மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/“"அண்ணனும் தம்பியும்”

விக்கிமூலம் இலிருந்து

95. “அண்ணனும் தம்பியும்”

போர்க் கோலம் பூண்டு எதிரெதிரே நின்றனர் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும். புலவர் கோவூர் கிழார் ஓடோடி வந்தார். முதலாவது நலங்கிள்ளியை நாடினார். நலங்கிள்ளியின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு ‘அரசே நான் கேட்கும் கேள்விகட்குப் பொறுமையுடன் பதில் கூறுக’ என்றார்.

“உன் கண்ணி?”

“ஆத்தி”

“உன் குலம்?”

“சோழர் குலம்"

“மன்னா கேள். நீ பனம் பூ மாலையோ வேப்பந் தாரோ அணியவில்லை. ஆத்திமாலை அணிந்திருக்கிறாய். உன்னை எதிர்ப்பவன் கண்ணியும் அதுவே. இருவர் வெல்லுதல் இயல்பு அல்ல. ஒருவர் தோற்பது உறுதி. அவனும் சோழனே. உங்கள் செயலால் குடி பெருமையடையாது. பிறர் கண்டு எள்ளி நகையாடுவர்” என்று கூறிக் கொண்டே மன்னனை இழுத்துச் சென்றார். ஆட்டுக் குட்டிபோல் பின் தொடர்ந்தான். நெடுங்கிள்ளியிடம் வந்தனர். பகை முறிந்தது. உறவு நிலைத்தது.