மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/தாத்தாவை திணறச் செய்தான்

விக்கிமூலம் இலிருந்து

19
தாத்தாவை திணறச் செய்தான்

பெரியவர் ஒருவர் தம் பேரனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார். அவனுக்கு வயது ஆறு!

“தாத்தா! என்னிடம் உங்களுக்குப் பிரியம் உண்டு அல்லவா?” என்று கேட்டான் பேரன்.

“ஆம், உன்னிடம் எனக்கு உள்ள பிரியத்துக்கு அளவே இல்லை” என்றார் தாத்தா.

“தாத்தா! அப்படியானால் கடவுளிடமும் பிரியம் வைத்திருக்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்டான். சிறுவன்

”ஆம், கடவுளிடமும் எனக்கு அளவற்ற பிரியம் உண்டு” என்றார்.

பேரன் உடனே “தாத்தா! அது எப்படி முடியும்? உங்களுக்கு மனம் (உள்ளம்) ஒன்று தானே இருக்கிறது?” என்றான்.

தாத்தா திணறிப் போனார். “உலகப் பற்றுள்ள மனத்தில் கடவுள் பற்று எப்படி இருக்க முடியும்?” என்று நினைக்கலானார்.

ஒரே மனம், இரண்டு பேர்களிடம் எப்படி பிரியம் வைக்க முடியும்?