மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/1. புதைபொருள் ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
மொஹெஞ்சொ-தரோ

அல்லது

சிந்து வெளி நாகரிகம்

1 . புதைபொருள் ஆராய்ச்சி


புதைபொருள் ஆராய்ச்சி

மிகப் பழைய மனிதன் வீடு கட்ட அறியாது மலை முழைகளில் வாழ்ந்து வந்தான். அப்போது அவன் இயல்பாகக் கிடைத்த கற்களையே தன் கருவிகளாகக் கொண்டான். அவன் நாளடைவில் உலக இயல்பை கூறுபாட்டை அறிந்து, செம்பு, வெண்கலம், இரும்பு முதலிய உலோகங்களைக் கண்டான்: அவற்றைக் கொண்டு தனக்குவேண்டிய பலவகைப்பொருள்களைச் செய்து கொண்டான்.[1] ஆற்றங்கரைகளிலும் சமவெளிகளிலும் இயல்பாகக் கிடைத்த களிமண்ணைக் கொண்டு வீடுகளை அமைத்தான். ஆற்று ஓரங்களில் ஓங்கி வளர்ந்த கோரைப் புல்லைக்கொண்டு கூரைகளை அமைத்தான் தன் வாழ்விற்கேற்ற பாண்டங்களை மண்ணாலேயே செய்து கொண்டான்; தன். அறிவுக்கு எட்டிய அளவில், தான். பேசிவந்த மொழியைப் புலப்படுத்தச் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தினான்; அவ் வெழுத்துக்களைப் பண்படுத்தப்பட்ட களிமண் தட்டுகள் மீதும்


1. The Indus Valley Civilization.
  1. 2. இக்காலம் கற்காலம் எனப்படும். 3. இக்காலங்கள் முறையே செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் எனப்படும்.
மட்பாண்டங்கள் மீதும் சுண்ணாம்புக் கற்களால் ஆன பாத்திரங்கள் மீதும் பிறவற்றின்மீதும் பொறித்து வைத்தான்; அக்கால அறிவுநிலைக்கு ஏற்றவாறு கற்களைக்கொண்டும் பச்சை மண்ணைக் கொண்டும், பின்னர்ச் சுட்ட செங்கற்களைக் கொண்டும். தன் மனத்திற்கினிய கோவில்களை அமைத்துக் கடவுளரை உண்டாக்கினான்;தான் வாழ்ந்த மருத நிலத்தை உழுது பயிர் செய்யலானான்; தனக்கு வேண்டிய பொருள்களை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை, அவை கிடைக்கப்பெறாத மலை நாடுகளிலும் பாலைவனங்களிலும் பிற இடங்களிலும் இருந்த மக்கட்கு உதவி, தன்னிடம் இல்லாமல் அவர்களிடமே சிறப்பாக இருந்த பல் பொருள்களைப் பண்டமாற்றாகப் பெற்று வாழ்ந்து வந்தான். இப்பழக்கமே நாளடைவில் வாணிபமாக வளர்ந்தோங்கியது.

இங்ஙனம் ஒரு பகுதியில் வாழும் மக்கள் மற்றப் பகுதிகளில் வாழும் ம்க்களோடு வாணிபம் செய்யுங்கால் இருதிறத்தாரும் அவ்வப்போது கலந்து உறவாட வாய்ப்புகள் உண்டாதல் இயல்பு. அக்கூட்டுறவினால் ஒரு சாராரிடம் காணப்படும் நல்லியல்புகள் பலவற்றைப்பிறிதொரு சாரார் கைக்கோடல் இயல்பு:இருசாராரும் நாளடைவில் பெண் கொள்வதிலும் கொடுப்பதிலும் ஈடுபட்டுக் கலப்புறுதலும் உண்டு. இக்கலப்பினால் இருவேறுபட்ட பழக்க வழக்கங்கள், கலைகள், மத உணர்ச்சிகள் இன்ன பிறவும் கலப் புறுதலும் இயல்பே. இக்கலப்பு நாகரிகத்தினின்றும் தெளிவுபெற்ற புதியதோர் நாகரிகம் தோற்றம் எடுத்தலும் உண்டு. இஃது உலக இயற்கை இங்ஙனம் உலகின் பல பகுதிகளில் மக்கட் கலப்பும் நாகரிகக் கலப்பும் பண்டைக்காலத்திலேயே உண்டாயின.

இங்ஙனம் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டை மக்கள், தனித்தும் கலந்தும் பலவகை நாகரிகங்களை வளர்த்து வந்தனர். கற்கால மக்கள் செம்பைப் பயன்படுத்தத் தொடங்கியதும், கல்லால் செய்யப்பட்ட பல பொருள்களைப் புறக்கணித்து விட்டனர்; பயனற்ற மட்பாண்டங்களை விலக்கினர். இங்ஙனம் நீக்கப்பட்ட அப்பொருள்கள், கவனிப்பாரற்று நாளடைவில் மண்ணுள் புதையுண்டன.கற்கால மக்கள் மண்ணால் தாழிகளைச் செய்து இறந்தவர் உடம்புகளை அவற்றுள் வைத்து ഥങ്ങജൂൺ புதைத்து வந்தனர். தென் இந்தியாவில் இவ்வகைத் தா, கள் புதுக்கோட்டையில் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டன. பண்டை மக்கள் நல்லிடங்கள் தேடி அடிக்கடி இடம் மாறித் திரிந்தனர். ஆதலின், ஆங்காங்குப் பழுதுற்ற பொருள்களைப் போட்டுப் போயினர். அப்பொருள்கள் நாளடைவில் மண்ணுள் மறைப்புண்டன. பழங்கால மன்னர் உடலங்கள் புதைக்கப் பெற்ற இடங்களில் கற்கோபுரங்கள் கட்டப்பட்டன. அவற்றின் மீது அக்காலச் சித்திர எழுத்துக்களும் பல சித்திரங்களும் பொறிக்கப்பட்டன. ஆற்று ஓரங்களிலும் கடற்கரையை அடுத்தும் ஒழுங்கான முறையில் அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்த செம்பு - வெண்கலக் கால மக்கள் முறையே ஆற்று வெள்ளத்திற்கும் கடலின் கொந்தளிப்பிற்கும் அஞ்சி அந்நகரங் *տոպմ தம் பொருள்களையும் விட்டுவிட்டு ஓடிவிட்டமையும் உண்டு. வேறு சில இடங்கள், வேற்று மக்கள் படையெடுப்புக்கு அஞ்சித் துறக்கப்பட்டிருக்கலாம். சில நகரங்கள் எரிமலைகளின் சேட்டையால் அழிவுற்று இருக்கலாம். சில நகரங்கள் மண் மாரியால் அழிந்ததுண்டு. இங்ஙனம் பல்வேறு காரணங்களால் அப்பண்டை மக்கள் வாழ்ந்து வந்த கிராமங்களும் நகரங்களும் கைவிடப்பட்டு, நாளடைவில் மண் மூடப்பட்டு விட்டன. பல நகரங்கள் கடலுள் ஆழ்ந்தன. பல ஆற்றங்கரைகளின் அடியில் புதையுண்டு விட்டன. பல சமவெளிகளில் மண் மேடிட்டுக் கிடக்கின்றன.

இங்ஙனம் மண் மேடிட்ட இடங்களைத் தோண்டிப் பார்த்து, அவ்விடங்களிற் காணப்பெறும் பலதிறப்பட்ட பொருள்களை. ஆராய்ந்து அவற்றைப்பற்றிய உண்மைச் செய்திகளையும், அவற்றைப் பயன்படுத்திய பண்டை மக்களைப்பற்றிய சுவை பயக்கும் செய்திகளையும் அறியும் முயற்சியே. புதைபொருள் ஆராய்ச்சி எனப்படும். சுருங்கக் கூறின், பலபொருள்களைச் செய்து நாகரிகத்தைத் தோற்றுவித்த பழங்கால மக்களது வரலாற்றைக் கண்டறிவதே புதைபொருள் ஆராய்ச்சியாகும்.’[1] இவ்வாராய்ச்சிக்குப் பக்கபலமாகச் சிறப்புற்று இருப்பவை மண்டையோட்டைச் சோதிக்கும் கலை, விலங்குகளின் எலும்புகளைச் சோதிக்கும் கலை, ‘நிலநூல் அறிவு’ என்னும் மூன்றாகும்.

ஆராய்ச்சி அவா உண்டானதேன்?

மிக்க பழங்கால மக்கள் தங்கள் வரலாறுகளை எழுதி வைத்திராவிடினும், பல இடங்களில் காணப்படும் சமாதிகள் மீதும் கற்கம்பங்கள் மீதும் அப்பழங்கால மொழிகளில் பல செய்திகள் எழுதப்பட்டுள்ளன. அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் செவியாறாக வந்து உலகத்துப் பழைய நூல்கள் என்று கருதப்படும் பிற்காலத்துத் தோன்றிய பைபிள், ரிக்வேதம், புராணங்கள் முதலியவற்றில் எழுதப்பட்டுள்ளன. அப்பழங்கால மக்கள் நடத்திய போர்கள், கடல் கெர்ந்தளிப்பு, பல நகரங்கள் அழிந்த்மை போன்ற சில குறிப்புகள் பிற்கால மக்களின் கவனத்தை ஈர்த்தன். கடல் கொந்தளிப்பால் உண்டான தீமை பைபிளிலும் ரிக்வேதத்திலும் புராணங்களிலும் ஈழ நாட்டவர் பழைய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பைபிள், ரிக்வேதம், புராணங்கள் முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அழகிய நகரங்கள் பல இன்று காணப்படவில்லை. பல நகரங்கள் தெய்வங்களது சீற்றத்துக்குட்பட்டு எரிக்கப்பட்டும் கடலுள் ஆழ்த்தப்பட்டும் விட்டன என்னும் குறிப்புக்களைப் படிக்கும் அறிவுள்ள மனிதன், அவை இருந்தனவாகக் கூறப்படும் இடங்களைத் தேடிக் கண்டறிய அவாவுதல் இயல்டேயன்றோ? ‘ஹோமர்’ என்னும் கிரேக்க கவிஞர் எழுதியுள்ள ‘இலியட்’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ட்ராய் நகரம் எங்கே? அப்பொன்னகரைக் கண்டு, அதன் அமைப்பையும் பிறவற்றையும் அறியின், அப்பழங்கால நகரத்தில் வாழ்ந்த மக்களைப்பற்றிய பல செய்திகளை அறிதல் கூடுமன்றோ? என்று அறிவுடையவர் எண்ணுதல் இயல்பேயாகும். நாசரேத்தூர் அடிகள் வாழ்ந்து பல அற்புதச் செயல்களைச் செய்த இடங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவ்விடங்கள் இன்று காணப்படுகின்றில. அவை மண்மூடி இருத்தல் வேண்டும். அங்குச் சென்று மண்மேடுகளைக் கண்டறிந்து, அவற்றைத் தோண்டி, உண்மையை உணர்தல் வேண்டும் என்னும் அவா அறிஞர் உள்ளத்தே வேரூன்றுதல் இயல்பு தானே!

இந்திய நாட்டுப் பழைய நூல்களில் கூறப்பட்டுள்ள நாலந்தா, தக்ஷசீலம், கோசாம்பி, பாடலிபுரம், கொற்கை, காயல், காவிரிப்பூம்பட்டினம், வஞ்சிமாநகரம், உறையூர் முதலிய வரலாற்றுச் சிறப்புடைய நகரங்களை அகழ்ந்து கண்டு, நம் முன்னோரைப்பற்றிய செய்திகளை அறிந்து இன்புற நாம் விரும்புதல் இயல்பன்றோ? “திராவிட மொழிகளுள் ஒன்றான ‘கோண்ட்’ என்பது மத்திய மாகாணத்திலும் ‘கூய்’ என்பது சென்னை மாகாணத்தின் வட கோடியிலும், ‘குருக்’ என்பதும் ‘இராஜ் மஹால்’ என்பதும் வங்காள மாகாணத்திலும், பல திராவிடச் சொற்களையுடைய ‘ப்ராஹி’ என்பது பலுசிஸ்தானத்திலும் இருத்தலைக் காணின், வட இந்தியாவில் மிகப் பழைய காலத்தில் மூலத் திராவிடமொழி பேசப்பட்டதாதல் வேண்டும். ப்ராஹியில் உள்ள திராவிடச் சொற்களை நோக்குங்கால், பலுசிஸ்தானத்திற்கு அண்மையில் திராவிடர் இருந்திருத்தல் வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுகிறது”[2] என்பதைப் படிக்கும் பொழுது, திராவிட மக்களாகிய நாம், நம் முன்னோர் சிந்து வெளியில் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்று எண்ணுகிறோம். உடனே, அவர்கள் வாழ்ந்த இடங்கள் அகப்படாவோ? அவை என்ன வாயின? மண்ணுள் மறைந்தனவோ? அவர்தம் பழக்க வழக்கங்கள் நம்மிடம் இன்று இருப்பவைதாமா? அவற்றை அறிய வேண்டுமே எனப் பலவாறு புத்துணர்ச்சி பெறுகின்றோம். இவ்வுணர்ச்சி தோன்றற்கு அறிஞர்கள் அன்புடன் எழுதி வைத்துள்ள அரிய நூல்களே காரணமாகும்.

நாம் இன்று கொண்டுள்ள பழக்க வழக்கங்கள் திடீரென வந்திரா. அவற்றுள் சில மிகப் பழைய காலந்தொட்டே வந்திருத்தல் வேண்டும். ஒரு வகை நாகரிகம் தோன்றும் பொழுது அஃது, அதற்கு முற்பட்ட நாகரிகத்தின் ஒரு பகுதியைத் தன்னகத்துக் கொண்டே தோற்றமெடுக்கும். இந்த உண்மை, வரலாற்றின் உயிர் நாடியாகும். வரலாறு என்பது என்றும் தொடர்புற்று வரும் இயக்கமாகும். ‘இத்துடன் எல்லாம் முடிவடைந்துவிட்டன; இனிநம்மைச்சார்வன எவையும் இல்லை’ என்று எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கூற, உண்மை வரலாறு இடம்தராது. இன்றைய ஐரோப்பா, பழைய உரோமப்பேரரசிலிருந்து தோன்றியதாகும். அந்த உரோமப் பேரரசும் அலெக்ஸாண்டரது பெரு வெற்றியிலிருந்து பிறந்ததாகும். அலெக்ஸாண்டரது பேரவா, பாரசீக மன்னர்களின் தனியரசு உணர்ச்சியினின்றும் பிறந்ததாகும். பாரசீக வேந்தர்கள் அதனை ஆசிரியர்பால் கற்றுக்கொண்டனர். இங்ஙனம் உள்ள பல உண்மைகளைக் காணும் போது, வரலாறு என்றும் தொடர்புடையதே என்னும் உண்மைச் செய்தியை உள்ளவாறு உணரலாம்”.[3]

இவ்வுணர்ச்சி நம் உள்ளத்தே எழுமாயின், நமது வரலாற்றுத் தொடர்பைக் கண்டறிய நாம் அவாவி நிற்றல் இயல்பே ஆகும். அவா நாளடைவில் செயலில் முடிகின்றது. அஃதாவது, புதைந்து கிடக்கும் இடங்களைத் தோண்டி மண் மூடுண்ட நாகரிகத்தை அறிய மனம் நாடுகின்றது: செயலாற்றிப் பல உண்மைகளைக் கண்டறிந்து தளர்ந்துள்ள வரலாற்றுச் சங்கிலியை முறுக்குடையதாக ஆக்குகின்றது.

ஆராய்ச்சிக்குரிய இடங்கள்

கற்கால மக்களும் செம்பு வெண்கல இரும்புக் கால மக்களும் குடியேறி வாழ்ந்த இடங்கள் எல்லாம் ஆராய்ச்சிக்கு உரியனவே ஆகும். அம்மக்கள் பெரும்பாலும் ஆற்றுப் பாய்ச்சல் உள்ள சமவெளிகளிற்றான் வாழ்ந்து வந்தார்கள். மலைப்பாங்கான இடங்களில் பெரிதும் கற்கால மனிதர் நாகரிகச் சின்னங்களே மிக்கிருக்கும். சமவெளிகளில் பிற்கால மக்கள் சின்னங்கள் காணப்படும். இக்குறிப்பைக் கொண்டும், நாம் மேற்கூறிய பைபிள் முதலிய பழைய நூல்களில் கூறப்பட்டுள்ள குறிப்புக்களைக் கொண்டும் ஆராய்ந்தால், ஒவ்வொரு கண்டத்திலும் ஆராய்ச்சிக்கு உரிய இடங்கள் இருத்தல் உண்மை. அவற்றை அறிஞர் கண்டறிந்து வருகின்றனர். ஈண்டு நாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உரியனவும் அதற்குச் சார்பானவையுமாக இருப்பவை மத்தியதரைக் கடலிலிருந்து இந்தியா அடங்க உள்ள இடங்கள் ஆகும். அவை மால்ட்டா, எகிப்து, பாலஸ்தீனம், அசிரியா, பாபிலோனியா, ஏலம், பாரசீகம், சிந்துப் பிரதேசம், கங்கைச் சமவெளி, டெக்கான், தென் இந்தியா என்பன ஆகும். இவை பற்றிய இன்றியமையாத குறிப்புக்களை மட்டும் ஈண்டுக் காண்போம்.

தடித்த எழுத்துக்கள்

மால்ட்டா என்பது மத்திய தரைக் கடலில் இட்டாலிக்கும் வட ஆப்ரிக்கக் கரைக்கும் இடையில் உள்ள பழந்தீவு. இதன் தலைநகரம் ‘லாவெட்டா’ என்பது. இஃது, ‘அரண்மனைகளைக் கொண்டுள்ள நகரம்’ எனப்படும். இதில் உள்ள பல மாட மாளிகைகள் ஜெருஸ்லேத்தின் மகானான ஜான் என்பாருடைய வீரர்களால் கட்டப்பட்டவை. இது மிகப் பழைய கால முதலே சிறப்புற்ற தீவாகும். இதன் ஒரு புறம் ஆராய்ச்சி வேலை நடைபெற்றது. அதன் பலனாக, ஆராய்ச்சியாளர் கருத்தைக் கவர்ந்த மட்கலங்களும் பலவகை மணிகளும் வெளிப்பட்டன. ஆராய்ச்சி முற்றுப்பெறவில்லை. மட்பாண்டங்கள் மீது பலவகைச்சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. பல பாண்டங்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன. அவை, ஒற்றைக் கைப்பிடியும் இரட்டைக் கைப்பிடியும் உடையனவாக இருந்தன. சுண்ணாம்புக் கல்லாலான லிங்கம் ஒன்று கிடைத்தது.[4] மால்ட்டா நாகரிகம் வெண்கலக் காலத்தது என்று ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர்.

எகிப்து

ஆப்ரிக்காவின் வட பகுதியில் நீல ஆறு பாயும் மருதநில வெளியே எகிப்து என்பது. உலகத்தில் எங்குமே இருந்திராத மிக உயர்ந்த நாகரிகம் அங்கு இருந்த தென்பதற்கு உரிய அடையாளங்கள் மிகப் பல உண்டு. ஆயினும், அவை ஏறக்குறைய நூறாண்டுகட்கு முன் வரை கவனிக்கப்பட்டில. கெய்ரோ முதல் ‘லக்ஸர்’ வரையுள்ள 960 கி. மீ. தொலைவுவரை பழுதுபட்ட பண்டைக்காலத்துச் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பண்டை அரசர் கல்லறைகள் பல கோவில்கள் பல கல் மேடுகள் பல உடைந்த சிலைகள் பல கி. மு. 4000 ஆண்டுகட்கு முன்னும் பின்னும் இருந்த எகிப்திய அரசர்கள் தங்கட்கெனக் கட்டிய கல்லறைகளே பிரமிட்கோபுரங்கள் என்பன. அவை சுமார் 80 ஆகும். அவற்றுள் மிகப் பெரியது 6,37,600 ச.செ.மீ பரப்பும் 14,400 செ.மீ. உயரமும் உடையது. அதில் உள்ள கற்கள் 70 லட்சம் டன் நிறையுள்ளவை நான்கு அல்லது ஐந்து அடுக்குகளையுடைய 22 ஆயிரம் வீடுகளைக் கொண்ட நகரம் ஒன்றைக் கட்டி முடிக்கப் போதுமானவை; என்று அறிஞர் அறைகின்றனர். இவ்வியப்பூட்டும் பிரமிட் கோபுரங்களைக் கட்டிய பேரரசர் தம் நாகரிகத்தை என்னென்பது ஆராய்ச்சியிற் கிடைத்த மட்பாண்டங்கள் மீது ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன; பல நிறங்கள் பூசப்பட்டுள்ளன; பானைகளும் பிறவும் பெரும்பாலும் தட்டையான அடியுடையனவாகவே காணப்படுகின்றன; பிரமிட் கோபுரங்களிலும் பிற இடங்களிலும், அப் பண்டை மக்கள் பயன்படுத்திய சித்திர எழுத்துக்களும் விலங்கு பறவைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர் அவற்றைப் பல ஆண்டுகள் முயன்று படித்து முடித்தனர்; அதன் பின்னரே எகிப்தின் வரலாற்றை ஒழுங்காக எழுதலாயினர்.

பாலஸ்தீனம்

இப்பகுதி, உலகத்திலுள்ள கிறிஸ்தவ சமயத்தினர் அனைவரும் போற்றத்தக்கதாகும். ஆதலின், இப்பகுதியில் உள்ள ஆராய்ச்சிக்குரிய மண்மேடுகளைத் தோண்டி உண்மைச் செய்திகள் பலவற்றை அறிய அவாக்கொண்ட அறிஞர் குழு ஆராய்ச்சி வேலையைத் தொடங்கியது. அக்குழு பிரிட்டிஷ் அறிஞர் சிலரையும் அமெரிக்க அறிஞர் சிலரையும் கொண்டதாகும். பைபிளிற் காணப்பட்ட நகரங்களைக் கண்டுபிடித்தலே இவ்வறிஞர்களின் முக்கிய நோக்கமாகும். இவர்கள் ஆராய்ச்சி நடத்தியதின் பயனாய்ப் பல நகரங்கள் வெளிப்பட்டன. அவற்றுள் சொதம் (Sodum), கொமொராஹ் (Gomorrah), ஜெரிகோ (Jericho), மம்ரி (Mamre), கிர்ஜாத் செபர் (Kiriath - Sepher) முதலியன குறிப்பிடத்தக்கன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் இந்நகரங்களில் இருத்தலைக் கண்டு அறிஞர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர். சில நகரங்களில் இருந்த சவப்பெட்டிகளுள் சிப்பி ஓடுகள், மணிகள், பல நிறங்கொண்ட கண்ணாடிகள், விலை உயர்ந்த கற்கள் முதலியவற்றால் ஆன மாலைகள் முதலியன காணப்பட்டன. அவற்றோடு மாலைகளில் இணைக்கப்படும் பதக்கங்களும் காணப்பட்டன. அவை முத்துச் சிப்பி, எலும்பு, முத்துக்கள் பன்னிறக் கண்ணாடித் துண்டுகள் இவற்றைக் கொண்டு செய்யப் பட்டவை ஆகும் பலவகை மட்பாண்டங்களும் கண்டெடுக்கப் பட்டன. கல் எந்திரங்களும், கல்வங்களும் குழவிகளும், வேறுபல உருண்டைக் கற்களும் கண்டெடுக்கப்பட்டன.[5]

அசிரியா

இந்நிலப்பகுதி மெசொப்பொட்டேமியாவுக்குக் கிழக்கிலும் குர்திஸ்தானத்துக்கு மேற்கிலும் பாபிலோனியாவுக்கு வடக்கிலும் அர்மீனியாவுக்குத் தெற்கிலும் அமைந்திருப்பது இதன் தலைநகரம் அசுர் என்பது. இந்நாட்டின் முக்கிய நகரங்கள் மோசுல், நினவெஹ், கலா, ரெசன் முதலியனவாம். இந்நாடு மிக்க செழிப்புள்ளது. இங்குக் களிமண் மிகுதியாகக் கிடைத்தமையால், பண்டை அசிரியர், செங்கற்களால் வீடுகளைக் கட்டிக்கொண்டு உயர்ந்த நாகரிகத்தில் வாழ்ந்து வந்தனர். செங்கற்களிலும் கருங்கற்களிலும் இந்நாடு பாபிலோனியாவைவிடச் சிறப்புடையதே ஆகும். மேற் குறிப்பிட்ட நகரங்கள் ஒரு காலத்தில் மிகச் சீரும் சிறப்பும் பெற்று இருந்து, பின்னர் மண்மேடுகளாய் மங்கிப் போனவை ஆகும்.

பாபிலோணா

இந்நிலப்பகுதி யூப்ரேடிஸ், டைக்ரிஸ் யாறுகளுக்கு இடையில் உள்ள மருதநிலப் பகுதியாகும். இங்குச் சிறந்த களிமண் கிடைத்தமையால், இங்கு வாழ்ந்த பண்டை மக்கள் மட்பாண்டங்கள் செய்வதிலும் செங்கற்கள் செய்வதிலும் சிறப்புற்றிருந்தனர். ஆற்றோரங்களில் வளர்ந்த கோரை கூரையாகவும் கூடையாகவும்பாயாகவும் பயன்பட்டது. இங்கு விளை பொருள்கள் அதிகமாகும். பாபிலோனியர், இவை நீங்கலாக உள்ள கற்கள், தேக்கமரம், பெர்ன் வெள்ளி முதலிய உலோகங்கள் ஆகியவற்றைச் சுற்றுப் பக்கத்து நாடுகளிலிருந்து வரவழைத்துக் கொண்டனர். எனவே, அவர்கள் சிறந்த வாணிபத்திறமை உடையவர்களாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். மெசொப்பொட்டேமியா

இந்நிலப்பகுதி ஸ்காட்லண்ட் அளவுடையது; டைக்ரிஸ் யாற்றுக்கு மேற்கே அமைந்திருப்பது இதன் பெரும் பகுதி சிறு மலைத் தொடர்களைக் கொண்ட பாலை நிலமாகும். ‘கப்பூர், பலீக்’ என்னும் யாறுகள் இந்நாட்டிற் பாய்ந்து யூப்ரேடிஸ் யாற்றில் கலக்கின்றன. அவற்றின் கரையோரங்களில் மட்டுமே பயிர் செய்ய வசதி உண்டு. இதற்கு வடகிழக்கே கொள்ளையடிக்கும் மலை நாட்டார் வசித்து வந்தனர். சுருங்கக் கூறின், மெசொப் பொட்டேமியா சிறிது வளமுடையது - பெரிதும் வளமில்லாதது; சிறிதளவு பயிர் உடையது - பெரிதளவு பாறை உடையது; சில இடங்களில் நீர் வசதி உடையது பல இடங்களில் நீர் வசதி அற்றது.

ஏலம்

ஏலம் என்பது பாபிலோனியாவுக்குக் கிழக்கே உள்ள சிறிய நிலப்பரப்பாகும்; சிறிதளவு மலைப்பகுதி உடையது. இதன் தலைநகரம் சுசா. மற்றொரு சிறந்த நகரம் ‘அன்சன்’ என்பது. இப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அடிக்கடி வடக்கே இருந்த அசிரியரோடு போரிட்டு வந்தனர். அசிரியர் கி.மு.650-இல் இப்பகுதியில் இருந்த மக்களை வென்று அடிப்படுத்தினர். அசிரியரது பேரரசு வீழ்ந்த பிறகு ஏலம், பாரசீகப் பேரரசில் கலந்து மறைந்தது.

இந்நான்கு இடங்களிலும் நடந்த ஆராய்ச்சி

இந் நான்கு நிலப் பகுதிகளிலும் பற்பல இட்ங்களில் மண்மேடுகள் இருந்து வருகின்றன. மேனாட்டு அறிஞர்கள் முதன் முதலாக அசிரியாவில் உள்ள மோசுல் என்னும் இடத்திற்கு அருகில் இருந்த ‘நினவெஹ்’ என்ற பழைய நகரத்தையும் பாபிலோனியாவில் ‘ஹில்லஹ்’ என்னும் இடத்திற்கு அருகில் இருந்த மண்மேட்டையும் வெட்டி ஆராய்ச்சி நடத்தினர். இவ் வாராய்ச்சியினால் அசிரியரைப் பற்றியும் பாபிலோனியரைப் பற்றியும் இவ்விருவர்க்கும் முற்பட்ட சுமேரியரைப் பற்றியும் செமிட்டியரைப்பற்றியும் பல செய்திகள் வெளிப்போந்தன. [6]அங்குக் கிடைத்த எழுத்துக் குறிகளைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் ஹிங்க்ஸ் (Edward Hicks) என்பவர், ‘பாபிலோனியர் கையாண்ட எழுத்துக்கள் அவர்களுடையன அல்ல’ என்று கருதினார். அவ்வெழுத்துக்களை நன்கு ஆராய்ந்த ஆப்பர்ட் என்பார். ‘இவை சுமேரியருடையன’ என்று முடிவு கூறினார். மேலும் ஆராய்ச்சி நடத்தியதில், பாபிலோனியரும் அசிரியரும் தங்கட்கு முற்பட்ட சுமேரியரிடமிருந்தே கலை, மதம், மொழி முதலிய எல்லாம் பெற்றனர் என்பதற்கு உரிய சான்றுகள் கிடைத்தன. 1855 இல் டெய்லர் என்பவர் நடத்திய ஆராய்ச்சியில் பாபிலோனியாவில் எரிது (Eridu) உர் (Ur) என்னும் சுமேரிய நகரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. 1874 இல் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சியின் பிறகே சுமேரியருடைய வரலாறு, கலைகள், மொழி முதலியன நன்கு தெரிந்தன. கி.மு.2800 ஆண்டுகட்கு முற்பட்ட சிற்பங்களும் மிகப் பழைய சாசனங்களும் கண்டெடுக்கப்பட்டன. பிறகு ஜெர்மானியர் பல மண்மேடுகளைத் தோண்டி ஆராய்ச்சி நடத்தினர். அசுர் நகரம் தோண்டப்பட்டுச் சுமேரியரைப் பற்றிய பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. பின்னர் அமெரிக்கர் சில மண்மேடுகளை ஆராயத் தொடங்கினர். 1889இல் நிப்பூர் தோண்டப்பட்டது. அதில் காற்றுக் கடவுள் கோவிலும், பல காலங்களைச் சேர்ந்த 50,000 சாசனங்களும் கிடைத்தன. சென்ற ஐரோப்பியப் போருக்குப் பின்னர் எரிது, உர், கிஷ், தல், அஸ்மர், கப்ஜே முதலிய சுமேரியர் நகரங்கள் ஆராய்ச்சிக்கு உட்பட்டன. அவ்விடங்களிலிருந்த மண்மேடுகளில் பல அடுக்குகளையுடைய கட்டிடங்கள் காணப்பட்டன. கி.மு.3000க்கு முற்பட்ட நாகரிகத்தை உடைய சுமேரியருடைய சிறப்புகள் கண்டறியப்பட்டன.

சுமேரியர் சித்திர எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தனர். நீண்ட உருண்டை முத்திரைகளை உபயோகித்தனர்; கட்டிடங்களுக்கு அடிப்படையாகக் கருங்கல்லைப் பயன்படுத்தினர். 70 அடி உயரத்தில் செய்குன்றுகள் அமைத்து அவற்றின்மீது சிறியகோவில்களைக் கட்டினர்; தரை மீது பெரிய கோவில்களைக் கட்டினர்; அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் சித்திரங்கள் காணப்படவில்லை. சுமேரியர் மிகப் பழைய காலத்தில் ஆட்டுத் தோலாடை உடுத்தியிருந்தனர்; கல்லின் மீது செதுக்கும் வேலையில் சிறந்திருந்தனர். இதையும் வழிபாட்டுக்குரிய செயல்களையும் செய்யும் பொழுது பெரும்பாலும் ஆடையின்றி இருந்தனர் என்று அறிஞர் கருதுகின்றனர்.

சுமேரியர் வீட்டுச் சுவர்கள் மிது சித்திரங்கள் தீட்டக் கற்றிருந்தனர்; எருதுகளும் கழுதைகளும் பூட்டப்பெற்ற வண்டிகளைப் பயன்படுத்தினர்; செம்பு முதலிய பொருள்களால் ஆன - ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் எண்ணுவதில் ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாண்டு வந்தனர்;[7] ஒரே குறிப்பிட்ட வடிவமுள்ள செங்கற்களையே செய்துவந்தனர்;[8] இறந்தவர்களைத் தாழிகளிற் புதைத்துவந்தனர். அவர்கள் வழிபட்டு வந்த தெய்வங்கள் பலவாகும். ஒரே கோவிலில் பயிர்க்கடவுளான அபு, அக்கடவுளின் மனைவியான இனன்னா, அவர்தம் மகன் ஆக இம்மூன்று தெய்வங்களும் வைத்து வழிபடப்பட்டன.[9] அக் கோவிலின் அடியில் சுண்ணாம்புக் கல்லாலும் பளிங்காலும் ஆன 12 தெய்வங்களின் சிலைகள் காணப்பட்டன. அவை ஒர் அடி உயரம் முதல் இரண்டரை அடிவரை வேறுபட்டிருந்தன. இச்சுமேரியர்தம் மொழி துருக்கி தமிழ் போன்ற ஒட்டு[10] மொழியாகும்.[11]

‘உர்’ நகரில் ஆராய்ச்சி

இந்த நகரம் சுமேரிய நகரங்களுள் மிகச் சிறந்ததாகும். இந்நகரத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பலனாக அரிய குறிப்புகள் பல வெளிப்பட்டன. இந்நகரில் திங்கட் கடவுள் தம் மனைவியோடு எழுந்தருளியுள்ள கோவில் ஒன்றும் நிலமகள் கோவிலும் கதிரவன் கோயிலும் காணப்பட்டன. நிலமகள் கோவிலில் செம்பாலாய எருதும் பறவையும் கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு.4300 ஆகும். தேர், வீணை, இரம்பங்கள், உளிகள், மலர் ஏந்தும் சாடிகள், பொன்னாலான அரிய பொருள்கள், முதலியன எடுக்கப்பட்டன. அரசன் கல்லறையும் அரசியின் கல்லறையும் ஆராய்ச்சிக்கு உட்பட்டன. அரசனைப் புதைத்த இடத்தில் அடுத்த பிறவியில் அவனோடு இருப்பதற்கென்று ஆடவர் பெண்டிர் ஆக 60 பேர் பலியிடப்பட்டனர் என்பதும், சில எருதுகள் பலியிடப்பட்டன என்பதும் அங்கிருந்த சித்திரங்களாலும் எலும்புகளாலும் அறியக் கிடக்கின்றன.அரசியினது சவப்பெட்டியில் தலையை மறைக்கும் பொன்னாலான தலையணி ஒன்றும், கூந்தலின் மேற்புறம் அணியத் தக்க மாலைபோன்ற அணி ஒன்றும் கண்டெடுக்கப் பட்டன. அரசனது சவப் பெட்டியில் கிடந்தவாறே இங்கும் எலும்புக் கூடுகள் கிடந்தன. ஏழையின் சவப்பெட்டி ஒன்றில் மண் பொம்மைகள் காணப்பட்டன.

இந்த நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பலவும்.மேல் வரும் பக்கங்களில் பல இடங்களில் சுட்டப்படும் ஆதலின், அவைபற்றி இங்கு விரிவாகக் கூறவேண்டுவதில்லை. இந்நகர ஆராய்ச்சி பற்றிய நூல்கள் பலவாகும். புதைபொருள் ஆராய்ச்சியின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் - சுமேரியர்

நாகரிகத்தைத் தெற்றென விளக்கும் - இந்நகரச் சிறப்பை விரிந்த நூல்களிற் கண்டு மகிழ்க.[12]

பாரசீகம்

யூப்ரேடிஸ், டைக்ரிஸ் யாறுகள் பாயப்பெறும் நிலப் பகுதிக்குக் கிழக்கே ஆப்கானிஸ்தானம்வரை உள்ள நிலப்பரப்பே பாரசீகம் என்பது. இதன் பெரும் பகுதி பாலைவனம்; அதைக் கடந்தால் கண்ணுக்கினிய காட்சிகளை நல்கும் குன்றுகளும், மலைத் தொடர்களும் இருக்கின்றன. ஆங்காங்கு அழகிய நகரங்கள் உள்ளன. இங்குப் பழைய கால மக்கட்குரிய சின்னங்களும் எழுத்துக் குறிகளும் காணப்படுகின்றன. அவற்றை முதன் முதல் 1885 இல் ஆராய்ச்சி நடத்தியவர் கர்னல் ஸர் ஹென்றி இராலின்ஸன் என்பவர். இவர் பாரசீகரின் பண்டை எழுத்துக்களை அரிதின் முயன்று படித்தார்; பாரசீகரைப்பற்றிய பல செய்திகளை அறிந்து உலகிற்கு உணர்த்தினார்.[13]

இந்தியாவில் ஆராய்ச்சி

நம் நாட்டில் ஆராய்ச்சிக்குரிய இடங்கள் எவை? மெகஸ்தனிஸ், பாஹியன். ஹியூன் - ஸங், ப்ளைநீ, தாலமி போன்ற அயல்நாட்டார் இந்தியாவில் இருந்தபோதும் இந்தியாவிற்கு வந்த போதும் கண்டனவாகக் கூறப்பட்ட பண்டை நகரங்கள் இன்று மண்ணுள் மறைந்தும் உருமாறியும் அழிந்து உள்ளன. புத்தர் காலத்தில் சிறப்புற்று விளங்கிய பண்டை நகரங்கள் இன்று எங்கே இருக்கின்றன? தமிழ் அரசர் ஆண்ட தலைநகரங்கள் எங்கே? இவ்விடங்களில் ஆராய்ச்சி நடத்த அரசியலார் தனிக்குழு ஒன்றை அமைத்தனர்.அக்குழு இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிக்குழு[14] எனப்படும்.அக்குழுவில் சிறப்புற்ற ஆராய்ச்சியாளராக இருந்தவர் ஸர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் ஆவர். அவர் வடஇந்தயாவில் பல இடங்களில் ஆராய்ச்சி நிகழ்த்தினார். அவரது உழைப்பின் பயனாய் நாலந்தா, தக்ஷசீலம், பாடலிபுரம், கோசாம்பி முதலிய பண்டை நகரங்களைப் பற்றிய விவரங்கள் சிலவும், தென் இந்தியாவில் அமராவதி என்னும் இடத்தில் வியக்கத்தக்க பொருள்களும் கல்வெட்டுகளும் கிடைத்தன. மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்த அரசியலாரிடம், பணம் இல்லை. ஆதலின் - இந்திய ஆராய்ச்சி வேலை மந்தமாகவே நடைபெற்று வந்தது.

சிந்துவெளி நாகரிகம்

இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோடு போர் செய்ய வேண்டியவர் ஆயினர். ‘அப்பகைவர் நல்ல நகரங்களை அமைத்துக்கொண்டு மாட மாளிகைகளில் சிறந்த செல்வப்பெருக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; உருவவழிபாடு கொண்டவர்; தட்டை முக்குடையவர்; குள்ளர்கள்; மாயா ஜாலங்களில் வல்லவர்கள்; வாணிபத் திறமை உடையவர்கள்’ என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகின்றது. இக்குறிப்புகளால் ஆரியர்க்கு முற்பட்ட இந்திய மக்கள் சிந்து வெளியில் சிறந்த பட்டணங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தி புலனாகின்றது. இஃது உண்மையே என்பதை உணர்த்தவே போலும், சிந்துவெளியில் உள்ள ஹரப்பாவும் மொஹெஞ்சொ-தரோவும் அறிஞர் கண்கட்குக் காட்சி அளித்தன.[15]

1920 ஆம் ஆண்டில் பஞ்சாப் மண்டிலத்தில், மான்ட் கோமரிக் கோட்டத்தில், ராவி - சட்லெஜ் யாறுகளுக்கு இடையில், லாஹூர் - முல்ட்டான் புகை வண்டிப்பாதையில் ஹரப்பா என்னும் ஆராய்ச்சிக்குரிய இடம் அகப்பட்டது. 1922இல் சிந்து மண்டிலத்தில் உள்ள லர்க்கானாக் கோட்டத்தில் 2100 செ.மீ. உயரம் உடைய மண்மேடு ஒன்று கண்டறியப்பட்டது. அதனுள் புதைந்துள்ள நகரமே மொஹெஞ்சொ-தரோ என்பது. அம்மேட்டின்மேல் நெடுந்தூண் ஒன்று நின்றிருந்தது. இவ் விரண்டு இடங்கட்கும் இடைப்பட்டதொலைவு 640 கி.மீ. ஆகும். இரண்டு இடங்களிலும் சிறிதளவு தோண்டிப் பார்த்த பொழுது, ‘இவை ஆராய்ச்சிக்குரிய இடங்கள்’ என்பதை அறிஞர் அறிந்து கொண்டனர்; இரண்டு இடங்களிலும் பலுசிஸ்தானத்திலும் கிடைத்த மட்பாண்டங்களை ஒப்பிட்டுப் பார்த்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான ஸர் ஜான் மார்ஷல் என்னும் பேரறிஞர் பெருவியப்புக் கொண்டார்; அப்பொருள்களை ஆராய்ச்சி செய்து தாம் அறிந்த செய்திகளை மேனாட்டுப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டார். இந்திய அரசாங்கம் மகிழ்ந்து பண உதவி செய்தது. அதனால் ஹரப்பாவும் மொஹெஞ்சொ தரோவும் சுறுசுறுப்போடு ஆராய்ச்சி செய்யப்பட்டன. இவ்விரண்டு இடங்கட்கும் இடைப்பட்ட பல்வேறு. இடங்களிலும் சிந்துயாறு கடலோடு கலக்கும் இடம் வரையுள்ள, இடங்களிலும் கீர்தர் மலைத்தொடரை அடுத்துள்ள இடங்களிலும் சிறிதளவு ஆராய்ச்சி வேலைகள் நடைபெற்றன. இவற்றின் விரிவான செய்திகளை அடுத்த பகுதியிற் காண்க.



  1. Archaeology is the study of the human past, concerned principally with the activities of man as a maker of ‘things’ - Stanley Casson in his ‘Progress of Archaeology’.
  2. 1. Dr.Caldwells ‘Comparative Grammar of the Dravidian Languages’, р. 633.
  3. 1. Patrick Carleton’s ‘Buried Empires’ p. 11.
  4. 1. M.A.Murray’s ‘Excavations in Malta’, Parts 1-3
  5. 1. Charles Warren’s ‘Underground Jerusalem’.
  6. І.А. H. Layard’s A Papular Account of Discoveries at Ninaveh.
  7. Sexagesimal System of counting.
  8. Plano-Convex Bricks.
  9. சைவர் வழிபடும் சிவபெருமான். உமையம்மை, முருகக் கடவுள் என்னும் மூன்று கடவுளரையும் இங்கு நினைவு கூர்தல் தகும்.
  10. Agglutinative.
  11. i. Jastrowe’s “The Civilization of Babylonia and Assyria”.
  12. Sir L.Woelle’s “Ur of the chaldees, and ‘Abraham’. H.R.Hall’s; “A Season’s work at Ur”
  13. Dr.Bellew’s ‘From the Indus to the Tigris’ Patrick Carleton’s ‘Buried Empires’.
  14. Archaeological Department of India.
  15. Partick Carleton’s ‘Buried Empires’ pp. 162, 163.