மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/காவலனே மேலானவன்

விக்கிமூலம் இலிருந்து

2. காவலனே மேலானவன்


கதிரவன் காலையில் கிழக்கே உதிக்கிறான். மாலையில் மேற்கே சென்று மறைகிறான். பகல் வேளையில் உச்சி வானத்தில் ஒளி செய்கின்றான். இரவில் அவன் எங்கே? அவன் ஒளி எங்கே? மேற்கு மலைக்கப்பால் மறைந்து கிடக்கிறான். ஏன்?

அதோ நிலா வருகின்றதே அதனிடம் கேட்டோம் நிலவே, நிலவே. கதிரவன் ஏன் ஓடி விட்டான்? உனக்குத்தோற்று விட்டானா? உனக்கு அஞ்சி மறைந்து கொண்டானா? கதிரவனும் ஒரு வீரனா? பெரிய கோழை சீச்சீ. ஒரு நாளும் ஒப்பற்றவன் ஆகமாட்டான்.

ஆனால், ஒப்பற்றவனாகக் கூறும் சிறப்புடையவன் யார்? அவன்தான் மக்கள் நலங் காக்கும் மாண்பு மிக்க அரசன்.

அவன் புகழ்இரவிலும் ஒளி வீசும் பகலிலும் ஒளி வீசும்!

அவன் பெயர் நான்கு திசைகளிலும் பொறிக்கப் பட்டிருக்கும் இல்லையென்பதற்கு நடுங்கும் அவனுடைய கைகள், எதிரியைக் கண்டபோது நடுங்குவதில்லை. அவனன்றோ ஒப்பற்றவன்? மேலானவன் கதிரவனே, உன் தோல்வியை நீ ஒப்புக் கொள்!