புதிய ஆத்திசூடி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஆசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்[தொகு]

காப்பு - பரம்பொருள் வாழ்த்து[தொகு]

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;

கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

உயிர் வருக்கம்[தொகு]

  1. அச்சம் தவிர்
  2. ஆண்மை தவறேல்
  3. இளைத்தல் இகழ்ச்சி
  4. ஈகை திறன்
  5. உடலினை உறுதிசெய்
  6. ஊண்மிக விரும்பு
  7. எண்ணுவ துயர்வு
  8. ஏறுபோல் நட
  9. ஐம்பொறி ஆட்சிகொள்
  10. ஒற்றுமை வலிமையாம்
  11. ஓய்த லொழி
  12. ஒளடதங் குறை

உயிர்மெய் வருக்கம்[தொகு]

ககர வருக்கம்[தொகு]

13. கற்றது ஒழுகு

14. காலம் அழியேல்

15. கிளைபல தாங்கேல்

16. கீழோர்க்கு அஞ்சேல்

17. குன்றென நிமிர்ந்து நில்

18. கூடித் தொழில் செய்

19. கெடுப்பது சோர்வு

20. கேட்டிலும் துணிந்து நில்

21. கைத்தொழில் போற்று

22. கொடுமையை எதிர்த்து நில்

23. கோல்கைக் கொண்டு வாழ்

24. கவ்வியதை விடேல்

சகர வருக்கம்[தொகு]

25. சரித்திரத் தேர்ச்சிகொள்

26. சாவதற்கு அஞ்சேல்

27. சிதையா நெஞ்சு கொள்

28. சீறுவோர்ச் சீறு

29. சுமையினுக்கு இளைத்திடேல்

30. சூரரைப் போற்று

31. செய்வது துணிந்து செய்

32. சேர்க்கை அழியேல்

33. சைகையில் பொருளுணர்

34. சொல்வது தெளிந்து சொல்

35. சோதிடந்தனை இகழ்

36. சௌரியம் தவறேல்

ஞகர வருக்கம்[தொகு]

37. ஞமலிபோல் வாழேல்

38. ஞாயிறு போற்று

39. ஞிமிரென இன்புறு

40. ஞெகிழ்வது அருளின்

41. ஞேயம் காத்தல் செய்

தகர வருக்கம்[தொகு]

42. தன்மை இழவேல்

43. தாழ்ந்து நடவேல்

44. திருவினை வென்று வாழ்

45. தீயோர்க்கு அஞ்சேல்

46. துன்பம் மறந்திடு

47. தூற்றுதல் ஒழி

48. தெய்வம் நீ என்று உணர்

49. தேசத்தைக் காத்தல் செய்

50. தையலை உயர்வு செய்

51. தொன்மைக்கு அஞ்சேல்

52. தோல்வியில் கலங்கேல்

53. தவத்தினை நிதம்புரி

நகர வருக்கம்[தொகு]

54. நன்று கருது

55. நாளெல்லாம் வினை செய்

56. நினைப்பது முடியும்

57. நீதிநூல் பயில்

58. நுனியளவு செல்

59. நூலினைப் பகுத்துணர்

60. நெற்றி சுருக்கிடேல்

61. நேர்படப் பேசு

62. நையப் புடை

63. நொந்தது சாகும்

64. நோற்பது கைவிடேல்

பகர வருக்கம்[தொகு]

65. பணத்தினைப் பெருக்கு

66. பாட்டினில் அன்பு செய்

67. பிணத்தினைப் போற்றேல்

68. பீழைக்கு இடம் கொடேல்

69. புதியன விரும்பு

70. பூமி இழந்திடேல்

71. பெரிதினும் பெரிது கொள்

72. பேய்களுக்கு அஞ்சேல்

73. பொய்மை இகழ்

74. போர்த் தொழில் பழகு

மகர வருக்கம்[தொகு]

75. மந்திரம் வலிமை

76. மானம் போற்று

77. மிடிமையில் அழிந்திடேல்

78. மீளுமாறு உணர்ந்து கொள்

79. முனையிலே முகத்து நில்

80. மூப்பினுக்கு இடங்கொடேல்

81. மெல்லத் தெரிந்து சொல்

82. மேழி போற்று

83. மொய்ம்புறத் தவம் செய்

84. மோனம் போற்று

85. மௌட்டியந்தனைக் கொல்

86. யவனர்போல் முயற்சிகொள்

87. யாவரையும் மதித்து வாழ்

88. யௌவனம் காத்தல் செய்

89. ரஸத்திலே தேர்ச்சி கொள்

90. ராஜஸம் பயில்

91. ரீதி தவறேல்

92. ருசிபல வென்றுணர்

93. ரூபம் செம்மை செய்

94. ரேகையில் கனிகொள்

95. ரோதனம் தவிர்

96. ரௌத்திரம் பழகு

97. லவம்பல வெள்ளமாம்

98. லாகவம் பயிற்சி செய்

99. லீலை இவ்வுலகு

100. உறுத்தரை இகழ்

101. உலோக நூல் கற்றுணர்

102. லௌகிகம் ஆற்று

103. வருவதை மகிழ்ந்துண்

104. வானநூல் பயிற்சிகொள்

105. விதையினைத் தெரிந்திடு

106. வீரியம் பெருக்கு

107. வெடிப்புறப் பேசு

108. வேதம் புதுமை செய்

109. வையத் தலைமைகொள்

110.வௌவுதல் நீக்கு

இவற்றையும் பார்க்கவும்
"https://ta.wikisource.org/w/index.php?title=புதிய_ஆத்திசூடி&oldid=1526328" இலிருந்து மீள்விக்கப்பட்டது