மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/ஆபத்து வேளையில் உதவியவர்

விக்கிமூலம் இலிருந்து

7
ஆபத்து வேளையில் உதவியவர் யார்?

ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில் வாழ்க்கை நடத்தினார்.

அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோமன். இளையவன் காமன்.

மூத்தவன் சோமன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமமாகக் கருதி பழகுவது அவன் வழக்கம்.

இளையவன் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தான். கல்வி போதித்து வந்தான் அந்தணரான தந்தை இறக்கவே, இருந்த சிறிது நிலத்தை அண்ணனும் தம்பியும் பகிர்ந்து கொண்டனர்.

மூத்தவனான சோமன் விவசாயத்தில் ஈடுபட்டு உழைக்கலானான். ஒரு நாள், சோமன் தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டு வெறுப்படைந்த அந்தணப் பெரியவர் ஒருவர், சோமனிடம் “நீ அந்தண குலத்தில் பிறந்தவன் அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுடன் பழகலாமா?” என்று கண்டித்து அவனை ஏசினார்.

பெரியவரின் பேச்சு அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது, “கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? பிறப்பு என்பது எல்லோருக்கும் சமம். அதில் வேறுபாடு காண்பது முட்டாள்தனமானது. மேலும், அந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர், உழுது பயிர் செய்து தருவதைத்தானே அனைவரும் சாப்பிடுகிறோம். அதில் வேறுபாடு காண்கிறோமா? மக்களின் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முட்டாள் தனமானது.” என்று கூறினான்.

பெரியவர் பேசாமல் சென்று விட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த அந்தணப் பெரியவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவன் ஒருவன், ஓடி வந்து, அவர் முகத்தில் தண்ணிர் தெளித்து, சிறிது தண்ணிர் குடிக்கச் செய்து, அருகில் இருந்த, தன் குடிசைக்குத் தூக்கிச் சென்று மயக்கத்தை தெளியவைத்து உதவினான்.

பெரியவர் எழுந்து புறப்படும் போது எதிர்பாராமல் அங்கே வந்த சோமன், “அந்தணப் பெரியவர்! மயக்கமுற்று கீழே விழுந்த உங்களைக் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் இனத்தவர் வரும்வரை காத்திருந்தால் நீங்கள் செத்துப் போயிருப்பீர்கள்” என்று இடித்துக் காட்டினான். பெரியர் தலைகவிழ்ந்து, எதுவும் பேசாமல் நடக்கலானார்.