘வந்தே மாதரம்‘ மார்க்கத்தில் நான் பற்றுடையவ னென்பதை அறிந்த மாமா பகதூர் எனக்குத் தனது கன்னிகையை மணஞ்செய்து கொடுப்பதென்ற சிந்தனையை அறவே ஒழித்து விட்டார், சில மாதங்களாக அவர் தமது சாசுவத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசலாக்கத்துக்கு வருவதை முழுதும் நிறுத்திவிட்டார். இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரர்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் வந்து கொண்டிருந்தது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை, ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளா? பெண்களே வஞ்சனையின் வடிவமென்று சொல்லுகிறார்களே, “அது மெய்தானா? "பெண்ணெனப் படுவ கேண்மோ... உள் நிறைவுடைய வல்ல, ஓராயிர மனத்தவாகும்” என்று நான் ஜீவகசிந்தாமணியிலே படித்தபோது அதை எழுதியவர் மீனாம்பாளை போன்ற ஸ்திரீயைக் கண்டு, அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே! இப்போது அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால் அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!
‘அட மூடா! உனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரமசரிய விரதத்திலே ஆயுள் கழிக்க வேண்டுமென்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வருகின்றாய்: மீனா மற்றொருவனை மணஞ்செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண்மீது இல்வாழ்க்கையில் மையல் கொள்ளப்போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு, அவன் மனைவியாய் விடுவாளாயின், உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் நீயேன் வருத்த மடையவேண்டும்?’ என்று சில சமயங்களில் எனதுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.
மீண்டும், வேறொருவிதமான சிந்தை தோன்றும்:- “அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ்செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராணனோடு ஒன்றுபட்டவளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி, அத் தருமத்திற்கு இடையூறுண்டாகு மென்றஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாம லிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? ஏது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணஞ் செய்து கொடுத்திருக்கின்றன. அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?”
அப்பால் ஒரு உள்ளம்... ”அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படி யன்றோ பிள்ளைகள் வேண்டும்! பீஷ்மர் இருந்த தேசமல்லவா? இப்போது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளிக் கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே, அமிருத வெள்ளத்தை விட்டு வெற்றெலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம ஸேவை பெரிதா, ஸ்திரீ ஸேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”
பிறகு வேறொரு சிந்தை :— ”எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக்கும். ‘நீ தர்ம பரிபாலனம் செய், என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸிகத் தலைவனாகக் கொண்டு நோன்புகளிழைத்துக் காலங் கழிப்பேன். ஸ்வர்க்கத்தில் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அவள் உறுதி தருவாளானால், இந்த ஜன்மத்தில் ஜீவயம் வெகு சுலபமா யிருக்கும்”
அப்பால் :— ”ஒரேயடியாக, அவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்து விட்டதென்று செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத்தொடர்பொன்றுமே யில்லாமல், தர்ம ஸேவையே தொழிலாக நின்று விடலாம்.”
பின் மற்றொரு சிந்தை :— “ஆ! அப்படி ஒரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரிதாய்விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டதென்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கை யுண்டா ?”
அப்பால் பிறிதொரு சிந்தை :— “அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பென்பதோர் நிலையு முண்டா? வஞ்சனை, லோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.“
இப்படி ஆயிர விதமான சிந்தனைகள் மாறிமாறித் தோன்றி என் அறிவைக் கலக்கின. ஆன்ம வுறுதியில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக்கின்றவர் ஒரு கணம் சாக்ஷிபோல நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பீராயின் மிகுந்த வியப்புண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏனுண்டாகின்றன?
“மறப்பு நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா. மனத்தால் வளர்ந்தது தோழி.”
இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்கு தருகின்றேன். அதைப் படித்துப் பார்த்தபோது என்னுள்ளம் என்ன பாடு பட்டிருக்கு மென்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
ஓம்
உடையாய்,
தஞ்சாவூர்
இக் கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்திலே பார்க்கப் போவதில்லை.
‘நாயன்னா’ வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னார் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்துவிட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து வைத்திருக்கிறார். நீ ஒரு வேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாயென்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வரமுடியாமல் செய்ய, இவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் ‘நாயன்னா‘வின் பணத்தின்மீது கண்வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான். என்னுள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும் அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணை பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிராதென்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு அந்த மிருகம் “எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக்ஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக்கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப்போகிற பயலுடன் சேர்ந்து கெட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்” என்று மறுமொழி கொடுத்தனுப்பிவிட்டது.
அனேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின் மீது கண்மூடாமல் படுத்துப் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாதபொது கனவு எப்படி வரும்? அஃது கனவுமில்லை , நனவுமில்லை; ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும், கரியமேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும், கையில் சூலமுமாகக் காளி தேவி வந்து தோன்றினள். நான் நடுங்கிப் போய் ‘மாதா, என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்’ என்று கூறி வணங்கினேன். உடனே, திடீரென்று அவளுடைய உருவம் மிகவும் அழகியதாக மாறுபட்டது. அந்த சௌந்தர்யத்தை என்னால் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூர்யப் பிரகாசம் போன்ற ஒரு தேஜோமண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்பொழுது தேவி எனக்கு அபயப் பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்:— ‘குழந்தாய், உனது அத்தான் கோவிந்தராஜனை எனது ஸேவையின் பொருட்டாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெறமுடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில் வடமேற்கு மூலையில் தனியாக ஓர் பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நாநம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே!’ மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.
காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்திலிருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டு விழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு, அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்குத் திருப்தி செய்வித்த பிறகு, அவள் உன்னை நானிருக்கு மிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்!
இக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.
அத்தியாயம் 3
மீனாம்பாளுடைய ‘மரண ஓலை’ கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை யெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கத்தைச் சொல்லுகிறேன். அந்த ஆற்றாமையினால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக்கொண்டு துறவியாகி வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். ’வந்தே மாதர’ தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால், என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவுமில்லை; ஜனங்களுக்குள் ஒற்றுமையும், பலமும் ஏற்படுத்தினால் ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை. அங்கங்கே சில சில பிரசங்கங்கள் செய்ததுண்டு. இதுபற்றிச் சில விடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள், இதனால் நான் ஜனங்களினிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி, பல தடைகள் ஏற்பட்டன, ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்தினும் பிரதிகூலமே அதிகமாக விளையலாயிற்று. இதையுந் தவிர, எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும், மற்றவர்களைக்காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு, உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.”இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன. மூடன் ‘நான் செய்கிறேன்’ என்று கருதுகின்றான்” என்ற கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண் கர்வம், நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்துக்கும் பயன்படாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டிழைப்பதற்கே என்னை மாதா வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன். எனவே, பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால், எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் நின்று போய்விட்டன. பாதசாரியாகவே பலவிடங்களிற் சுற்றிக்கொண்டு பலபல தொழில்கள் செய்துகொண்டு லாஹூர் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அங்கே லாலா லாஜ்பத்ராய் என்பவரைப் பார்க்க வேண்டுமென்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய்க் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகி, கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு துணிகொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களிலிருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு, ‘நீரும் போய் இவ் விஷயத்தில் வேலை செய்யக் கூடாதா?‘ என்று கேட்டார்.
ஆ! ராமசந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு ஜனங்கள் துணியும் சோறு மில்லாமல் பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்யமுடியாவிட்டால், இந்தச் சதை யுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்? லாலாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு போய்ச் சிறிது காலம் அந்தக் கடமை செய்து கொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன், கவனி. தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி நரகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி! தேவலோகம் நரகலோகமாக மாறி யிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது பகவான் ராமசந்திரன் ஆண்ட பூமி! நான் அங்கிருந்த கோரங்களை யெல்லாம் உன்னிடம் எதற்காக விரித்துச் சொல்ல வேண்டும்? புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை சிறிது பாவமுண்டாகக்கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது? உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம்! எத்தனை நாள் இப்படி உறங்கி அழியப் போகிறீர்களோ! அட, பாப ஜாதியே, பாப ஜாதியே! இது நிற்க, ஓரிரண்டு மாதங்களுக் கப்பால், லாலா லாஜ்பத்ராய் எங்களுக்குக் கடிதம் எழுதி இனி அந்த வேலை போதுமென்று கட்டளை பிறப்பித்து விட்டார்.
கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கெனவே என் மனதில் நெடுங் காலமாக வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின் நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினரென்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்தில் மிகுந்த தளர்ச்சி உண்டா யிற்று தென்னாட்டைப் போலவே வடநாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாக சிலர் கருதப்படுகின்றனர். தென்நாட்டைப் போலவே வடநாட்டிலும் இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆகவேண்டும். ஆனால், இவர்களிலே பலர் மாட்டிறைச்சி தின்பது முதலிய அனாசாரங்கள் வைத்துக்கொண்டிருப்பதால் ஹிந்து ஜாதி அவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசு மாடு மிகப் பிரதானமான வஸ்துக்களிலே யொன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால், ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிப் பொதுமை அப் பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம். ஆனால், பஞ்சம், நோய் முதலிய பொதுப் பகைவருக்கு முன்பு நமது உயர்வு - தாழ்வுகளை விரித்துக்கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்திவிட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். “ஹிருதய மறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமோ?”
‘முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்.’ நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை யெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கரா சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக, விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம்; இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகின்றார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம்; இப்போது, வேத மார்க்கஸ்தர் மகம்மதியர் என்ற இரு பகுதிகொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியைத் துர்பலப்படுத்தி விடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.’
1200 வருஷங்களுக்கு முன்பு, வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இமிசைபொறுக்கமுடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டுபோய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.பஞ்சத்தில் பெரும்பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப்பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து, நூற்றுக்கணக்கான மனிதர்களையும், முக்கியமாக—திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்த மடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள் ! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு. நமது உயிர்—ஹிந்து ஸ்தானத்து ஜனங்கள்— ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப் படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்க ளெல்லோரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுவார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்ற வரை முயற்சிகள் செய்யவேண்டும் என்ற அவா எனதுள்ளத்தில் வளரலாயிற்று. பங்காள மென்று சொல்லப்படும் வங்க நாட்டின் கிழக்குப் பிராந்தத்தில் அசுவினி குமார தத்தர் என்ற பெயருடைய தேசபக்தர் ஒருவர் இருப்பதாகவும், அவர் அந்தப் பிரதேசங்களில் நாமசூத்திரர் (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூஹ வரம்பி னுள்ளே சேர்த்து உயர்வு படுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று.
அத்தியாயம் 4
கல்கத்தாவுக்கு வந்து சில தினங்களிலிருந்து விட்டு, பாரிஸாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு போய் வழி விசாரணை செய்து கொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாயிலில் ஒரு பெங்காளி பாபு நின்றுகொண்டிருந்தார். அவரிடம் “அசுவினி பாபு இருக்கிறாரா?” என்று கேட்டேன். “இல்லை. நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்“ என்றார். “அடடா!“ என்று சொல்லித் திகைத்து நின்றேன். எனது காஷாய வுடையைக் கண்ட அந்த பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய், தாகசாந்தி செய்வித்து விட்டு, “யார், எவ்விடம்“ என்பதை யெல்லாம் விசாரணை செய்தார். நான் எனது விருத்தாந்த மெல்லாம் தெரிவித்துவிட்டு, என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும், பாபு, நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?“ என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் மிகுந்த வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பி விடும்-போலிருந்தது. தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாப மடைகிறார் போலுமென்று நான் நினைத்து “ஐயா, உம்முடைய நெஞ்சுபோல இன்னும் நூறு பேருடைய நெஞ்சிருக்குமானால் நமது நாடு செம்மைப் பட்டு விடும்.” என்றேன்.
“ஸ்வாமீ, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணையுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை, ஹீன ஜாதியாரைக் காக்கவேண்டு மென்ற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை யுண்டென்பது மெய்யே, அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத் திருக்கின்றேன், ஆயினும் என் முகத்திலே தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே யென்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி[1] யம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளி வரக் கேட்டிருக்கிறேன், தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து. வருத்த முண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!“ என்று சொல்லித் திடுக்கென்று பேச்சை நிறுத்திவிட்டார். அப்பால் என் முகத்தை ஓரிரண்டு முறை நன்றாக உற்று நோக்கினார். அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கெனவே சொல்லி யிருக்கிறார்.“ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்,
“ஸ்வாமீஜி, க்ஷமித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் ஸந்யாஸீ, எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது. உங்களிருவருடைய முகமும் ஒன்றுபோலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.
மதிராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்ன வுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப் புண்டாயிற்று. அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்தப் பதைபதைப்பு மிகுதி யுற்றது. ஸந்யாஸி உடை தரித்திருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆசரித்து வந்திருக்கிறேன். வேஷத்தி லென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்தி லென்ன இருக்கிறது?
“மீனாம்பாள் ?—அட, போ! மீனாம்பா இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே ?. . . . . ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்? ......... என்பதாக, ஒரு க்ஷணத்திலே மனப்பேய் ஆயிரம் விதமான கூத்தாடிற்று.
"ஸதீச பாபு! நானும் மதிராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லும் யுவதியைப் பற்றிக் கேட்கும்போது எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே யிருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியைக் குறித்து உமக்கு வருத்த முண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்” என்றேன்.
கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு, ஒவ்வொரு வாக்கியமும் என்னுள்ளத்திலே செந் தீக்கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்றை யெல்லாம் இடையிட்டுக்கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விரஸமா யிருக்குமென் றஞ்சி இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊஹத்தாற் கண்டு கொள்ள வேண்டும். ஸதீச பாபு சொல்லலாயினர்:—
“அந்த யுவதிக்குத் ‘தாஞ்சோர்.’ அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளைத் ‘தீன மாதா’ என்று பெயர் சொல்லி யழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால், அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார், அதை உம்மிடம் சொல்லுகிறேன், கேளும். அவள் ஒரு போலீஸ் பென்ஷன் உத்தியோகஸ்த ருடைய குமாரியாம். தனது அத்தை மகனாகிய ஒரு மந்தராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டு மென்ற தீர்மானம் செய்யப் பட்டிருந்ததாம். அவ் வாலிபன் ‘வந்தே மாதரம்’ கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று, ஒரு பச்சிலையைத் தின்று விடவே அவளுக்குப் பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப்போய் விட்டது. அப்பால், தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத் தாலோ அவள் இறந்துவிட்டதாக எண்ணி ஸந்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்—”
“ஏழை மனமே, வெடித்துபோய்விடாதே. சற்றுப் பொறு“ என்று என்னால் கூடியவரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. “ஐயோ, மீனா! மீனா!“ என்று கூவினேன். பிறகு “ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும். சொல்லும்“ என்று நெரித்தேன்.
ஸதீச சந்திரருக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. “இப்போது ஒன்றுமில்லை. செளக்கியமாகத்தா னிருக்கிறாள்” என்றார்,
“இல்லை யில்லை. என்னிடம் நீர் உண்மை பேச மயங்குகிறீர். நான் உண்மை தெரிந்தால் மிகத் துன்பப்படுவே னென்றெண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரகவேதனைக்குட்படுத்துகிறது. சொல்லி விடும். சொல்லி விடும்” என்று வற்புறுத்தினேன்.
மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
“பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத் கீதையின் மீதும் ஆணையிட்டிருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளியாமல் சொல்லும்“ என்றேன். இந்த ஸத்தியம் நவீன பங்காளத்தாரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்து மென்பது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து, அவருக்குக் கொஞ்சம் கோப முண்டாயிற்று.
“போமையா, மூட ஸந்யாஸி. என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்! இதோ உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக்கொள்ளும். அந்தப் பெண் இங்கு நாம் சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில் தீராத குளிர் ஜுரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாளென்று சொல்லிவிட்டனர். அதற்கு மேல், அவள் காசியிற் போய் இறக்க விரும்பியது பற்றி அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். உண்மை சொல்லி விட்டேன். போம்” என்றார்.
“காசிக்கா ?”
“ஆம்.“
“காசியில் எந்தக் கட்டத்திலே?“
“அஸீ கட்டத்தில்.”
“அஸீ கட்டத்தில் எந்த இடம்?”
“அஸீக்குத் தெற்கே ‘நர்வா’ என்ற இடமிருக்கிறது. அதில் பல தோட்டங்களும், பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கி யிருக்கிறார்”
“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து விசிறி யெறிந்தார். மானத்தைக் கண்டதார்? மரியாதையைக் கண்டதார்? அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறி விட்டேன். வழியெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய்க் காசிக்கு வந்து சேர்ந்தேன்.
அத்தியாயம் 5
காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்க ளிருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசம் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்ப துண்டானால், நான் சொல்லப்போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்களெல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போயிறங்குவதுண்டு. அங்கு, கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிற தல்லவா? அதில் கீழ்மேற்கு மூலையிலிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்குச் சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள். சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நாநம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்ட பிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக் கு அழைத்துக் கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தாய்ப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்துப் பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது வேளை இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரைவண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந் தறுவாயில் இருக்கிறது. வண்டியின்மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு பெங்காளி உட்கார்ந்து கொண்டிருந்தான். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் சித்திரம் நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால் இந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே, அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதனை நோக்கி, "யாரோ ஒரு ஸந்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் உட்காரச் சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள்ளிருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.
அசுவினி பாபு:— “டாக்டர் ஸாஹப்! நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டி-ருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?”
டாக்டர்:— “மிகவும் துர்ப்பல நிலையிலேதான் இருக்கிறாள், இன்னும் இருபத்து நான்கு மணிநேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால், பிறகு விபத்தில்லை ” என்றார்.
காதில் விஷந்தடவிய தீயம்புபோல இந்த வார்த்தை கேட்டது; ”மீனா! மீனா! மீனா!” என்றலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் தன்னை மீறி அலறிய சத்தம் கேட்டு அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நானிருந்த பாரிசமாக விரைந்து வந்தனர். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டு எழுந்து நின்று வணங்கினேன். அவர், ”ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன! ஏன் சத்தம் போட்டீர்கள்” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
”பாபு, நான் ஸந்யாஸி யல்ல. நான் திருடன். நான் மஹா நிர்ப்பாக்கியமுடைய பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பா ளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.
உடனே என்னை அவர் மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, ”நேற்றெல்லாம் நான் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடு மென்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது” என்றார்.
பிறகு என்னிடம் “கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்” என்றார். அப்படியே உட்கார்ந்தேன். ”கண்ணை மூடிக்கொள்ளும்” என்றார். இரண்டு கண் களையும் மூடிக்கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையால் தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போலிருந்தது.
‘அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினு மினியாள் மரணாவஸ்தையி லிருக்கிறாள். அவளைப் பார்க்கு முன்பாக உறக்கம் வருகிறதே. இவர் என்னை ஏதோ மாய மந்திரத்துக் குட்படுத்துகிறார். எனது பிராண ரத்தத்தைப் பார்க்காதபடி கெடுத்து விட முயலுகிறார். இந்த மாயைக்கு உட்படலாகாது கண்விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்’ என்று சங்கற்பஞ் செய்துகொண்டு எழுந்து நிற்க முயன்றேன். “ஹும்” என்றொரு சத்தம் கேட்டது. கண்ணை விழித்துப் விழித்துப் பார்த்தேன். திறக்க முடியவில்லை, மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.
விழித்த பிறகு நான் இரண்டுநாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். “மீனா எங்கே? மீனா சவுக்கியமா யிருக்கிறாளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன். “எனக்கு ஒன்றுமே தெரியாது” என்று மறுமொழி கூறினன். சாதாரணமாக எப்போதும்போல இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களை யெல்லாம் வீழ்த்திவிட்டு, ஓடியே மீனா ளிருக்குமிடம் போய்ப் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும் அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரம் நீங்கிப்போ யிருந்தது. ‘பாரிஸால் கிழவன்’ செய்த சூதென்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக் கெல்லாம் அசுவினி பாபு தாமே நானிருந்த அறைக்குள் வந்து என்னெதிரே ஒரு நாற்காலியின்மீது வீற்றிருந்தார். என்னை யறியாமல், எனதிரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.
“ஓம்“ என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். “பால ஸந்யாஸி, கபட ஸந்யாஸி, அர்ஜுன ஸந்யாஸி; உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார். மீனா பிழைத்துவிட்டாள் என்ற தெரிந்து கொண்டேன்.
“முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?“ என்று கேட்டேன்.“பூர்ணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்கு ஸமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது” என்றார்.
“அப்படியானால், நான் போகிறேன். அவள் இறந்துபோகப் போகிறா ளென்ற எண்ணத்தினாலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து, அவளுட. னிருக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை, நான் போய்வருகிறேன்” என்று சொன்னேன்.
அசுவினி பாபு கடகடவென்று சிரித்துவிட்டுப் பக்கத்தி லிருந்த சேவகனை நோக்கி ‘இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு’ என்றேவினார். அவன் முகம் கழுவ நீரும், அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அசுவினி குமாரர் அந்தப் பாலை விரலால் தீண்டி என்னிடம் கொடுத்தார். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நாநம் செய்து முடித்ததுபோல், எனது உடலிலிருந்த அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும், செளக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.
“இப்பொழு தென்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?“ என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்.
“அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்லுகிறேன்” என்றேன்.
திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தாரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக தேவயக்ஞம் செய்ததுபோல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவுக்குப் பிரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்” என்றார்.
“காளி தேவியின் கட்டளை என்னாகிறது?“ என்று கேட்டேன், இந்த ஜன்மத்திலே நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாதென்று காளி தேவி மீனாளுக்கு கூறி, அவளை விஷந் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன்.
அதற்கவர், ‘அந்தச் செய்தி யெல்லாம் நானறிவேன். மஹாசக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டு மென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது, மீனாம்பாளுக்கு ஜ்வர முண்டாய்த் தந்தை யெண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. அதற் கப்பால் அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினள்; ஆனால் மீனாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிற தென்ற தாபத்தால் படப்படப் புண்டாகி, உனக் கேதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு காஷாயந் தரித்துக்கொண்டு விட்டாய். உனக்கு ஸந்யாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும், இது வெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப் பிரிவு அவசியமா யிருந்தது. இப்பொழுது நான் போகிறேன். இன்று மாலை நான்கு மணிக்குப் பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்" என்று சொல்லிப் போய்விட்டார்.
மாலைப் பொழுதாயிற்று. நான் ஸந்யாஸி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்குரிய ஆடை தரித்துக் கொண்டிருந் தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர் ஸ்திரீ ரூபம் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கிதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது.
வந்தே மாதரம்
- ↑ ‘மந்திராஜியம்மா’ என்பது மதிராஸ் பிரதேசத்து ஸ்திரீ என்று பொருள்படும். ‘மதராஸ்‘ என்பதற்கு வட நாட்டார் ‘மந்திராஜ்‘ என்பார்கள்.