மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/4. நகர அமைப்பும் ஆட்சி முறையும்

விக்கிமூலம் இலிருந்து
4. நகர அமைப்பும் ஆட்சி முறையும்

மறைந்தாரின் மண்மேடுகள்

மொஹெஞ்சொ-தரோ நகரம் அமைந்துள்ள இடத்தில் பல மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 117,000 செ.மீ. நீளமும் 60,300 செ மீ அகலமும் உடையது. இது தெற்கு வடக்காக அமைந்துள்ளது. இதற்கு 18000 செ மீ மேற்கே இதற்கடுத்த பெரிய மண்மேடு ஒன்று இருக்கின்றது. இதுவும் தெற்கு வடக்காக அமைந்துள்ளது. இதன் நீளம் 39,500 செ மீ அகலம் 29700 செ.மீ பெரிய மேட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் சிறிய மண் மேடுகள் பல இருக்கின்றன.முதலில் குறிப்பிட்ட இரண்டுபெரிய மண்மேடுகளும் முதலில் ஒன்றாகவே இருந்தனவா. அன்றி இரண்டாகவே இருந்தனவா என்பதை இன்று உறுதியாகக் கூறல் இயலாது. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள இடத்தைத் தோண்டிப் பார்த்த பின்னரே முடிவு கூறுதல் இயலும். இவ்விரண்டு பெரிய மண்மேடுகளும் நகரமாகவும், சுற்றியுள்ள பிற சிறிய மண் மேடுகள் நகரத்தைச் சேர்ந்த பகுதிகளாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இம்மண்மேடுகள் சிறிதுமங்கிய செந்நிறத்துடன் காணப்படுகின்றன.

ஆற்றோரம் அமைந்த நகரம்

புதிய கற்கால மக்களும் செம்புக்கால மக்களும் அறிவு வளர வளர, ஆற்றோரங்களில் நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தனர் என்று முதற் பகுதியிற் கூறினோம். நாம் கூறியாங்கே, இவ்விரு காலங்களையும் சேர்ந்த சிந்து நாட்டு மக் கள் தம் வாழ்விற்கு உரிய இடங்களை ஆற்றோரங்களில் அமைத்துக் கொண்டிருந்தமை கவனித்தற்குரியது. மொஹெஞ்சொ தரோ சிந்து ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. ஹரப்பா, ராவி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. மரக்கலப் போக்குவரத்து வசதி கருதியே இந்நகரங்கள் ஆற்று ஓரங்களில் அமைக்கப் பட்டுள்ளன. மொஹெஞ்சொ-தரோவில் படகுகளில் ஏற்றப்படும் பொருள்கள் அதே ஆற்றில் யாதொரு தடையும் இன்றிச் சென்று அரபிக்கடலை அடைய வசதியுண்டு. அங்ஙனமே வெளி நாட்டுப் பொருள்கள் கப்பல்கள் மூலம் வந்து சிந்து மண்டிலத் துறைமுகத்தை அடைந்த பின், அப்பொருள்களைப் படகுகள் ஏற்றிக்கொண்டு மொஹெஞ்சொ-தரோவை அடைதலும் எளிதானது. இப்போக்குவரவு வசதி கருதியே அப்பண்டை வாணிபம் புகழ் பெற்ற மக்கள் ஆற்றோரங்களில் அழகிய நகரங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனராதல் வேண்டும்.

நகரம் அமைந்த இடம்

மொஹெஞ்சொ-தரோ நகரம் அமைந்துள்ள இடம் மிகப் பரந்த சமவெளியாகும். இந்நகரம் அமைந்துள்ள இடம் ஒரு சதுரமைல் பரப்புடையது. இதில் பத்தில் ஒரு பாகமே இப்பொழுது தோண்டப்பெற்று ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. தோண்டப்படாத பகுதி 15, 29, 92, 160 ச. செ. மீ. பரப்புடையது. அப்பகுதியும் தோண்டப்பெற்று ஒழுங்கான முறையில் ஆராய்ச்சி நடைபெறுமாயின், இந்நகரத்தைப்பற்றிய பல செய்திகள் உள்ளவாறு உணர்தல் கூடும். ஆயினும், இன்றுள்ள நிலையில் தோண்டி எடுக்கப்பெற்ற பத்தில் ஒரு பாகத்தை ஆராய்ந்த அளவில் இந்நகரத்தைப் பற்றிய தம் கருத்துக்களை ஆராய்ச்சி யாளர் விரிவாகக் கூறியுள்ளனர்.

தெருக்களின் அமைப்பு

இந்நகரத்தின் தெருக்கள் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் அமைந்துள்ளன. தென்கிழக்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என்பவற்றைக் கவனித்தே - நல்ல காற்றோடத்தை எதிர்பார்த்தே இத்தெருக்கள் அமைக்கப்பட்டன வாதல்வேண்டும்.காற்றுநகரின் அகன்றதெருக்களில் வீசும்பொழுது, குறுக்கேயுள்ள சிறிய தெருக்களிலும் புகுந்து எல்லா மக்கட்கும் நற்காற்று நுகர வசதி உண்டாகல் இயல்பே. இந்நோக்கம் பற்றியே சிறிய தெருக்கள் பெரிய தெருக்களில் வந்து கலக்குமாறு செய்யப்பட்டுள்ளன. காற்றோட்டம் கருதி இங்ஙனம் தெருக்களை அமைத்துள்ள முறை, உயரிய நாகரிக மக்கள் எனப் போற்றப் பட்ட பாபிலோனியர் நகரங்களிலும் காணக்கூடவில்லை என்பது கவனித்தற்குரியது.

பெரிய தெருக்களைச் சிறியதெருக்கள் ஒரே நேராக வெட்டிச் சென்றுள்ளன. ஒரு பெருந்தெரு முக்கால் கல் நீளம் உடையது.இது நகர மண்மேட்டையே இரண்டாகப் பிரித்துள்ளது. இதன் அகலம் 990 செ.மீ. இது வண்டிப் போக்குவரவிற்கே இவ்வளவு அகலமாக அமைக்கப்பட்டிருத்தல்வேண்டும். இதன் இருபுறங்களிலும் மக்கள் நடந்து செல்லும் நடைப்பாதையும் அமைந்துள்ளது. இத்தெருவில் சிந்து மண்டில வண்டிகள் மூன்று ஒரே வரிசையிற் போக வசதி உண்டென்று அறிஞர் அறைகின்றனர்.இதன் இடையிடையே சிறிய தெருக்கள் பல சந்திக்கின்றன. இந்நெடுந் தெருவின் மேற்குப் புறத்தில் குறிப்பிடத்தக்க பெரிய கட்டிடங்கள் இருந்தனவாதல் வேண்டும். இதைவிடப் பெரிய தெரு ஒன்று சிறிதளவே தோண்டப்பட்டுள்ளது. அதனால் அதைப்பற்றி ஒன்றும் இப்பொழுது கூறுதற்கில்லை.540 செ.மீ அகலமுடைய தெருக்கள் சில இருக்கின்றன. 390 செ.மீ. அகலமுள்ள தெருக்கள் சில, 270 செ. மீ. அகலம் முதல் 360 செ மீ அகலம் வரை உள்ள தெருக்கள் பல. 120 செ.மீ. அகலமுடைய சந்துகள் பல இக்குறுந்தெருக்கள், நெடுந் தெருக்களையும் நடுத்தரமான தெருக்களையும் பல இடங்களில் இணைத்துள்ளன. பொதுவாகக் கூறின், எல்லாத் தெருக்களுக்கும். இணைப்பு இருக்கின்றது.

சில தெருக்கள் உடைந்த செங்கல் துண்டுகளையும் மட்பாண்டச் சிதைவுகளையும் கொட்டிக் கெட்டிப்படுத்தப் பட்டுள்ளன. பல தெருக்கள் புழுதிபடிந்துள்ளன. சிறிய தெருக்கள் பெரிய தெருக்களைவிடநன்னிலையில் அமைந்துள்ளன. பெருத்த வாணிபமே இந்நிலைமைக்குக் காரணமாகும். சில சந்துகளின் முனை வீட்டுச் சுவர்கள் மீது, சுமைதூக்கிச் சென்ற விலங்குகள் உறைந்து சென்ற அடையாளங்கள் காணப்படுகின்றன. வேறு சில முனை வீட்டுச் சுவர்கள் வளைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதி ஏற்றிச் செல்லும் விலங்குகளும் வண்டிகளும் சந்தைவிட்டுத் திரும்பும்போது வீட்டுச் சுவரைப் பழுதாக்க இடமிராதன்றோ? மிக நுட்ப அறிவுடன் அமைக்கப்பட்டுள்ள இச்சுவர் அமைப்புச் சுமேரியர் நகரமான புகழ் வாய்ந்த ‘உர்’ என்பதில் அமைந்துள்ள சில முனை வீட்டுச் சுவர்களில் காணப் படுகின்றது. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த இப்பண்டை மக்கள், இவ்வளவு மதிநுட்பம் வாய்க்கப் பெற்றிருந்தனர் என்பதை எண்ண எண்ண ஆராய்ச்சியாளர் பெருவியப்புக் கொள்கின்றனர்.

கால்வாய் அமைப்பு

மொஹெஞ்சொ-தரோவில் கால்வாய் இல்லாத நெடுந் தெருவோ குறுந்தெருவோ இல்லை. கால்வாய்கள் அனைத்தும், ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து வழவழப் பாக்கிய செங்கற்களால் அமைந்தவை. பொதுவாக எல்லாக் கால்வாய்களும் 50 செ. மீ. ஆழமும் 22 செ. மீ அகலமும் உடையனவாக இருக்கின்றன. இக்கால்வாய்களைப் போலவே இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கழிநீர்க் கால்வாய்களும் இத்தகைய சிறந்த முறையிற் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டே கட்டப்பெற்றவை ஆகும். இவ்வீட்டு வடிகால்கள் தெருக்கால்வாயுடன் சேரும் இடங்களில், சதுர வடிவில் செங்கற்கள் கொண்டு கட்டப்பெற்ற் சிறு குழிகள் அமைந் துள்ளன. அக்குழிகள் 22 செ. மீ. சதுரமும் 45 செ. மீ. ஆழமும் உட்ையவை. அக்குழிகளில் 90 செ. மீ. உயரமுடைய தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அத்தாழிகளின் அடியில் சிறிய துளைகள் இருக்கின்றன. வீட்டு வடிகால்கள் வழியே கழிநீருடன் குப்பை களங்கள் வந்து தாழிகளில் விழுதல் இயல்பு. தாழிகளின் அடியில் உள்ள சிறிய துளைகள் வழியே கழிவுநீர் தொட்டியில் நிரம்பித் தெருக் கால்வாயில் கலக்கும். அந்நீருடன் வந்த குப்பை கூளங்கள் தாழியின் அடியிலேயே தங்கி விடும் நகராண்மைக் கழகப் பணியாட்கள் அக்குப்பை கூளங்களை அவ்வப்போது தாழிகளிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்வர். ‘ஆ! இச்சிறந்த முறை வேறு எந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாக யாம் கண்டதில்லை; கேட்டது மில்லை’ என்று சார் ஜான் மார்ஷல் போன்றார் கூறிப் பெரு வியப்பு எய்தியுள்ளனர். இவ்வியத்தகு முறை, நாகரிகம் மிகுந்த இக்காலத்திலும் சென்னை, கல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் உண்டே தவிரப் பிற பட்டணங்களில் இல்லை என்பது கவனிக்கத் தக்கது. இவ்வரிய கால்வாய் அமைப்பு முறை 5000 ஆண்டுகட்கு முற்பட்ட மக்களால் கைக்கொள்ளப்பட்டிருந்தது எனின், அவர் தம் அறிவு நுட்பமும் சுகாதார வாழ்வில் அவர்க்கிருந்த ஆர்வமும் வெள்ளிடை மலையாம். சென்னை போன்ற பெரிய நகரங்களில் நிலத்தின் அடியில் சாக்கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், மொஹெஞ்சொ-தரோவில் தரைமீதே சாக்கடைகள் கட்டப் பட்டுள்ளன. இந்நகரத்துச் சாக்கடை அமைப்பு முறையே நாளடைவில் பாதாளச் சாக்கடைகளாக மாறியுள்ளது என்பதும் கவனித்தற் குரியது.

சுவருக்குள் கழிநீர்க் குழை

மேன்மாடங்களிலிருந்து வரும் கழிநீரைக் கீழே உள்ள தாழியிற் கொண்டு சேர்க்கச் சுட்ட களிமண்ணாலாய பெரிய குழைகள் சுவர் அருகில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில பெரிய வீடுகளில் இக்குழைகள் வெளியே தோன்றாதவாறு சுவருக்கு உள்ளேயே அமைந்திருத்தல் வியப்பினும் வியப்பாகும். தாழியின் அருகில் உள்ள இக்குழைகளின் வாய் 8 செ. மீ. அகலமும் 10 செ. மீ. நீளமும் உடையனவாக இருக்கின்றன.

மூடப்பெற்ற கால்வாய்கள்

தெருக்களில் ஒடும் பெரிய கால்வாய்கள் மீது நீண்ட சதுர வடிவில் 30 செ. மீ. நீளமுடைய செங்கற்கள் பதித்து நெடுக மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் 56.5 செ. மீ. நீளமுள்ள கற்களும் மூடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆயின், இடை இடையே கட்ட செங்கற்களாலும் கருங்கற்களாலும், சுண்ணக் கற்களாலும் செய்யப் பெற்ற மூடிகள் பொருத்தப்பெற்று இருக்கின்றன. கால்வாய்களில் சகதி படிந்து கழிவுநீர் எளிதில் ஒட இயலாதவாறு தடையுண்டாகா திருத்தலைப் பார்த்துக் கொள்ளவே இக்கற்கள் அழுத்தமாக வைத்து மூடப்படாமல் பொருத்தப்பெற்று உள்ளன என்பது எளிதிற் புலனாகின்றது.

இடை இடையே பெருந் தொட்டிகள்

நீண்ட கால்வாய்களுக்கு இடையிடையே மூலை முடுக்குகளில் கழிவுநீர் தேங்குவதற்குப் பெருந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீரை வேறு வழியே கொண்டு செல்லும் கால்வாய்கள் தொட்டிகளுடன் இணைப்புண்டு இருக்கின்றன. அக்குட்டைகளிலிருந்து நீண்ட தாடிகளை விட்டு இரு புறத்துக் கால்வாய்களையும் இயன்ற அளவு தூய்மை செய்யவே அவை அமைக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அக்குட்டைகட்கும் அகன்ற மேல்மூடிகள் உள்ளன. அப்பண்டைக் கால உலகத்தைச் சேர்ந்த எந்த நாகரிக நாட்டிலும் இச்சிறந்த கால்வாய் அமைப்பு முறை இல்லை, இல்லை என்று ஆராய்ச்சி அறிஞர் ஒவ்வொருவரும் வியந்து கூறுதல் கவனித்தற் குரியதாகும்.

மதகுள்ள கால்வாய்கள்

பெரிய கால்வாய்கள் முடிவுறும் இடங்களில் 120 செ. மீ. அல்லது 150 செ. மீ. உயரமும் 75 செ. மீ. அகலமும் உள்ள மதகுகள் கட்டப்பட்டுள்ளன. அம்மதகுகட்கு மேல் வளைந்த உத்திரங்களுடன் கூடிய கூரை வேயப்பட்டுள்ளது. இத்தகைய மதகுகளையுடைய பெருங் கால்வாய்கள் பொதுவான நாட்களில் கழிவு நீருக்காகப் பயன்படுவதே போன்று, வெள்ளம் வரும் காலங்களில் அவ்வெள்ள நீரை வடியச் செய்வதற்கும் பயன் பல்டனவாதல் வேண்டும் என்று அறிஞர் கூறுகின்றனர். இதுகாறும் கூறப்பெற்ற எல்லாப் பொருள்களும் அழியாமல் உறுதியாக இருத்தலைக்கொண்டு இவை எவ்வளவு உறுதியாகக் கட்டப்பெற்றுள்ளன என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பன்முறை உயர்த்தப் பெற்ற கால்வாய்கள்

மொஹெஞ்சொ-தரோ நகரத்தின் வளப்பத்திற்கும் பெருமைக்கும் காரணமாக் இருந்த சிந்து யாறே அதன். அழிவிற்கும் காரணமாக இருந்தது என்னும் உண்மை, அந்நகரம் பன்முறை திருத்தியும் உயர்த்தியும் அமைக்கப்பட்டிருப்பதிலிருந்து நன்கு புலனாகின்றது. முதலில் அந்நகரைச் சம தரையில் அமைத்த மக்கள், பின்னர்ச் சிந்துயாற்றின் வெள்ளக் கொடுமைக்கு அஞ்சி, அந்நகரத்தின் அடி மட்டத்தைச் சிறிது சிறிதாக உயர்த்திக் கொண்டே போயினர்; பிறகு உயர்ந்த மேட்டில் நகரத்தைப் புதுப்பித்துக் கட்டினர். இங்ஙனம் அவர்கள் பல அடுக்குகளை கட்டினர் என்பது ஆராய்ச்சியாளர்க்கு நன்கு புலனாகிறது. அறிஞர் இதுவரை ஏழு அடுக்குகளைக் கண்டுள்ளனர். ‘ஏழாவதன் அடியிலும் பல அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் அங்கு நீர் ஊற்றம் ஏற்படுதலால், தோண்டிப் பார்த்தல் இயலாததாக இருக்கிறது’ என்று. கூறிவருகின்றனர்.[1] ‘முதலில் அமைக்கப் பெற்ற நகர்த்தின் காலம் ஏறக்குறைய கி.மு.2800 ஆக இருக்கலாம்; ஏழாம் முறை அமைக்கப்பெற்ற நகரத்தின் காலம் சுமார் கி.மு. 2500 ஆக இருக்கலாம்’ என்று மக்கே போன்ற ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர்.[2]

இவ்வாறு கட்டிடங்கள் உயர உயரப் பழைய கால்வாய்கள் பயனில ஆயின, அதனால் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டன.பல இடங்களில் பழைய கால்வாய்களின் பக்கச் சுவர்கள் உயர்த்தப் பட்டுள்ளன. சில இடங்களில் பழைய கால்வாய்கள் மீதே செங்கற்களை அடுக்கிப் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பழைய கால்வாய்கள் இடித்துத் தள்ளப்பட்டுப் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இங்ஙனம் கால்வாய்கள், பன்முறை திருத்தப்பெற்றும் புதியனவாக அமைக்கப்பெற்றும் உள்ளன.[கு 1]

மலம் கழிக்க ஒதுக்கிடம்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள பெரும்பாலான இல்லங்களில் மலம் கழிப்பதற்கு உரிய ஒதுக்கிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை இன்றும் நம் நாட்டில் உள்ளன போலவே இருக்கின்றன. அவற்றின் தள வரிசையும் புறச்சுவர்களும் செவ்வையாகவும் உறுதியாகவும் அமைக்கப் பெற்றுள்ளன. அவை நாள்தோறும் நகராண்மைக் கழகத்தார் அமர்த்தியிருந்த தோட்டிகளால் தூய்மை செய்யப்பெற்று வந்தன என்பதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. சில மாளிகைகளின் மேன் மாடங்களிலேயே இத்தகைய ஒதுக்கிடங்கள் இருக்கின்றன. அங்கிருந்து மலமும் நீரும், சுவருக்கு உள்ளே அல்லது வெளியே அமைத்துக் கீழே உள்ள தாழியோடு இணைக்கப்பட்டுள்ள குழை வழியே கீழே சென்றுவிட வசதி யிருந்தது என்பது தெரிகிறது. இவ்வொதுக்கிடங்கள் நீரோடும் அறையை அடுத்து அமைக்கப் பட்டுள்ளன. இவை பெரிதும் இன்று சிந்து மண்டிலத்தில் உள்ள மலம் கழிக்கும் இடங்களையே ஒத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.[3]

நகர ஆட்சி முறை

இக்கால இந்தியாவில் நாகரிகம் மிக்குள்ளனவாகக் கருதப் படும் நகரங்கள் பலவற்றிலும் காண இயலாத சுகாதார முறைகள் 5000 ஆண்டுகட்கு முற்பட்ட மொஹெஞ்சொ-தரோவில் மேற்கொள்ளப்பட்டன என்பது பெரு வியப்புக்கு உரியதாகும் அன்றோ? ஒவ்வொரு வீட்டிலும் சந்திலும் குறுந்தெருவிலும் நெடுந்தெருவிலும் சுகாதார விதிகள் கண்டிப்பாகக் கைக் கொள்ளப்பட்டிருந்தன என்னல் ஒரு போதும் மிகையாகாது. நெடுந் தெருக்களைவிடக் குறுந்தெருக்களும் சந்துகளும் மிக்க துய்மையாக இருந்தன எனின் இம்முறைக்கு நேர்மாறான முறையில் இக்கால நகரங்கள் இருக்கின்றன. எனின் - அக்கால மக்களின் ஒழுங்குமுறையும், கட்டுத் திட்டங்கட்கு அவர்கள் அளித்து வந்த பெரு மதிப்பும், சுகாதார முறையில் வாழவேண்டு மென்று அவர்கள் விரும்பி நடந்துவந்தமையும், நகராண்மைக் கழகத்தாரின் ஆட்சித் திறனும் நன்கு விளங்குகின்றன அல்லவா? தெருக்களில் புழுதி கிளம்பாதிருக்க நாளும் தண்ணிர் தெளிக்கப் பட்டு வந்தது. பத்துப் iiதினைந்து வீடுகட்கு ஒன்றாக வைக்கப் பட்டிருந்த தொட்டிகளிலேயே குப்பை கூளங்கள் கொட்டப் பட்டு வந்தன. நகரத்தின் பல இடங்களில் இக்காலத்திய பொது இடங்கள் - இக்காலத்துப் பூம்பொழில் (Park) போன்றவை - இருந்தன என்று நினைப்பதற்குரிய சான்றுகள் கிடைக்கின்றன.

ஒருநகரம் நன்முறையில் அமைந்துள்ளது. எனின், அது பரந்த இடத்தில் அமைந்திருதல் வேண்டும் நீண்டு அகன்றதெருக்களைப் பெற்றிருத்தல் வேண்டும்: எல்லாப் பாதைகளும் விலக்கின்றித் தூய்மையாக இருத்தல் வேண்டும் கழிநீரைச் செவ்வனே கொண்டு செல்லும் ஒழுங்கான கால்வாய்கள் அமைந்திருத்தல் வேண்டும். வீட்டு அசுத்தப் பொருள்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் எல்லா வகை வசதிகளும் நன்கு அமைந்திருத்தல் வேண்டும்; ஒர்ோ வழி மக்கள் கலந்து இன்புறத் தக்க பொது இடங்கள் இருத்தல் வேண்டும். வெள்ள நீரை உடனுக்குடன் வெளிக்கொண்டு செல்லத்தக்க பெரிய சாக்கடைகள் நன்முறையில் அமைந்திருத்தல் வேண்டும் கழிநீர்ப்.பாதைகள் மூ ப்பட்டிருத்தல் மிக்க அவசிய மாகும்.இத்தகைய எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நகர்மே சுகாதார முறையில் அமைக்கப்பட்ட நகரம் எனப்படும். இவ்வசதிகள் அனைத்தும் மொஹெஞ்சொ-தரோவில் இருந்தன. எனவே, இந்நகர மக்கள் சிறந்த நாகரிகத்தைப் பேணிய பெருமக்கள் என்னலாம். இந்நகர ஆட்சியினர், அக்கால உலகில் இருந்த பிற நகர ஆட்சியினரைவிட மிக உயர்ந்த அறிவுடையவர் என்னல் மிகையாகாது.

சுகாதாரம் ஒரு பால் இருப்ப, நகரின் பல பாகங்களில் காவற். கூடங்கள் இருந்தன என்பதிலிருந்து, நகர ஆட்சியினர் நகரத்தைப் பாதுகாத்த முறையும் நன்கு விளங்கும். பல பெரிய தெருக்களின் கோடிகளில் இத்தகைய காவற் கூடங்கள் அமைந்திருந்தன. மொஹெஞ்சொ-தரோ வாணிபம் மிகுந்த நகரம் அன்றோ? அங்கு வணிகர் தங்குவதற்காகப் பெரிய கட்டிடங்கள் இருந்தன. அவற்றின் அருகில் காவற் கூடங்கள் இருந்தன. வாணிபப் பொருள்களைச் சேமித்து வைக்க விடுதிகள் பல இருந்தன; வெளிநாட்டு வணிகரும் உள்நாட்டு வணிகரும் செல்வப்பெருக்கு உடையவர்கள். ஆதலின், பொருளுக்கும் செல்வத்துக்கும் ஊறு நேராதிருத்தற் பொருட்டே நகர ஆட்சியினர் ஆங்காங்குக் காவற் கூடங்களை அமைத்துக் காவலாளிகளை வைத்து, நகரத்தைக் காத்து வந்தனர்.

நகராண்மைக் கழகத்தில் பெரும்பாலார் வணிகராகவே இருந்திருத்தல் வேண்டும். என்னை? இந்நகரம் வாணிபப். பெருக்க முடைய நகரமாதலின் என்க. மோரியர் ஆட்சிக் காலத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய மன்றம்[4] அல்லது குப்த மன்னர் ஆட்சிக் காலத்தே இருந்த நகராண்மைக் கழகம்[5] முதலியவை மொஹெஞ்சொ-தரோ போன்ற பழைய இந்திய நகரங்களிலிருந்தே தோன்றினவாதல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் அறைந்து வியக்கின்றனர்.[6]

அவசியமே அறிவை வளர்ப்பது

இந்நகரத்தை அமைத்த பண்டை மக்களின் சுற்றுப் புறங்களில் கீர்தர் மலையடிவாரப் பகுதிகளில் இருந்த மக்கள் கற்குகைகளிலும் கல்லால் ஆன வீடுகளிலும் வசித்தனரே அன்றி நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திலர். எனவே, மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா போன்ற பண்டை நகரங்கள் அந்நகர மக்களின் அறிவு நுட்பத்தைக் கொண்டே அமைந்தனவாதல் வேண்டும். அவர்கள் வேறெவரையும் பார்த்து நகர அமைப்பு முறையைக் கற்றுக்கொண்டனர் என்று இன்றுள்ள ஆராய்ச்சி நிலையைக்கொண்டு கூறுதல் இயலாதது. ஏனெனில், அதே காலத்தில் சிறப்புற்றிருந்த எகிப்தியர், சுமேரியர் நகரங்கள் இவ்வளவு சிறப்புடையனவாக இல்லாமையே இங்ஙனம் வற்புறுத்திக் கூறுதற்குக் காரணமாகும்.

பிற நாடுகளில் இல்லாத நகர அமைப்பு

“நல்ல திட்டங்கள் இட்டுச் சிறந்த சுகாதார முறையில் நகரங்களை அமைத்தவர்கள் சிந்து மண்டில மக்களே ஆவார்கள். இத்தகைய திட்டம் கி.மு.2000 வரை ‘உர்’ என்னும் நகரில் தோன்றியதாகக் கூறல் இயலாது. அதே காலத்திற்றான் பாபிலோனியாவிலும் இத்திட்டம் தோன்றியது. எகிப்தில் உள்ள ‘கஹுன்’ என்னும் நகரில் பன்னிரண்டாம் அரச பரம்பரையினர் ஆண்டகாலத்தேதான் இது போன்ற திட்டம் தோன்றியது. எனவே, மிக்க புகழ்படைத்த எகிப்தியரும் பாபிலோனியரும் சுமேரியரும் அப்பழங்காலத்தில் கண்டிராத நகர அமைப்பு முறையே இச் சிந்து மக்கள் கையாண்டிருந்தனர் எனின், அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டிலேயே இருந்து இம்முறைகளிற் கைதேர்ந்தவராதல் வேண்டும். சுமார் கி.மு.1500 இல் இந்தியாவுக்கு வந்த ஆரியர்க்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக மிக உயர்ந்த நாகரிகத்தில் திளைத்தினராதல்வேண்டும். அவர்களது நாகரிகம் சுமேரியர், ஏலத்தவர் தம் நாகரிகங்களைவிட மிகவும் உயர்ந்ததாகும்.[7]





  1. Sir John Marshall’s Mohenjo-Daro and the Indus Civilization’. Vol. pp.102, 103.
  2. Dr.Mackay’s Further Excavations-Mohenjo-Daro, Vol.1.p.7
  3. Dr. Mackay’s ‘Further Excavations - Mohenjo-Daro’ p. 166
  4. Board System of the Mauryan Period.
  5. City Council System of the Gupta Period.
  6. K.N. Dikshit’s ‘Pre-histroic Cilvilization of the Indus Valley’, p.24.
  7. Dr. Mackays. The indus Civilization, pp. 11, 12, 22
  1. இங்ஙனம் பலமுறை அமைக்கப்பட்ட நகரம் அழிந்து மண் மேடிட்டுக் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு வரை கவனிப்பார் அற்றுக்கிடந்தது. அதன் பின்னரே அம்மண்மேடுகளில் ஒன்றைப் பெளத்தர்கள் கைக்கொண்டு, வெள்ளத்தினின்றும் தப்பும் பொருட்டுத் தரைமட்டத்தை உயர்த்தி, செங்கற்களையும் களிமண்ணையும் கொண் கட்டிடங் கட்டி வாழ்ந்தனர் என்பது தெரிகிறது.