மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்/வீரனுக்கு அழகு!

விக்கிமூலம் இலிருந்து
25. வீரனுக்கு அழகு!


சேரன் சேரலாதனுக்கும் சோழன் பெருவளத் தானுக்கு மிடையே போர் நிகழ்ந்தது. பெருவளத்தான் எய்த கணை, சேரலாதன் மார்பிற் புகுந்து கிழித்து, முதுகில் ஊடுருவிச் சென்றது.

அம்பு பட்டதற்குத் துடிக்காத சேரலாதன் அது முதுகில் ஊடுருவியதற்குத் துடித்தான்.

மார்பிற் புண்படுதல் வீரர்க்கு அழகு முதுகிற்புண் பட்டால்...

வெட்கம், வெட்கம் சேரனால் அதை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை.

அவன் வடக்கு நோக்கி அமர்ந்து, உண்ணா நோன்பு இருந்து, உயிர் துடிக்கத் துணிந்தான். அதுதானே வீரனுக்கு அழகு?

நாடே அவனைப் பார்க்கத் திரண்டது. 'இதற்காகவா உயிர் துறக்கப் போகிறான் மன்னன்' என்று மருண்டது.

கழாத்தலையார் எனும் புலவர், செய்தி கேட்டு விரைந்தார். சென்று சேரலாதனைக் கண்டார். அவன் வடக்கிருந்தான்!

புலவர் உள்ளம் பதைத்தது. அவர் பாடினார்:

இனி சேர நாட்டில் முழவு குளிப்பை இழக்கும்; யாழ் பண் இழக்கும்! பாற் குடங்கள் கவிழ்ந்து தயிர் கடைவதை இழக்கும்; சுற்றம் கள்ளுண்ணாது களியை இழக்கும்! அகன்ற தெருக்கள் விழாவை இழந்து நிற்கும்! ஞாயிறும் திங்களும் போன்று இரு திறல் மன்னர் நேர் நின்று போரிட்டனர்! திங்கள் தோன்ற, மேற்கில் மறையும் ஞாயிறு போன்று, எம்மன்னன் புறப் புண்பட்டு, வடக்கிருந்தான். இனி, அஞ்ஞாயிறு அடியோடே மறைந்து விடும் சேர நாடும் இருண்டு விடும்!

“பகல் போயிற்றே! இரவு வந்ததே என் தாய் நாடே என் செய்வேன்” என்று அழுதார்! கழாத்தலையார்.