மணி பல்லவம் 1/037-039

விக்கிமூலம் இலிருந்து

37. கருணை பிறந்தது!

ப்பல் கரப்புத் தீவு இருளில் மூழ்கி விட்டது. மழையும் காற்றும் முன்பிருந்த கடுமை குறைந்திருந்தன. பகைவர்களைப் போல் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் இருளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சுரமஞ்சரியும் இளங்குமரனும். கடல் இருந்த இடம் தெரியாவிட்டாலும் கப்பல்கள் போவதும் வருவதுமாக இருந்ததனால் தொலைவில் ஒளிப் புள்ளிகள் தெரிந்தன.

நடுங்கும் குளிர். இருவர் உடலிலும் ஈர உடைகள். இருவர் வயிற்றிலும் பசி, இருவர் மனத்திலும் எண்ணங்கள். இருவர் எண்ணங்களிலும் துயரங்கள், அமைதியில்லை; உள்ளும் இல்லை - புறத்திலும் இல்லை. நீண்ட நேர மௌனத்துக்குப் பின் சுரமஞ்சரியின் கேள்வி இளங்குமரனை நோக்கி ஒலித்தது:

“என்னைக் காப்பாற்றியதை நீங்கள் விரும்பவில்லைதானே?”

“...”

இளங்குமரனிடமிருந்து பதில் இல்லை.

“நான் கடலோடு சீரழிந்து இறந்து போயிருந்தால் உங்களுக்குத் திருப்தியாகியிருக்கும் இல்லையா?”

“...”

“என் கேள்வியை மதித்து எனக்குப் பதில் சொல்வது கூட உங்களுக்குக் கேவலம் போலிருக்கிறது?”

“...”

சுரமஞ்சரி எழுந்து நின்றாள். மெல்லிய விசும்பல் ஒலி அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து ஒலித்தது. இளங்குமரன் அதைக் கேட்டும் அசையாமல் கற்சிலை போல் அமர்ந்திருந்தான்.

எழுந்து நின்ற அவள் கடலை நோக்கி வேகமாக நடக்கலானாள். நடையில் பாய்ந்தோடும் வெறி, நெஞ்சில் தவிப்புக்கள், அதைக் கண்டு இளங்குமரனின் கல் நெஞ்சில் எங்கோ சிறிது கருணை நெகிழ்ந்தது. எழுந்து நின்று அவளைக் கேட்டான்.

“நில்! எங்கே போகிறாய்?”

“எங்கேயாவது போகிறேன்? எங்கே போனால் உங்களுக்கென்ன? உங்கள் மனத்தில்தான் எனக்கு இடம் கிடையாது! கடலில் நிறைய இடமிருக்கிறது.”

“இருக்கலாம்! ஆனால் நான் உன்னைச் சாகவிட மாட்டேன். நீ என்னால் காப்பாற்றப்பட்டவள். தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ உன்னைக் காப்பாற்றிவிட்டேன். என்னுடைய அன்பை நீ அடைய முடியாது; ஆனால் கருணையை அடைய முடியும்.”

சுரமஞ்சரி நின்றாள். அவனுக்குக் கேட்கும்படி இரைந்து சிரித்தாள்.

“அன்பில்லாமல் கருணையில்லை. எல்லையை உடையது அன்பு. எல்லையற்றது கருணை. அன்பு முதிர்ந்துதான் கருணையாக மலர வேண்டும். அன்பேயில்லாத உங்கள் கருணையை நான் அங்கீகரிப்பதற்கில்லை.”

“உன்னிடந் தர்க்கம் புரிய நான் விரும்பவில்லை. உன் சிரிப்புக்கும் பார்வைக்கும் நான் தோற்று நிற்பதுதான் அன்பு என்று நீ நினைப்பதாயிருந்தால் அதை ஒருபோதும் என்னிடமிருந்து அடைய முடியாது. எனக்கு பொதுவாக இரக்கம் உண்டு. பொதுவான கருணை உண்டு. அது உன் மேலும் உண்டு. ஈ, எறும்பு முதல் எல்லா உயிர்கள் மேலும் உண்டு.”

“அப்படிக் கருணையையும், இரக்கத்தையும் பொதுவாகச் செலுத்தக் கடவுள் இருக்கிறார். நீங்கள் தேவையில்லை. மனிதர்கள், மனிதர்களிடமிருந்து, மனித நிலையில் எதிர்பார்க்கும் ஈரமும், பாசமும் இணைந்து குழைந்த உலகத்து அன்புதான் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”

“அந்த அன்பை நான் உனக்குத் தருவதற்கில்லை.”

“வேறு யாருக்குத் தருவதாக உத்தேசமோ?”

“யாருக்குமே தருவதற்கில்லை. அந்த அன்பை என் தாயின் கால்களில் விழுந்து கதறுவதற்காகச் சேர்த்துக் கொண்டு வருகிறேன் நான். உலகத்திலேயே நான் அன்பு செலுத்துவதற்கு ஒருத்திதான் பிறந்திருக்கிறாள். அவள் யாரென்று எனக்கே தெரியவில்லை. அவளுக்காகத்தான் என் இதயத்தில் அன்பு தேங்கியிருக்கிறது. அவளுக்கு முன்னால்தான் நான் கண்ணில் நீர் நெகிழ “அம்மா” என்று குழைய முடியும். துரதிர்ஷ்டவசமாக அவள் யாரென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை. அவளைப் பார்க்கிறவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிற பெண்களெல்லாம் என் கண்களுக்கு அவளாகவே தெரிகிறார்கள்.”

“எனக்குத் தாய் இருக்கிறாள். ஆகவே அந்த வகையிற் கருணைக்குக் குறைவில்லை. ஆனால் தாயும், தந்தையும் செலுத்துகிற அன்பு மட்டும் இப்போது என் மனத்தை நிறைவு செய்யவில்லை? உங்களைப்போல் ஒருவருடைய மனத்திலிருந்து என்னைப்போல் ஒருத்தியின் மனம் எதையோ வெற்றி கொள்வதற்குத் தவிக்கிறதே.”

அவள் இப்படிச் சிரித்துக் கொண்டே கேட்டபோது மறுபடியும் இளங்குமரனின் குரல் சினத்தோடு சீறி ஒலித்தது.

“அந்த வெற்றி உனக்குக் கிடைக்குமென்று நீ கனவிலும் நினைக்காதே பெண்ணே! உன் தந்தையார் சேர்த்துக் குவித்திருக்கிற செல்வத்துக்கு ஆசைப்பட்டுச் சோழநாட்டு இளவரசனே உன்னை மணந்து கொள்ள முன்வந்தாலும் வரலாம். ஆனால் இளங்குமரன் வர மாட்டான். உன் தந்தையார் பொன்னையும் மணியையும் தான் செல்வமாகச் சேர்த்திருக்கிறார். ஆனால் இளங்குமரன் தன்மானத்தையும், செருக்கையுமே செல்வமாகச் சேர்த்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்.”

எதிரே தள்ளி நின்றிருந்த சுரமஞ்சரி இளங்குமரனுக்கு மிக அருகில் வந்தாள். அழுகையும், சிரிப்புமின்றி உறுதியான எண்ணம் மட்டுமே வெளிப்படும் குரலில் ஏதோ சபதம் போடுவதுபோல் அவனிடம் கூறலானாள்.

“ஐயா! இந்த இருளும், மழையும், காற்றும், கடலும் சாட்சியாக உங்களுக்குச் சொல்கிறேன். தன்மானத்தையும், செருக்கையும் உங்களைவிடக் குறைவாக நான் சேர்க்கவில்லை. உங்களிலும் பல மடங்கு அதிகமாகச் சேர்த்திருந்தேன். அதை அழித்து என் மனத்தைப் பலமில்லாமல் நெகிழ்ந்து போகச் செய்தது யார் தெரியுமா?”

“யார்...?”

“கேள்வியைப் பார்! சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள்தான்!... நீங்களே தான்.”

“நான் என்னுடைய தன்மானத்தையும், செருக்கையும் வளர்ப்பதற்கு முயல்வது உண்டே தவிரப் பிறருடைய தன்மானமும் செருக்கும் அழிவதற்கு முயன்றதாக எனக்கு நினைவில்லையே?”

“எப்படி நினைவிருக்கும்? உங்கள் செருக்கு வளரும் போதே என் செருக்கு. அழிந்து உங்களுக்கு உரமாகிக் கொண்டிருக்கிறதே? பூ அழிந்துதானே கனி?”

இளங்குமரன் திகைத்துப் போனான். அவளுடைய சாமர்த்தியமான பேச்சில் அவனது உணர்வுகளின் இறுக்கம் சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது.

“சோழ இளவரசன் மட்டுமில்லை. அகில உலகிலுமுள்ள எல்லா இளவரசர்களும் வந்தாலும் என் மனத்தைத் தோற்க விடமாட்டேன். என் தந்தையாரின் செல்வம் எனக்குத் தூசியைப் போலத்தான், பதவி, குடிப் பெருமை எல்லாம் அப்படியே! ஆனால் நான் என் மனம் அழிந்து ஏங்கி நிற்கும் நிலை ஒன்று உண்டு. அது இப்போது என் எதிரில் நின்று கொண்டிருப்பவரின் அழகிய கண்களுக்கு முன் தோன்றும் நிலைதான்.”

உணர்வு மயமாகிவிட்ட அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவில் எங்கோ புதரில் மலர்ந்து கொண்டிருந்த தாழம்பூ மணம் காற்றில் கலந்து வந்து அவன் நாசியை நிறைத்தது. இந்த மணத்தைத்தான் அன்றொருநாள் கைகளிலிருந்தும் மனத்திலிருந்தும் கழுவித் தீர்த்திருந்தான் அவன். இன்று அதே மணம் மிக அருகில் கமழ்கிறது.

கீழே குனிந்து அவன் பாதங்களைத் தன் பூவிரல்களால் தீண்டி வணங்க முயன்றாள் சுரமஞ்சரி. இளங்குமரன் தன் பாதங்களைப் பின்னுக்கு இழுத்து விலகிக் கொண்டான். அவன் இழுத்துக் கொண்ட வேகத்தையும் முந்திக் கொண்டு வந்து பாதத்தில் அவளுடைய கண்ணீர் முத்து ஒன்று சிந்திவிட்டது. அவள் ஏமாற்றத்தோடு எழுந்தாள்.

“நீங்கள் என்னைக் கடுமையாகச் சோதிக்கிறீர்கள்.”

“தெய்வம் எனக்கு என் தாயைக் காண்பிக்காமல் இதைவிடக் கடுமையாகச் சோதிக்கிறது பெண்ணே?” எனக் கூறிக்கொண்டே மரத்தடியில் உட்கார்ந்தான் இளங்குமரன். அவள் நின்று கொண்டேயிருந்தாள். இருவருக்குமிடையே அமைதி நிலவியது.

சிறிது நாழிகையில் சோர்வு மிகவே அப்படியே ஈரத் தரையில் சாய்ந்து படுத்துக் கொண்டுவிட்டான் இளங்குமரன். அவள் மட்டும் முன்போலவே நின்று கொண்டிருந்தாள்.

“ஏன் நின்று கொண்டேயிருக்கிறாய்?”

“நிற்காமல் வேறென்ன செய்வது?”

“விடிவதற்குமுன் ஒன்றும் செய்வதற்கில்லை! விடிந்த பின் ஏதாவது கப்பலில் இடம் பிடித்து ஊர் திரும்பலாம்! அதுவரை இப்படியே நிற்கப் போகிறாயா?”

அவன் தலைப்பக்கத்தில் வந்து அவள் மெல்ல உட்கார்ந்து கொண்டாள். அந்த உரிமையும், நெருக்கமும் சற்று மிகையாகத் தோன்றின அவனுக்கு. “அதோ அந்த மரத்தடியில் போய்ப் படுத்துத் தூங்கு” என்று பக்கத்திலிருந்த வேறொரு மரத்தைக் காண்பித்தான் இளங்குமரன்.

“அங்கே போகமாட்டேன். பயமாயிருக்கும் எனக்கு.”

“பயப்படுவதற்கு இந்தத் தீவில் ஒன்றுமில்லை.”

“நீங்கள் இருக்கிறீர்களே” என்று குறும்புத்தனமாகச் சொல்லிச் சிரிக்க நினைத்தாள் சுரமஞ்சரி. ஆனால் அப்படிச் சொல்லவில்லை. பயத்தினால் நாவே சொல்லுக்குத் தடையாகிவிட்டது. '

“பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதே எனக்கு ஒரு பயமாகிவிடும். ஈரத் தரையில் தலைக்கு ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் படுத்துத் தூங்கிப் பழக்கமில்லை எனக்கு. நான் இப்படியே நிற்கிறேன் என்று மறுபடியும் எழுந்திருக்கப் போனவளைக் கைப்பற்றி உட்காரவைத்தான் இளங்குமரன். அவன் கைத் தன் கையைத் தீண்டிய அந்த விநாடி, அவள் நெஞ்சில் பூக்கள் பூத்தன. மணங்கள் மணந்தன. மென்மைகள் புரிந்தன. தன்மைகள் நிறைந்தன.

“இதோ இப்படி இதன் மேல் தலை வைத்து உறங்கு” என்று தன் வலது தோளைக் காட்டினான் இளங்குமரன். சுரமஞ்சரி முதல் முதலாக அவனுக்கு முன் நாணித் தலை கவிழ்ந்தாள்.

“ஏன் பேசாமல் இருக்கிறாய்? உனக்குத் தலையணை இன்றி உறக்கம் வராதென்றால் என் கையை அணையாகத் தருகிறேன். இது பொதுவாக உன்மேல் எனக்கு ஏற்படும் கருணையைக் கொண்டு நான் செய்யும் உதவி. விரும்பினால் ஏற்றுக்கொள், இல்லாவிட்டால் நின்று கொண்டே இரு” என்றான் கடுமையாக.

செம்பொன் நிறத்துச் செங்கமலப் பூவணை போன்ற அவன் வலது தோளில் தலை சாய்த்தாள் சுரமஞ்சரி. அவள் மனத்தில் நினைவுகள் மிக மெல்லிய அரும்புகளாக அரும்பிக் கொண்டிருந்தன.

அப்போது, “பெண்ணே ! இப்போது இன்றிரவு என் தாயோடு இந்தத் தீவில் தங்க நேர்ந்து அவளுக்குத் தலையணை இல்லாமல் உறங்க முடியாது போயிருந்தாலும் இதே வலது தோளைக் கருணையோடு அவளுக்கு அளித்திருப்பேன் நான். பிறருக்கு உதவுவதே பெருமை. அதுவும் இயலாதவர்களுக்கு உதவுவது இன்னும் பெருமை” என்று நிர்மலமான குரலில் கூறினான் இளங்குமரன்.

“நான் ஒன்றும் இயலாதவளில்லை, எனக்கு உங்களிடமிருந்து அன்பு வேண்டும்; கருணை வேண்டியதில்லை” என்று சீற்றத்தோடு அந்தத் தோளைத் தள்ளி விட்டுத் துள்ளி எழுந்தாள் சுரமஞ்சரி. அவள் இதயத்து ஆசை அரும்புகள் வாடி உதிர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/037-039&oldid=1149521" இலிருந்து மீள்விக்கப்பட்டது