மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/தாயில்லாக் குழந்தை

விக்கிமூலம் இலிருந்து
1. “தாயில்லாக் குழந்தை”

குழந்தை பிறந்ததைக் கண்ட தாய் கொள்ளை இன்பம் கொள்கிறாள். பெற்றால் மட்டும் போதுமா? தான் பெற்ற கண்மணியை ஓய்வு ஒழிவு இன்றிப் பேணுகிறாள். பெற்றவளுக்கு உறக்கம் ஏது? உள்ளத்தில் அமைதி ஏது?

பெற்ற குழந்தைக்கு வேளா வேளை பால் ஊட்டுகிறாள். காற்று, துளசு படாதபடி கருத்துடன் பாதுகாக்கிறாள். தொட்டிலில் இட்டுத் தாலாட்டித் தூங்கவைக்கிறாள். ஈ, எறும்பு அருகே செல்லாதபடி பார்த்துக் கொள்கிறாள்.

இப்படிக் கோடிப் பணிவிடைகள் செய்து குழந்தையைக் காப்பாற்றுகிறாள். தாய்க்குக் குழந்தையின் கதைதான் தலைவனுக்குக் குடும்பத்தின் கதையாகும். மன்னனுக்கு நாட்டின் கதையாகும்.

நாட்டிற்குத்தான் நல்ல அரண் இருக்கிறதே என்று அரசன் சும்மா இருக்க முடியுமா? பகைவர் புகமுடியாத நாட்டில் பசி புகுந்து விடலாம். வஞ்சகர் கொள்ளை கொள்ள முடியாத நாட்டைப் பஞ்சம் கொள்ளை கொண்டு விடலாம். நோய், நொடிகள்-இன்னும் எத்தனையோ தீமைகள் புகலாம்.

அரசன்,குழந்தையைக் காக்கும் தாய் போன்று கண்ணும் கருத்துமாய் இருந்து நாட்டைக் காக்க வேண்டும்.

அத்தகைய அரசனின் காவலே ஆட்சியாம், இளஞ்சேட்சென்னியின் நாடு தாயுடைய குழந்தை. அவன் பகைவர் நாடோ தாயில்லாக் குழந்தை.