உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் — ஒரு சகாப்தம்/அமெரிக்காவிலிருந்து அண்ணன் எழுதிய அஞ்சல்

விக்கிமூலம் இலிருந்து

அமெரிக்காவிலிருந்து
அண்ணன் எழுதிய அஞ்சல்

பேரன்புடைய பெரியார் அவர்கட்கு.

வணக்கம்.

என் உடல்நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும், இளைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இத்திங்கள் முழுவதும் இங்கு இருந்துவிட்டு, நவம்பர் முதல் வாரம். புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி பரிமளம், செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக்கொள்கிறார்கள். சென்னை மருத்துவ மனையிலும் விமானதளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த தோற்றம் இப்போது என் முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவேதான் கவலைப்பட வேண்டியநிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு என் நன்றி. தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில் 'மனச்சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ என்னவோ' என்று எழுதியிருந்ததைக்கண்டு மிகவும் கவலைகொண்டேன். தங்கள்-பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்தவரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட்டில். ஆகவே, சலிப்போ. கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினை திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.

நியூயார்க்,
10—10—68.

தங்கள் அன்புள்ள,
அண்ணாதுரை