உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/திருமணப் பேச்சு

விக்கிமூலம் இலிருந்து
27. திருமணப் பேச்சு

நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகள் சந்தர்ப்ப விசேஷத்தால், அரிய நிகழ்ச்சிகள் ஆகி விடுகின்றன அல்லவா? சுந்தரிக்கும் அவ்வாறே நேர்ந்தது.

பாகவதர் உடல் நலக் குறைவுற்றது முதல், அவரோடு அவள் தனித்துப் பேசவே முடியவில்லை. அவள் வருகிற நேரத்தில், யாராவது பாகவதரோடு இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் அவள் என்ன பேச முடியும்? ஆனால், ஆரம்பத்தில் இதை அத்தனை பெரிய விஷயமாகக் கருதாத சுந்தரிக்கு; பேச வேண்டிய தேவை ஏற்பட்ட போது, அதுவே பெரிய விஷயமாகி விட்டது. மனம் விட்டுப் பேசக் கூட வாய்ப்பே இல்லாமல் போயிற்று.

வசந்தி-ஹரி, திருமண விஷயமாக அவள் ஜாடை மாடையாகப் பாகவதரிடம் குறிப்பிட்டிருக்கிறாள். பாகவதரும் அதை நல்ல ஏற்பாடென்றே ஆமோதித்திருந்தார். ஆனால், அதற்காக எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இப்போது, அது பற்றி மீண்டும் பேச்சு வார்த்தைகளைத் துவக்கி, விரைவிலேயே முடிவு கண்டு விட வேண்டுமென்று சந்தர்ப்பத்தை சுந்தரி ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த எதிர் பாராத வாய்ப்பு அன்று அவளுக்குக் கிட்டியது.

வீட்டுக்குள் நுழைந்த சுந்தரியைக் கண்டதும் லட்சுமியம்மாளுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய் விட்டது.

“பாபுராஜபுரத்தில் ஒரு முக்கியமான கல்யாணம், சுந்தரி. எப்படிப் போவது? காயத்திரியையாவது விட்டுத்தான் போக வேண்டும் போல் இருக்கிறதே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் நீ வந்து சேர்ந்தாய். பார்த்துக் கொள். சாயங்காலம் வந்து விடுகிறோம்” என்று சொல்லி, எல்லாரையும் அழைத்துக் கொண்டு லட்சுமியம்மாள் புறப்பட்டுச் சென்றாள்.

‘தெய்வந்தான் இவர்களை வெளியில் அனுப்பி வைக்கிறது’ என்று எண்ணியபடி, சுந்தரி பாகவதரின் அறைக்குள் சென்றாள்.

‘என்ன வந்தாலும் என்னை அசைக்க முடியாது என்று சொல்லிச் சொல்லி, அசைய முடியாமல் இப்படி ஒரேயடியாகப் படுத்து விட்டீர்களே! தலைவலி, காய்ச்சல் என்று ஒரு நாள் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்க உங்களுக்குப் பிடிக்காதே!’ என்று வாய்த்த தருணத்தில் சுந்தரி, தன் மனத்தில் உள்ள துயரத்தையெல்லாம் வார்த்தைகளில் வடித்தாள்.

“ஓட்டைச் சட்டி போன்ற பொக்கையான உடம்போடு, மனிதனுக்கு இத்தனை கர்வம் கூடாது என்றுதான் பகவான் என் தலையில் ஒரு குட்டுக் குட்டியிருக்கிறார். இதற்கு வருத்தப்பட்டுப் பிரயோசனம் என்ன? லட்சுமி ஏதோ கல்யாணத்துக்குப் போக வேண்டும் என்று கூறியிருந்தாளே; போய் விட்டாளா?” என்று கேட்டார் பாகவதர்.

“நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். எழுப்ப வேண்டாம் என்று என்னிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள்.”

“காயத்திரி கூடவா இல்லை?”

“இல்லை. நம் இரண்டு பேரையும் தனியாக விட்டு விட்டு எல்லாரும் போய் விட்டார்கள்.”

“இரண்டு பேராய இருக்கிறோம்? தனி என்கிறாயே!”

“ஆமாம். இன்னும் இடக்குக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.”

“அது சங்கீதத்தோடு பிறந்தது; உடம்போடுதான் போகும். இப்படி நாம் உட்கார்ந்து பேசி, எத்தனை நாளாயிற்று சுந்தரி?”

“ஆமாம், இப்போ நாளை எண்ணிக் கொண்டிருக்கிறேன்; அதற்குள் போனவர்கள் திரும்பி வந்து விடுவார்கள். பேச வேண்டிய விஷயம், வண்டி இருக்கிறது. என்னவோ ஹரி கூட ஊரில் இல்லை போல் இருக்கிறது. எப்போது வருகிறானாம்?” என்று சுந்தரி கேட்டாள்.

“உனக்குத் தெரியாதா? உன்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததாகச் சொன்னானே!”

“தெரியும். தஞ்சாவூரில் யாரோ ஒரு மிராசுதார் வீட்டுப் பையனுக்குப் பாடம் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான்.”

“பின்னே என்ன? நேற்றுப் போனவன், ஒரு வழியாக அங்கேயே தங்கி, இரண்டாம் நாள் பாடத்தையும் சொல்லிக் கொடுத்து விட்டு வரலாம் என்று இருக்கிறானோ என்னவோ? இல்லாவிட்டால், அதற்கென்று ஒரு தடவை இங்கே வந்து, மறுபடியுந்தானே போயாக வேண்டும்?” என்று கூறி விட்டு, “கச்சேரிக்கெல்லாம் போய் வந்தானே: எல்லாம் எப்படி நடந்ததாம். விசாரித்தாயா?” என்று சுந்தரியிடம் கேட்டார்.

“நான் விசாரிப்பானேன்? வந்தவுடனே அவன் அதைப் பற்றி என்னிடமும், வசந்தியிடமும் மிகவும் சந்தோஷமாகச் சொன்னான். போன இடத்தில் எல்லாரும் உங்களைப் பற்றியே விசாரித்தார்களாம். ‘பாகவதரை அப்படியே பயல் உரித்து வைத்திருக்கிறான்’ என்று எல்லாரும் ஒவ்வொரு கச்சேரியையும் கேட்டு விட்டு, மூக்கின் மேல் விரலை வைக்கிறார்களாம்.

“இதையும் அவனே பெருமையாக வந்து, உன்னிடம் பீற்றிக் கொண்டானா?” என்று பாகவதர் சுந்தரியிடம் குறுக்கிட்டுக் கேட்ட போது, அவருடைய குரலில் ஹரி ஏதோ குற்றம் செய்து விட்டது போன்ற குறுகுறுப்புத் தென்பட்டது.

“நான் அப்படியா உங்களிடம் சொன்னேன்? ஹரிக்கு அப்படியெல்லாம் பேசத் தெரியுமா? எல்லாம் நம் ராஜப்பாவே வந்து சொல்லி விட்டுப் போனார்” என்றாள் சுந்தரி.

இதைக் கேட்டதும், பாகவதருடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியால் நிறைந்தது. இசையுலகில் தம் புகழையும், பரம்பரையையும் நிலை நாட்டச் சரியான வாரிசைத் தேர்ந்தெடுத்து விட்ட மன நிறைவு, அவர் உடலெல்லாம் பாவோடியது. அந்த நிம்மதியையாவது, அந்திம காலத்தில் தமக்கு அளித்த இறைவனுக்கு, அவர் இதயத்தினுள்ளேயே சிரம் தாழ்த்தி வணங்கினார்.

சுந்தரி அவரிடம் மெதுவாகக் கேட்டாள்: “இன்று உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். கேட்கலாமா? இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்கு எத்தனை நாளாய்க் காத்துக் கொண்டிருந்தேன்?”

இந்த வார்த்தைகளைக் கூறிய போது, சுந்தரியின் குரல் தழுதழுத்தது. பாகவதர் நீண்ட பெருமூச்சு விட்டார். பிறகு சுந்தரியைப் பார்த்துக் கூறினார்: “நீ லட்சுமியைப் பற்றி இப்படித் தவறாக நினைத்துச் பேசுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளைப் போல், உன்னையும், என்னையும் புரிந்து கொண்டு நடக்கும் பெண்ணை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது.”

“நீங்களும் இப்படி என் பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசுவீர்கள் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நான் அக்காவைப் பற்றியா குற்றம் சொன்னேன்? ஏன் உங்களுக்கு நான் எது பேசினாலும், குற்றமாகப் படவேண்டும்.”

“பார்த்தாயா? இதிலிருந்தே தெரிந்து கொள். கடவுள் எல்லாம் நல்லதைத்தான் செய்வார் என்று. நாம் இரண்டு பேருமே சந்தித்து, இரண்டு வார்த்தை தனியாகப் பேசிக் கொள்வதற்குள் உனக்குக் கோபம் வந்து விட்டது. சண்டை வந்து விட்டது. நீ தவறாகச் சொல்லவில்லை. ஏதோ வியாதிக்காரன், நானே உன்னைத் தவறாகச் சொல்லி விட்டேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா?”

‘எங்கே அன்பும், பாசமும் அதிகம் இருக்கின்றனவோ, அங்கேதான் சண்டையும், துக்கமும் இருக்கும் என்பார்கள். அது எனக்குத்தான் சரியாக இருக்கிறது’ என்று எண்ணிக் கொண்ட சுந்தரி, வாயைப் பொத்திக் கொண்டு, சப்தம் வெளியே வராதபடி முயற்சி செய்தாள். பாகவதர் அருகில் இருந்த அவளுடைய தலையை அன்புடன் தடவியபடியே கூறினார்: “நீ இன்னும் பச்சைக் குழந்தையாகவேதான் இருக்கிறாய், சுந்தரி. அன்றையிலிருந்து இன்று வரை அதே சுபாவம், அதே போக்கு, அதே குணம். பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய வயது வந்த பிறகுங் கூட நீ இன்னும் அதே பழைய சுந்தரியாகவே இருக்கிறாய். துளியும் மாறுதல் இல்லை.”

பாகவதருடைய இந்த வார்த்தையைக் கேட்டதும், சுந்தரிக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு, முகத்தைச் சற்றுத் தெளிவாக்கிக்— கொண்டாள். ஆனால், அவள் பேசுவதற்குள், பாகவதர் கேட்டார்; “என்னவோ முக்கியமான விஷயம், தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னாயே! இந்த அழுகையைப் பற்றித்தானா?”

சுந்தரி சிரித்து விட்டாள். “ஆமாம். இந்தக் கிண்டலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.”

“பின் எதில்தான் எனக்குக் குறைச்சல்? அதையாவது சொல்லு, கேட்கிறேன்.”

“இரண்டு பெண்களைப் பெற்று வைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவர்களுடைய கல்யாணத்தைப் பற்றிக் கொஞ்சமாவது உங்களுக்குக் கவலை இருக்கிறதா?”

“எல்லாம் நீங்களே சொல்லுங்கள்; நீங்களே கேளுங்கள்.—‘இனி ஒன்றைப் பற்றியும் நான் கவலைப் பட்டு அலட்டிக் கொள்ளக் கூடாது’ என்று நேற்று வரை நீங்கள் எல்லாரும் டாக்டரோடு கூடிக் கூடிப் பேசினீர்கள்; எனக்கு உபதேசமும் செய்தீர்கள். இன்று மனுஷன் கொஞ்சம் கண்ணைத் திறந்தவுடன், ‘கவலைப் படவே இல்லையே’—என்று கேட்கிறீர்கள். இனி மேல் நீ என்ன; படைத்த பிரும்மா வந்து சொன்னால் கூட, என்னால் எதற்காகவும் கவலைப் பட முடியாது. கவலைகளுக்கும் ஒரு வழியாக நான் மங்களம் பாடி விட்டேன். பெண்களுக்கு வரன் இனி மேலா பிறக்கப் போகிறார்கள்? நீதான் வசந்தியின் விஷயத்தை ஒரு வழியாக முடித்து விட்டாய். இனி மேல் சுசீலா ஒருத்திதானே? அவள் பெரிய வீராங்கனை. அவளுக்குப் புருஷனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க, எனக்குச் சாமர்த்தியம் போதாது. புருஷனை அவளேதான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறி மெல்லச் சிரித்தார்.

“ஆமாம், வசந்தியின் விஷயத்தை நான் என்னவோ முடித்து விட்டதாகச் சொல்லுகிறீர்களே! நான் என்ன முடித்து விட்டேன்? உங்கள் அபிப்பிராயத்தைக் கேட்காமல், அது முடிவாகி விடுமா?”

“என்னுடைய அபிப்பிராயத்தை அன்றே சொல்லி விட்டேனே. பெண்ணுக்கும், பிள்ளைக்கும் ஒருவரை, ஒருவர் பிடித்துப் போய் விட்டால், சீக்கிரமே கல்யாணத்தை நடத்தி விட வேண்டியதுதான்,

இதை விட, ஹரிக்கு நாம் நல்லது வேறு எதுவும் செய்ய முடியாது. வசந்தியின் குணத்துக்கும், அறிவுக்கும் அவன்தான் புருஷனாக இருக்கத் தகுதியுடையவன். திருமணத்துக்குப் பிறகும், அவன் நம்மை விட்டுப் பிரிந்து போக முடியாது என்ற மகிழ்ச்சிதான், எனக்கு எல்லாவற்றையும் விடப் பெரிதாகப் படுகிறது” என்று உணர்ச்சி பொங்கக் கூறி நிறுத்தினார்.

உடனே சுந்தரி, “வசந்தியின் சம்மதத்தை நான் கேட்கவே வேண்டியதில்லை. நீங்கள் எனக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வந்து செய்த காரியத்தை, அவள் ஹரியிடம் பாட்டுக் கற்றுக் கொண்டு செய்து வருகிறாள். வர, வர அங்கே டியூஷனா நடக்கிறது? பாவம்! ஹரிதான் என்னவோ தொண்டை கிழியக் கத்தி விட்டுப் போகிறான். அவள், பாட்டைத் தவிர மீதி அரட்டையெல்லாம் அடித்துக் கொண்டிருக்கிறாள். அவனும் ஒரு நாளாவது, அவளைக் கோபித்துக் கொண்டு, கண்டிக்கவோ, திட்டவோ செய்வானாக்கும் என்று பார்க்கிறேன். அவன் வாயே திறப்பதில்லை” என்றாள்.

“ஒரு வேளை இப்போதே பெண்டாட்டி தாசனாகி விட்டானோ என்னவோ? இருக்கட்டுமே அப்படியுந்தான் ஒரு ஜோடி!”

“தாராளமாய் இருக்கட்டுமே. நானா வேண்டாம் என்கிறேன்? லட்சுமி அககாவிடம், இந்த அபிப்பிராயத்தைச் சொன்னீர்களா?”

“இனிமேல் சொன்னால் போயிற்று. ஹரியும் இப்போதுதானே நாலு கச்சேரிக்குப் போய்க் காசு சம்பாதிக்கிற நிலைக்கு வந்திருக்கிறான்? கையில் இருக்கிற பிள்ளை எங்கே போய் விடுவான்?”

“நான் இப்போதே எதையும் அவசரமாகச் செய்யச் சொல்லவில்லையே! நமக்குள் இப்படி ஓர் அபிப்பிராயம் இருக்கிறது என்பது மட்டும் தெரியட்டும் என்றுதானே சொல்கிறேன்?”

“அதைப் பற்றிக் கவலைப்படாதே. நானே சமயம் வாய்க்கும் போது, லட்சுமியிடம் சொல்லி விடுகிறேன். அவளுக்கும், இந்த ஏற்பாடு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கும். ஹரியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நீ சொல்லுவது போல், நாம் எது சொல்றோமோ, அதுதான் அவனுக்கு வேத வாக்கு” என்று கூறிக் கொண்டிருந்த பொழுதே, வாசற் கதவை யாரோ படபடவென்று: தட்டினார்கள்.

சுந்தரி கதவைத் திறந்தாள். கையில் மருந்துப் பெட்டியுடன் குடும்ப டாக்டர் நின்று கொண்டிருந்தார்.

“வாருங்கள்” என்று சுந்தரி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள்.

பாகவதரின் உடலை பரிசோதித்த டாக்டர், “ராத்திரி நன்றாகத் தூங்கினாரா?” என்று கேட்டார். தெரிந்தோ, தெரியாமலோ சுந்தரி தலையை ஆட்டி விட்டு, “உடம்பு எப்படி இருக்கிறது டாக்டர்?” என்று ஓர் எதிர்க் கேள்வியைக் கேட்டாள்.

டாக்டர் சுந்தரியைப் பார்த்து, “பரவாயில்லை” என்று கூறி விட்டு, பிறகு பாகவதரைப் பார்த்துக் கூறினார்: “நான் இப்படிச் சொல்லி விட்டேனே என்று நீங்கள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு பாட ஆரம்பித்து விடக் கூடாது. நீங்கள் இனி மேல்தான், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிற்றில் புண் இருக்கிறது. எந்தக் காரியத்துக்காகவும் மனத்தையோ, உடம்பையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மறுபடியும் ‘அட்டாக்’ வராமல், நீங்களே உங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்தார்.

“அதையெல்லாம் என்னிடம் சொல்லி என்ன செய்ய? இவர்களிடம் சொல்லுங்கள். எல்லாம் இவர்கள் கையில்தான் இருக்கிறது. சிரிப்பு மூட்டினால், சிரிக்கிறேன்; இவர்கள் அழ வைத்தால், அழுகிறேன். என்னைத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தெய்வம் முடக்கிப் போட்டு விட்டதே!” என்றார் பாகவதர்.

“பார்த்தீர்களா? இப்போதுதானே நான் உங்களுக்குச் சொன்னேன்? இப்படி நமக்கு நேர்ந்து விட்டதே என்று சற்று முன் கூறிய கவலை ஒன்று போதுமே, உங்கள் உடல் நலனைப் பறிக்க? விரைவிலேயே நீங்கள் எழுந்து முன் போல் ஆகி விடப் போகிறீர்கள்” என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி விட்டு, டாக்டர் விடை பெற்றுச் சென்றார்.

சுந்தரி டாக்டர் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். ‘கணவருக்குப் பணிவிடை செய்ய இனி எப்போது சந்தர்ப்பம் கிட்டுமோ; அருகில் இருக்கக் கூடக் கொடுத்து வைக்கவில்லையே!’ என்ற வருத்தம் சுந்தரிக்கு மேலிட்டது.

ரியின் கச்சேரி எங்கே நடந்தாலும், அங்கே அவனுக்கென்று விசிறிகள் கூட்டம் திரண்டு வந்தது. தஞ்சையிலும், திருச்சியிலும் இன்னும் எண்ணற்ற சபைகளிலும், அவனுடைய கச்சேரி தொடர்ந்து நடந்து, ஏராளமான சிறந்த ரசிகர்களைத் திரட்டித் தந்தது. ரசிகர்களின் பாராட்டுக்களோடு, பத்திரிகைளின் சிறந்த விமரிசனங்களும் அடிக்கடி வெளியாகி, அவனுக்குப் புகழ் சம்பாதித்துக் கொடுத்தன.

அடிக்கடி கச்சேரிகளுக்கு ஏற்பாடாகி, பம்பாயும், டில்லியும், பட்டணமும் அவனுக்குச் சர்வ சாதாரணமாகி விட்டன. நாளடைவில், ஹரியின் கச்சேரி இல்லாத பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணமே இல்லை என்று ஆகி விட்டது.

இப்படி வாழ்க்கையில், பாதி நாள் ரெயிலிலும், கச்சேரி மேடைகளிலும் ஹரிக்குக் கழிந்தது. இத்தனைக்கு மத்தியிலும், ஓய்வு இருக்கும் போதெல்லாம், காந்தாமணியின் வீட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை அவன் நிறுத்தவில்லை. மிகக் குறுகிய காலத்துக்குள், காந்தாமணி வெகுவாக முன்னேற்றம் அடைந்து வந்தாள். படிப்படியாக, அவள் பழைய பாடந்தர முறைகளை எல்லாம் மாற்றிக் கொண்டாள். முழுக்க, முழுக்க ஹரியின் பாணியே அவளுடைய பாட்டில் அமைந்து விட்டது.

வசந்தியிடமும், சுசீலாவிடமும் ஹரி எதிர்பார்த்து ஏமாந்ததைக் காந்தாமணி ஈடு செய்தாள். தனக்குக் கிடைத்த கால அவகாசத்துக்குள், அவள் அவனது திறமையை நன்கு பயன் படுத்திக் கொண்டாள். அவன் இரண்டு நாளைக்கு ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டிருந்தால், அவள் ஒரு நாளைக்கு இரண்டு கீர்த்தனைகளை அவனிடம் பிடிவாதமாகக் கற்றுக் கொண்டு, அடுத்த தடவை பாடத்துக்கு ஹரி வரும் போது, அவன் பிரமிப்பில் ஆழும்படிப் பாடிக் காட்டினாள்.

இதனால், அவர்களிடையே போட்டி வலுத்தது. அது அவனுடைய அபிவிருத்திக்கு உதவியாக இருந்தாலும், நாளடைவில் அவள் தன்னையே மிஞ்சி விடுவாள் என்ற உண்மையான அச்சம் அவனது உள்ளத்தில் ஏற்பட்டது.

ஆகவே, தன்னைப் பின்பற்ற முடியாதபடி, அவள் குழம்பித் திணறும் வண்ணம், புதுப் புதுச் சங்கதிகளைக் கிருதியில் ஆராய்ந்து சேர்த்தும், ராகங்களில் அவள் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத இடங்களையெல்லாம் தொட்டு சஞ்சரித்தும், தன் குருதியைப் பிழிந்து குரலைக் கூட்டினான் ஹரி.

அதே சமயம் — காந்தாமணி என்னும் கருவியால், நாம் முன்னை விட எத்தனை தூரம் சங்கீதத்தில் அபிவிருத்தி அடைந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்த்து மனம் பூரித்தான்.

தந்தி மணியார்டரும், சாதாரண மணியார்டரும் ஹரிக்குப் பல ஊர்களிலிருந்து வந்த வண்ணம் இருந்தன. காந்தாமணியோ, ஹரி வரும் போதெல்லாம், எத்தனை சொல்லியும் கேளாமல், பிடிவாதமாக நூறும், இருநூறும் பையில் திணித்து அனுப்புவாள்.

பாகவதரின் வீட்டில் செல்வம் கொழித்தது. பக்கிரிக்கும் இடை விடாமல், யோகம் அடித்துக் கொண்டிருந்தது. அக்காவுக்கு அளவோடு கொடுத்து விட்டுக் ‘கொசிரை’ எல்லாம் தன் செலவுக்கு வைத்துக் கொண்டான். சாதாரணக் கைலியும், சிங்கப்பூர் பனியனும் போய், சில்க் கைலியும், கிளாஸ்கோ மல் ஜிப்பாவுமாகக் காட்சி அளித்தான்.

ஆனால், இவற்றையெல்லாம் ஹரி கண்டும், காணாமலும் இருந்து விட்டான். தன்னிடம் பணத்தையும் வாங்கிக் கொண்டு போய், ஏழை போல் வேஷமும் போட்டுக் கொண்டு அலையாமல், இப்படிப் பளிச்சென்று காட்சியளிக்கும் பக்கிரியின் நேர்மையை வரவேற்றான். எப்படியாவது, அவர்களும் சௌகரியமாக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தான்.

இப்படி இசையின்பத்தில் சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தவன், புற வாழ்வுக் கவலைகளை எல்லாம் கை விட்டான். மனம் எப்போதும், ஆனந்தத்தினால் நிறைந்திருந்தது. அதை அவன் தேகத்தின் காந்தியும், முகத்தின் வசீகரமும் எடுத்துக் காட்டின. வாழ்க்கையில் ஒழுக்கத்தையும், கொள்கையில் நேர்மையையும் கடைப் பிடித்து வந்த அவன்; ஆண்களில் அழகனாகவும், அறிவில் மேதையாகவும் விளங்கினான். தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய பாகவதருக்கு, அவன் எத்தனை செய்தாலும் தகும், ஏற்கும் அல்லவா? சம்பாதிப்பதை எல்லாம் செலவழித்தாவது குருவைக் குணப்படுத்தி விட வேண்டுமென்று அவன் மனம் துடித்தது. போகிற ஊர்களில் அபூர்வமாகக் கிடைக்கும் பழங்களும், அவருக்குப் பிடித்தமான பொருள்களுமாகக் கொண்டு வந்து குவித்தான்.

ஆனால், அத்தனையையும் ஏற்றுக் கொண்டு, அமைதியுடன் இருக்கப் பாகவதரின் உள்ளம் என்ன கல்லால் ஆனதா? தாம் சம்பாதித்துக் கொண்டு வந்த காலத்தில் நடந்ததை விடக் குடும்பச் செலவைச் சுருக்கினார். வயிறார எல்லாரும் உண்பதைத் தவிர, மீதியை ஹரியின் பெயரிலேயே பாங்கில் சேமித்து வைத்தார். பணத்தின் தேவை, எப்போது ஏற்படும், ஏற்படாது என்று யாராவது அறுதியிட்டுக் கூற முடியுமா? இன்று ஹரி இதைப் பற்றி லட்சியம் இல்லாதவனாகவோ, கவலைப்படாதவனாகவோ இருக்கலாம். ஆனால் நாளை?

‘திருமணமாகி, வசந்தியோடு அவன் வாழ்க்கை நடத்தும் போது?’ சுந்தரி கேட்க மாட்டாள். ‘நேற்று வரை என் புருஷன் சம்பாதித்தது எங்கே?’ என்று வசந்தி கேட்க மாட்டாள். கேட்டு விட்டால்? அவளிடம் வெட்கமில்லாமல் இந்த மானங்கெட்ட வயிற்றையா காட்டிக் கொண்டு நிற்பது?—

இப்படி, முக்காலமும் உணர்ந்து செயல் புரியும் முனிவரைப் போல் எண்ணிக் கொண்டு, பாகவதர் ஹரியின் முன்னேற்றத்துக்கான காரியங்களையே செய்து கொண்டு வந்தார்.

ஹரியிடம் இப்போதெல்லாம் வசந்தி முன் போல், அதிகம் எதிர் வார்த்தையாடாமலும், அரட்டை அடிக்காமலும், பாடத்துக்கு வந்தால், மிகவும் சிரத்தையுடன் நடந்து வந்தாள். திருமணப் பேச்சுக்களைத் தன் தாய், அப்பாவுடன் முடித்துக் கொண்டு வந்ததை அவள் அறிவாள். அறிந்ததிலிருந்தே, ஹரியைப் பார்க்கும் போதெல்லாம், வசந்திக்கு ஒரு வித நாணம் பிறந்து விடும். ஆனால், அவன் இதற்கு எவ்வித மதிப்போ, பொருளோ கொடுக்காமல், தன் கடமையை மட்டும் செய்து விட்டுக் கண்ணியமாகச் சென்று கொண்டிருந்தான். வசந்தியும், சுந்தரியும் எத்தனை முயன்றும், ஹரியின் உள்ளக் கிடைக்கையையோ, வசந்தியை மணந்து கொள்வது பற்றிய அவன் கருத்தையோ, அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றுக்கும், எப்போதும் சிரித்து மழுப்புகிற புன்னகை ஒன்றுதான் அவனுடைய பதிலாக இருந்தது. அந்த மழுப்பலின் அடித்தளத்தில், ஏதோ மர்மம் இருப்பதாக வசந்தியின் சூட்சும புத்திக்குத் தென்பட்டது. ஆனால் வெளுத்ததெல்லாம் பாலென்று எண்ணும் சுந்தரிக்கு, அப்படி எண்ணத் தோன்றவில்லை. ஹரி மனம் விட்டுப் பேச வெட்கப்படுகிறான், கூச்சப்படுகிறான் என்று எண்ணியே ஏமாந்தாள்.