மணி பல்லவம் 1/012-039

விக்கிமூலம் இலிருந்து

12. ஒற்றைக்கண் மனிதன்

ட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையில், பூம்பொழில் நடுவே அப்படி ஓர் அதிசயத்தைச் சிறிதும் எதிர்பார்த்திராதவனான இளங்குமரன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளையும் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தவளையும் மாறி மாறிப் பார்த்தான். அவன் மனத்தில் தாங்க முடியாத வியப்பு ஏற்பட்டது. ஓவியன் மணிமார்பனும் வரைவதை நிறுத்திவிட்டு விழிகள் அகல அந்த அதிசயத்தைக் கண்டான்.

“அவர்கள் உயிரும், உணர்வும் உடைய பெண்களா, அல்லது ஒரே அச்சில் வார்த்து அணிந்தும் புனைந்தும், உடுத்தும், அலங்கரிக்கப்பெற்ற இரண்டு பொற்பாவைகளா?”

அந்த இருவரில் யார் சுரமஞ்சரி? யார் மற்றொருத்தி?’ என்று அறிய மாட்டாமல் இளங்குமரனும் ஓவியனும் திகைத்து மயங்கிய போது எதிர்ப்பக்கத்திலிருந்து வந்தவள் அவர்களுடைய திகைப்பைத் தீர்த்து வைத்தாள்! “இவளும் நானும் இரட்டைப் பிறவிகள், இவளுடைய பெயர் வானவல்லி. என்னுடைய பெயர் சுரமஞ்சரி. பெயரளவில் தான் எங்களுக்குள் வேற்றுமை. தோற்றத்தில் வேற்றுமை கண்டுபிடிக்க முயல்கிறவர்கள் பெரும்பாலும் ஏமாந்து தான் போவார்கள்” என்று கூறியவாறே இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் சகோதரி வானவல்லிக்கு அருகில் வந்து அவளுடைய தோளைத் தழுவினாற் போல் நின்று கொண்டாள் சுரமஞ்சரி. அதன் பின்புதான் இளங்குமரனுக்கும் ஓவியனுக்கும் மனத்தில் ஏற்பட்ட குழப்பம் ஒருவாறு நீங்கியது.

‘வானவல்லி என்று மின்னல் கொடிக்குப் பெயர், வானில் படரும் ஒளிக்கொடி போல் மின்னல் இலங்குவதால் யாரோ கவியுள்ளம் படைத்தவர்கள் தமிழில் மின்னல் கொடிக்கு இந்தப் பெயர் சூட்டிருக்கிறார்கள். ஆனால் விண் மண்டலத்து. மின்னற் கொடியைக் காட்டிலும் இந்த மண் மண்டலத்துப் பூம்புகார் மின்னற் கொடிக்கு எவ்வளவு இயைபாக இருக்கிறது இப்பெயர்!’ என்று தனக்குள் நினைத்தவாறே வானவல்லி என்னும் எட்டிகுமரன் வீட்டு மின்னல் கொடியை ஓவியனின் அழகு வேட்கை மிக்க தன் கண்களால் நன்றாகப் பார்த்தான் மணிமார்பன்.

“நல்ல வேளையாக நீங்கள் வந்தீர்கள் அம்மா! உங்கள் சகோதரியார், ‘நீங்கள் யார்? உங்களை யார் இந்த மாளிகைக்குள் வரவிட்டது?’ என்று கேள்வி கேட்டு எங்களை வெளியே துரத்துவதற்கு இருந்தார். நீங்கள் வராவிட்டால் அந்தக் காரியத்தைச் செய்தே இருப்பார்” என்று ஓவியன் சுரமஞ்சரியைப் பார்த்துக் கொண்டே கூறியபோது, ‘பேச்சும் சிரிப்பும் இப்போது வேண்டாதவை! காரியம் நடக்கட்டும்’ என்று குறிப்பும் கடுமையும் தோன்ற அவனை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன். அந்த வலிய பார்வையே மணிமார்பனை அடக்கியாண்டது. அவன் மௌனமாக மேலே வரையலானான்.

“வானவல்லி! நேற்று கடற்கரையில் அற்புதமாக மற்போர் செய்ததாகக் கூறினேனே, அந்த வீரர் இவர்தான்” என்று தன் சகோதரிக்கு இளங்குமரனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சிறிது நேரத்தில் ஓவியம் நிறைவேறியது. இன்னும் சில நுணுக்கமான வேலைப்பாடுகள் ஓவியத்தில் எஞ்சியிருந்தாலும் ‘அவற்றைச் செய்வதற்கு இளங்குமரன் உடனிருக்க வேண்டியதில்லை’ என்று மணிமார்பன் சொல்லி விட்டான்.

ஓவியம் முடிந்ததும் வானவல்லி இளங்குமரனுக்கு முன்னால் வந்து நின்றுகொண்டு, “என்னை மன்னிக்க வேண்டும்! என் சகோதரி சுரமஞ்சரிதான் உங்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரியாமல் அப்படிக் கேட்டுவிட்டேன். நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முன்பே விவரம் தெரிந்திருந்தால் அப்படிக் கேட்டிருக்க மாட்டேன்” என்று மன்னிப்புக் கேட்டாள்.

இளங்குமரன் வானவல்லியின் குயில் மொழிக் குரலைக் காது கொடுத்துக் கேட்காதவன் போல் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.

“இதோ பாருங்கள் ஐயா! படம் அற்புதமாக வாய்த்திருக்கிறது” என்று ஓவியம் வரையப்பெற்ற திரைச் சீலையை உயரத் தூக்கி நிறுத்திக் காணுமாறு செய்தான் மணிமார்பன். இளங்குமரனிடமிருந்து இதற்கும் பதில் இல்லை.

சுரமஞ்சரிதான் வியந்து கூறினான். “படத்திலிருந்து அப்படியே நீங்கள் இறங்கி நடந்து வருவதுபோல் தத்ரூபமாக இருக்கிறது. ஓவியரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.”

“பாராட்டு இருக்கட்டும்! அது வாயிலே சொல்லாகப் பிறந்து செவியிலே ஒலியாக மடிவது அதனால் வயிறும் நிரம்பாது! வாழ்வும் நிரம்பாது! ஓவியம் நன்றாக இருந்தால் நூறு பொற் கழஞ்சுக்குப் பதில் நூற்றைம்பது பொற் கழஞ்சாகக் கொடுத்து மகிழுங்கள்” என்று அதுவரை பேசாமலிருந்த இளங்குமரன் அவளுக்குத் துணிவாக மறுமொழி கூறினான்.

“கொடுத்து மகிழ்வதைப் பற்றி எங்களுக்குப் பெருமை தான்! ஆனால் அன்போடும், மதிப்போடும் கொடுப்பதை வாங்கி மகிழ்கிற சுபாவம் சிலருக்கு இல்லாமற் போய் விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?”

முதல் நாள் கடற்கரை நிகழ்ச்சியைக் குறிப்பாகக் கூறிக் குத்திக் காட்டுவதுபோல் இளங்குமரனைச் சொற்களால் மடக்கினாள் சுரமஞ்சரி. இந்த வார்த்தைகளைக் கூறும்போது தன் கழுத்தில் அணிந்திருந்த மணி மாலையைத் தொட்டு விளையாடியது அவள் வலக்கரம். சகோதரியின் சாதுரியமான பேச்சைக் கேட்டு வானவல்லி புன்னகை புரிந்தாள்.

இளங்குமரன் அங்கிருந்து புறப்படச் சித்தமானான். “தம்பி! ஓவியத்தை முடித்துக் கொடுத்துவிட்டு உனக்குச் சேரவேண்டிய பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு போய்ச் சேர். நான் வருகிறேன். வாய்ப்பிருந்தால் மறுபடியும் எங்காவது சந்திக்கலாம்” என்று மணிமார்பனிடம் கூறிவிட்டு அவன் தெரிவித்த வணக்கங்களையும் நன்றிகளையும் ஏற்றுக் கொண்டு இளங்குமரன் புறப்பட்ட போது-

“இது இந்திர விழாக் காலம்! இந்த மாளிகைக்கு வந்தவர்களை விருந்துண்ணச் செய்யாமல் அனுப்பும் வழக்கமில்லை. மாளிகைக்குள் வந்து உணவு முடித்துக் கொண்டு போகலாம்” என்று சுரமஞ்சுரியும் வானவல்லியும் சேர்ந்து அவனை வற்புறுத்தினார்கள்.

“நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே! இந்த மாளிகைக்கு விருந்தினனாக நான் வரவில்லை. ஓர் ஏழை ஓவியனுக்கு உதவ நேர்ந்ததற்காகவே வந்தேன்” என்று கூறி அதை மறுத்துவிட்டு, இளங்குமரன் மாளிகையின் பிரதான வாயிலை நோக்கி நடக்க முற்பட்டபோது, “தம்பி! நீ இப்படிக் கண்டிப்பாக மறுத்துச் சொல்லக் கூடாதப்பா; இருந்து ஒருவேளை உண்டு விட்டுத்தான் போக வேண்டும்!” என்று பின்புறமிருந்து இன்னொரு முதிர்ந்த ஆண்குரல். மிடுக்காக ஒலித்தது.

அந்தக் குரலைக் கேட்டதும் இளங்குமரன் உள்பட எல்லோருமே வியப்போடு திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் ஓவியம் வரைந்த இடத்திற்குப் பின் பக்கத்து மரங்களின் அடர்த்தியிலிருந்து உயர்ந்த தோற்றமும் பருத்த உடலும் வலது காலைச் சாய்த்துச் சாய்த்து நடக்கும் நடையுமாக ஒரு முதியவர் வந்து கொண்டிருந்தார். அவர் கையில் ஊன்றுகோல் ஒன்றும் நடைக்குத் துணையாக இருந்தது.

“அப்பா! நீங்கள் எப்போது இங்கே வந்தீர்கள்? எங்களுக்குத் தெரியவே தெரியாதே” என்று அவரைக் கண்டதும் சுரமஞ்சரியும் வானவல்லியும் எதிர் கொண்டு சென்றதிலிருந்து அவர்தான் அந்தப் பெருமாளிகையின் உரிமையாளரான எட்டிப் பட்டம் பெற்ற செல்வர் என்பது இளங்குமரனுக்கு விளங்கிற்று.

அவர் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அங்கே தோன்றியதற்காகத் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்ற திடமான கருத்துடன் இளங்குமரன் மேலும் வாயிலை நோக்கி நடக்கலானான். ஆனால் அவர் அவனைச் செல்லவிடவில்லை.

“தம்பீ! இவ்வளவு அவசரம் எதற்கு, சற்றே நின்று போகலாமல்லவா?” என்று கூறிக் கொண்டே அவனருகில் வந்துவிட்டார் அவர், சுரமஞ்சரி இளங்குமரனின் மற்போர் வீரத்தைப் புகழ்ந்து சொல்லி அவனைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்தாள்.

“நானே இந்தப் பிள்ளையை முன்பு எங்கோ பார்த்திருக்கிறாற்போல் நினைவிருக்கிறதம்மா!” என்று தான் நடந்து கொண்டிருந்த வழியையே மறிக்கிறாற்போல அவர் தனக்கு முன்னால் வந்து நின்றபோது இளங்குமரனால் மேலே நடக்க முடியவில்லை. நின்றான். அவனைத் தலையிலிருந்து கால் வரை நன்றாக உற்றுப் பார்த்தார் சுரமஞ்சரியின் தந்தை. அவனை எங்கோ பார்த்தாற்போல் நினைவிருப்பதாக அவர் கூறினாலும் அவரைத் தான் எங்குமே அதற்குமுன் சந்தித்ததாக இளங்குமரனுக்கு நினைவில்லை. அவருடைய பார்வையும் தோற்றமும் இளங்குமரனைத் தவிர வேறு சாதாரணமானவர்களுக்குப் பயமூட்டியிருக்கும்.

அவன் மேல் இடித்து விடுகிறாற்போல் அருகில் நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் “கரு நாவற்பழம் போல் உன் கழுத்து வலது பக்கத்துச் சரிவில் எத்தனை அழகான மச்சம் இருக்கிறது பார்த்தாயா? பிற்காலத்தில் நீ மகா யோகக்காரனாக விளங்கப் போகிறாய் தம்பீ! இதுபோல் வலது புறத்தில் இவ்வளவு பெரிய மச்சம் எல்லாருக்கும் அமைவது அரிது!” என்று வியந்து கூறியவாரே அவனுடைய கண்களையும் முகத்தையும் கூர்ந்து நோக்கினார்.

இளங்குமரன் அவர் கூறியதையும் பார்ப்பதையும் கவனித்தும் சலனமின்றி அமைதியாக நின்றான். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே அடுத்தாற்போல் கேட்ட கேள்வி அவனுடைய சலனமின்மையைக் கலைத்தது. அவன் ஆச்சரியமடைந்தான்.

“தம்பி! அருட்செல்வ முனிவர் நலமாக இருக்கிறார் அல்லவா?” என்று இருந்தாற்போலிருந்து முன்பின் தொடர்பின்றி அவர் கேட்டபோது இளங்குமரன் திகைத்தான்.

‘முனிவரை இவருக்கு எப்படித் தெரியும்? அப்படியே எந்த வகையிலாவது தெரிந்திருந்தாலும் என்னைக் கண்டவுடனே அதை விசாரிக்காமலிருந்து விட்டு இவ்வளவு நேரம் கழித்து நிதானமாக விசாரிப்பது ஏன்?’ என்று சிந்தித்துக் குழம்பியது அவன் மனம். முனிவரைப் பற்றி விசாரித்துவிட்டு அவர் தன் முகத்தையும் உற்றுப் பார்ப்பதை அவன் காணத் தவறவில்லை.

“என்ன அப்படித் திகைக்கின்றாய் தம்பீ? என்னுடைய முதுமைக்குள் இந்தப் பெருநகரில் எத்தனை கார்காலங்களையும், வேனிற்காலங்களையும் பார்த்திருப்பேன் தெரியுமா? மனிதர்களைப் பார்த்திருக்கவும் பழகியிருக்க வும் முடியாமலா போயிருக்கும்?” என்று மேலும் சொன்னார் அவர்.

பின்னும் அவரிடம் பேச்சை வளர்க்க விரும்பாத இளங்குமரன், “முனிவர் நலமாக இருக்கிறார் ஐயா!” என்று கூறிவிட்டு மேலே நடந்தான். என்ன காரணமோ அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே விருப்பமாயில்லை அவனுக்கு.

“தம்பி! இன்றைக்குத்தான் உனக்கு அவசரம். இன்னொரு நாள் ஓய்வாக இருக்கும்போது இங்கே வந்து ஒருவேளை உண்டு போகவேண்டும்” என்று அவர் கூறியதையும், சுரமஞ்சரியும் வானவல்லியும் தன்னைப் பின் தொடர்ந்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரதான வாயிலைக் கடந்து அகலமான வீதியில் இறங்கி நடந்து சென்றான் இளங்குமரன்.

வீதியில் இறங்கும்போது “பல்லக்கு வருகிறது, ஏறிக் கொண்டு போகலாம்” என்று சுரமஞ்சரி கூவிய குரலுக்காகவும் அவன் நிற்கவில்லை. மிகவும் வேகமாக நடந்தான்.

மிகப் பெரிய அந்த மாளிகையிலிருந்து விலகி வீதியில் வெகு தொலைவு வந்த பின்னும் தன்னை யாரோ கூர்ந்து நோக்கியவாறே பின் தொடர்வதுபோல் இளங்குமரனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. பின்புறம் யாரோ வந்து கொண்டிருப்பதுபோல் பிடரியிலும் ஓருணர்வு குறு குறுத்தது. வீதி திரும்பியதும் திருப்பத்தில் நின்று கொண்டு பின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்!

அவன் சந்தேகப்பட்டது சரியாயிருந்தது, கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு விகாரமான முகத்தையுடைய ஒற்றைக் கண்ணன் ஒருவன் தயங்கித் தயங்கிப் பின்னால் வந்து கொண்டிருந்தான். அந்த ஒற்றைக் கண்ணனுக்குப் பின்னால் தோழிப் பெண் வசந்தமாலையும் பதுங்கினாற் போல மெல்ல வந்து கொண்டிருந்தாள். அவர்கள் தன்னைத் தொடருகிறார்களா அல்லது தற்செயலாக வருகிறார்களா என்பதனைத் தெரிந்து கொள்வதற்காக நின்றும், வழி மாறிச் சென்றும் சோதனை செய்தான். சந்தேகமில்லாத வகையில் அவர்கள் அவனையே தொடர்வது தெரிந்தது. அவன் நின்றால் அவர்களும் நின்றார்கள்.

‘என்ன வந்தாலும் வரட்டும்! அடுத்து வருகிற வீதித் திருப்பத்தில் மறைந்து நின்று இந்த ஒற்றைக்கண் மனிதனை வழி மடக்கி விசாரிக்க வேண்டியதுதான்’ என்றெண்ணிக் கொண்டான் இளங்குமரன்.

அவ்வாறே செய்வதற்கும் சித்தமானான்.

ஆனால் அவன் நினைத்தபடி செய்ய முடியவில்லை! ஏனென்றால் அந்த வீதி திரும்புமிடத்தில், ஏற்கெனவே நாளங்காடியிலிருந்து தன்னைத் தேடி வந்து கொண்டிருந்த கதக்கண்ணனையும், பிற நண்பர்களையும் அவன் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/012-039&oldid=1149489" இலிருந்து மீள்விக்கப்பட்டது