மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/2. சிந்துவெளியிற் புதையுண்ட நகரங்கள்

விக்கிமூலம் இலிருந்து
2. சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

சிந்து யாறு

இப் பேரியாறு திபேத் பீடபூமியில் உள்ள கைலாச மலைகளில், கடல்மட்டத்திற்கு மேல் ஆறு இலட்சம் செ. மீ. உயரத்தில் உற்பத்தியாகின்றது. இதன் அருகில் சட்லெஜ் என்னும் இதன் கிளையாறும் பிரமபுத்திரா என்னும்பேரியாறும் உற்பத்தி ஆகின்றன. இதினின்றும் 104 கி. மீ. தொலைவிற்றான் கங்கைப் பேரியாறு உற்பத்தி ஆகின்றது. ‘சிந்து’யாறு திபேத், காஷ்மீர் நாடுகளில் வடமேற்காக 1280 கி.மீ. சென்று, கில்ஜிட் ஹன்ஸா என்னும் இரண்டு இடங்கட்கு இடையில் தெற்கு நோக்கித் திரும்பிப் பஞ்சாப் மண்டிலத்தை அடைகின்றது. 80 கி.மீ. தெற்கே ஒடிய பின்னர், ஆப்கானிஸ்தானத்து யாறாகிய ‘காபூல்’ யாறு இதனுடன் அட்டாக் என்னும் இடத்திற்கு அருகில் கலக்கின்றது. அட்டாக்குக்கு 752 கி. மீ. தெற்கே, பஞ்சாப் மண்டிலத்தை மருத நிலமாகத் திகழச் செய்து வருகின்ற ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்னும் ஐயாறுகளும் சிந்துவில் கலக்கின்றன. சிந்து ஆறு கடலிற் கலக்கும் இடத்தில் உள்ள புகார் நிலம் (Delta) 3000 சதுரக் கல் பரப்புடையது. சிந்து யாறு அடித்துக்கொண்டு வரும் ஏராளமான மணலும் மண்ணும் வந்து சேர்வதாலும், சிந்துயாறு அடிக்கடி தன் போக்கை மாற்றிக்கொள்வதாலும் ஆற்று முகத்தில் உள்ள கிளை யாறுகள் அடிக்கடி தம் போக்கை மாற்றிக் கொள்கின்றன. சிந்து யாற்றின் நீளம் ஏறக்குறைய 3200 கி. மீ. ஆகும்.இதன் பாய்ச்சல் பெற்றுள்ள நிலம் 960,000 ச.கிமீ ஆகும். ஆண்டில் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம்வரை இமய மலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால், சிந்து யாறு அளவு கடந்த வெள்ளப் பெருக்கெடுத்து மிக்க வேகமாக ஓடி வரும். இவ்வெள்ளத்தால் உண்டான அழிவுகள் பல; அழிந்த நகரங்கள் பல; இந்த யாற்றில் மீன்கள் மிக்குள்ளன. நீண்ட முக்குடைய் முதலைகள் மிகுதியாக இருக்கின்றன. இந்த வற்றாத வளமுடைய யாற்றால் சிந்து வெளி மிக்க விளைச்சலையுடைய சிறந்த மருத நிலமாகக் காட்சி அளிக்கின்றது.[1]

சிந்து யாறு இதுகாறும் பதினெட்டு முறை தன் போக்கை மாற்றிக்கொண்டதாம். இஃது 1928 வரை மொஹெஞ்சொ தரோவுக்கு ஐந்தாறு கற்களுக்கு ஓடிக்கொண்டிருந்தது; அவ்வாண்டில், திடீரெனத் தன் போக்கு மாறி, மொஹெஞ்செதரேவுக்கு 1.5 கி. மீ. : தொலைவிற்குள் ஓடலாயிற்று. இதனால், இப்பொழுது தோண்டிக் கண்டெடுக்கப்பெற்ற மொஹெஞ்சொ-தரோவுக்கும் அங்குள்ள புதை பொருள் காட்சிச் சாலைக்கும் ஊறு நேராதிருக்க, நூறாயிரம் ரூபாய்ச் செலவில் 300 செ. மீ. உயரத்திற்குச் சுவர் ஒன்றை 1.5 கி.மீ . சுற்றளவில் எழுப்புவதென்று இந்திய அரசாங்கத்தார் முடிவு செய்தனர்.

பஞ்சாப் மண்டிலம்

சிந்து யாறு பாயும் வெளி இன்று பஞ்சாப், சிந்து என்னும் இரண்டுமண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றது. பஞ்சாப் மண்டிலம், சிந்து மாறும் அதன் உபநதிகளாகிய மேற்சொன்ன ஐயாறுகளும் பாய்கின்ற வளமுடைய நாட்டகும். பயிர் விளைச்சலுக்குரிய சத்துள்ள பொருள்கள் இந்த யாறுகளால் அடித்துக்கொண்டு வரப்பெற்று இம்மண்டிலம் சிறப்புற்று இருக்கின்றது. இங்குப்பயிர்த்தொழில் நிரம்ப நடைபெறுகின்றது; கோதுமை, நெல் முதலிய கூல வகைகளும் பருத்தி, எண்ணெய் விதைகள், கரும்பு முதலியனவும் ஏராளமாகப் பயிராகின்றன; கால்நடைப் பண்ணைகள் பல நடத்தப்படுகின்றன, ஆனால், கனிப்பொருள்கள் அருகியே காணப்படுகின்றன.

சிந்து மண்டிலம்

சிந்து மண்டிலம் என்பது ‘தார்’ பாலைவனத்துக்கு மேற்கிலும், பலுசிஸ்தானத்திற்குக் கிழக்கிலும் , பஞ்சாப் மண்டலத்திற்குத் தெற்கிலும், ‘கட்ச்’ வளைகுடாவிற்கு வடக்கிலும் உள்ள நிலப்பரப்பாகும். இதன் பரப்பு ஏறக்குறைய 53 ஆயிரம் சதூரக்கல் ஆகும்.[2] இங்கு நெல், கோதுமை, பார்லி முதலிய கூல வகைகளும் பிறவும் விளைகின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன் சிந்து மண்டிலம் காடுகள் செறிந்து இருந்தது; மிகுந்த மழை பெற்றிருந்தது: அக்காலத்தில் சிந்து யாறும் கி. பி. 14ஆம் நூற்றாண்டுவரை ஒடிக்கொண்டிருந்த ‘மஹாமிஹ்ரான்’ என்னும் யாறும் பாயப்பெற்றுப் பெருவளம் பெற்றதாக இருந்தது. எனினும், இம்மண்டிலம் அடிக்கடி வெள்ளக் கேட்டிற்கு நிலைக்களனாக இருந்தமை வருந்தற்குரியது.

கீர்தர் மலைத் தொடர்

இம்மலைத்தொடர் சிந்துவின் மேற்கில் இருக்கின்றது.இதன் மேற்கில் பலுசிஸ்தானம் உள்ளது. இம்மலை நாட்டில் பண்டைக் காலத்தில் பலவகை விலங்குகள் வாழ்ந்திருந்தன. அடிவாரப் பகுதிகளில் கற்கால மனிதரும் செம்புக் கால மனிதரும் வாழ்ந் திருந்தனர் என்பதற்குரிய அடையாளங்கள் பல கிடைத்துள்ளன. இந்நூலில் ஆரும் செய்திகட்கு இம்மலைத்தொடரைப் பற்றிய அறிவு இன்றியமையாததாகும். சிந்து மண்டிலத்தைப்பற்றிய இப்பொதுவிவரங்களை இம்மட்டோடு நிறுத்தி, சிந்து வெளியிற் கண்டறியப்பெற்ற பண்டை நகரங்களைப்பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

ஹரப்பா

ஹரப்பா என்னும் பண்டை நகரம் பஞ்சாப் மண்டிலத்தில் இரண்டு யாறுகட்கு இடையே அமைந்திருத்தலால், மிகப் பழைய காலத்தில் உயர்ந்த நாகரிகம் வாய்ந்த பட்டணமாக இருந்திருத்தல் வேண்டும். இந்நகரம் மண்மேடிட்டுப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகாரிகள் இதன் அருகில் புகைவண்டிப் பாதை போட்ட பொழுது, அப்பாதைக்கு வேண்டிய கற்களை, இம்மண்மேட்டைத் தோண்டி உள்ளே இருந்த கட்டிடங்களி லிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொண்டனர். இதனால்,ஹரப்பா நகரம் சிதைந்த நிலையை எய்தியது; இதன் முழு நிலைமை இருந்த விதத்தை நாம் இன்று அறியக்கூடவில்லை. எபர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்னும் ஆராய்ச்சி நிபுணர்க்குச் சித்திர எழுத்துக்களைக் கொண்ட சில முத்திரைகளையே இந்நகரம் ஈந்தது. அது முதல் இந்நகரம் ஆராய்ச்சியாளர் கவனத்தைத் தன்பால் இழுத்தது. இங்கு 1920இல் நடைபெற்ற ஆராய்ச்சியின் பயனாய் இங்கு வாழ்ந்தவராகக் கருதப்பட்ட மக்களின் கல்லறை ஒன்றும் மட்டாண்டங்களும் விலங்குகளின் எலும்புகளும் வேறு சில முத்திரைகளும் கிடைத்தன. அதே சமயத்தில் 1922 இல் சிந்து மண்டிலத்து லர்க்கானாக் கோட்டத்தில் உள்ள மொஹெஞ்சொ-தரோ என்னும் நகரத்தின் ஒரு பகுதி தோண்டப்பட்டது. அங்குச் சில பொருள்கள் கிடைத்தன. இவ்விரண்டு இடங்களிலும் கிடைத்த பொருள்கள் ஒன்றாக இருத்தலை அறிந்த ஆராய்ச்சி நிபுணர்கள், இரண்டு இடங்களிலும் மும்முரமாக ஆராய்ச்சி செய்யலாயினர். எனவே, ஹரப்பா நகரத்தில் புகைவண்டிப்பாதை அமைத்தோரால் தொடப்படாதிருந்த பகுதிகள் தோண்டி எடுக்கப்பட்டன.

பண்டை ஹரப்பா நகரத்தின் சுற்றளவு 4 கி.மீட்டராகலாம். அங்கு ஆறு மண் மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 29,100 செ.மீ.நீளம், 23,400 செ.மீ. அகலம் உடையது. மேடுகளின் உயரம் 750 செ. மீ. முதல் 1,800 செ. மீ. அடிவரை இடத்திற்கு ஏற்றவாறு காணப்படுகிறது. ஹரப்பா எட்டு அடுக்குகளையுடைய நகரம்: அஃதாவது எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட நகரம். இதன் காலம் கி. மு. 3500-கி.மு. 2,750 என்னலாம். இது மொஹெஞ்சொ-தரோவை விடச் சிறிது முற்பட்டது.[3]

மாதோ சருப் வாட்ஸ் என்னும் பேரறிஞர் இந்நகர ஆராய்ச்சியில் பேருக்கம் காட்டினார்; பல பொருள்களைப் பற்றிய வியத்தகு செய்திகளை இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சி நிலைய வெளியீடுகளில் வெளியிட்டார்; இறுதியில் ஹர்ப்பாவைப்பற்றிய ஆராய்ச்சியை இரண்டு பகுதிகளாக அண்மையில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகள் பின் வரும் பகுதிகளில் ஆங்காங்குக் கூறப்படும் ஆதலின், இங்குக் கூறாது விடப்பட்டன.

மொஹெஞ்சொ-தரோ (1922-23இல் நடைபெற்ற ஆராய்ச்சி)

இது மண் மூடுபட்டு இருந்த ஆரியர் வருவதற்கு முன்பு மிக உயர்ந்த நாகரிகத்துடன் இருந்த நகரமாகும். இஃது இன்று சிந்து ஆற்றின் மேற்கே இருக்கின்றது. இதனைச் சுற்றிலும் வேறு சில மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் 2100 செ. மீ. உயரமுள்ள ஒன்றன்மீது பெளத்த ஸ்தூபி ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. அதனைக் கண்ட பானர்ஜி என்னும் ஆராய்ச்சியாளர். அதன் சுற்றுப்புறத்தைத் தோண்டும் வேலையில் ஈடுபட்டார். அம்மண் மேட்டினுள் நாற்கோணமுள்ள முற்றம் ஒன்றைக் கண்டார்; அம்முற்றத்தைச் சூழ் இருந்த முப்பது சிற்றறைகளைக் கண்டார். அவற்றுள் ஒர் அறையில் அக்கட்டிடத்தின் காலத்தைக் குறிப்பனபோலச் சில நாணயங்கள் இருந்தன. அவை குஷான் அரசர்காலத்தவை வாசுதேவமன்னனால் வெளியிடப்பட்டவை. பானர்ஜி மிக்க மகிழ்ச்சி அடைந்தவராய் மேலும் மண்மேட்டை அகழ்ந்தார். அம்மேடு தரைமட்ட அளவுக்கு வெட்டப்பட்ட போது, அங்கொரு சித்திர எழுத்துக்களைக்கொண்ட முத்திரை கிடைத்தது. அவர்மேலும் நிலத்தை அகழ்ந்த போது, இரண்டு முத்திரைகளைக் கண்டெடுத்தார்.

இம்மூன்று முத்திரைகளும் ஆராய்ச்சிக் கூடத்தை அடைந்தன. அதே காலத்தில் ஹரப்பாவில் ஆராய்ச்சி நிகழ்த்திய இராய் பகதூர் தயாராம் ஸஹ்னி என்னும் பேரறிஞர், ஹரப்பாவில் கண்டெடுத்த சித்திர எழுத்துக்களைக்கொண்ட முத்திரைகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பினார். இவ்விரண்டு இடங்களில் கிடைத்த முத்திரைகளையும் மட்பாண்டங்களையும் நன்கு சோதித்து, அவற்றின் ஒருமைப்பாட்டை உணர்ந்த ஆராய்ச்சிக் குழுத்தலைவர் ஸர் ஜான் மார்ஷல் வியப்புற்றார்; அவற்றோடு பலுசிஸ்தானத்தில் கிடைத்த பொருள்களும் ஒன்றுபட்டிருத்தலைக் கண்டு பெருவியப்புற்றார். அன்று (1924) முதல் மொஹெஞ்சொ-தரோ மண் மேடுகள் தம் மெய்யுருவை மெல்ல மெல்ல உலகத்திற்கு உணர்த்தலாயின.

ஸ்தூபத்தையுடைய மண்மேடு

பெளத்த ஸ்துாபத்தைக் கொண்ட மண் மேட்டிற்குக் கால கல் தொலைவிற்றான் மொஹெஞ்சொ-தரோ நகரத்தைக்கொண்ட மண் மேடு இருக்கிறது. ஸ்துபத்தைச் சுற்றியுள்ள மண் மேடுகள் ஏறக்குறைய 750 செ மீ உயரமுடையன. மொஹெஞ்சொ-தரோ நகரத்தின் பல பாகங்கள் இந்த மண்மேடுகட்குள் இருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும். ஸ்துபத்தைக் கொண்ட மண்மேடு உள்ள இடமே, மொஹெஞ்சொ-தரோ செழிப்புடன் இருந்த காலத்திலும் சிறந்த இடமாக இருந்திருத்தல் வேண்டும்: அதன் அழிவிற்கு 2500 ஆண்டுகட்குப் பின்னரும் அவ்விடம் உயரிய நிலையில் இருந்தமையாற்றான், பெளத்தர்கள் அங்கு ஸ்துாபியை எழுப்பியிருக்கின்றனர். அந்த மண் மேட்டில் ஸ்துபியும் பெளத்தர் பள்ளியும் நன்கு எழுப்பப்பட்டு இருத்தலின், அவற்றை இவ்வமயம் எடுக்கக்கூடவில்லை. எனினும், அவை நாளடைவில் எடுக்கப்படும். அவற்றின் அடியில் என்ன அரிய பொருள்கள் இருக்கின்றனவோ, அறிந்தவர் யாவர்?

1925-1934 வரை நடைபெற்ற ஆராய்ச்சி

அறிஞர் பானர்ஜி ஸ்தாபங்கொண்ட மண்மேட்டில் சிறிதிடத்தைத் தோண்டியபின்னர், இன்றைய மொஹெஞ்சொ-தரோ நகரம் புதையுண்டிருந்த மண் மேட்டைத் தோண்டும் பணியில் இராவ்பஹதூர் கே. என். தீக்ஷித் என்பவர். முனைந்தார். அவருக்கு உதவியாளர் பலரும் இருந்தனர். அனைவரும் செய்த ஆராய்ச்சி விவரங்கள் சர் ஜான் மார்ஷல் மேற்பார்வையில் மூன்று பகுதிகளையுடைய பெரு நூலாக வெளியிடப்பட்டது.[4] 1927இல் இவ்வாராய்ச்சிக் கென்றே டாக்டர் ஈ. ஜே. ஹெச். மக்கே என்பவர் அமர்த்தப்பட்டார். அவர் இப்பகுதியில் ஆராய்ச்சியை நடத்தினார்; தம் ஆராய்ச்சியிற் கண்டவற்றைப்பற்றி விரிவான நூல்கள் எழுதியுள்ளார்.[5] அவருக்குப்பின், மொஹெஞ்சொ-தரோவில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பொருட்காட்சிச் சாலையின் தலைவராகிய கே. என். பூரி என்பவரும், க்யூ. எம். மொனீர் (Q.M.Moneer) என்பவரும் வேறு சிலரும் ஆராய்ச்சிப் பணியில் இறங்கினர். இப்பெருமக்களின் இடைவிடா உழைப்பால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மண்ணுள் மறைந்து கிடந்த மாநகரமாகிய மொஹெஞ்சொ-தரோவின் பத்தில் ஒரு பாகம் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து உலகத்தை வியப்பால் திடுக்கிடச் செய்யும் பல அரிய விவரங்கள் வெளிப்பட்டன்.

குறிப்பிடத்தக்க செய்திகள்

மண்ணுள் மறைந்த மாநகரத்தைப்பற்றிய அரிய விவரங்கள் அடுத்துவரும் பகுதிகளில் விரிவாகக் கூறப்படுமாதலின், ஈண்டுக் குறிப்பிடத்தக்க சிலவற்றையே கூறுதும்:

இந்நகரம் ஹரப்பாவைப்போலப் பல அடுக்குகளை உடையது. அறிஞர் இதுவரை ஏழு அடுக்குகளைக் கண்டுபிடித்துள்ளனர்; ‘அவற்றின் அடியிலும் பல அடுக்குகள் இருக்கின்றன. ஆனால், நீர் ஊறும் இட்மாக இருப்பதால் அவற்றைத் தோண்டிக் காணல் இயலாதுபோலும்! என்று கூறி வருந்துகின்றனர்.

இம்மாநகரம் ஹரப்பாவைப் போல அழிவுறவில்லை. நகர அமைப்பு, தெருக்களின் அமைப்பு இல்லங்களின் அமைப்பு இவை கண்டு இன்புறத் தக்கவை. வரிசை வரிசையாகக் கட்டப்பட்ட இல்லங்கள், மாடமாளிகைகள், மண்டபங்கள், நீராடும் குளம், கழிதீர்ப்பாதை, அஃது அமைக்கப்பட்டுள்ள உயரிய முறை. இன்ன பிறவும் கண்ணைக் கவர்வனவாகும். ஒவியங்களும் சித்திரக் குறியோடுகூடிய எழுத்துக்களும் கொண்ட கணக்கற்ற முத்திரைகள் அறிஞரை மெய்மறக்கச் செய்தன. பல நிறங்கொண்ட பலவடிவமைந்த மட் பாண்டங்கள், பொம்மைகள், விளையாட்டுக் கருவிகள், பண்பட்ட மண்ணாலும் சுண்ணாம்புக் கல்லாலும் அமைந்த பலவகைப்பொருள்கள், சங்கு-சிப்பி-பண்பட்ட மண். உயர்ந்த கற்கள் இவற்றாலாய அணி வகைகள் முதலியன உலக ஆராய்ச்சியாளர் தம் கவனத்தைத் தம்பால் ஈர்த்தன. இப் பொருள்களிற் பல, நாம் முற்பகுதியிற் கூறிய அசிரியா, பாபிலோனியா, மெசொபொட்டோமியா, ஏலம், பாரசீகம் முதலிய நாடுகளிற் கிடைத்த பொருள்களைப் பெரிதும் ஒத்திருத்தலைக் கண்ட ஆராய்ச்சி அறிஞர் திடுக்கிட்டனர். இவ்வரிய பொருள்களைப் பயன்படுத்திய மக்களது காலம் ஏறக் குறைய கி.மு.3250-கி.மு.2750 ஆக இருக்கலாம் என மதிப்பிட்டனர். இம்மாநகரம் பற்றிய செய்திகளை இத்துடன் நிறுத்தி, இச்சிந்து வெளியிலேயே புதையுண்டு கிடக்கும் பிற நகரங்களைப் பற்றிக் கவனிப்போம்.

சான்ஹு-தரோ

அறிஞர் என்ஜீ.மஜூம்தார், சிந்து ஆற்றின் கிழக்குப்புறத்தில் ஒரு புதிய இடத்தைக் கண்டுபிடித்துள்ளார். அப்புதிய இடத்தில் மூன்று மண்மேடுகள் இருக்கின்றன. அந்த இடம் 30000 செ. மீ. நீளமும் 2100 செ.மீ. அகலமும் உடையது, மண்மேடுகள் மூன்றும் 300, 510, 570 செ.மீ. உயரம் இருந்தன. அந்த இடம் ஒரு காலத்தில் ‘பெரியதொரு நகரமாக இருந்திருத்தல் கூடும்’ என்பது அறியக்கிடக்கிறது. அறிஞர்கள் அதற்குச் சான்ஹு-தரோ என்று பெயர் இட்டுள்ளனர். அறிஞர் மஜூம்தார், சான்ஹு-தரோவில் ஆராய்ச்சி நிகழ்த்திய அளவில், வெவ்வேறு வகையான பொருள்கள் பலவற்றைக் கண்டெடுத்துள்ளார்.

அங்குள்ள வீடுகள் பல உலர்ந்த செங்கற்களால் கட்டப்பட்டவை; சுட்ட செங்கல் கொண்டு கட்டப்பட்டவையும் சில உள. அங்கு அகழப்பட்ட வரையில் 300 பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் இரத்தின மணிகள் குறிப்பிடத் தக்கவை. இம்மணிகள்மீது ‘8’ போன்ற வடிவம் காணப்பட்டது. அங்குச் சிப்பியாலான வளையல் துண்டுகள் பல கிடைத்தன. ஒரு வளையலில் இரண்டு துளைகள் இருந்தன. அழகிய பந்து ஒன்று வளைந்த கோடுகளுடன் காணப்பட்டது. முத்திரைகள் பல கிடைத்தன. இவற்றுள் ஒன்றில் இரு மனிதர் வில்லும் அம்பும் ஏந்தி நிற்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அருகில் ஒரு மலையாடு நிற்பது போலக் காணப்பட்டது. விளையாட்டுக் கருவிகள் பல கிடைத்தன. சிறு தேர் உருளைகளும் உடைந்த தேர்கள் இரண்டும் மண்ணில் செய்து சூளை இடப்பட்டவை. எருமைத்தலை ஒன்று செவ்வண்ணம் பூசிக் கழுத்தில் துளையிடப் பட்டுள்ளது. இது போலத் துளையிடப்பட்ட குரங்கு காண்டா மிருகம் முதலியனவும் கிடைத்தன. பறவை ஒன்று மிக்க அழகாய்ச் செய்யப்பட்டுள்ளது. ஓர் ஊதுகுழல் நன்னிலையில் காணப் பட்டது. இவை அனைத்தும் செந்நிறம் பூசப்பட்டவை ஆகும். இவை தவிரக் களிமண்ணாற் செய்த ‘தரைப்பெண்’ தேவதையின் பதுமை ஒன்று கிடைத்தது. இஃது 15 செ. மீ. உயரமுள்ளது. அங்கு 198 மட்பாண்டங்கள் கிடைத்தன அவை பல நிறங்களில் பல்வகை ஒவியங்களுடன் காணப்படுகின்றன. அவற்றுள் ஒருபுறக் கைப்பிடியுடன் காணப்படுகின்றன. அவற்றுள் ஒருபுறக் கைப்பிடியுடன் காணப்பட்ட பாண்டம் ஒன்றே சிறந்ததாகும். அவற்றுடன் செம்புக் கத்தி, வளையல் துண்டு, உளி, ஈட்டிமுனை முதலியனவும் நிரம்பக் கிடைத்தன.

சான்ஹு-தரோவில் கிடைத்த் பொருள்கள், மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவற்றுக்கு ஒப்பாகவே இருக்கின்றன். அங்குக் கிடைத்த தாழிகளில் தீட்டப்பெற்ற ஒவியங்கள் மொஹெஞ்சொ-தரோ ஒவியங்களை ஒத்துக் காணப்படுகின்றன. ஒன்றில் மரமும் மற்றொன்றில் வெள்ளாடும் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு முத்திரைகள் அங்குக் கிடைத்தன. எனவே, சான்ஹ-தரோவை மேலும் நன்கு அகழ்ந்து ஆராய்ச்சி நிகழ்த்தினால், பண்டைக் காலத்திற்கு உரிய பொருள்கள் பல கிடைத்தல் கூடும். ஆயின், அப்புதிய இடத்தை அகழ்ந்து பார்க்கும் உரிமையை இந்திய அரசாங்கத்தாரிடமிருந்து, ஒர் அமெரிக்க ஆராய்ச்சிக் கழகத்தினர் பெற்றுவிட்டனர். இனி அக்கழகத்தினர். தம் பொருட்செலவில் அவ்விடத்து ஆராய்ச்சிப்பணி ஆற்றுவர் போலும்!

லொஹுஞ்-சொ-தரோ

சிந்து ஆற்றின் மேற்குக் கரைவெளியில், பியாரோகோதத்திற்கு அருகில் மொஹெஞ்சொ-தரோவுக்கு 96 கி.மீ. தெற்கில் ஒரு பெரிய மண்மேடு இருப்பதாகத் தெரிந்தது. அவ்விடம் இருந்த மண்மேடு 27,000 செ.மீ.நீளமும் 18000 செ.மீ. அகலமும் 690 செ.மீ. உயரமும் உடையது. அம்மண்மேட்டின் ஒரு பகுதியைத் தரைமட்டம் வரையில் தோண்டி அதற்குக் கீழும் 330 செ.மீ. வரை அறிஞர் மஜூம்தார் சோதனை புரிந்தார். அங்குச் செங்கற்களாலாகிய - கட்டிடங்கள் காணப்பட்டன. அவற்றிற்கு அடியில் அவற்றுக்கும் முற்பட்ட காலத்துச்சின்னங்கள் பல காணப்பட்டன. அவற்றுள் சிறந்தவை மட்பாண்டங்களாகும். இவை செந்நிறம் பூசப்பட்டவை. அச்செந்நிறத்தின் மீது கறுப்பு வண்ணத்தில் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.இத்தகைய மட்பாண்டங்கள் பல மொஹெஞ்சொ-தரோவிலும் கிடிைத் துள்ளமை கவனித்தற்குரியது, இப்பாண்டங்கட்கு மேற்புறத்தில் காணப்பட்ட வேறுவகைப் பாண்டங்கள் பிற்கால நாகரிகத்தைச் சேர்ந்தவை ஆகும் என்று மஜும்தார் கருதுகின்றார். ஆகவே, இப் பகுதியிலும் இரு வேறுபட்ட நாகரிகம் இருந்திருத்தல் வேண்டும் என்பது கருதத்தக்கது. பிற பொருள்களுள் குறிப்பிடத் தக்கவை களிமண்ணாலாய எருதுப் படிவங்கள் ஆகும். அவற்றுள் ஒன்று கழுத்தில் துளையிட்ப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் அமைந்த களிமண் அப்பங்கள், உயர்ந்த களிமண்ணாலாய வளையல்கள் முதலியன கண்டெடுக்கப்பட்டன. அங்குக் கிடைத்த பலவகை மணிகளுள் மாக்கல் மணிகள் பலவாகும் அவை தட்டை வடிவத்தில் அமைந்துள்ளன. அம்மணிகள் மொஹெஞ்சொ-தரோவிலும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. மாக்கல்லாலான முத்திரை ஒன்றும் கிடைத்தது. அதன்மீதுள்ள எழுத்துக் குறிகள் மொஹெஞ்சொ-தரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் உள்ள எழுத்துக் குறிகளையே ஒத்துள்ளமை வியப்பூட்டுவதாகும்.

இவ்வண்ணம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மண்மேடு இருந்த இடம் மொஹாஞ்சொ-தரோ என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. அந்த இடங்களில் ஆராய்ச்சித் தொண்டாற்றிய அறிஞர் மஜும்தார் பிறிதோர் உண்மையையும் வெளிப்படுத்தி யுள்ளார். அஃதாவது, ‘அக்கால மக்கள், குன்றுகளின் அடிப் புறங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்ப வெப்ப நிலையுடன் இருக்கின்றன என்பதையும் தற்காப்பு அரண் உடையவைகளாக இருக்கின்றன என்பதையும் நன்கு அறிந்திருந்தனர்’ என்பதே ஆகும்.[6]

இது சிந்து மண்டிலத்தில் ‘ஷஹடட்பூர்’ என்னும் ஊருக்கு வடமேற்கில் 6.5 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய மண்மேடாகும். இதன் அருகில் 0.5 கி. மீ. தொலைவில் வேறொரு மண்மேடு இருக்கின்றது. மொஹெஞ்சொ-தரோ மண்மேட்டின் மீது இருக்கும் ஸ்தூபம் போன்ற பெளத்த ஸ்தூபி ஒன்று இங்கும் இருக்கின்றது. இந்த ஸ்தூபம் உள்ள மண்மேட்டைச் சுற்றிலும் சிறிய மண்மேடுகள் உள்ளன. இவை அனைத்தும் கொண்ட பெரிய மண் மேடேதகஞ்சொதரோ என்பது. இதன் பரப்பு ஐந்து ஏக்கர் ஆகும். மண்மேட்டின் உயரம் 600 செ.மீ. முதல் 1200 செ.மீ. ஆகும். இங்குச் சுட்ட செங்கற்கள் 10 செ.மீ. கனமுடையனவாகக் காணப்படுகின்றன. இங்குச் சித்திரம் தீட்டப்பெறாத மட்பாண்டங்களே மிகுதியாகக் கிடைக்கின்றன. இம்மட் பாண்டச் சிதைவுகளும் செங்கற்களுமே இப்பகுதியில் பெருவாரி யாகக் கிடைக்கின்றன. சில் செங்கற்கள் 28 செ.மீ. சதுரமுடையன; 5.5 செ. மீ. கனமுடையன. உயர்தரமணிகள் இரண்டு கிடைத்தன. இந்த இடத்தை மேலும் அகழ்ந்து ஆராய்ச்சி செய்யவில்லை. சித்திரம் தீட்டப் பெறாத மட்பாண்டங்கள் இருத்தலைக் காணின், இங்கு மிகப் பழைய நகரம் இருந்திருத்தல் வேண்டும் என்பது வெளியாகிறது.[7]

சக் பூர்பானி ஸியால்

ஹரப்பாவுக்குத் தென்கிழக்கே ஏறக்குறைய 20.5 கி. மீ. தொலைவில் பியாஸ் ஆற்றின் உலர்ந்த பழைய படுக்கை ஒன்றில் காணப்பட்ட மண்மேடுகளை அறிஞர் வாட்ஸ் என்பவர் அகழ்ந்து பார்த்தார். அந்த இடம் ‘சர் பூர்பானிஸியால்’ என்று வழங்கப் படுகிறது. அங்கு ஏராளமான உடைந்த மட்பாண்ட ஒடுகளும், செங்கற் கட்டிகளும், அடிப்புறம் குவிந்துள்ள நீர் அருந்தும் ஏனங்களும், நிறந் தீட்டப்பட்ட பாண்டச் சிதைவுகளும், உருட்டு வடிவான ஏனங்களும், மோதிரங்களும், பீடங்கள் மீது வைக்கும் கலன்களும், முட்டை வடிவக் கோப்பைகளும், தாம்பாளங்களும், வளையல்களும், குரங்கு அணில், கொம்புடைய எருது, கல்லால் கண்கள் வைக்கப்பெற்ற மயில் ஆகிய படிவங்களும், தலையற்ற பெண் படிவங்களும், காதணிகளுடன் கூடிய சிற்றுருக்களும், இருந்தன. அங்கு மேலும் பல நிறங்களுடைய சுட்ட களிமண் மணிகள், வளையல்கள், மாக்கல்லால் செய்யப்பட்ட மணிகள், இரத்தினக் கல் மணிகள் முதலியனவும் கிடைத்தன. பொதுவில் அவ்விடத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் அங்குக் கிடைத்திருக்கும் பொருள்கள் அனைத்தும் மொஹெஞ்சொ. தரோ ஹரப்பா ஆகியவற்றின் நாகரிகத்திற்கு இயைந்தவையாகவே இருக்கின்றன என்பது அறிஞர் வாட்ஸின் கருத்தாகும்.[8]

அலி முராத்

சிந்து வெளியில் ஆராய்ச்சிக்குரிய மற்றோர் இடம் அலி முராத் என்பது. அங்குச் சரித்திர காலத்திற்கு முற்பட்ட இரண்டு பெரிய மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றின் நீளம் 33000 செ.மீ, அகலம் 33000 செ.மீ. உயரம் 810 செ.மீ. ஆகும். அவற்றுள் ஒன்றின் உயரம் 750 செ. மீ. ஆகும். அதன் தென் பகுதியைத் தோண்டிய பொழுது கல்லால் கட்டப்பட்ட கிணறு ஒன்று காணப்பட்டது. அதன் உட்புறக் குறுக்களவு 20 செ. மீ. ஆகும். அக்கிணற்றை அடுத்து வளைவான கற்சுவர் ஒன்று 12.5 செ.மீ. உயரத்தில் காணப் பட்டது. அதன் நீளம் 5100 செ.மீ. என்று கணக்கிடப்பட்டுள்ளது. அது கோட்டைக்கமைந்த மதிற் சுவராக இருந்திருக்கலாம். அச்சுவர்க்கு உட்பட்ட இடத்தில் பல கட்டிடங்கள் இருந்தமைக் குரிய அடையாளங்கள் கிடைத்துள்ளன. அவை யாவும் கற்காலத்தை நினைப்பூட்டுகின்றன. அவ்விடத்தில் கிடைத்த மட் பாண்டங்கள் மேற்குறிப்பிட்ட பல இடங்களில் கிடைத்த மட்பாண்டங்களைப் போலவே வண்ணமிடப்பட்டும் சித்திரம் தீட்டப்பட்டும் இருக்கின்றன. அவ்விடத்தில் களிமண் அப்பங்கள் ஆயிரக் கணக்கில் கிடைத்துள்ளமை பெரிதும் வியப்பூட்டு வதாகும்.இவையன்றி, முழுவேலைப்பாடு அமைந்துள்ள பீப்பாய் வடிவம் கொண்ட உயர்தரக் கல் ஒன்று 5 செ.மீ.நீளத்தில் காணப் பட்டது. இதே வடிவங்கொண்டசெம்மணி ஒன்றும் கண்டெடுக்கப் பட்டது. அவ்விடம் முழுவதும் தோண்டி எடுக்கப்படின், வேறு பல பொருள்களும் பிறவும் அறிதல் கூடுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.[9]

பாண்டி வாஹி

இப்பெயருடைய சிறிய கிராமம் லர்க்கானாக்கோட்டத்தில் கீர்தர் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளது. இதன் அருகில் இதன் பெயரையே கொண்டி மண்மேடு ஒன்று காணப்படுகிறது. அது 13500 செ. மீ. நீளமும் 7500 செ. மீ. அகலமும் 630 செ. மீ. உயரமும் உடையது. எனினும், அதன் பழைய அளவு மிகப் பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அம்மண் மேட்டில் குறிப்பிட்ட மூன்று இடங்களில் ஆராய்ச்சி நடைபெற்றது. மேற்கூறப்பட்ட இடங்களில் கிடைத்த மட்பாண்டப் பொருள்களும் பிறவும் அவ்விடத்தும் கிடைத்தன. அம்மண்மேடும் முன் சொல்லப்பட்டமேடுகளைப்போலவே முழு ஆராய்ச்சிக்கு உட்படுமாயின், பல உண்மைகள் வெளியாகும்.[10]

அம்ரி

அம்ரி என்பது கராச்சிக் கோட்டத்தில் வடக்கு எல்லையில் சிந்து ஆற்றின் கரையில் உள்ள சிற்றுார் ஆகும். சிந்து, ஆற்றில் பிரயாணம் செய்த பர்னஸ் என்னும் மேனாட்டு அறிஞர் சுமார் 100 ஆண்டுகட்கு முன்னரே, இவ்விடத்தைப்பற்றிக் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “அம்ரி என்னும் பெயருடன் இன்று விளங்கும் சிற்றுர், ஒரு காலத்தில் மிகப் பெரிய நகரமாக இருந்திருத்தல் வேண்டும். இது சிந்துவின் வெள்ளத்திற்கு அடிக்கடி இரையாகி மறைந்திருத்தல் வேண்டும். எனினும், இன்றுள்ள கிராமத்தினருகில் 1200 செ.மீ. உயரத்தில் மண் மேடு ஒன்று காணப்படுகிறது. அதனைத் தோண்டிப் பார்ப்பின் பல உண்மைகள் வெளிப்படல் கூடும்”.

இவ்வறிஞர் ஒரு நூறு ஆண்டுகட்கு முன் இங்ஙனம் எழுதிச் சென்றமை இன்று உண்மை ஆகிவிட்டது. இவர் ஆப்பி மண்மேடு, கிராமத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது. அதன் அருகில் வேறு பல மண் மேடுகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றில் உலர்ந்த செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடச் படுகின்றன. சில மண்மேடுகளில் சுட்ட கட்டிடச்சிதைவுகள் காணப்படுகின்றன.அவ்விடத்தை ஆராய்ச்சி செய்யச் சென்ற மஜும்தார் ஒரு மண்மேட்டில் 1500 செ. மீ. நீளமும் 360 செ. மீ. அகலமும் 150 செ. மீ ஆழமும் உள்ள குழி சிதைவுகள் காணப் செங்கற்களால் ஆகிய ஒன்றைத் தோண்டிப் பார்த்தார். மூன்று கற்சுவர்களின் பகுதிகள் தென்பட்டன. ஆராய்ச்சியா ளர் அச்சுவர் களின் அடிமட்டம் வரை தோண்டவே, அவ்விடம் தரைமட்டத்தினும் கீழ்நோக்கிச் சென்றது: அக்குழியிலிருந்து 253 பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் சித்திரம் தீட்டப்பட்ட விளையாட்டு வண்டிகள், மட் பாண்டங்கள், பதுமைகள், வளையல் துண்டுகள், மணிகள், மண் அப்பங்கள் முதலியன சிறப்பித்துக்கூறத் தகுவன. மட்பாண்டங்கள் 214 கிடைத்துள்ளன.இவை பலவகை நிறங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்நிறங்களுக்குமேல் மீன் செதில், வட்ட மலர், மாவிலை, அரசிலை, அலகில் மலருடன் விளங்கும் மயில், சதுரங்கப்பலகை, முட்டை, பட்டைகள், பட்டைகளுக்குள் முக்கோண வடிவம் முதலிய ஓவியங்கள் பற்பல விதமாகத் தீட்டப்பட்டுள்ளன. பொதுவாக, மட்பாண்டங்கள் செந்நிறமே பூசப்பட்டுள்ளன. இவை மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தவற்றை ஒத்திருக்கின்றன.

பிற பொருள்களில் நீண்டு உருண்ட பச்சை மணிகளும், குமிழ்போன்ற மணிகளும் குறிப்பிடத் தக்கவை. இம்மணிகள் மீது வளையங்கள் வரையப்பட்டுள்ளன. வளையல் துண்டுகள் 25 கிடைத்தன. இவற்றுட் சிலவற்றில் செந்நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன.பதுமைகளுள் சிதைந்த் தேர்கள் 12 கிடைத்தன; எருதுப்பதுமைகள் 8 கிடைத்தன. ஒர் எருதுத் தலை கழுத்தில் துளையுடன் காணப்பட்டது. இத்தலைக்குரிய உடல் காணப்பட வில்லை. இவை தவிர, 10 மண் அப்பங்கள் கிடைத்திருக்கின்றன. இங்குக் கிடைத்த பொருள்கள் மொஹெஞ்சொ-தரோ நாகரிகத்துடன் பெரிதும் ஒத்துக் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.[11]

கோட்லா நிஹாங் கான்

‘சிவாலிக் மலைக்கு அடிப்புறம் உள்ள ‘அம்பாலா’ கோட்டத்தில் ‘ருபார்’ நகருக்கு அருகில், சிந்து ஆற்றின் கிளையாகிய ஸ்ட்லெஜ் ஆற்றின் படுக்கையில் இருக்கும் கோட்லா நிஹாங் கான் என்னும் சிற்றுாரைச் சார்ந்துள்ள மண்மேட்டை அறிஞர் வாட்ஸ் அகழ்ந்து ஆராய்ச்சி நிகழ்த்தினார். அம்மேடு 12 ஏக்கர் பரப்புள்ளது; 360 செ. மீ. முதல் 900 செ.மீ. வரை உயரமுடையது. அங்கு அவர் கண்டெடுத்த பொருள்கள் பலவற்றை, ஹரப்பாவிலும் மொஹெஞ்சொ-தரோவிலும் பிற இடங்களிலும் கிடைத்த பொருள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அவை பெரிதும் ஒன்றுபட்ட ஒர்ே நாகரிகத்திற்கு உரியவையாக இருந்தன. கோட்லா நிஹாங் கானில் கிடைத்த களி மண்ணாலாய செங்கற்கள், களிமண் கொண்டு செய்யப்பட்ட மணிகள், அப்பங்கள், மோதிரங்கள், சுரைக்குடுக்கை போன்ற நீர்க்குவளைகள், தாம்பாளங்கள், சாடிகள் வைக்கும் பீடங்கள், மட் பாண்டங்கள், இவற்றின் உடைந்த பகுதிகள், வளையல் துண்டுகள், சிறு நிறைக் கற்கள், முட்டை வடிவத்தில் இருந்த நீர் அருந்தும் குவளைகள் முதலியன சிந்து வெளிமக்கள் நாகரிகத்தையே ஒருவாறு ஒப்பனவாக இருக்கின்றன.[12]

நூற்றுக்கு மேற்பட்ட மண்மேடுகள்

சிந்து ஆற்றின் கிழக்குக் கரைமீதுள்ள ‘கைர்ப்பூர்’ சமத்தானத்திலும், கத்தியவாரிலுள்ள ‘லிம்ப்டி’ சமத்தானத்தைச் சேர்ந்த, ‘அரங்பூர்’ என்னும் இடத்திலும், லர்க்கானாவுக்கு அருகில் உள்ள ‘ஜுகார்’ என்னும் இடத்திலும், காஜிஷா என்னும் இடத்திலும் இவ்வகை ஆராய்ச்சிப் பணி நடைபெற்றது. இந்நான்கு இடங்களிலும் நிகழ்த்திய ஆராய்ச்சித் தொண்டின் பலனாகக் கிடைத்த பண்டைப் பொருள்களை நோக்கின், இவற்றிற்கும் மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த பொருள்களுக்கும், இடையே சிறு வேறுபாடும் இல்லை எனலாம். இவை முழுவதும் சிந்து வெளி நாகரிகத்துடன் இயைந்து காணப்படுகின்றன.

சிந்து வெளியில் மட்டும் ஒரு நூற்றுக்கு மேற்பட்ட மண்மேடுகளும் பழைய சரித்திர காலத்திற்குரிய இடங்களும் இருக்கின்றன.இவற்றை ஆராய்ச்சி செய்து பார்ப்பின், இன்றுள்ள இந்திய வரலாறு அற்புத மாறுதலை அடையும் என்பதில் ஐயமில்லை.




  1. Nelsons ‘Encyclopaedia’, Vol:13, p. 129;
  2. Cassel’s World Pictorial Gazetteer pp. 855, 923.
  3. M.S.Vat’s Excavations at Harappa’, Vol.I pp.3-21.
  4. Mohenjo-Daro and the Indus Civilization; Vols, I to III
  5. Dr. E.J.H.Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’. Vols. I & II and ‘The Indus Civilization.
  6. Annual Reports of the Archaeological Survey of India’ - (1930 - 1934), Part I, pp. 99-93.
  7. Annual Report of the Archaeological Survey of India’ - (1929 - 1930) P. 117.
  8. ‘Annual Reports ofthe Archaeological Survey of India’ - (1930-1934). Part 1. pp.106. 107. M.S.Vat’s ‘Excavations at Harappa’ pp. 475-476.
  9. ‘Annual Reports of the A.S. of India’, (1930-1934) Part I. pp. 97, 98 and NG. Majumdar’s ‘Explorations in Sind’, p. 89.
  10. Ibid, pp. 104, 105.
  11. Annual Report of the Achaeological Survey of India (1929-1930), pp. 113. 116 N.G.Majumdar’s ‘Explorations in Sind’, pp. 24-28.
  12. ‘Annual Report of the Archaeological Survey of India’ (1929-1980) pp. 131-132. M.S.Vates’s ‘Excavations at Harrappa’, Vol.I. pp.476-477.