மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/மதம் பிடித்த யானை

விக்கிமூலம் இலிருந்து

94. மதம் பிடித்த யானை!

யானைக்கு மதம் பிடித்தது. அது, கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு பிளிறியவாறு, ஒட்டம் எடுத்தது.

பெருநற் கிள்ளி அதனைப் பார்த்தான். அதன் மதத்தை அடக்குவேன் என்று எழுந்தான். யானையை எதிர் கொண்டான்; அதன் மேற் பாய்ந்தான் முதுகில் மேல் அமர்ந்து காதுகளைப் பற்றித் திருகினான்; கால்களைக் கொண்டு, வயிற்றில் இடித்தான்.

யானை, அடிபட்டதும் மேலும் விரைந்தது; புயல் போல் பறந்தது.

மக்கள் மருண்டனர். “ஐயோ, யானைக்கு மதம் பிடித்து விட்டதே, அதன்மேல் அமர்ந்திருப்போன் எவன்?” என்று கேட்டனர். புலவர் கூறினார்:

“அவன் பெயர் மறலி! புலி நிறக் கவசத்தில் கணைகள் பாய்ந்து கிழித்த மார்பைக் கொண்டவன்.

யானையைப் பாருங்கள், அது புயலிற் சிக்கிய நாவாய் போன்றும், மீன்களுக்கிடையே திங்கள் போன்றும் ஒடுகின்றது.

சுறாமீனைப் போன்ற வாள் மறவர் அதனைத் தொடர்கின்றனர். ஆயினும், அது காற்றுப் போல் கடுகி விரைகின்றது. பாருங்கள், அதன் கால்கள் நிலத்தில் இல்லை...

கள்ளொழுகும் வளஞ்சார்ந்த நாட்டையுடையவன் கிள்ளி, கள்ளுண்டு மதம் கொண்டது அவன் யானை.

அவனுக்கு ஒரு சிறு துன்பமும் நேராது, பார்த்துக் கொள்க யானையே! இல்லையென்றால் உன் வயிறு, உடைந்த பானையே!