மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/மங்களம் சொன்ன கோகிலம் கதை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மங்களம் சொன்ன
கோகிலம் கதை

‘மயிலையம்பதி, மயிலையம்பதி’ என்று சொல்லா நின்ற ஊரிலே இவருக்கு ஓர் அருமைத் தங்கை இருந்தாள். அவள் 'கோகிலம், கோகிலம்’ என்று ஒரு பெண்ணைப் பெற்று வைத்துவிட்டுக் கண்ணை மூடினாள். அவள் அப்பா இரண்டாந்தாரமாக ஓர் இளம் பெண்ணை மணக்க, அந்தப் பெண்ணுக்கும் இந்தப் பெண்ணுக்கும் ஒத்து வராமற் போக, ‘கொடுமை, கொடுமை! சித்தியின் கொடுமையை என் தங்கையின் பெண்ணால் தாங்க முடியவில்லை!' என்று இவர் அவளை அழைத்துக்கொண்டு இங்கே வந்தார். நான் அப்போதே சொன்னேன், 'இங்கே ஒரு பையன் இருக்கிறான்; அவனுடன் இவள் இருக்கவேண்டாம்' என்று. இவர் கேட்கவில்லை; அதன் பலன் என்னவாகியிருக்கும் என்பதை இந்தக் காலத்தில் ஒருவர் சொல்லியா இன்னொரு வருக்குத் தெரியவேண்டும்? அதுதான் எல்லோருக்கும் தெரிந்த கதையாயிருக்கிறதே? அந்தக் 'காதல் கதை' இங்கேயும் உருவாயிற்று. 'படிப்பு முடிவதற்கு முன்னால் காதல் என்ன வேண்டியிருக்கிறது காதல்!' என்று நினைத்த நான், அவர்களுடைய காதலுக்கு எவ்வளவு தூரம் முட்டுக்கட்டை போட முடியுமோ, அவ்வளவு தூரம் முட்டுக்கட்டை போட்டேன்; பலன் இல்லை. 'ஒன்று, அவளைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டுவிடுங்கள்; விடாவிட்டால் அவளுக்கு உடனே வேறு யாராவது ஒருவனைப் பார்த்து கலியாணமாவது செய்து வைத்துவிடுங்கள்!' என்றேன். இவருக்கோ அவளைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட விருப்பமில்லை. ஆகவே, இவர் அவளுக்கு ஏற்றாற்போல் ஒரு பையனைத் தேடினார், தேடினார், அப்படித் தேடினார். கடைசியில் யாரோ ஒருவன் கிடைத்தான். அவனுக்கும் அவளுக்கும் இவர் கலியாணம் செய்து வைக்கப் போக, அந்தக் கலியாணத்தன்று, 'உங்கள் பிள்ளை இந்தப் பெண்ணோடு ஏற்கனவே உறவு கொண்டிருந்தானாமே, அதை மறைத்து என் பிள்ளையின் கழுத்தில் இவளைக் கட்டப்பார்த்தீர்களே?' என்று சம்பந்தி வீட்டார் தங்களுக்கு வந்த 'மொட்டைக்கடிதம்’ ஒன்றைக் கொண்டு வந்து இவரிடம் நீட்டி மல்லுக்கு நிற்க, மணமகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மணமகன் சொல்லிக்கொள்ளாமல் எழுந்து நடையைக் கட்ட, 'அவமானம், அவமானம்!' என்று துள்ளிக் குதித்த இவர், நான் என்ன சொல்லியும் கேட்காமல் தம்முடைய மகன்கையில் தாலியை எடுத்துக் கொடுத்து, 'ம், கட்டுடா கட்டு!’ என்று அதே முகூர்த்தத்தில் அவள் கழுத்தில் அவனைத் தாலி கட்டச் சொல்லிவிட்டார், ‘சாந்திக் கலியானத்தை'யாவது அவன் படிப்பு முடியும் வரை இவர் தள்ளிப் போடக்கூடாதா? அதையும் அன்றிரவே நடத்திவிட வேண்டுமென்று இவர் குதியாய் குதித்தார். எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்துவிட்டது. 'அது எப்படி நடக்கிறதென்று பார்த்துவிடுகிறேன்!' என்று நான் அவளைத் தூக்கி ஒரு டாக்சியில் போட்டுக்கொண்டு போய், 'நீயாச்சு, உன் சித்தியாச்சு!' என்று அவள் வீட்டில் அவளைத் தள்ளி விட்டு வந்துவிட்டேன்!’ என்று மங்களம் தன் கதையைச் சொல்லி முடிக்க, ‘அப்புறம் என்ன ஆயிற்று?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, 'யாருக்குத் தெரியும்? இவரைக் கேளுங்கள்!' என்று அவள் கணவரைச் சுட்டிக் காட்ட, அவர் சொன்னதாவது: