மணி பல்லவம் 1/019-039

விக்கிமூலம் இலிருந்து

19. நீலநாக மறவர்

ளங்குமரனும், நண்பர்களும் மருவூர்ப் பாக்கத்தின் ஒரு புறத்தே அமைந்திருந்த நீலநாக மறவரின் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தபோது அங்கே ஆரவாரமும் சுறுசுறுப்பும் நிறைந்த சூழ்நிலை நிலவியது. பல இளைஞர்கள் தனிதனிக் குழுக்களாகவும் வேறு வேறு பகுதிகளாகவும் பிரிந்து வாட்போர்ப் பயிற்சியும், விற்போர், மற்போர்ப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். வாளோடு வாள் மோதும் ஒலியும், வேல்கள் சுழலும் ஓசையும், வில்லிலிருந்து அம்புகள் பாயும் விரைந்த ஒலியும், இளைஞர்களின் ஆரவாரக் குரல்களும் நிறைந்த படைக்கலச் சாலையின் பயிற்சிக்களமே சிறியதொரு போர்க்களம் போல் காட்சியளித்தது. இடையிலேயே படைக்கலச் சாலைத் தலைவராகிய நீலநாக மறவரின் கம்பீரமான சிங்கக் குரல் முழங்கி, வீரர்களை ஏவுதல் செய்தும் ஆணையிட்டும் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தது. முழங்கி முடிந்த பின்பும் நெடுநேரம் ஒலித்துக் கொண்டேயிருப்பது போலக் கட்டளையிடும் கம்பீரத் தொனியுள்ள குரல் அது!

பிரும்மாண்டமான அந்தப் படைக்கலச் சாலை, கட்டிடங்களும், மாளிகைகளும், யானைகள் குதிரைகளைக் கட்டும் சிறுசிறு கூடங்களும் உள்ளடங்கிய மிகப் பெரிய சோலையில் நான்கு புறமும் சுற்று மதில்களோடு அமைந்திருந்தது. வேல், வாள் போன்ற படைக்கலங்களை உருக்கி வார்க்கும் உலைக் கூடங்களும் அதற்குள் அமைந்திருந்தன. அதனால் உலைக் கூடங்களில் வேல்களையும் வாள்களையும் வடித்து உருவாக்கும் ஒலியும் அங்கிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையாகிய மதிற்சுவருக்கு அப்பால் காவிரிப் பூம்பட்டினத்திலேயே வயது முதிர்ந்ததும் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி மண்ணின் மேல் உரிமை கொண்டாடுவதுமான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.

ஒரு பேரரசன் கோட்டை கொத்தளங்களோடு அரண்மனை அமைப்பதற்குத் தேவையான நிலப்பரப்பைக் காட்டிலும் சற்று மிகுதியான நிலப்பரப்பிலும் தன் நிழல் பரப்பில் வீழ்தூன்றிப் படர்ந்து பரந்திருந்த அந்த ஆலமரத்தை அணுகினாற்போல் சிவன் கோவில் ஒன்றும் இருந்தது; பூம்புகார் மக்களின் பேரருட் செல்வனான முக்கண் இறைவன் கோவில் கொண்டிருந்த அந்த இடத்துக்கு ஆலமுற்றம்[1] என்று பெயர் வாய்த்திருந்தது.

‘ஆலமுற்றத்து அண்ணலார்’ என்று அந்தப் பகுதி மக்கள் கொண்டாடும் இந்த இறைவனுக்கு அடுத்தபடியாக அங்கே பெருமை வாய்ந்தவர் நீலநாக மறவர்தாம். அவருடைய படைக்கலச் சாலைக்கும்; ஆலமுற்றத்துக் கோவிலுக்கும் அப்பால் வெண்பட்டு விரித்தாற்போல் கடற்கரை மணல்வெளி நீண்டு அகன்று நோக்கு வரம்பு முடியும்வரை தெரிந்தது. நீலநாக மறவரின் படைக்கலச் சாலையிலும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிகளிலும் வீரத் திருமகள் கொலு வீற்றிருப்பதைப் போன்றதொரு கம்பீரக் களை எப்போதும் நிலவிக் கொண்டிருந்தது. எப்போதும் கண்ணுக்கு நிறைவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இளங்குமரனும், மற்ற நண்பர்களும் நேராகப் படைக்கலச் சாலையில் மடைப்பள்ளிக்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார்கள். எப்போது வந்தாலும் எத்துணைப் பேரோடு வந்தாலும், தங்கள் சொந்த இல்லத்தைப்போல் கருதித் தங்கிக் கொள்ளவும், பழகவும் தம்முடைய பழைய மாணவர்களுக்கு உரிமையளித்திருந்தார் நீலநாக மறவர். இளங்குமரன், கதக்கண்ணன் போன்ற சிறப்பும் நெருக்கமும் உள்ள மாணவர்களுக்கு அந்த உரிமை சற்று மிகையாகவே உண்டு. நீலநாக மறவரின் பெருமைக்கும், வீரத்துக்கும் முன்னால் எப்போதும் எல்லோரும் மாணவர்கள்தாம். வீரம் விளைகின்ற வளமான நிலம் அது. அந்த நிலத்தில் அதன் வீர விளைவுக்குக் காரணமான பெருமகனுக்கு முன்னால் இளைஞர்கள் வணங்கியபடி வருவதும், பணிந்து கற்பதும், வணங்கியபடி செல்வதும் பழமையான வழக்கங்கள். ஆலமுற்றத்தின் மாபெரும் ஆலமரத்தைப் போலவே நிறைய வீழ்து ஊன்றிப் படர்ந்த புகழ்பெற்றவர் நீலநாக மறவர், அவருடைய பெரு நிழலில் தங்கிப் படைக்கலப் பயிற்சி பெற்றுச் சென்றவர்க்கும் இப்போது பயிற்சி பெறுகிறவர்களுக்கும், இனிமேல் பயிற்சி பெறப் போகிறவர்களுக்கும் ஆல நிழல்போல் பரந்து காத்திருந்தது அவருடைய படைக்கலச் சாலை.

உணவு முடிந்ததும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் பின் தொடர நீலநாக மறவர். நின்று கொண்டிருந்த பகுதிக்கு விரைந்து சென்றான் இளங்குமரன். எதிரே அவனைக் கண்ட ஊழியர்களும் பயிற்சி பெற வந்திருந்த மாணவர்களும், வேறு பல வீரர்களும் மலர்ந்த முகத்தோடு வணக்கம் செலுத்தி வரவேற்றார்கள். பெருமதிப்போடு வழி விலகி நின்று கொண்டார்கள். இளங்குமரனை வளர்த்தவர் அருட்செல்வ முனிவர் என்றாலும் நீலநாக மறவருக்கும் அவன் செல்லப் பிள்ளை. எவருக்கும் நெகிழ்ந்து கொடுக்காத இரும்பு மனிதரான நீலநாக மறவர் இளங்குமரனிடம் மட்டும் அன்பு மயமாக நெகிழ்ந்து விடுவதும், சிரித்துப் பேசுவதும் வழக்கம். அதனால் அவனுக்கு அந்தப் படைக்கலச் சாலையின் எந்தப் பகுதியிலும், எவரிடத்திலும் தனிமதிப்பும், அளவற்ற பேரன்பும் அளிக்கப்பட்டு வந்தன.

பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு. அவர் வியப்பதற்கும் வணங்குவதற்கும் உரியவரே ஒழிய நெருங்கிப் பழகுவதற்கு உரியவரல்லர். அவராகவே முன்வந்து யாரிடமாவது பழகுகிறார் என்றால் அவ்வாறு பழக்கத்துக்கு ஆளானவனுடைய எதிர்காலத்தை அவர் இப்போதே கணித்தறிந்து உறுதியாக நம்பி மதிக்கத் தொடங்கிவிட்டார் என்று தெரிந்து கொண்டு விடலாம். அருட்செல்வ முனிவர், வீரசோழிய வளநாடுடையார் போன்ற வயது முதிர்ந்த சான்றோர்களிடம் நீலநாக மறவர் நெருங்கிப் பழகிய காரணம் வேறு. தம்மைப் போலவே அவரவர்கள் துறையில் அவ்விருவரும் இணையற்று விளங்கினார்கள் என்னும் மதிப்பீடு பற்றி வந்த பழக்கம் அது.

சிறப்புக்குரிய சோழ அரசு குடும்பத்துப் பிள்ளைகளும், புனல் நாட்டில் அங்கங்கே பெருமையோடிருந்த வேளிர்கள் எனப்படும் குறுநில மன்னர் குடியில் வந்த இளைஞர்களும், நீலநாக மறவரிடம் மாணவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் கூடத் தமது கடுமையும் கம்பீரமும் குன்றாமல் அளவோடு பழகிய நீலநாகர் இளங்குமரனைச் செல்லப் பிள்ளையாகக் கருதியது வெளியே தெரியாமல் பலர் மனத்துக்குள் பொறாமை கொள்ளவும் இடமளித்திருந்தது.

எல்லா மாணவர்களுக்கும் உண்ணவும், தங்கவும், படைக்கலச் சாலையில் உள்ள பிற வசதிகளை அனுபவித்துக் கொள்ளவும் பரந்த மனத்தோடு இடம் கொடுத்திருந்தாலும் நீலநாக மறவர் தாமே அருகில் வந்து அன்போடு தோளைத் தழுவி நின்று சிரித்து உரையாடுகிற உரிமையை இளங்குமரனுக்கே கொடுத்திருந்தார்.

‘இவரை அடிமை கொண்டு ஆளலாமே’ என்று பெரும் பேரரசனும் அருகில் நின்று நினைக்க முடியாத அரும் பெருந் தோற்றம் நீலநாக மறவருடையது. அவரைக் காட்டிலும் உயரமாக வளர்ந்தவர்கள் காவிரிப் பூம்பட்டினத்து எல்லைக்குள் இருப்பார்களா என்பதே ஐயத்துக்குரியதுதான். நல்ல வளர்ச்சியும் கொழுப்பும் உள்ள முதிய ஆண்யானை ஒன்று மதங்கொண்டு வந்து நிமிர்ந்து நிற்பதுபோல் தோற்றம் வாய்த்திருந்தது. அவருக்கு வாள் நுனிகளைப் போல் இருபுறமும் நீண்டு வளர்ந்திருந்த வளமான மீசை, படர்ந்த முகத்துக்கு எடுப்பாக அமைந்திருந்தது. அடர்ந்த புருவங்களின் கீழே கனமான இமைகளோடு சுழன்று விழுவனபோல் மேலெழுந்து தோன்றும். சிவந்த பெரிய கண்கள். இரண்டு பக்கத்துக் கன்னங்களிலும் சூட்டுக்கோல் கொண்டு காய்ச்சி இருந்தது போல் பெரிய கருப்புத் தழும்புகள் வேறு அந்த முகத்தின் கடுமையைப் பெருகச் செய்து காட்டின. அவர் அங்கியைக் கழற்றிவிட்டு நிற்கும்போது பார்த்தால் இப்படி எத்தனையோ தழும்புகளையும் புண்பட்ட சுவடுகளையும் அவரது மார்பிலும் தோள்களிலும் காண முடியும். புண்களால் வளர்ந்த புகழ்ச் செல்வர் அவர். பிறரைப் புண்படுத்தி அடைந்த புகழன்று அது; தாமே புண்பட்டு அடைந்த புகழ் அவருடையது. இரும்பில் உருக்கி வளர்த்தது போன்ற அந்த உடல் எத்தனையோ போர் முனைகளுக்கும் ஈடுகொடுத்துப் பாடுபட்ட சிறப்புடையது, ஆனால் அதே உடல் தன்னுடைய சொந்தப் புலன்களின் போர் முனைக்கு இன்று வரையில் தோற்றதில்லை. கடந்த ஐம்பத்தெட்டாண்டுகளாகப் பிரமசரியம் காத்து மனமும் உடம்பும் இறுகிப்போன மனிதர் அவர் இன்றுவரை வெற்றிகொண்ட புலன்களின் போர்முனையை இறுதி வரை வென்றுவிடும் வீரமும் அவருக்கு இருந்தது. அவர் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் இடம் ஒன்று உண்டு. அதுதான் ஆலமுற்றத்து அண்ணல் கோவில். வீரத்தையே ஒரு தவமாகப் போற்றி நோற்றுக் கொண்டிருந்தார். அவர் தம்முடைய வீரத்தவத்தையும் அதன் மரபையும் வளர்க்கும் ஆவலினால்தான் அந்தப் படைக்கலச்சாலையில் பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து வந்தார். அவர் தம்மிடம் வரும் இளைஞர்களைத் தெரிந்து தெளியும் முறையே தனியானது.

படைக்கலப் பயிற்சி பெறத் தம்மை நாடிவரும் இளைஞனை முன்னால் நிறுத்திப் பேசிக் கொண்டிருப்பார். பேசிக்கொண்டிருக்கும்போதே எதிரே இருக்கும் இளைஞன் முற்றிலும் எதிர்பாராதபடி பக்கத்திலுள்ள ஒரு வேலை உருவிக் குத்திவிடுவதுபோல் அவன் முகத்தைக் குறிவைத்து வேகமாக ஓங்கிக் கொண்டு போவார். அப்போது அவன் கண்களை இமைத்து முகத்தில் பயக் குறிப்புத் தோன்றப் பின்னுக்கு நகருவானானால், “சுகமில்லை தம்பி! உனக்கும் வீரத்துக்கும் காததூரம், நீ ஒரு காரியம் செய்யலாம். நாளங்காடியில் போய் ஏதாவது ஒரு மூலையில் பூக்கடை வைக்கலாம். உன்னைப் போன்ற ஆட்கள் வீரத்தை நம்புவதைவிடப் பூச்சூடிக்கொள்ளும் பெண்களின் கூந்தலை நம்பினால் நன்றாகப் பிழைக்கலாம். எதிரிலிருப்பவன் உன்னை நோக்கி வேலை ஓங்கும் போது பயத்தினால் உன் கண்கள் இமைத்தாலும் உனக்குத் தோல்விதான், தூய வீரன் அப்படி இமைக்கலாகாது.

விழித்த கண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு!

என்று நம்முடைய தமிழ்ப் பெரியவர்கள் வீரருக்கு அமைதி கூறியிருக்கிறார்கள். உன்னிடம் அந்தப் பொருத்தம் அமையவில்லை; போய் வா” என்று சொல்லித் துரத்தி விடுவார். அக்காலத்தில் மிகவும் அருமையானவையாக இருந்த சில போர் நுணுக்கங்களைக் கற்பிக்க முடிந்தவராக அவர் ஒருவர்தான் இருந்தார். பயங்கரமானதும், பெருந் துணிவுடன் பொறுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுமான போர்த்துறை ஒன்றுக்கு ‘நூழிலாட்டு’ என்று பெயர். தன்னிடம் போர்க் கருவிகளே இல்லாத போதும் எதிரி தன்னை நோக்கி எறிகிற வேலையே தன் ஆயுதமாகப் பறித்துக் கொண்டு அதனால் தன்னைச் சூழ்கிற பல பகைவர்களைத் தாக்கி அழிக்க வேண்டும். எதிரியின் வேல் தன் மார்பிலே தைத்துள்ளதாயினும் தனக்கு வலியுண்டாகுமே என்று தயங்காமல் அதை உருவியேனும் எதிரிகளைச் சாடி அழிப்பதுதான் நூழிலாட்டு. பல போர்க்களங்களில் தூழிலாட்டுப் புரிந்து அந்த அருங்கலை விநோதத்தையே விளையாட்டாகப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் நீலநாக மறவர்! ‘வல்வில் வேட்டம்’ என்று வில்லில் அம்பெய்வதில் நுணுக்கமான நிலை ஒன்று உண்டு. ஒரே முறையில் விரைந்து எய்த அம்பு ஒன்று பல பொருள்களிற் பாய்ந்து எல்லாவற்றையும் துளைத்துச் செல்லுமாறு எய்துவதற்குத்தான் ‘வல்வில் வேட்டம்’ என்று பெயர். இப்படி அரியனவும், பெரியனவுமாக இருந்த போர்க்கலை நுணுக்கங்கள் யாவும் பழகிப் பயின்று வைரம் பாய்ந்த கரங்கள் நீலநாக மறவருடையவை.

இல்லற வாழ்வின் மென்மையான அனுபவங்களும், உலகியற் பழக்கங்களும் இல்லாத முரட்டு வீரராக வளர்ந்திருந்ததனால் உணவிலும் நடைமுறைகளிலும், உடம்பைப் பேணுதலிலும் பொதுவான மனித இயல்பை மீறியவராக இருந்தார் அவர். ஐம்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்து தளர்ந்ததென்று சொல்ல முடியாத கட்டுடல், செம்பினை உருக்கி வார்த்து நிறுத்திய சிலையெனத் தோன்றியது. எட்டிப்பால், எட்டிக்காய் போன்றவற்றை உண்டு வழக்கப்படுத்திக் கொண்டிருந்ததால் உடம்பில் நச்சுத் தன்மை ஏறி இறுகியிருந்தது. எனவே நஞ்சு தோய்ந்த ஆயுதங்களோ, நச்சுப் பிராணிகளோ எந்த விதமான கெடுதலும் செய்ய முடியாதபடி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த உடம்பு ‘புலன் அழுக்கற்ற அந்தணாளர்’ என்று வெறுந் துறவிகளைப் புகழ்வார்கள். நீலநாக மறவரோ புலன் அழுக்கற்ற வன்கணாளராக இருந்தார். மகாபாரதம் நிகழ்ந்த காலத்தில் ‘துரோணர், வீட்டுமர் போன்ற தீரர்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று பூம்புகார் மக்கள் நினைத்துக் கொள்ளவும், பேசிக்கொள்ளவும் தக்கபடி நீலநாக மறவர் ஒப்பற்ற தவவீரராக இருந்தார். மெல்லிய சங்கிலிகளால் பின்னிய இரும்புக் கவசமும் அங்கியும் அணிந்து இளைஞர்க்கு வாளும், வேலும் பயிற்றும் களத்தில் அவர் வந்து நின்று விட்டால் வீரமெனும் பேருணர்வே கம்பீர வடிவெடுத்து வந்து நிற்பது போல தோன்றும். பயிற்சிக் காலங்களில் இரும்பு அங்கி அணியாமல் அவரைக் காண்பது அரிது.

அன்று இளங்குமரனும் நண்பர்களும் தேடிக்கொண்டு சென்றபோது படைக்கலச் சாலையின் மரங்களடர்ந்த உட்பகுதியில் சில இளைஞர்களுக்கு விற்பயிற்சி கற்பித்துக் கொண்டிருந்தார் நீலநாக மறவர். அப்போது கற்பிக்கப் பட்டுக் கொண்டிருந்தது மிகவும் நுண்மையானதொரு விற்கலைப் பயிற்சி. பயிற்சி நடந்து கொண்டிருந்த அந்த இடத்தைச் சுற்றிலும் மாமரங்கள் நிறைந்திருந்தன. நடுவில் தெளிந்த நீரையுடைய சிறு பொய்கை ஒன்றும் இருந்தது. மாமரங்களின் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. காம்புகளின் ஓரமாக இளஞ்சிவப்பும், மஞ்சளுமாக நிறங் கொள்ளத் தொடங்கியிருந்த அந்தக் காய்கள் முதிர்ச்சியைக் காட்டின.

மாமரங்களின் கீழே பொய்கையின் பளிங்கு நீர்ப் பரப்பில் காய்கள் தெரிவதைக் கண்களால் பார்த்துக் கொண்டே வில்லை வளைத்துக் குறிவைத்து மேலே அம்பு எய்து குறிப்பிட்ட ஒரு கொத்துக் காய்களை வீழ்த்த வேண்டும். அங்கே தம்மைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு இப்படி அம்பு எய்தும் விதத்தை முதலில் தாமே ஓரிரு முறை செய்து காட்டிவிட்டுப் பின்பு அவர்களைச் செய்யச் சொல்லி அவர்களால் முடிகிறதா, இல்லையா என்று சோதனை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நீலநாக மறவர். அத்தகைய சூழ்நிலையில் நடுவே புகுந்து குறுக்கிட்டுத் தன் வரவைத் தெரிவித்துக் கொள்ள வேண்டாம் என்று கருதிய இளங்குமரன் உடன் வந்த நண்பர்களோடு ஒருபுறமாக ஒதுங்கி நின்றான்.

பொய்கை நீரிலே வடிவு பார்த்து குறி வைத்து மேலே மரத்திலே உள்ள காய்களை எய்யும் முயற்சியில் அங்கிருந்த இளைஞர்கள் எவருக்குமே வெற்றி இல்லை. அதைக் கண்டு நீலநாக மறவருடைய கண்கள் மேலும் சிவந்து சினக்குறிப்புக் காட்டின. மீசை நுனிகள் துடித்தன. ஆத்திரத்தோடு கூறலானார். “இளைஞர்களே! ஒரு பொருளைக் குறி வைத்து எய்வதற்கும் உடலின் பலமும் கைகளின் வலிமையும் மட்டுமே போதாது. நினைவும் ஒன்றில் இலயிக்க வேண்டும். எண்ணங்கள் ஒரே புள்ளியில் இணைய வேண்டும். தியானம் செய்வதற்கு மனம் ஒருநிலைப்படுவது போல் பொருளைக் குறிவைத்து எய்யும் விற்கலை முயற்சிக்கும் ஒருமைப்பாடு வேண்டும். நாளுக்கு நாள், எண்ணங்களை ஒன்றில் குவியவைத்து முயலும் ஆற்றல் குறைந்து கொண்டே வருகிறது. உங்கள் நிலையைப் பார்த்தால் வருகிற தலைமுறைகளில் வில்வித்தை போன்ற அரிய கலைகளே இல்லாமற் போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். மனம் வசப்படாமல் கைகள் மட்டும் வசப்பட்டு ஒரு பயனுமில்லை. என் போன்றவர்கள் கற்பிப்பதற்கு விற்குறிகள் வேண்டும். ஆனால் எங்கு நோக்கினும் உங்களைப் போன்ற தற்குறிகளைத்தான் நான் காண்கிறேன்” என்று இடிக் குரலில் முழங்கிக் கொண்டே சுற்றி நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்க்கத் தொடங்கிய நீலநாக மறவர். ஒரு மூலையில் அடக்க ஒடுக்கமாய் வந்து நின்றிருந்த இளங்குமரனையும் மற்றவர்களையும் கண்டு கொண்டார். ஒலி ஓய்ந்தும் தொனி ஓயாத அவருடைய கம்பீரக் கட்டளைக் குரலில் சுற்றி நின்ற இளைஞர்கள் எல்லாம் பேச்சடங்கிப் புலனடங்கி நின்ற போது அவர் தம் கையிலிருந்த வில்லைக் கீழே எறிந்துவிட்டு முகமலர்ச்சியோடு இளங்குமரனை நோக்கி நடந்து வந்தார்.

  1. ஆலமுற்றத்து இறைவன் கோவில் அந்தக் காலத்துப் பூம்புகாரில் அமைந்திருந்ததை அகநானூறு 181வது பரணர் பாட்டால் அறிய முடிகிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/019-039&oldid=1149497" இலிருந்து மீள்விக்கப்பட்டது