மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு/49. நேரில் வந்து கண்டு மகிழ்ந்தனர்

விக்கிமூலம் இலிருந்து

49. நேரில் வந்து கண்டு மகிழ்ந்தனர்

பெருமானார் அவர்களுடைய கட்டளைகளை சிரமேற் கொண்டு, முஸ்லிம் பிரச்சாரகர்கள் பல பகுதிகளுக்கும் சென்று, இஸ்லாத்தைப் பற்றி போதனை செய்து வந்தார்கள்.

அவர்களுடைய போதனையால் பல கூட்டத்தார் ஆங்காங்கே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அக்கூட்டத்தினர் இஸ்லாத்தில் சேர்ந்ததோடு தாங்கள் இஸ்லாத்தில் சேர்ந்திருப்பதை, அறிவிப்பதற்காக வேண்டிக் கூட்டம் கூட்டமாகப் பெருமானார் அவர்களிடம் தூது வந்தார்கள்.

சில கூட்டத்தாருக்கு, இஸ்லாத்தின் மீது ஆரம்பத்திலிருந்த வெறுப்பும், பகைமையும் நீங்கியது. பெருமானார் அவர்களின் வாயிலாக, நேரில் இஸ்லாத்தின் சிறப்பை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவுடன் மதீனாவுக்கு வந்தார்கள், பெருமானார் அவர்களைக் கண்டு மகிழ்ந்து உரையாடி இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

ஹிஜ்ரி ஒன்பதாவது வருடத்திலேதான் அத்தகைய தூதுக் குழுக்கள் அதிகமாக வந்தன. ஆகையால், அந்த வருடத்திற்கு வரலாற்றுப் பேராசிரியர்கள் "தூது வருடம்" எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.