உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் — ஒரு சகாப்தம்/பகுத்தறிவே இளஞர்களை ஆளவேண்டும்

விக்கிமூலம் இலிருந்து

பகுத்தறிவே இளஞர்களை ஆளவேண்டும்

"பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்கான பணிகளையும் செய்யவேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச்செய்பவர்களாக நீங்கள் திகழவேண்டும்.

பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங்கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.

அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒரு முறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும் அந்த முறைகளை இளமை குன்றாது தீவிரத் தன்மையோ டு கூடியதாக வைத்திருக்க நாம் தவறிவிட்டோம். நம் வாழ்க்கை முறை நிலைக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக்கொள்ளத்தக்க, புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்கவேண்டும்.

பெரியாரைப் பின்பற்றுவோம்

நெடுங்காலமாக பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக் கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.

இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன் உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்திகொள்கிறோம் நம்மையறியாமல் இவற்றைப்பாதுகாக்கக்கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துக்களைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறை கூறத்துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை. பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துக்களை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறை கூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடையின்றி ஆளவேண்டும். சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும் நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.

சாதி முறையை எதிர்த்துப்
போர் தொடுங்கள்

பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினை சீரமைக்கும் பணியில் ஈடுபடவேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிபெற்று வெளியேறுவோர் 'இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்கவேண்டும். சாதிமுறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன். விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழமுடியாத மூடப்பழக்கங்களுக்கு எதிராக போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.

[அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு
விழாவில் 18-11-67 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி]