மாலதியின் தந்தை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

மாலதியின் தந்தை

1[தொகு]

ரயில் சிநேகிதம் என்று வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். 'விமான சிநேகிதம்' என்ற புதிய சொற்றொடரையும் தயவு செய்து அத்துடன் சேர்த்துக் கொள்ள வேணும்.

ஸ்ரீ கே.ஆர். ரங்கபாஷ்யத்துக்கும் எனக்கும் ஏற்கெனவே அறிமுகம் உண்டு என்றாலும்; விமானப் பிரயாணத்தின்போதுதான் எங்களுக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே அந்தச் சிநேகிதம் முற்றிக் கனிந்தது.

ஒரு தடவை புது டில்லிக்கு விமான யாத்திரை சென்ற போது எனக்குப் பக்கத்தில் ரங்கபாஷ்யம் உட்கார்ந்திருந்தான். விமானத்தில் ஓரத்து ஆசனத்தில் நான் இருந்தேன். எனக்கு அருகில் விமானத்தின் சிறிய கண்ணாடி ஜன்னல் இருந்தது. ரங்கபாஷ்யம் எனக்கு அப்பால் உட்கார்ந்திருந்தபடியால் அடிக்கடி கழுத்தை வளைத்து முகத்தை நீட்டி அந்தச் சிறிய கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்க முயன்றான். கீழே அதிகமாக ஒன்றும் அவனால் பார்க்க முடியவில்லை. இது ரங்கபாஷ்யத்தின் முக பாவத்திலிருந்து நன்கு தெரிந்தது.

"நாம் வேணுமானால் இடம் மாறி உட்காந்து கொள்ளலாமே? இந்த ஜன்னல் பக்கத்துக்கு நீங்கள் வருகிறீர்களா?" என்றேன்.

அவன் காதில் அது தெளிவாக விழவில்லை போலும்! எனினும் என்னுடன் பேச்சுக் கொடுக்க அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு "அடுத்த இறங்குமிடம் நாகபுரிதானே?" என்று கேட்டான்.

நான் தலையை அசைத்தேன்.

"நாகபுரியாயிருக்க முடியாது. ஸெகந்தராபாத் ஒன்று நடுவில் இருக்கிறதே!" என்று அவனே மறுத்துக் கூறினான்.

"ஆமாம்; ஸெகந்தராபாத் ஒன்று இருந்து தொலைக்கிறது!" என்றேன் நான்.

"நீங்கள் டில்லிக்கா போகிறீர்கள்?" என்று ரங்கபாஷ்யம் கேட்டான்.

மீண்டும் தலையை அசைத்தேன்.

"நானும் டில்லிக்குத்தான் போகிறேன். ஆகாச விமானத்தில் இதுதான் உங்களுக்கு முதல் பிரயாணமோ?"

இதென்னடா தொல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த வம்புக்காரனுடைய கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? அடுத்த முறை விமானம் இறங்கி ஏறும்போது இடம்மாறி உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். பஞ்சை அடைத்துக் கொண்டு இவனோடு யார் ஓயாமல் கத்திக் கொண்டிருப்பது?

இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில், விமான உபசரணை ரமணி அங்கு வந்தாள். கையிலிருந்த பெப்பர்மிண்ட் பெட்டியை நீட்டி, "ஸ்வீட்ஸ் வேண்டுமா? காப்பி அல்லது டீ வேண்டுமா?" என்று கேட்டாள். ரங்கபாஷ்யம் அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தான். விளக்கெண்ணெய் குடித்தவன் முகம் போல் அவன் முகம் மாறியது.

நான் அந்தப் பெண்மணி மீது இரக்கங் கொண்டு ஒரு பெப்பர்மிண்ட் எடுத்துக் கொண்டேன். "வாயில் ஏதேனும் குதப்பிக் கொண்டு இருப்பது நல்லது. விமான யாத்திரையின்போது தொண்டையில் எச்சில் விழுங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் காது வலி வந்துவிடும்" என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

"இருக்கலாம்; ஆனால் இவளிடமிருந்து வாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இந்த மாதிரி பெண் பிள்ளைகளை எதற்காகத்தான் 'ஏர் ஹோஸ்ட்டஸ்' வேலையில் அமர்த்துகிறார்களோ!" என்றான் ரங்கபாஷ்யம். ஸெகந்தராபாத்தில் இறங்கி நாங்கள் காப்பி சாப்பிடப் போன இடத்தில், அவன் மறுபடியும் 'ஏர் ஹோஸ்ட்டஸ்' பேச்சை எடுத்தான். "மேனாட்டாரை இதிலெல்லாம் நாம் காப்பி அடிக்க வேண்டுமா?" என்று கேட்டான்.

"அப்படிச் சொல்லக் கூடாது. ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலும் பெண் நர்சுகள் இருக்கிறார்களே ஏன்? சிகிச்சை, பணிவிடை, உபசரிப்பு, - இவற்றுக்கெல்லாம் மெல்லியலார் அதிகத் தகுதியுடையவர்கள். அதற்காகத்தான் இம்மாதிரி உபசரிப்பு வேலைகளுக்குப் பெண்களை நியமிக்கிறார்கள்!" என்று நான் சொன்னேன்.

"அதெல்லாம் இல்லை. புருஷர்களை நியமித்தால் என்ன குறைவாய்ப் போய்விடும்? இந்த பெப்பர்மிண்டைப் புருஷர்கள் கொடுக்க மாட்டர்களா? இந்த வேலைக்குப் பெண்களை நியமித்தால் பிரயாணிகள் அதிகமாக வருவார்கள் என்று உத்தேசம்?" என்று அழுத்தமாகச் சொன்னான் ரங்கபாஷ்யம்.

"சேச்சே! இது என்ன பேச்சு? நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. 'ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ வேண்டும்' என்று நம் தலைவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். நீ இவ்வளவு கர்நாடகமாகப் பேசுகிறாயே!" என்று சொன்னேன்.

"சரிநிகர் சமானத்திலும் ஒரு வரை முறை வேண்டும். ஆங்கிலோ - இந்தியப் பெண்கள் இம்மாதிரி வேலைகளுக்கு வரலாம். நம்முடைய ஹிந்து சமூகப் பெண்களுக்கு இதெல்லாம் லாயக்கில்லை" என்றான் ரங்கபாஷ்யம்.

மேலும் அவன், "ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கின்றன. இவர்கள் வேறு விபத்துக்களை உண்டாக்குகிறார்கள்!" என்றான்.

இந்தச் சம்பாஷணையைத் தொடர நான் விரும்பவில்லை. ஆனால் ஏதோ ஒருவிதமான ஆத்திரம் அவன் மனத்தில் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. அது என்னவென்று அறிந்து கொள்ளுவதில் இலேசாக ஆவலும் உண்டாயிற்று. நாகபுரியில் காலை உணவுக்காக விமானம் இறங்கியபோது அதைபற்றிச் சிறிது விவரமாக நானே அறிந்து கொள்ளவும் முடிந்தது.

2[தொகு]

நாகபுரி விமான நிலையத்தில் நாங்கள் உட்கார்ந்து விமானக் கம்பெனியார் அளித்த காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ரங்கபாஷ்யம் உட்கார்ந்த மேஜையில் உட்காராமல் வேண்டுமென்றே வேறொரு மேஜையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தேன். ஆனால் அடிக்கடி என்னுடைய கவனம் மட்டும் அவன் மீது சென்று கொண்டிருந்தது.

அதுவரை சோர்வும் அலுப்பும் குடிகொண்டிருந்த ரங்கபாஷ்யத்தின் முகத்தில் திடீரென்று ஒரு மலர்ச்சியும் கிளர்ச்சியும் ஏற்படக் கண்டேன்.

வேறொரு விமான ரமணி அச்சமயம் நிலையத்து அறைக்குள் வந்தாள். அவள் தன்னுடன் வந்த விமான ஓட்டிகளுடன் ஒரு மேஜையில் அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கினாள். அவளுடைய வருகையைப் பார்த்தவுடனே தான் ரங்கபாஷ்யத்தின் முகம் மலர்ந்தது. புதிதாக வந்த விமான ரமணி கதாநாயகிகளின் இனத்தைச் சேர்ந்தவள். கவிகள் பூரண சந்திரனுக்கு ஒப்பிடுகிறார்களே அப்படிப்பட்ட வட்டவடிவமான பிரகாசமான முகம்; பவளமல்லிப் பூவின் நிறம்; கரிய பெரிய கண்கள்! அந்தக் கண்களின் இமைகள் அவ்வப் போது சடசடவென்று பட்டுப் பூச்சியின் இறகுகளைப் போல் மூடி மூடித் திறந்தன. அவளுடைய கண்களின் கருவிழிகள் அங்குமிங்கும் குறுகுறுவென்று சலனம் பயின்று கொண்டிருந்தன. அவள் கூந்தலைக் கழுத்தளவு தொங்கும்படி விட்டுத் தூக்கிச் செருகியிருந்தது அவளுடைய முகத்துக்கு ஒரு தனிச் சோபையைக் கொடுத்தது.

அந்தப் பெண் அறைக்குள் வந்தபிறகு ரங்கபாஷ்யத்தின் கவனம் முழுவதும் அவளிடம் சென்றிருந்ததைக் கண்டேன். மற்றவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்ற கூச்சம் சிறிதுகூட இல்லாமல் அவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த விமான ரமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தற்செயலாக ரங்கபாஷ்யம் இருந்த மேஜைப் பக்கம் அவள் பார்வை சென்றது. ரங்கபாஷ்யத்தைப் பார்த்ததும், அவளுடைய முகத்தில் இளம் புன்னகை அரும்பியது. ரங்கபாஷ்யமும் திரும்பிப் புன்னகை புரிந்தான். அவனுடைய புன்னகையில் அசடு வழிந்தது. எனினும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் ஏற்கனவே பழக்கமானவர்கள் என்று ஊகித்துக் கொண்டேன். விமான ரமணிகளால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி ரங்கபாஷ்யம் சொல்ல ஆரம்பித்ததில் ஏதோ ஒரு ரஸமான சம்பவம் இருந்திருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!

விமானங்கள் புறப்படும் நேரம் ஆகிவிட்டதென்று ஒலிபெருக்கிகளின் ராட்சதக் குரல் எச்சரித்தது. புதிதாக வந்த விமான ரமணி எழுந்தாள்; ரங்கபாஷ்யம் அதைப் பார்த்துவிட்டு விரைந்து நடந்துபோய் அவள் பக்கத்தை அடைந்தான்.

"நீங்கள் இன்று டில்லி விமானத்தில் வரவில்லையா?" என்று கேட்டான்.

"இல்லை! நான் பம்பாய்க்குப் போகிறேன். விமானத்தில் ஏறினால் இன்னமும் உங்களுக்குத் தலை சுற்றி மயக்கம் வருகிறதா?" என்று கேட்டாள் அந்த ரமணி.

ரங்கபாஷ்யம் லேசாகச் சிரித்துவிட்டு, "உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதே! மிக்க சந்தோஷம்!" என்று சொன்னான்.

அவர்கள் நடந்து கொண்டே பேசியபடியால் அப்புறம் பேசிய வார்த்தைகள் என் காதில் சரியாக விழவில்லை.

அந்தப் பெண் ரங்கபாஷ்யத்திடம் விடைபெற்றுக் கொண்டு பம்பாய் விமானத்தை நோக்கிச் சென்றாள்.

ரங்கபாஷ்யம் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தான். நான் அவன் அருகில் சென்று, "நம்முடைய விமானமும் புறப்படப் போகிறது" என்றேன்.

"நாமும் போக வேண்டியதுதான்!" என்றான் ரங்கபாஷ்யம்.

"ஒருவேளை நீர் அந்த விமான மேனகையுடன் பம்பாய்க்கே போய்விடுவீரோ என்று நினைத்தேன்" என்று நான் அவனை எகத்தாளம் செய்தேன்.

ரங்கபாஷ்யம் அதற்காகக் கோபம் அடையவில்லை.

"போவதற்கு எனக்குச் சம்மதந்தான். ஆனால் டிக்கட்டை வேறு வழியில் மாற்றிக் கொடுக்க மாட்டார்களே!" என்றான்.

விமானத்தில் போய் ஏறிக் கொண்டோ ம். ரங்கபாஷ்யம் ஏதேதோ மனோராஜ்யங்களிலும் பகற் கனவுகளிலும் ஆழ்ந்திருந்தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் விமானத்தின் 'ஏர்ஹோஸ்ட்டஸ்' கொண்டு வந்து நீட்டிய பெப்பர்மிண்டைக் கூட அருவருப்பில்லாமல் எடுத்துக் கொண்டான்.

குவாலியர் விமானக் கூடத்தில் விமானம் இறங்கியதும் வழக்கம் போல் சிற்றுண்டி சாப்பிடும் இடத்துக்கு சென்றோம். அவனுக்குப் பக்கத்தில் நானாகவே போய் உட்கார்ந்து கொண்டேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

உண்மை வாழ்க்கையிலிருந்து ஏதேனும் ஒரு கதை புனைவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், அதை அலட்சியமாக விட்டுவிடக் கூடாதல்லவா?

"அந்தப் பெண்ணை உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?" என்று கேட்டாள்.

"நீங்கள் ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்வதில்லையென்றால் சொல்கிறேன். எனக்கும் யாரிடமாவது சொல்லி யோசனை கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது" என்றான் ரங்கபாஷ்யம்.

"ஒன்றும் தப்பான காரியம் இல்லாவிட்டால், அதைப் பற்றி நானும் தப்பாக நினைத்துக் கொள்ளவில்லை. பிறத்தியாருக்கு யோசனை சொல்ல நான் எப்போதுமே தயார்!" என்றேன் நான்.

மெள்ள மெள்ள அவன் விஷயத்தை சொன்னான். அப்படியொன்றும் பிரமாத விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனோ உலகத்தில் இதை விட முக்கியமானது வேறு என்ன இருக்க முடியும் என்று நினைத்ததாகத் தோன்றியது.

3[தொகு]

ரங்கபாஷ்யம் சென்ற மாதத்தில் ஒரு தடவை டில்லிக்கு வந்துவிட்டுத் திரும்பியபோது, டில்லி விமான நிலையத்தில் சென்னைக்குப் புறப்படும் விமானத்தில் ஏறப்போனானாம். சிறிய ஏணிபோன்ற படிகட்டுகளின் மூலமாகவே விமானத்தில் ஏற வேண்டும். ரங்கபாஷ்யம் அந்தப் படிகட்டுகளில் ஏறி விமானத்தில் ஒரு காலை வைத்தபோது ஊன்றி வையாமல் தடுமாறி விழப் பார்த்தான். அப்போது அங்கே நின்ற விமான ரமணி சட்டென்று அவனுடைய கரத்தைப் பிடித்து நிதானப் படுத்தி விமானத்தில் ஏற்றி விட்டாள். சம்பிரதாயமாக அவளுக்குத் "தாங்க்ஸ்" சொன்னான்.

"விழுந்துவிடப் பார்த்தீர்களே? தலை கிறுகிறுத்ததா?" என்று அந்தப் பெண் தமிழில் கேட்டதும், இவனுக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாகப் போய்விட்டது. ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் விமானத்திற்குள் போய் இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டான்.

மறுபடி அந்தப் பெண் கையில் பெப்பர்மிண்ட் பெட்டியுடன் வந்தபோது, "அப்போது ஒரு கேள்வி கேட்டீர்களே, அதற்கு நான் பதில் சொல்லட்டுமா!" என்றான் ரங்கபாஷ்யம்.

"என்ன கேள்வி கேட்டேன்?" என்றாள் அந்தப் பெண்.

"தலை கிறுகிறுத்ததா என்று கேட்டீர்கள். இந்த உலகத்து மனுஷனுக்கு முன்னால் திடீரென்று தேவலோகத்து மேனகை வந்து நின்றால், தலை கிறுகிறுத்து மயக்கம் வராமல் என்ன செய்யும்?" என்றான். அந்த மேனகை புன்னகை செய்துவிட்டு அப்பாற் போய் விட்டாள்.

ரங்கபாஷ்யமோ தனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.

அடுத்த இடத்தில் விமானம் இறங்கியபோது அந்த விமான ரமணி இவனைத் தேடி வந்து, "என்னிடம் பேசியது போல் வேறு யாரிடமாவது பேசிவிடாதீர்கள். கன்னத்தில் அறை விழுந்துவிடும்!" என்றாள்.

"அதைப் பற்றிப் பயமேயில்லை. வேறு யாரிடம் அப்படி நான் பேச முடியும்?" என்றான் ரங்கபாஷ்யம்.

இவ்விதம் அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சு வார்த்தைப் பழக்கம், பத்திரிக்கைத் தொடர் கதையைப் போல் சென்னைப் போகும் வரையில் நீடித்திருந்தது.

சென்னையில் பிரிந்து போக வேண்டிய சமயம் வந்தபோது, அந்த விமான மேனகையின் விலாசத்தை தெரிந்து கொள்ள ரங்கபாஷ்யம் ஆனமட்டும் முயன்றான். அது முடியவில்லை.

"கடவுளுடைய சித்தம் இருந்தால் மறுபடியும் எப்போதாவது நாம் சந்திப்போம்" என்றாள் விமான மேனகை.

"அப்படிக் கடவுளுக்கே தான் விட்டுவிடப் போவதில்லை, நானும் கொஞ்சம் முயற்சி செய்வதாகவே உத்தேசம்" என்றான் ரங்கபாஷ்யம்.

விமானப் பிரயாணத்தில் இது ஒரு விசித்திரமான அனுபவம் என்று மட்டுமே முதலில் ரங்கபாஷ்யம் நினைத்தான். ஆனால் அந்த விசித்திர அனுபவம் அவனுடைய உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்துவிட்டது என்று போகப் போகத் தெரிந்தது. அந்த அனுபவத்தை அவன் மறக்க முடியவில்லை. அந்தப் பெண்ணையும் மறக்க முடியவில்லை. கிட்டதட்டப் பைத்தியம் மாதிரியே ஆகிவிட்டது.

ஆகையினாலேயே மறுபடியும் டில்லிக்குப் போகும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் ஏறிய விமானத்தில் அந்த மேனகையைக் காணாதபடியால் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தான். நாகபுரியில் அவளைப் பார்த்த பிறகு தான் ஒருவாறு மறுபடியும் உற்சாகம் ஏற்பட்டது.

4[தொகு]

புது டில்லியில் நான் தங்குமிடத்தை ரங்கபாஷ்யம் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். நாலு நாளைக்கு பிறகு ஒரு தினம் என்னைப் பார்க்க வந்தான். வரும்போதே குதூகலத் தாண்டவம் ஆடிக் கொண்டு வந்தான்.

"ரங்கபாஷ்யம், என்ன இவ்வளவு குதூகலம்!" என்று கேட்டேன்.

"அவளை நான் மறுபடியும் பார்த்தேன்" என்றான்.

"அவளை என்றால் யாரை?"

"உலகத்திலேயே எனக்கு இப்போது ஒரு 'அவள்' தான் வேறு யாராயிருக்க முடியும்?"

"அந்த விமான மேனகையைச் சொல்லுகிறாயா?"

"ஆமாம்; ஆனால் அவள் பெயர் மேனகை அல்ல மாலதி!" என்றான்.

"அவளை எங்கே பார்த்தாய்?"

"நான் தங்கியுள்ள ஹோட்டலுக்கே அவளும் நேற்று வந்திருந்தால். ஒரு முக்கியமான செய்தி சொன்னாள்."

"அது என்ன செய்தி? தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று சொன்னாளா?" என்றேன் நான்.

ரங்கபாஷ்யம் சிறிது நேரம் திறந்த வாய் திறந்தபடி ஒன்றும் தோன்றாமல் பிரமித்துப் போய் நின்றான்.

"ஏன் இப்படி விழிக்கிறாய்? மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே! இங்கே தரையில் ரத்னக் கம்பளம் கூடக் கிடையாது!" என்றேன்.

"அந்தக் கேள்வியை நான் அவளிடம் கேட்கவில்லை!" என்றான் ரங்கபாஷ்யம்.

"அதைக் கேட்காமல் மற்றபடி வேறு என்னத்தைக் கேட்டு என்ன பயன்? சரி, போகட்டும். வேறு என்ன அப்படி முக்கியமான செய்தி?"

"மாலதி 'ஏர் ஹோஸ்டஸ்' வேலையை விட்டுவிடப் போகிறாளாம்!"

"அடாடா! எதனால் அப்படிப்பட்ட விபரீதமான காரியத்தை அவள் செய்யப் போகிறாள்?"

"என்னைப் போல் இன்னும் அநேகர் அவளிடம் 'உன்னைக் கண்டதும் தலை கிறுகிறுத்து மயக்கம் வருகிறது!' என்கிறார்களாம். ஏற்கெனவே விமான விபத்துக்கள் அதிகமாயிருக்கும் நிலையில், தன்னால் வேறு விபத்துக்கள் நேரிட வேண்டாம் என்று, வேலையை ராஜினாமாச் செய்யப் போகிறாளாம். வேலையை விட்டுவிட்டுச் சென்னைக்கே வந்துவிடப் போகிறாளாம்!" என்றான்.

"சென்னைக்கு ஏதோ துரதிர்ஷ்டந்தான்!" என்று சொன்னேன்.

"சென்னை நகரம் மூவேழு இருபத்தொரு தலை முறையில் செய்த தவத்தின் பயன் என்று சொல்லுங்கள்!"

"அந்த மாஜி விமான மேனகை சென்னை வீதிகளில் போகும் போதெல்லாம், யாராவது தலை கிறுகிறுத்து விழுந்து கொண்டிருப்பார்களே? அதனால் சென்னை நகரின் குழி விழுந்த சாலைகள் இன்னும் மேடு பள்ளமாகி விடுமே என்றுதான் கவலைப்படுகிறேன்!"

"ஆமாம். சென்னை நகரில் சாலைகள் எக்கேடு கெட்டுப் போனால் உங்களுக்கும் எனக்கும் என்ன? இவள் இந்தத் தரித்திரம் பிடித்த விமான வேலையை விட்டு விடுகிறாள் என்பது எனக்கு உற்சாகமாயிருக்கிறது. ஆண் பிள்ளைகளுடைய சகவாசமே அவளுக்குப் பிடிக்கவில்லையாம். புருஷர்களுடைய மத்தியில் இருப்பதும், வேலை செய்வதும் அருவருப்பாயிருக்கிறதாம். ஆகையால் ஒரு பெண்கள் கலாசாலையில் ஆசிரியை ஆகிறதென்று தீர்மானித்து விட்டாளாம். அந்த வேலைக்கு மனுப் போட்டிருக்கிறாளாம். ஆசிரியை வேலை கிடைத்தவுடனே சென்னைக்கு வந்துவிடப் போகிறாளாம்!... இப்போது என்ன சொல்லுகிறீர்கள்" என்று கேட்டான்.

"என்ன சொல்லுகிறது? அந்தப் பெண்கள் கலாசாலையைக் கடவுள் காப்பாற்றட்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றேன்.

"அந்தப் பெண்கள் கலாசாலை செய்த பூஜா பலன் என்று சொல்லுங்கள்."

இவ்வாறு எங்கள் சம்பாஷணை அன்றைக்கு முடிந்தது. டில்லியில் அப்புறமும் இரண்டொரு தடவை ரங்கபாஷ்யம் என்னைச் சந்தித்தான். உற்சாக கடலில் முழுகியிருந்தான். மாலதியை மறுபடியும் பார்த்து அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதையும் தெரிந்து கொண்டு விட்டானாம்!

"உன் தலையில் அப்படி விதி எழுதியிருக்கும் போது அவளுக்கு வேறு கலியாணம் ஆகியிருக்க முடியுமா?" என்றேன் நான்.

ரங்கபாஷ்யத்திடம் அப்படி விளையாட்டாகப் பேசினேனே தவிர, அவனிடமும் அந்தப் பெண்ணிடமும் எனக்கு ஒருவித அநுதாபம் உண்டாகியிருந்தது. "உண்மையான காதலர்களை உலகம் முழுவதும் காதலிக்கிறது!" என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு. சாவித்திரி - சத்தியவான், ரோமியோ - ஜுலியத், லைலா - மஜ்னூன் போன்ற அமர காதலர்கள் இன்றைக்கும் உலக மக்களின் காதலுக்குப் பாத்திரமாகியிருக்கிறார்கள். அல்லவா? இரண்டு பேர் ஒருவரிடம் ஒருவர் அன்பாயிருந்தால், அதைப் பார்ப்பதிலேயே நமக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ரங்கபாஷ்யத்தையும் அந்த விமான ரமணியையும் பற்றி நினைத்தபோது எனக்கு அப்படித்தான் மகிழ்ச்சியாயிருந்தது.

"உண்மையான காதலின் பாதை சரளமாக இருப்பதில்லை" என்று ஆங்கிலத்தில் இன்னொரு பழமொழியும் உண்டு. அது காதலர்களின் விஷயத்தில் உண்மையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை ஏனோ என் மனதில் உதித்தது.

5[தொகு]

இப்போதெல்லாம் நாடெங்கும் மாதர் சங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாதர் சங்கத்தை என் நண்பர் ஒருவர் 'மாதர் சங்கடம்' என்று குறிப்பிடுவது வழக்கம். பெண்மணிகள் சங்கம் ஸ்தாபிப்பதும் சமூகத் தொண்டுகள் புரிவதும் சில சமயம் ஆண்பிள்ளைகளுக்குச் சங்கடத்தை உண்டாக்குவது உண்மைதான். ஆனால் ஆண் பிள்ளைகள் நடத்தும் சங்கங்களினால் பெண் தெய்வங்களுக்கும் சில சமயம் சங்கடம் உண்டாகத் தான் செய்கிறது. ஆகவே, சங்கங்களினால் ஏற்படும் பரஸ்பர சங்கடத்தைத் தவிர்க்க முடியாதுதான்.

ஒருநாள், மாதர் சமூக ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் என்னைப் பார்ப்பதற்கு வந்து சீட்டும் அனுப்பினார்கள். ஏதோ ஒரு சமூகத் தொண்டுக்காக உதவி நாடகம் போடுகிறார்கள் என்றும், அதற்கு டிக்கெட் விற்பதற்கு வந்திருக்கிறார்கள் என்றும் அறிந்தேன். இந்த மாதிரி டிக்கட் விற்பதற்கோ சந்தா அல்லது நன்கொடை வசூலிப்பதற்கோ யார் வந்தாலும் நமக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆயினும் பெண்மணிகள் இப்படிப்பட்ட நல்ல காரியங்களுக்கு வரும்போது கண்டிப்பாக எப்படி நிராகரிக்க முடியும்? ஏதோ ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு போகச் சொல்லலாம் என்று எண்ணி அவர்களை வரும்படி சொன்னேன். வந்த இரண்டு பேரில் ஒரு பெண்மணியைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. என் விமான சிநேகிதன் ரங்கபாஷ்யத்தின் உள்ளத்தைக் கவர்ந்த விமான ரமணி தான் அவள்.

"உங்களை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமாயிருக்கிறதே?" என்று மாலதியே முதலில் கேட்டுவிட்டாள்.

"ஆமாம் விமானப் பிரயாணத்தின் போது ஒரு தடவை நாகபுரியில் பார்த்தேன்" என்றேன்.

ஒன்றுக்கு இரண்டாக டிக்கட் வாங்கிக் கொண்டு, மெதுவாக ரங்கபாஷ்யத்தின் பேச்சை எடுத்தேன்.

"நீங்கள் விமான வேலையை விட்டு விடப் போவதாக ரங்கபாஷ்யம் அப்போதே சொன்னார்" என்றேன்.

ஒரு கண நேரம் அவள் ஏதோ யோசித்துவிட்டு, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். "அவரும் இந்த நாடகத்துக்கு வருவார். டிக்கட் வாங்கிக் கொண்டிருக்கிறார்!" என்றார்.

இன்னும் கொஞ்சம் பேச்சுக் கொடுத்து, எந்த உதவி நாடகத்துக்காக மாலதி நன்கொடை டிக்கட் விற்கிறாளோ, அதில் அவளே வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கப் போவதாக அறிந்தேன்.

நான் எதிர்பார்த்தபடியே சற்று நேரத்திற்கெல்லாம் ரங்கபாஷ்யத்திடமிருந்து டெலிபோன் வந்தது. "சாயங்காலம் ஒரு அமெச்சூர் உதவி நாடகத்துக்கு டிக்கட் வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் சேர்த்து டிக்கட் வாங்கியிருக்கிறேன். அவசியம் வர வேண்டும்" என்று குதூகலமான குரலில் கூறினான்.

நாடகத்துக்கு இருவரும் போயிருந்தோம். தலைக்கு இரண்டு டிக்கட் எடுத்துக் கொண்டு போனோம்! அமெச்சூர்கள் போட்ட நாடகம் என்ற முறையில் பார்க்கும்போது அவ்வளவு மோசமாக இல்லை. நன்றாயிருந்தது என்றே சொல்லலாம். ஆனால் ரங்கபாஷ்யத்துக்கு என்னவோ அவ்வளவாக அந்த நாடகம் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

"இது என்ன கதை? போயும் போயும் நாடகம் போட இத்தகைய கதை தானா கிடைத்தது? உலகத்தில் வேறு நல்ல விஷயமா இல்லை?" என்று முனகிக் கொண்டே இருந்தான்.

என்னுடைய அபிப்பிராயத்தில் அப்படி ஒன்றும் மோசமான கதை இல்லை. ஏழ்மையினால் குற்றம் செய்து சிறைப்பட்ட ஒரு கைதியின் கதையை வைத்து நாடகம் எழுதியிருந்தது. சிறையில் அக்கைதி படும் கஷ்டங்கள், அவன் தப்பி ஓடி வந்த பிறகு அடையும் துன்பங்கள் - இவைதான் முக்கியமான நாடக அம்சங்கள். எதற்காக இந்த விஷயம் ரங்கபாஷ்யத்துக்கு அவ்வளவு பிடிக்காமலிருக்க வேண்டும் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. பின்னொரு காலத்தில் அதன் காரணம் தெரிந்தது.

நாடகம் முடிந்ததும் "போகலாமா" என்று அவனிடம் கேட்டேன்.

"மாலதியைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லி விட்டுத்தான் போக வேண்டும். கதை நன்றாயில்லாவிட்டாலும் அவள் நடிப்பு என்னமோ அபாரமாகத் தானே இருந்தது?" என்றான் ரங்கபாஷ்யம்.

அப்படியே சபை கலையும் வரையில் காத்திருந்து அரங்க மேடைக்குச் சென்று மாலதியைப் பார்த்தோம். நாடகத்தைப் பற்றி என்னுடைய சந்தோஷத்தை நான் தெரிவித்த பிறகு, ரங்கபாஷ்யமும் தன் பாராட்டுதலைத் தெரிவித்தான்.

"உங்கள் நடிப்பு மிக நன்றாயிருந்தது. ஆனால் நாடகக் கதை சுத்த அபத்தம். அடுத்த தடவை வேறு ஏதாவது நல்ல விஷயத்தைப் பற்றிக் கதை எழுதி நாடகம் போடுங்கள்!" என்று சொன்னா.

அச்சமயத்தில் எங்கள் இருவரையும் தவிர மூன்றாவது மனிதன் ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். மாலதி அவனைச் சுட்டிக் காட்டி, "தயவு செய்து இவரிடம் சொல்லுங்கள். இவர் எழுதிய நாடகந்தான் இது. நான் கூட முதலிலேயே நாடக விஷயம் நன்றாயில்லையென்று தான் சொன்னேன்" என்றாள்.

அந்த மனிதன், "சபையில் எல்லாருக்கும் கதை ரொம்பப் பிடித்திருந்தது. பிரமாதமாகச் சந்தோஷப்பட்டு அடிக்கடி 'அப்லாஸ்' கொடுத்தார்கள்! தலைமை வகித்தவர் கூட நாடக விஷயத்தைச் சிலாகித்தார். இவர் ஏதோ அலாதிப் பிறவி போலிருக்கிறது. இவருக்கு மட்டும் பிடிக்கவில்லை!" என்றான்.

அச்சமயம் ரங்கபாஷ்யத்தின் முகம் போன போக்கு ஒரு கணம் என்னைத் திடுக்கிடச் செய்து விட்டது. மறுநிமிஷம் சமாளித்துக் கொண்டு, "சரி நாம் போகலாம்" என்றான். மாலதியிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

6[தொகு]

அப்புறம் சில காலம் ரங்கபாஷ்யம் என்னை சந்தித்துப் பேச அடிக்கடி வந்து கொண்டிருந்தான். தரையில் காலை வைத்து அவன் நடந்ததாகவே தோன்றவில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான். இந்த நாட்களில் அவனுக்கு எதைப் பார்த்தாலும் அழகாயிருந்தது; இன்பமயமாயிருந்தது.

பட்டுப் பூச்சி பறப்பதைப் பார்த்தால், "ஸார்! ஸார்! அந்தப் பட்டுப் பூச்சியைப் பாருங்கள்! அது வர்ணச் சிறகை அடித்துக் கொண்டு பறப்பது என்ன அழகாயிருக்கிறது!" என்பான்.

ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்து "அடடா ஆகாசத்தின் ஸ்வச்சமான நீல நிறந்தான் எத்தனை அழகு" என்பான்.

அதே வானத்தில் மேகங்கள் படர்ந்திருந்தால் "அடடா! வெள்ளைப் பஞ்சுத் திறனைப் போல் இந்த மேகங்கள் தான் என்ன அழகாயிருக்கின்றன! அவற்றில் சூரியகாந்தி பட்டுவிட்டால் ஒரே பொன் மயமாகி விடுகிறதைப் பார்த்தீர்களா!" என்பான்.

"ஆகா! இந்தத் தென்றல் காற்றுக்கு இவ்வளவு இனிமையும் சுகமும் எப்படித்தான் வந்ததோ? 'மந்த மாருதம்' என்று தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள்?" என்பான்.

ஒவ்வொரு சமயம் மனதை இன்னும் கொஞ்சம் திறந்து விட்டுப் பேசுவான்.

"ஸார்! இந்த அதிசயத்தைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மாலதியை நான் முதலில் சந்தித்தது சில மாதங்களுக்கு முன்னாலே தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனையோ வருடங்களாக எத்தனையோ யுகயுகமாகப் பழகியது போலிருக்கிறது" என்று ஒரு தடவை சொன்னான்.

"அதெல்லாம் சரிதானப்பா! கலியாணச் சாப்பாடு எப்போது போடப் போகிறாய், சொல்லு! தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டேன்.

"தேதி நிச்சயமானால் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? முதலில் உங்களுக்குத்தான் சொல்வேன், ஸார்! எனக்கும் உற்றார் உறவினர் அதிகம் பேர் இல்லை. நீங்கள் தான் கிட்ட இருந்து நடத்தி வைக்க வேண்டும்" என்றான் ரங்கபாஷ்யம்.

இப்படிச் சொல்லிவிட்டுப் போன மறுநாளே அவன் உற்சாகம் அடியோடு குன்றி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்தான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போனேன்.

"என்னப்பா சமாசாரம்? ஒரு மாதிரியாக இருக்கிறாயே?" என்று கேட்டேன்.

"அன்றைக்கு அரங்க மேடையில் பார்த்தோமே, ஸார்! அந்தத் தடியன் ஓயாமல் மாலதியைச் சுற்றிக் கொண்டேயிருக்கிறான்! எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை!"

"உனக்குப் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? அவள் கன்னிப்பெண். அதோடு படித்த பெண்; சர்வ சுதந்திரமாக வாழ்க்கை நடத்தி வந்தவள். அவள் பேரில் உன்னுடைய பாத்தியதையை நீ ஸ்தாபித்துக் கொள்வதுதானே? உன்னைக் கலியாணம் செய்து கொள்ள அவளுக்கு இஷ்டமா, இல்லையா என்று கறாராகக் கேட்டு விடு! மூடி மூடி வைப்பதில் என்ன பிரயோஜனம்? 'பேசப்போகிறாயோ, சாகப் போகிறாயோ' என்ற பழமொழியைக் கேட்டதில்லை? வாயுள்ள பிள்ளைதான் இந்த காலத்தில் பிழைக்க முடியும்!" என்றேன்.

"உண்மைதான்; உண்டு, இல்லை என்று மாலதியைக் கேட்டுவிடத்தான் போகிறேன்!" என்றான் ரங்கபாஷ்யம். ஆனால் அவ்விதம் கேட்பதற்கு இலேசில் அவனுக்குத் துணிச்சல் வரவில்லை. தள்ளிப் போட்டுக் கொண்டே காலங் கடத்தினான். ஆனால் அதே சமயத்தில் வேதனைப்பட்டுத் துடித்துக் கொண்டுமிருந்தான். அவன் மீது கோபித்துக் கொள்வதா, அநுதாபப்படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் ரங்கபாஷ்யம் பீதிகரமான முகத்துடன் என்னுடைய அறைக்குத் திடீரென்று வந்து சேர்ந்தான்.

"ஸார்! எனக்கு ஏதோ ஒரு பெரிய அபாயம் வரப் போகிறது. நீங்கள் தான் உதவி செய்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்றான்.

அவனுக்கு ஏதாவது மூளைக்கோளாறு நேர்ந்து விட்டதோ என்று எனக்குச் சந்தேகமாகி விட்டது. அவன் முகம் அப்படிப் பேயறைந்தவன் முகம் போலிருந்தது. பேச்சில் அவ்வளவு பதட்டமும் பயங்கரமும் தொனித்தன. சற்று ஆறுதலாகவே பேசி, "என்ன விஷயம் என்று சொல்லு. என்னால் முடிந்த உதவியை உனக்கு அவசியம் செய்கிறேன்!" என்றேன்.

"யாரோ ஒருவன் அடிக்கடி என்னைப் பின் தொடர்ந்து வருகிறான். என்னைக் கொலை செய்ய வருகிறானோ, வேறு என்ன நோக்கத்துடன் வருகிறானோ, தெரியவில்லை. நான் இருக்கும் அறை வாசலில் வந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிறான். யார் என்று பார்க்க அருகில் சென்றால் மறைந்து விடுகிறான். என்னுடைய அறைக்குப் போகவே பயமாயிருக்கிறது. உங்களுடனேயே சில நாள் நான் இருந்து விடட்டுமா?" என்று கேட்டான்.

"பேஷாக இரு, அப்பனே! ஆனால் உன்னுடைய பயம் வீண் பயமாகவும் இருக்கலாம் அல்லவா? யாரோ உன்னைப் பின் தொடர்வதாக நீ நினைப்பது வெறும் பிரமையாக இருக்கலாம் அல்லவா? இந்த மாதிரி பிரமை சில சமயம் நல்ல அறிவாளிகளுக்கும் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் ஒரு பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் ஆராய்ச்சியில் சிறந்த அறிஞர் என்று பிரசித்தி பெற்றவர். ஆனால் உலகமெல்லாம் தம் பெயரைக் கெடுப்பதற்குச் சதியாலோசனை செய்வதாக அவருக்கு ஒரு பிரமை. இரண்டு பேர் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால், உடனே, 'பார்த்தாயா? அவர்கள் என்னைப் பற்றித் தான் ஏதோ அவதூறு பேசுகிறார்கள்! அவர்கள் பேரில் வழக்குத் தொடர வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். அம்மாதிரி நீயும் ஆகிவிடக்கூடாது..."

இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ரங்கபாஷ்யம், என் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, அறையின் பலகணி வழியாக வெளியே பார்க்கப் பண்ணினான். அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் வீதி விளக்கின் வெளிச்சம் விழாத ஒரு கம்பத்தின் மறைவில் யாரோ ஒரு ஆள் நிற்பது தெரிந்தது.

"யாரோ ஒரு மனிதன் சந்தேகாஸ்பதமாகத்தான் மறைந்து நிற்கிறான். அதனால் என்ன? காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்கலாம் அல்லவா?" என்றேன்.

சில நாளைக்குப் பிறகு மாலதி நடித்த நாடகம் எழுதிய தினகரனை நான் சந்திக்க நேர்ந்தது. அவன் என்னோடு வலியப் பேச்சுக் கொடுத்தான். "உங்களோடு ஒருவர் நாடகத்துக்கு வந்திருந்தாரே அவர் பெயர் என்ன?" என்று கேட்டான்.

"ரங்கபாஷ்யம்" என்று சொன்னேன்.

"அது அவருடைய உண்மைப் பெயர் அல்ல!" என்று சொல்லி என்னைத் திடுக்கிடச் செய்தான்.

"எதனால் சொல்கிறீர்?" என்றேன்.

"உங்களுக்கு எத்தனை நாளாக அவரைத் தெரியும்?"

"சுமார் ஒரு வருஷ காலமாகத் தெரியும்."

"அப்படித்தான் இருக்குமென்று நானும் நினைத்தேன். இதோ இந்த குரூப் போட்டோ வில் உள்ள இந்த படத்தைப் படத்தைப் பாருங்கள். இதன் கீழே எழுதியிருக்கும் பெயரையும் படித்துப் பாருங்கள்" என்றான் தினகரன்.

அவன் சுட்டிக் காட்டிய உருவம் கொஞ்சம் ரங்கபாஷ்யத்தின் சாயலாக இருந்தது. கீழே கே.ஆர். ராமானுஜம் என்ற பெயரும் போட்டிருந்தது. ஆனால் ஒரு குரூப் போட்டோ வில் உள்ள சிறிய மங்கலான உருவத்தைக் கொண்டு நிச்சயமாக என்ன முடிவு செய்துவிட முடியும்?

"இதிலிருந்து எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்படியேயிருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் அதைப்பற்றி என்ன கவலை? பெயரை மாற்றிவைத்துக் கொள்ள ஒருவர் இஷ்டப்பட்டால், அதை நாம் எப்படி தடுக்க முடியும்?" என்று கேட்டேன்.

"அதற்காகச் சொல்லவில்லை, ஸார்! ஆள் மாறாட்டம் செய்து ஒரு அபலைப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திக் கொள்வது என்றால், இது மிகவும் மோசமான காரியம் இல்லையா? அப்படிப்பட்ட ஈனச் செயலைத் தடுப்பது நம்முடைய கடமை இல்லையா?" என்றான்.

"எனக்கு வேறு பல கடமைகள் இருக்கின்றன. இப்போது இதை ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை" என்று சொல்லிப் பேச்சை வெட்டினேன்.

ஆனால் என் மனம் ஓரளவு நிம்மதியை இழந்து விட்டது.

7[தொகு]

இன்னொரு நாள் ரங்கபாஷ்யம் வந்தான். முகம் அடைந்திருந்த மாறுதலைச் சொல்லி முடியாது. அன்று ஆகாச விமானப் பிரயாணத்தில் அவனைப் பார்த்த போதிருந்த பால்வடியும் முகம் எங்கே? பீதி நிறைந்த பிரம்மஹத்தி கூத்தாடிய இப்போதைய முகம் எங்கே?

அவனைப் பார்த்ததும் நானே பேச்சை ஆரம்பித்து விட்டேன். "என்னடா அப்பா! மாலதி கடைசியில் கையை விரித்து விட்டாளா? ஏன் இவ்வளவு சோகம்?" என்றேன்.

"இல்லை, இல்லை! மாலதி என்னை மணந்து கொள்ளத் தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டாள். ஏதோ ஒரு முக்கியமான பொறுப்பு அவளுக்கு இருக்கிறதாம். அதை நிறைவேற்றும் வரையில் சில நாள் பொறுத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதற்குள் இந்தப் பேரிடி என் தலையில் விழுந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டே, ஒரு பத்திரிகைத் துணுக்கை எடுத்து நீட்டினான்.

அதில் பின் வருமாறு எழுதியிருந்தது:-

"ஸ்ரீ மருதாசலம் செட்டியாரின் கம்பெனியில் மானேஜர் வேலை பார்க்கும் ரங்கபாஷ்யத்துக்கு எச்சரிக்கை. அவன் மிஸ் மா... என்னும் பெண்ணை மறந்துவிட்டு ஒரு வாரத்திற்குள் சென்னைப் பட்டணத்தை விட்டுப் போய்விட வேண்டியது. அப்படிப் போகாவிட்டால், அவனுடைய பூர்வாசிரமத்துப் பெயரையும் மோசடிகளையும் பற்றித் தக்க ஆதாரங்களுடன் இந்தப் பத்திரிகையில் அம்பலப்படுத்தப்படும். ஜாக்கிரதை!"

இதைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்தது. இதற்காகவா இப்படி இவன் மிரண்டு விட்டான்?

"இந்த மாதிரி ஆபாசப் பத்திரிகைகளை நீ ஏன் வாங்கிப் பார்க்கிறாய்? பார்த்து மனதைக் குழப்பிக் கொள்ளுகிறாய்? உனக்கு வேறு வேலை கிடையாதா?" என்று கேட்டேன்.

"நான் வாங்கவில்லை. இதை மெனக்கெட்டுப் பத்திரிகையிலிருந்து வெட்டி யாரோ எனக்கு தபாலில் அனுப்பியிருக்கிறான். இதை எழுதிய ஆளாகவேதான் இருக்க வேண்டும்" என்றான்.

"இப்படிப்பட்டவர்களின் யுக்தியே இதுதான். அதில் நீ ஏன் விழுந்துவிட வேண்டும்? சுக்குநூறாய்க் கிழித்தெறிந்துவிட்டு நிம்மதியாக உன் வேலையைப் பார்! பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் பொதுக் காரியங்களைப் பற்றி விமர்சனம் எழுதுவது பத்திரிகை தர்மம், அதற்கு மாறாகத் தனிப்பட்ட மனிதர்களின் குட்டை விடுவதாகச் சொல்லுகிறவர்கள் பத்திரிகைக்காரர்களே அல்ல. இதையெல்லாம் படிப்பதும் பிசகு; காதில் போட்டுக் கொள்வதும் பிசகு! இப்படிப்பட்ட அவதூறுகளினால் உனக்கு கெடுதல் ஒன்றும் நேர்ந்துவிடாது தைரியமாயிரு!"

இவ்வாறு கூறிச் சில உதாரணங்களும் எடுத்துக் காட்டினேன். தமிழ் நாட்டில் சில பிரமுகர்களைப் பற்றி என்னவெல்லாமோ வாயில் வைத்துச் சொல்லத் தகாத ஆபாச அவதூறுகள், சில கந்தல் பத்திரிகைகளில் வெளி அந்தன. அதனாலெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்கு என்ன குறைந்து போய்விட்டது? ஒன்றுமில்லை என்பதை எடுத்துச் சொன்னேன்.

அதற்கு ரங்கபாஷ்யம் சொன்ன பதில் என்னை உண்மையில் திணறித் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

"அந்தப் பிரமுகர்களைப் பற்றியெல்லாம் எழுதியவற்றில் உண்மை இருந்திராது. ஆகையால் அவர்கள் கவலையற்று நிம்மதியாயிருந்தார்கள். ஆனால், என் விஷயத்தில் இதில் எழுதியிருப்பது உண்மையாயிற்றே! நான் எப்படி நிம்மதியாயிருக்க முடியும்?" என்றான்!

பிறகு நான் நயமாகப் பேசி வற்புறுத்திக் கேட்டதன் பேரில் அவன் தனது பூர்வக் கதையைக் கூறினான்:-

ரங்கபாஷ்யத்தின் உண்மைப் பெயர் இராமானுஜம். அவன் கல்கத்தாவில் ஒரு பெரிய முதலாளியிடம் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்த்து வந்தான்.

முதலாளி பல தொழில்களில் ஈடுபட்டவர். அதோடு யுத்த காண்டிராக்டுகளும் எடுத்திருந்தார். அவருக்குச் சில எதிர்பாராத பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன. இதனால் முறை தவறான காரியங்கள் சிலவற்றை செய்துவிட்டார். எஜமான விசுவாசம் கருதி அதற்கெல்லாம் ராமானுஜமும் உடந்தையாயிருக்க நேர்ந்தது. உண்மையில் மோசடி ஒன்றும் இல்லையென்றும் எல்லாம் சில நாளில் சரிப்படுத்தப்படும் என்று முதலாளி உறுதி சொன்னதை நம்பினான். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவன் நம்பியதெல்லாம் பொய்யாகிவிட்டது. முறைத் தவறுகளும் ஊழல்களும் வெளியாகிவிட்டன. அந்த ஊழல்களில் முதலாளி காண்ட்ராக்டரைத் தவிர பெரிய பெரிய ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர்கள், என்ஜினீயர்கள் ஆகியோரும் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் செல்வாக்கின் காரணமாகத் தப்பித்துக் கொண்டார்கள். அதற்கெல்லாம், பாவம், இராமனுஜமே பொறுப்பாக்கப்பட்டான். அவனைக் கைது செய்து விசாரணையும் நடந்தது. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறவில்லை. இராமனுஜத்தின் பேரில் குற்றம் ருசுவாகி, அவனுக்கு இரண்டு வருஷம் சிறைத் தண்டனை கிடைத்தது!

சிறையில் ஒன்றரை வருஷம் கழித்த பிறகு, இந்தியா தேசம் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திர நன்னாளில், புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் மந்திரிகள் சிறைக் கைதிகள் சிலருக்கு விடுதலை அளித்தார்கள். இராமானுஜத்தைப் பற்றிச் சிறை அதிகாரிகள் மிக நல்ல அறிக்கை அனுப்பியிருந்தபடியால், இராமானுஜமும் விடுதலை பெற்றான். சென்னைக்கு வந்து முற்றும் புதிய வாழ்க்கை தொடங்கினான். மோசடி வழக்கில் அடிபட்ட பழைய பெயர் வாழ்க்கையில் வெற்றிக்கு இடையூறாயிருக்கலாம் என்று கருதிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டு ஸ்ரீ மருதாசலம் செட்டியார் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தான். அவனுடைய பொருளாதார அறிவின் காரணமாக அதிசீக்கிரத்தில் உயர்ந்த நிலைமைக்கு வந்தான். புதிய முதலாளியான செட்டியார் தமது தொழில்களின் முழுப் பொறுப்பையும் அவனிடமே பூரணமாக நம்பி விட்டிருந்தார். பழைய கல்கத்தா வாழ்க்கையும் அதில் ஏற்பட்ட அனுபவங்களும், ஒரு பயங்கரமான கனவு என்று எண்ணி ரங்கபாஷ்யம் அதையெல்லாம் மறந்து விட்ட சமயத்தில் இந்தப் பேரிடி அவன் தலையில் விழுந்து விட்டது.

யாரோ ஒரு கிராதகன் அவனுடைய பழைய வாழ்க்கையைத் தோண்டி எடுத்து அதன் சம்பவங்களை அம்பலப்படுத்தவும் தயாராயிருந்தான் என்று ஏற்பட்டது!

மேலே கண்ட சோகக் கதையைக் கூறிவிட்டு ரங்கபாஷ்யம் சொன்னதாவது:

"நான் மோசடி வழக்கில் தண்டனை அடைந்த கைதி என்பது வெளியானால் கம்பெனி முதலாளி என்னை உடனே அனுப்பி விடுவார். மாலதியும் என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை. அவள் மனது புண்ணாகும்! எனக்கும் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க இனித் தைரியம் உண்டாகாது. ஆகையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் பெங்களூருக்குப் போய் விடுவது என்று தீர்மானித்திருக்கிறேன். என்னுடைய பெங்களூர் விலாசம் உங்களுக்கு மட்டும் தெரிவிக்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லவில்லை என்று உறுதியளிக்க வேண்டும்! ஏதாவது முக்கிய விஷயம் இருந்தால் மட்டும் எனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றான் ரங்கபாஷ்யம்.

அவன் மோசடி வழக்கில் அநீதிக்கு ஆளானதைப் பற்றிக் கூறியதை நான் பரிபூரணமாக நம்பினேன். இம்மாதிரி பொய் முதலாளிகள் செய்த குற்றங்களுக்குச் சம்பள ஊழியர்களைப் பொறுப்பாக்கிய வேறு சில சம்பவங்களும் அறிந்திருந்தேன். பிற்பாடு அம்முதலாளிகளே அகப்பட்டுக் கொண்டதைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே, ரங்கபாஷ்யத்திடம் உண்மையில் எனக்கு அநுதாபந்தான் உண்டாயிற்று.

"இது என்ன, பைத்தியம்! உன்னிடம் மாலதில் உண்மைக் காதல் கொண்டிருப்பது உண்மையானால், இதற்காக அவள் மனதை மாற்றிக் கொள்வாளா? உன் கம்பெனி முதலாளியைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் மாலதி அத்தகைய நீசகுணம் உள்ளவள் அல்ல என்று நிச்சயமாய்ச் சொல்லுவேன். உன்னுடைய உண்மை நிலையை அறிந்தால் அவள் உன்னிடம் கொண்ட அன்பு அதிகமேயாகும்" என்றேன்.

"தயவு செய்து மன்னியுங்கள்! இத்தகைய பழியோடு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்க என்னால் முடியவே முடியாது!" என்றான் ரங்கபாஷ்யம்.

அவனுடைய முடிவை மாற்றச் செய்ய நான் பட்ட பிரயாசை எல்லாம் விழலுக்கு இறைத்த நீராயின. மாலதி அவனிடம் அத்தகைய சலனமற்ற உறுதியான காதல் கொண்டிருந்ததாகவும் அவன் நம்பவில்லையென்றும் தெரிந்தது; அவளுடைய மனதில் ஏற்கனவே தயக்கம் இருந்தது; அந்தத் தயக்கத்தைப் பலப்படுத்தி அவனை நிராகரிக்கும்படி செய்ய இந்தப் பழைய துரதிஷ்ட சம்பவம் போதுமானதல்லவா? "எல்லம் விதியின்படி நடக்கும்" என்று விதிமேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ரங்கபாஷ்யம் கூறியதற்கு உடன்பட்டேன். பாவம்! அவன் பட்ட வேதனையை என்னால் ரசிக்க முடியவில்லை. காலமும் கடவுளுந்தான், அவனுடைய துன்பத்தைப் போக்கி நிம்மதி அளிக்க வேண்டும்.

8[தொகு]

ரங்கபாஷ்யம் பெங்களூருக்குப் போன பிறகு பல தடவை மாலதி என்னுடன் டெலிபோனில் பேசி அவனைப்பற்றி ஏதாவது தகவல் தெரியுமா என்று கேட்டாள். நானும் அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியை எண்ணித் "தெரியாது" என்றே சொல்லி வந்தேன். ஒரு நாள் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றாள். என்னுடைய பிரம்மச்சாரி அறைக்கு அவளை வரச் சொல்ல இஷ்டப்படாமல் நானே அவளுடைய ஜாகைக்குப் போனேன். அப்போதுதான் அவள் மனதில் ஒரு பகுதியை நான் அறிந்து கொள்ள முடிந்தது. ரங்கபாஷ்யத்திடம் அவள் உண்மையான காதல் கொண்டிருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. நாடகத்தை எழுதிய தினகரனை அவள் வெறுத்தாள் என்பதிலும் ஐயமில்லை. "என் தந்தை காலமானபோது எனக்கு ஒரு பணி இட்டுவிட்டுப் போனார். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காகவே காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் உங்கள் சிநேகிதர் என்ன நினைத்தாரோ, என்னமோ தெரியவில்லை தகவல் தெரிவிக்காமல் எங்கேயோ போய்விட்டார். இந்தப் போக்கிரி தினகரன் அவரிடம் ஏதாவது பொய்யும் புளுகும் சொல்லியிருப்பானோ என்றுகூட சந்தேகிக்கிறேன். இப்படியெல்லாம் உலகத்தில் விஷமக்காரர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் பேச்சையெல்லாம் நம்பி விடலாமா? இப்படி உங்கள் சினேகிதர் செய்து விட்டாரே? இனி என் வாழ்க்கை பாழானது போலத்தான்! நான் பெரிய துரதிஷ்டக்காரி!" என்று மாலதி சொல்லிப் பொலபொலவென்று கண்ணீர் உகுத்தாள்.

அவளுடைய துயரத்தைத் தீர்க்கும் சக்தி என்னிடம் இருந்தது. ஆனால் அதை உடனே பிரயோகித்துவிட நான் விரும்பவில்லை. மேலும் அவள் மனதை நன்றாய் அறிந்து கொள்ள விரும்பினேன். ரங்கபாஷ்யத்தின் பூர்வோத்திரத்தை அறிந்த பிறகும் இதே மனோபாவம் அவளுக்கு இருக்குமோ என்னமோ, யார் கண்டது? அதைப்பற்றி உடனே சொல்லிப் பரீட்சை பார்க்கவும் நான் விரும்பவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடிக்க எண்ணினேன். ஆனால் தினகரனைப் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்து வைத்தேன்.

"அவன் என் தாயார் வழியில் கொஞ்சம் தூரத்து உறவு. அந்த உரிமையை கொண்டாடி என்னைத் தொல்லைப் படுத்துகிறான். என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று நம்பி, அதைப் பறிக்கப் பார்க்கிறான். ஆனால் பணம் என்னுடையதல்ல என்பது அவனுக்குத் தெரியாது. சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான். ஒரு நாள் அவனை நன்றாய்த் திட்டிப் பாடம் கற்பித்து விரட்டிவிடப் போகிறேன். அப்புறம், இந்தப் பக்கமே வரமாட்டான்" என்றாள்.

தினகரனைப் பற்றிய வரையில், மாலதி பரிபூரண வெறுப்புக் கொண்டிருந்தாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுவே ஓரளவு எனக்குத் திருப்தியையும் மனச்சாந்தியையும் அளித்தது.

மற்றொரு நாள் அந்தக் கிராதகன் தினகரன் என்னைத் தேடி வந்தான். ரங்கபாஷ்யத்தைப் பற்றி விசாரித்தான். "தகவல் தெரியாது" என்றேன். "அது என்ன திடீரென்று மறைந்துவிட்டான்? காரணம் ஏதேனும் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது" என்றேன். "எனக்குத் தெரியும்!" என்று சொல்லி ரங்கபாஷ்யம் காட்டிய அதே பத்திரிகைத் துணுக்கின் இன்னொரு பிரதியை என்னிடம் காட்டினான். "இதனால்தான் அந்த மோசக்காரன் ஓடிப் போயிருக்க வேண்டும்!" என்றான்.

தனி மனிதர்களின் சொந்த வாழ்க்கையைப்பற்றி எழுதுவதையே தொழிலாகக் கொண்ட பத்திரிகைகளைப்பற்றி நான் பலமாய்த் திட்டிக் கண்டித்தேன்.

"அதெல்லாம் இருக்கலாம்; ஆனாலும் அவனுடைய தலைக்கு இது தகுந்த குல்லா என்பதில் சந்தேகமில்லை. ஆகையினால்தான் மாலதியிடம் சொல்லிக் கொள்ளாமலும் விலாசம் கூடத் தெரிவிக்காமலும் இந்த ஊரைவிட்டே ஓடிப் போய்விட்டான்!" என்றான் தினகரன்.

தினகரனை மேலும் ஆழம் பார்க்க எண்ணி, "அப்படியானால் மாலதி விஷயத்தில் உங்களுக்கு ஒரு போட்டி ஒழிந்தது என்று சொல்லுங்கள்!" என்றேன்.

"ஆனாலும் ஸ்திரீகளின் விஷயமே விசித்திரமானது. இன்னும் அந்த மோசக்காரனிடமே அவள் ஈடுபட்டிருக்கிறாள். அவன் எங்கே போனான் என்று என்னை விசாரிக்கச் சொல்லுகிறாள். நன்றாயிருக்கிறதல்லவா? ஆனால் இன்னும் இந்தப் பத்திரிகையின் விஷயம் அவளுக்குத் தெரியாது. இன்றைக்குச் சொல்லப் போகிறேன்!" என்றான்.

"இந்த மாதிரி எச்சரிக்கை இப்பத்திரிகையில் எழுதி வெளியிட்டது யார்? நீர் தானா?" என்று கேட்டேன்.

"நான் இல்லை; என்னைப் போலவே ரங்கபாஷ்யத்தின் மோசடியை வெளிப்படுத்துவதில் சிரத்தையுள்ள வேறு யாரோ இருக்க வேண்டும். ஆனால் இதிலுள்ள விஷயம் உண்மை என்பதில் சந்தேகமில்லை. எனக்கே நன்றாய்த் தெரியும். உங்களிடம் தான் முன்னமே சொல்லி இருக்கிறேனே? கொஞ்சம் இருந்த சந்தேகமும் அவன் ஓடிப்போனதிலிருந்து நீங்கிவிட்டது!" என்றான்.

"அப்படியானால் மாலதியிடம் இதை பற்றிச் சொல்லத்தான் போகிறீராக்கும்?" என்று கேட்டேன்.

"இப்பொழுது நேரே அவள் வீட்டுக்குத்தான் போகிறேன்!" என்றான் தினகரன்.

அவன் மாலதியைப் பார்ப்பதன் விளைவு என்ன ஆகப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

9[தொகு]

மறுநாளைக்கு மாலதியே என்னைத் தேடிக் கொண்டு என் அறைக்கு வந்துவிட்டாள். "உங்கள் சினேகிதரை எப்படியாவது உடனே கண்டு பிடிக்க வேண்டும். முக்கியமான காரியம் இருக்கிறது. பத்திரிகையில் விளம்பரம் போட்டு பார்க்கலாமா?" என்றாள்.

"பத்திரிகையில் போடுவதனால் பயன் ஒன்றும் ஏற்படாது. நானே வேறுவிதத்தில் தேடிக் கண்டு பிடிக்கப் போகிறேன். ஆனால் அப்படிப்பட்ட முக்கியமான விஷயம் என்ன? எனக்குத் தெரியப்படுத்தலாமா?" என்று கேட்டேன்.

"உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான்! இல்லாவிட்டால் அவரைக் கண்டு பிடிப்பதில் எனக்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்கள்!" என்றாள் மாலதி.

மாலதி கூறியதிலிருந்து நேற்று தினகரன் என்னைப் பார்த்த பிறகு நேரே மாலதியைச் சந்திக்கச் சென்றான் என்று தெரிந்தது. சந்தித்து, மேற்படி பத்திரிக்கைத் துணுக்கை அவளிடம் காட்டினான். மோசடி வழக்கில் இரண்டு வருஷம் தண்டனையடைந்தவன் ரங்கபாஷ்யம் என்றும் அதனாலேயே இந்த விளம்பரத்தைக் கண்டதும் ஓடி மறைந்துவிட்டான் என்றும் தெரிவித்தான்.

ஆனால் இதன் மூலம் அவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதற்கு நேர் விரோதமான பலன் தான் உண்டாயிற்று.

"அந்த மோசடி வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?" என்று மாலதி கேட்டாள்.

"நீ கேட்டதனாலே சொல்லுகிறேன். கல்கத்தாவிலே உன் தகப்பனார் நடத்திய கம்பெனியில் வேலை பார்த்தவன் தான் இவன். அந்தக் கம்பெனி வேலையிலே தான் மோசடி செய்துவிட்டான். நீ அப்போது 'கான்வென்ட்' பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாய். உனக்கு ஒன்றும் தெரியாது. உன் தந்தை இவனை முழுதும் நம்பிக் கம்பெனிப் பொறுப்புகளையெல்லாம் ஒப்புவித்திருந்தார். நம்பியவருக்குத் துரோகம் செய்துவிட்டான். இவனுடைய வழக்கு கல்கத்தாவில் நடந்தபோது தற்செயலாக நான் கல்கத்தா வந்திருந்தேன். உன் தந்தையுடன் கோர்ட்டுக்கே போயிருந்தேன். இரண்டு வருஷம் சிறைத் தண்டனை இவனுக்குக் கிடைத்தது. தண்டனை முடிந்த பிறகு இங்கு வந்து பெயரை மாற்றி வைத்துக் கொண்டு காலட்சேபம் நடத்தி வருகிறான். இப்போது பார்க்கும் வேலையிலும் என்னென்ன மோசம் செய்து வந்தானோ தெரியாது. இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அவன் தலைமறைவாகி விட்டதிலிருந்தே அவன் யோக்கியதை தெரியவில்லையா?" என்று தினகரன் சாங்கோ பாங்கமாக ரங்கபாஷ்யத்தின் மீது புகார்களைக் கொட்டி அளந்தான்.

அவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த மாலதி கடைசியில், "இந்தப் பத்திரிகை விளம்பரம் நீங்கள் தான் போட்டீர்களா?" என்று கேட்டாள்.

"ஆமாம்; நான் தான் போட்டேன். உண்மையைச் சந்தேகமறத் தெரிந்து கொள்வதற்காகப் போட்டேன். அதற்குப் பலன் கிடைத்துவிட்டது. ஆசாமி இந்த ஊரைவிட்டே கம்பி நீட்டிவிட்டான், பார்!" என்றான் தினகரன்.

"ஆனாலும் உம்மைப் போன்ற நீச குணமுள்ளவனை நான் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை!" என்றாள் மாலதி.

இதைக் கேட்ட தினகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மாலதியின் போக்கு அவனுக்குப் புரியவில்லை. பிறகு மாலதி நன்றாகப் புரியும்படி சொன்னாள்:

"ஏதோ ஒருவன் துரதிஷ்டத்தினால் கஷ்டத்துக்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கை நடத்த முயற்சிக்கலாம். இம்மாதிரி மெனக்கெட்டு ஒருவருடைய பூர்வோத்திரங்களை அறிந்து பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்துவது போன்ற சண்டாளத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? உம்முடைய முகத்திலேயே இனி நான் விழிக்க விரும்பவில்லை. என்னைப் பார்க்க வேண்டாம்!" என்று கண்டிப்பாகச் சொல்லித் தினகரனை அனுப்பி விட்டாள். தினகரனும் பெண் குலத்தின் முட்டாள்தனத்தையும் இழி குணத்தையும் ஒரு அத்தியாயம் நிந்தித்து விட்டுப் போய்விட்டான்.

பிறகுதான் மாலதி என்னைத் தேடி வந்தாள். "ரங்கபாஷ்யத்தை உடனே பார்த்தாக வேண்டும். என்னால் அவ்ருக்கு நேர்ந்த கஷ்டத்துக்கு அவரிடம் கட்டாயம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும்!" என்றாள்.

"நீங்கள் மன்னிப்புக் கேட்பானேன்? எதற்காக?" என்றேன் நான்.

"என் காரணமாகத்தானே அவருக்குத் தினகரன் இத்தகைய கஷ்டத்தை உண்டாக்கினான்? அவர் ஊரை விட்டு ஓடும்படியாயிற்று? இதைத் தவிர இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது!" என்று மாலதி கூறினாள்.

அந்த முக்கியமான இன்னொரு காரணத்தைக் கேட்ட பிறகு என்னுடைய தயக்கம் தீர்ந்து விட்டது. பெங்களூருக்கு நானே மாலதியை அழைத்துச் செல்வது என்று தீர்மானித்தேன்.

10[தொகு]

பெங்களூர் மெயில் துரிதமாய்ப் போய்க் கொண்டிருந்தது. வெளியில் காற்றும் மழைத் தூற்றலுமாயிருந்தபடியால் ரயிலின் கண்ணாடிக் கதவுகள் மூடப்பட்டிருந்தான். அந்தக் கதவுகளில் சளசள வென்று தூற்றல் அடித்துச் சொட்டுச் சொட்டாய் ஜலம் வடிந்து கொண்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் விஷயம் என்னவென்பதை வாசகர்களுக்குத் தெரிவித்து விடுகிறேன்.

இராமானுஜம் கல்கத்தாவில் எந்த முதலாளியிடம் வேலை பார்த்து வந்தானோ அந்த முதலாளிதான் மாலதியின் தந்தை. இராமனுஜம் சிறை சென்ற பிறகு அவருடைய கம்பெனி பலவிதக் கஷ்டங்கள் அடைந்து நஷ்டமாகி வந்தது. தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன் கல்கத்தாவில் நடந்த பயங்கர கலவரத்தில் அவருடைய கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போயிற்று. தேசம் சுதந்திரம் பெற்றவுடன் கல்கத்தாவில் ஏற்பட்ட டாக்டர் பி.சி. கோஷின் கடுமையான ஆட்சியில் கள்ள மார்க்கெட் வியாபாரம் அடியோடு படுத்து விட்டது.

இதனாலெல்லாம் மாலதியின் தந்தை நோயில் விழுந்து படுத்த படுக்கையானார். டாக்டர்களும் கையை விரித்து விட்டார்கள். இறுதிக் காலத்தில் அவருடைய மனசாட்சி அவரை மிகவும் உறுத்தியது. முக்கியமாகத் தம்மைப் பூரணமாக நம்பி விசுவாசத்துடன் வேலை செய்த இராமனுஜத்துக்குச் செய்த அநீதி அவருடைய நெஞ்சில் பெரும் பாரமாக அழுத்தியது. அவனைக் கண்டு பிடிக்க அவர் ஆனமட்டும் முயன்றும் முடியவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவன் வேறு பெயர் வைத்துக் கொண்டு விட்டான் அல்லவா? தம் அருமை மகளாகிய மாலதியிடம் விஷயத்தைச் சொல்லி, "எப்படியாவது இராமனுஜத்தைக் கண்டுபிடித்து, இந்தக் கடிதத்தைச் சேர்ப்பிக்க வேண்டும்" என்று ஒப்புவித்தார். தான் அவனுக்குச் செய்த தீங்குக்குப் பரிகாரமாகப் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துவிட்டுப் போனார்.

ரங்கபாஷ்யம் என்கிற இராமனுஜம் கடிதத்தைப் படித்து முடித்ததும் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு என்னைப் பார்த்து, "ஸார்! அந்தப் புண்ணியவான் என்னை இவ்வளவு கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டு அவ்வளவையும் பத்தாயிரம் ரூபாயினால் துடைத்து விடலாம் என்று பார்க்கிறார்! இந்தாருங்கள்! இந்தப் பணத்தை அவருடைய செல்லக் குமாரியிடமே கொடுங்கள்!" என்று உறையோடு எடுத்தெறிந்தான்.

அப்போது மாலதி தான் பெண் என்பதைக் காட்டிவிட்டாள். கலகலவென்று அவள் கண்ணீர் பெருக்கி விம்மினாள்.

அதைப் பார்த்த இராமானுஜம் எழுந்து அவள் அருகில் ஓடிவந்தான். ஆனால் அருகில் வந்ததும் இன்னது செய்வதென்று தெரியாமல் அவனும் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டான்.

அவர்கள் ஒருவரையொருவர் சமாதானப்படுத்திக் கொள்ளட்டும் என்று வெளியேறப் பார்த்தேன்.

"ஸார்! ஸார்! கொஞ்சம் இருங்கள்!" என்றான் இராமனுஜம்.

நான் தயங்கி நின்றேன்.

கண்களைத் துடைத்துக் கொண்டு, "சொல்வதைப் பூராவும் சொல்வதற்கு முன் அழுதால் நான் என்ன செய்கிறது? இவளுடைய அப்பா எனக்குச் செய்த தீங்குக்கெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டுமானால் அதற்கு வேறு வழி இருக்கிறது. விலையில்லாச் செல்வமாகிய அவருடைய பெண்ணை எனக்குக் கலியாணம் செய்து கொடுக்க வேண்டும்! அதற்குச் சம்மதமா என்று இவளைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றான் இராமானுஜம்.

மாலதியும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு "அது எப்படி ஸார், முடியுமா? சுதந்திர பாரத நாட்டில் பெண்களுக்கு மட்டும் சுதந்திரம் இல்லையா?..." என்றாள்.

"அப்படியானால் மெனக்கெட்டு எதற்காக என்னைத் தேடி வரவேண்டும்? இந்தப் பணம் யாருக்கு வேண்டும்? இதை எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள்!" என்றான் இராமானுஜம்.

"சொல்வதை முழுதும் கேட்பதற்குள் எதற்காக இவர் அவசரப்படுகிறார்? ஸார்... நான் தான் என் சொந்த இஷ்டத்தினால் என் சுதந்திரமாக இவருக்கு என்னைக் கொடுத்து விட்டேனே...? என் தகப்பனார் எப்படி என்னை இவருக்குக் கொடுக்க முடியும்?" என்றாள் மாலதி.

அவர்களை விட்டுவிட்டு நழுவுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று நான் வெளியேறினேன்.

ஒரு மாதத்துக்கு முன்பு இராமானுஜம் தம்பதிகளைப் பார்த்தேன். பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது ஆசிரியர் தினகரனைப் பற்றியும் பேச்சு வந்தது. அவனை இரண்டு பேரும் சேர்ந்து நிந்தித்ததை என்னால் பொறுக்கவே முடியவில்லை.

"எதற்காக அந்த அப்பாவியைத் திட்டுகிறீர்கள்? அவன் பத்திரிகையில் அநாமதேயக் கடிதம் விடுத்ததனால் தானே நீங்கள் இன்று இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்?" என்றேன்.

"அநாமதேயக் கடிதம் அவனா எழுதினான்? அழகுதான்!" என்றாள் மாலதி.

திடீரென்று என் மனதில் ஒரு பீதி உண்டாயிற்று. ஒரு வேளை நான் அந்தக் கடிதத்தை எழுதினதாக இவர்கள் சந்தேகப்படுகிறார்களோ என்று.

"பின் யார் எழுதியது? வேறு யாரையாவது சந்தேகிக்கிறீர்களா என்ன?" என்று கேட்டேன்.

"சந்தேகிக்கவில்லை ஸார்! யார் எழுதியது என்று நிச்சயமாய்த் தெரியும்" என்றாள் மாலதி.

இன்னும் அதிக பீதியுடன், "யார் தான் எழுதியது! உனக்கு அது எப்படி நிச்சயமாய்த் தெரியும்?" என்று கேட்டேன் நான்.

"நான் தான் எழுதினேன். அது எனக்கு நிச்சயமாய்த் தெரியாமல் எப்படி இருக்க முடியும்?" என்றாள் மாலதி.

இந்தச் சுதந்திர யுகத்துப் புதுமைப் பெண்கள் என்ன செய்வார்கள், என்ன செய்யமாட்டார்கள் என்று யார் தான் நிச்சயமாய்ச் சொல்ல முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=மாலதியின்_தந்தை&oldid=484408" இலிருந்து மீள்விக்கப்பட்டது