பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/ஒற்றைக்கால் பந்தாட்டம்

விக்கிமூலம் இலிருந்து


19. ஒற்றைக்கால் பந்தாட்டம்
.

ஆட்ட அமைப்பு : விளையாட விரும்பும் அனைவரும் இந்த ஆட்டத்தில் பங்கு பெற்று மகிழலாம்.

குறிப்பிட்ட இடத்தில் தான் நின்று ஆட்டத்தைத் தொடங்கவேண்டும். நின்ற இடத்தில் சிறு கோடு ஒன்றைக் கிழித்து அடையாளம் முதலில் செய்து கொள்ள வேண்டும்.

அந்த இடத்திலிருந்து 40 அல்லது 50 அடி தூரத்தில், 2 அடி விட்டமுள்ள ஒரு வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். -

ஆட்டத்தில் பயன்பட ரப்பர் பந்து அல்லது பிளாஸ்டிக் பந்து ஒன்றும் வேண்டும். கிடைக்க வில்லையென்றால், சில் என்பார்களே ஒட்டாஞ்சில், அதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

விளையாடும் முறை : ஆடஇருப்பவர், எல்லைக் கோட்டின் மேலே ஒற்றைக்காலில் (ஒரு காலைத் துரக்கியவாறு மறுகாலில் நிற்பது) நிற்கவேண்டும். அந்தக் கோட்டில் பந்து அல்லது சில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விசில் சத்தத்திற்குப் பிறகு, அவர் நொண்டியடித்தபடியே அந்தப் பந்தை எத்தி, எதிரே உள்ள வட்டத்திற்குள் கொண்டு போய் நிறுத்திட வேண்டும். -

வட்டத்திற்குள் பந்தைக் கொண்டு போய் நிறுத்துவதுதான் ஆட்டத்தின் முக்கிய நோக்கம்.

விளையாட்டின் விதி முறைகள் :

1. எக்காரணத்தைக் கொண்டும் மறுகாலை தரையில் ஊன்றக் கூடாது. ஒற்றைக் காலால்தான் பந்தை உதைத்து ஆட வேண்டும்.

2. எத்தனை முறை வேண்டுமானலும் பந்தை எத்தித் தள்ளலாம். ஒவ்வொரு முறை எத்தும் பொழுது, எத்துவது எத்தனையாவது முறை என்பது குறித்துக் கொள்ளப்படும். 

3. மற்றவர்களேவிட குறைந்த எண்ணிக்கைக்குள் வட்டத்திற்குள் எத்திக் கொண்டு போய் பந்தை நிறுத்திய ஆட்டக்காரரே வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்படுவார்.

4. எத்தும் பொழுது குறியாக மட்டுமல்ல, மிகவும் நிதானத்துடன் சாதூரியமாகவும் செய்தால் தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் என்பதை ஆட்டக்காரர்கள் அறிந்து கொண்டால் ஆட்டம் மிகவும் ரசிக்கும் படியாகவும் அமைந்து விடும்.