மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/17. முதல் அறிவிப்பு-"ஓதுவீராக!"

விக்கிமூலம் இலிருந்து

17. முதல் அறிவிப்பு-"ஓதுவீராக!"

ஒரு சமயம் பெருமானார் அவர்கள், ஹிரா குகையில் ரமலான் மாதம் திங்கட்கிழமை ஆண்டவனுடைய வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்பொழுது பேரொளி ஒன்று உதயமாயிற்று; ஓருருவம் தோன்றி, "முஹம்மதே! ஓதுவீராக!" என்று கூறியது.

உடனே பெருமானார் அவர்கள் "நான் ஓதுபவன் அல்லனே (எனக்கு ஒதத்தெரியாதே)" என்று கூறினார்கள்.

அப்பொழுது அந்த தேவதூதர் அரபி மொழியில் வேத வசனங்கள் சிலவற்றை ஓதினார்.

அவற்றின் கருத்து:

"எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவனேதான் மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோல் மூலமாகக் கற்றுக்கொடுத்தான்: மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுக்கிறான்.(96:1-5)

இம்மொழிகளைக் கேட்டதும் பெருமானார் அவர்களுக்கு மெய்சிலிர்த்தது. விவரிக்க இயலாத ஓர் ஆத்ம உணர்ச்சி தோன்றியது.

அவர்கள்முன் தோன்றியவர் "ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்" என்னும் பெயருடைய வானவர். அவர்கள் அவ்வப்போது பெருமானார் அவர்களுக்கு, ஆண்டவனுடைய சமூகத்திலிருந்து வெளியான தெய்வச் செய்திகளை அறிவிப்பார்கள். இவ்வாறு அறிவிக்கப்படுவது 'வஹீ’ (தெய்வீக அறிவிப்பு) என்று கூறப்படும்.

திருக்குர்ஆன் முழுவதும் இவ்வாறு பெருமானார் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் ஆண்டவன் சமூகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தெய்வச் செய்திகளே ஆகும்.

முதல் முறையாக அறிவிக்கப்பட்டது திருக்குர்ஆனின் "அலக்" என்னும் அத்தியாயத்தின் துவக்கத்திலுள்ள ஐந்து திருவசனங்களாகும்.