உள்ளடக்கத்துக்குச் செல்

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை/அணுக்கள்

விக்கிமூலம் இலிருந்து

3. அணுக்கள்

உயிருள்ள ஒவ்வொரு பொருளும் அணுக்களால் (cells) ஆக்கப்பட்டிருக்கிறது. மரம் செடி கொடிகளையும் பிராணிகளையும் போலவே மனிதனும் இந்த அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறான். முதலில் ஓர் அணு இருக்கிறது. அது இரண்டாகப் பிரிந்து இரண்டு அணுக்கள் ஆகிறது. அவை மறுபடியும் பிரிகின்றன. இவ்வாறு அணுக்கள் தாமே பிரிந்து பிரிந்து பெருகுகின்றன. அவற்றின் தொகுதியாகவும், அவற்றால் உண்டாக்கப்பட்ட எலும்பு போன்ற பாகங்களாலும் உயிர்ப் பொருள்கள் உருவாகின்றன. அணு மிக நுட்பமான பொருள். ஒவ்வோர் அணுவும் உயிர் நிலைப் பொருள்களால் (Protoplasm) ஆக்கப்பட்டிருக்கிறது. உயிர் நிலைப் பொருள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் மிக நுண்ணிய பொருள்களால் உண்டானவை. இந்த நுண்ணிய பொருள்களிலும் தனிப்பட்ட ஒரு சிறு பகுதி உள்ளது. அதையே உட்கரு (Nucleus) என்கிறோம். ஆகவே, ஒவ்வோர் அணுவிலும்

படம் 1

சில உயிர்நிலைப் பொருள்களும் ஒரு உட்கருவும் இருக்கின்றன.

பாரம்பரியத்துக்கும் இந்த அணுக்களுக்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. மனித தேகத்தின் நிறம் பிறவியிலேயே அமைகிறது. ஓரளவுக்கு அது சூழ்நிலையால் மாறுபடலாமெனினும் முக்கியமாகப் பாரம்பரியத் தன்மையையே கொண்டிருக்கும், மேல் தோலின் அடிப்பாகத்திலுள்ள சில அணுக்களில், நிறத்திற்குரிய வஸ்து சேர்ந்திருப்பதாலேயே இந்த நிறம் ஏற்படுகிறது. இதுபோலவே தலை மயிர், எலும்பு முதலியன அமைவதும் அணுக்களைப் பொறுத்தே இருக்கிறது. தேகத்திலுள்ள உறுப்புக்களை உருவாக்குவதில் சுரப்பிகளும் உதவி செய்கின்றன. நமது உடம்பிலே பலவேறு பாகங்களில் பலவகையான சுரப்பிகள் இருக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) என்பது மூளையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. அது உடல்வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. இந்தச் சுரப்பி சரியானபடி வேலை செய்யாவிடில் மனிதனுடைய உயரம் குறைந்துவிடுமாம். இந்த மாதிரி பல சுரப்பிகள் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன; மனிதனுடைய தன்மை, திறமைகளுக்கும் காரணமாகின்றன. என்றாலும், அவைகளெல்லாம் அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சுரப்பிகள் நன்கு வேலை செய்வதும் அந்த அணுக்களைப் பொறுத்தே இருக்கிறது.

உடம்பிலுள்ள அணுக்களெல்லாம் ஓர் அணுவிலிருந்து பிரிந்து உண்டானவை. அந்த முதல் அணுவையே பூரித்த அண்டம் அல்லது கருமூலம் (Fertilised Egg) என்று சொல்வார்கள்.