பாரதி பிறந்தார்/2

விக்கிமூலம் இலிருந்து

அரசர் சபையினிலே - கவி
யழகன் சுப்பையா
முரச டிப்பதுபோல் - கவிதை
முழக்கம் செய்துவந்தான்


எட்டை நாட்டரசர் - நம்
இளங்கவி பாரதியை
விட்டுப் பிரியாமல் - கவிதை
விரும்பிக் கேட்டுவந்தார்



காசி நகர் சேர்ந்தான் - இந்தி
கற்று வடமொழியும்
பேசிப் புலமைபெற்றான் - உள்ளம்
பெரிதும் மகிழ்ச்சியுற்றான்

கல்லூரி யில்சேர்ந்தான் - ஆங்கிலக்
கலையில் தேர்ச்சிபெற்றான்
ஷெல்லியின் பாடல்களில் - தனது
சிந்தை பறிகொடுத்தான்

பச்சைக்கல் மோதிரமும் - இடுப்பில்
பட்டுக் கரைஉடையும்
கச்சையுடன் அணிந்தான் - இரண்டு
காலில் சடா அணிந்தான்

மேலை நாட்டார்போல் - அவன்
மீசை கிராப்பணிந்தான்
காலை மாலைகளில் - கங்கைக்
கரையில் திரிந்துவந்தான்




தேர்வில் முதல்வகுப்பில் - நல்ல
தேர்ச்சி பெற்றிருந்தும்
ஆர்வம் கல்வியிலே - ஏனோ
அவனுக் கிருக்கவில்லை

எட்டை நகர் வந்தான் மீண்டும்
இளசை மன்னவரை
விட்டுப் பிரியாமல் - கவிதை
வேட்டையில் ஈடுபட்டான்

பாட்டுக் கலைபயின்றான் - இசைப்
பாடல் கேட்டுவந்தான்
ஆட்டக் கச்சேரிகளை - அவன்
அரங்கில் கண்டுவந்தான்


நூற்கள் பலசெய்தான் - கதை
நூறு சொல்லிவந்தான்
வேற்கை மன்னருக்குப் - பல
வேடிக்கை கூறிவந்தான்


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/2&oldid=1016539" இலிருந்து மீள்விக்கப்பட்டது