மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/8. கணிப் பொருள்கள்

விக்கிமூலம் இலிருந்து
8. கணிப் பொருள்கள்

பயன்பட்டி கணிப்பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த பண்டை மக்கள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், வெள்ளீயம், காரீயம் இவற்றைப் பயன்படுத்திப்பல அணிகளும் பொருள்களும் செய்து, கொண்டனர். ஆனால், அவர்கள் மிகுதியாகப் பயன்படுத்திய உலோகங்கள் செம்பும் வெண்கலமுமே ஆகும்.அவர்கள் இரண்டு உலோகங்களைத் தக்க முறைப்படி சேர்த்துப் புதிய உலோகம் செய்யவும் அறிந்திருந்தனர்.

பொன்னும் வெள்ளியும்

பொன் சிறப்பாக நகைகட்கே பயன்பட்டது. அப்பொன்னில் சிறிதளவு வெள்ளி கலந்துள்ளது. அதனால் அப்பொன் கோலார், அனந்தப்பூர் போன்ற இடங்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைகின்றனர். மொஹெஞ்சொ-தரோ மக்கள் பொன்னையும் வெள்ளியையும் கலந்து ‘எலக்ட்ரம்’[1] என்னும் புதிய உலோகம் ஒன்றைச் செய்யக் கற்றிருந்தனர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இப்புதிய உலோகமும் நகைகள் செய்யவே பயன் பட்டதாம். அம்மக்கள் ஈயத்திலிருந்து வெள்ளி எடுக்கக் கற்றிருந்தனர்; அங்கனம் தாம் எடுத்த வெள்ளியையே பயன்படுத்திவந்தனர் வெள்ளியைக் கொண்டு காலணிகளும் சில பாத்திர வகைகளுமே செய்து பயன்படுத்தினர்.

செம்பில் ஈயக் கலவை

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த செம்புப் பொருள் களில் ஈயக் கலவை காணப்படுகிறது. ஈயக் கலவை கொண்ட செம்புக் கனிகள் இராஜபுதனம், பாரசீகம், பலுசிஸ்தானம் என்னும் மூன்று இடங்களில் உண்டு. அவை சிந்துவிற்கு அண்மையில் இருத்தலால் அங்கிருந்தே செம்பு கொண்டுவரப்பட் டிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து.

செம்பில் நிக்கல் கலவை

செம்பில் ஈயத்தோடு நிக்கலும் கலந்திருப்பதாக அறிஞர் சோதித்து அறிந்துள்ளனர். இவ்வாறே சுமேரியாவில் கிடைத்த செம்பிலும் நிக்கல் கலந்துள்ளது. இந்நிக்கல் கலப்புடைய செம்புக் கனிகள் அரேபியாவில் உள்ள ‘உம்மான்’[2] என்னும் இடத்திற்றான் இருக்கின்றன. எனவே, சுமேரியரும் சிந்துப் பிரதேச மக்களும் அவ்விடத்துச் செம்பையே பயன்படுத்தினர் என்று சிலர் கருது கின்றனர். ஆயின், இந்தியாவிலேயே சோட்டா நாகபுரியில் உள்ள செம்புக் கனிகளில் நிக்கல் கலவை இன்றும் காணப்படுவதால், இக்கனிகளிலிருந்தே சிந்துப் பிரதேச மக்கள் செம்பைக் கொண்டு சென்றனராதல் வேண்டும் என்று அறிஞர் மக்கே உறுதியாக நம்புகின்றனர்.[3] இதுவே பொருத்தமானதாகவும் தோற்றுகிறது.

செம்பு கலந்த மண்

செம்பு கலந்த மண் சிந்துப் பிரதேசத்திலேயே கிடைத்திருத்தல் கூடும் என்று எண்ணுதற்குரியவாறு மண்ணிலிருந்து செம்பை வேறாகப் பிரித்தமைக்குரிய அடையாளங்கள் காண்கின்றன. செங்கல் கொண்டு கட்டப்பட்ட தொட்டிகளில் செம்பு கலந்த மண் குவியல்களும் உருக்கப்பட்ட செம்புப் பாளங்களும் தட்டிகளும் கிடைத்த்ன ஆனால், இவை உருக்கப்பட்ட முறை உணருமாறு இல்லை. ஆதலின், பொதுவாக நிலத்திற் குழி செய்து அதில் நிலக் கரியும் செம்பும் மண்ணும் இட்டுத் தீப்பற்ற வைத்து, துருத்தி மூலம் சூட்டை மிகுத்துச் செம்பை உருகச் செய்யும் எளிய முறையையே அப்பண்டை மக்கள் கையாண்டனர்; இங்ஙனம் உருகிய செம்பைத் தரையில் வெட்டப்பட்ட சிறு கால்வாயில் பாய்ச்சிப் பாளம் பாளமாக எடுத்து வந்தனர். இம்முறையிற் கிடைத்த செம்புப் பாளம் ஒன்றின் நிறை 2½ இராத்தல் இருந்தது. இதுகாறும் கூறியவற்றால், மொஹெஞ்சொ-தரோ மக்கள் சிந்துப் பிரதேசத்திலேயே கிடைத்த மண்ணுடன் கலந்த செம்பையும் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட செம்பையும் பயன்படுத்தி வந்தனர். என்பதை அறியலாம்.

வெண்கலம்

அப் பண்டைக்கால அறிஞர் வெள்ளீயத்தையும் செம்பையும் கலந்து வெண்கலம் ஆக்கக் கற்றிருந்தனர். அவர்கள் தொடக்கத்தில் செம்பையே மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர்; ஆனால், செம்பைவிட வெண்கலம் உறுதி உடையது என்பதை அறிந்ததும், வெண்கலத்தையும் மிகுதியாய் பயன்படுத்தத் தொடங்கினர்; பொதுவாகச் செம்பில் 100க்கு 9 முதல் 12 பங்கு வெள்ளியத்தைச் சேர்ப்பதைவிட்டு, 100க்கு 22 முதல் 26 பங்கு வரை வெள்ளியத்தைச் சேர்த்து வெண்கலமாக்கியுள்ளனர். அதே காலத்தில் சுமேரியாவிலும் இம் முறை கையாளப்பட்டது என்று டாக்டர் பீராங்க்போர்ட், டாக்டர் உல்லி போன்ற அறிஞர் கருதுகின்றனர். ஆயின், அது தவறு; சுமேரியர்க்கு வெண்கலம் செய்யத் தெரிந்திலது. அவர்கள் பயன்படுத்திய வெண்கலம் பிறநாடுகளிலிருந்தே வரவழைக்கப்பட்டது; சுமேரியர் செம்பைப் பயன்படுத்தவே அறிந்திருந்தனர். ஆயின், அதே காலத்தில் சிந்துப் பிரதேசமக்கள் செம்பையும் வெண்கலத்தையும் பயன்படுத்த நன்கு அறிந்திருந்தனர் என்று ஓர் அறிஞர்[4] அறைகின்றனர். சிந்துப் பிரதேச மக்கள் வெண்கலம் செய்த முறை மிக்க பண்புடையதாக இருந்ததால், பிற்காலத்தில் அசோகன் ஆட்சியில் நாலந்தாவில் இதே முறை சிறிதும் மாற்றமின்றிக் கைக் கொள்ளப்பட்டது.[5]

வெள்ளியம்

மொஹெஞ்சொ-தரோவில் செம்பொடு கலப்பதற்கே வெள்ளியம் மிகுதியாக வேண்டியிருந்ததால், வெள்ளியத்தாற் பொருள்கள் பலவும் செய்யக்கூடவில்லை. அதனால், அம்மக்கள் பம்பாய், பீஹார், ஒரிஸ்ஸா, முதலிய பிற மண்டிலங்களிலிருந்து வெள்ளீயத்தை வரவழைத்திருத்தல் வேண்டும்.

காரீயம்

சிந்துப் பிரதேச மக்கள் காரீயத்தை மிகுதியாய்ப் பயன்படுத்தினர் என்று கூறுதல் இயலாது. அங்கு இதுகாறும் கிடைத்த பொருள்களுள் தட்டு ஒன்றே காரீயத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. இந்த உலோகத்தால் செய்யப்பட்ட வேறு பொருள்கள் கிடைக்கவில்லை.

மக்களின் மதி நுட்பம்

ஒரே இடத்தில் எல்லாப் பொருள்களும் கிடைப்பது இயற்கை யன்று. ஒவ்வொரு பொருள் ஒவ்வோர் இடத்திற் கிடைப்பதே இயற்கை. ஆயினும், நாம் நமக்குத் தேவைப்படும் பல பொருள்களைப் பல்வேறு இடங்களிலிருந்து வரவழைத்துக்கொள்கிறோம் அல்லவா? நம்மைப் போன்றே அப்பண்டைக்கால மக்களும் தங்கள் மதி நுட்பத்தால் அவை அவை கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்து வரவழைத்து, அவற்றைக் கூர்த்த மதியுடன் பயன்படுத்தி வந்தனர் என்பது மேற்சொன்ன செய்திகளிலிருந்து அறியலாம்.அச்செய்திகள் உண்மையாயின், அம்மக்கள் தென் இந்தியாவில் கோலார் வரை இருந்த நாட்டை நன்கு அறிந்திருந்தனர்; தென்னாட்டவருடன் வாணிபம் செய்தனர் என்பன அறியலாம். மணிகளும் பிறவும் செய்யப் பயன்பட்ட ஒருவகைப் பச்சைக்கல் (அமெஜான் கல்) நீலகிரியில் உள்ள ‘தொட்ட பெட்டா’ என்னும் இடத்திலிருந்து மொஹெஞ்சொ-தரோவுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிஞர் கூறுதல் உண்மையாயின், அச்சிந்துப் பிரதேசமக்கள் நீலகிரியையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது வெளியாம். அம்மக்கட்குச் சங்கும் முத்தும் தமிழகத்திலிருந்து போயிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து. அஃதாயின், அவர்கள் தமிழ் நாட்டுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் எனல் பொருந்தும். இங்ஙனம் அம்மக்கள் அப்பழங்காலத்தில் சரித்திர காலத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியா முழுவதிலும் வாணிபப் பழக்கம் கொண்டிருந்தனர் - ஆங்காங்குக் கிடைத்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்திச் சுகவாழ்க்கை வாழ்ந்தனர் என்னும் அரிய செய்திகளை அறிய எவர்தாம் வியப்புறார்!

வேலை முறை

அவ்வறிஞர்கள் செம்மையும் வெண்கலத்தையும் உருக்கி வார்ப்படமாக்கினர்; தகடுகளாகத் தட்டி ஆணி கொண்டு பொருத்தினர்; இவ்விரண்டு முறைகளாற்றான் எல்லாப் பொருள்களையும் செய்துகொண்டனர். ஆனால், அவர்கள் பொன், வெள்ளி இவற்றாற் செய்த பொருள்களுக்கே பொடி வைத்துப் பற்றவைக்கும் முறையைக் கையாண்டனர்.

செம்பு-வெண்கலப் பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த செம்பு வெண்கலக் கன்னார்கள் கத்தி, வாள், ஈட்டி, அம்பு முதலிய கருவிக்ளையும், பல்வேறு அளவுகளையுடைய கோப்பைகள் நீர்ச்சாடிகள், தட்டுகள், தாழிகள்.இவற்றின் மூடிகள் முதலிய வீட்டுப் பொருள்களையும் செய்யக் கற்றிருந்தனர்; சிறிய பொருள்களை உருக்கி வார்ப்படமாக வார்த்துச் செய்துள்ளனர்; பெரிய பொருள்களைத் தகடுகளாக அடித்துப் பொருத்திச் செய்துள்ளனர். இவற்றுள் பெரும்பாலான பொருள்களுக்குக் கைப்பிடியே இல்லை. இங்ஙனமே அம்ரீ, சான்ஹாதரோ இவ் விடங்களில் கிடைத்த செம்பு - வெண்கலப் பொருள்களுக்கும் கைப்பிடி இல்லாதது குறிப்பிடத்தக்கது.

ஈட்டிகள்

ஈட்டி நீண்டு அகன்ற இலைவடிவில் ஆனது கூரிய நுனி உடையது; பக்கங்கள் இரண்டும் கூராக்கப்பட்டவை. இங்கனம் அமைந்துள்ள ஈட்டி மரப்பிடி உடையது. இலைபோன்ற பகுதி மிகவும் மென்மையாக இருப்பதால் ஒரு முறை எறியப்பட்டதும் வளைந்து கெடும் இயல்புடையது. இதை நோக்க, அம்மக்கள் பகைவரை எதிர்நோக்கிப் போர்க்கருவிகளைச் செய்தவர் அல்லர் என்பதும், வேட்டைக்கே அக்கருவிகளைப் பயன்படுத்தினர் என்பதும் உணரலாம்.

உடை வாள்கள்

இது நடுப்பகுதி தடித்து, முனை மழுங்கி, இரு பக்கமும் கூர்மை ஆக்கப்பட்டிருக்கிறது.இதன் முனைமழுங்கி இருப்பதால், இது மாற்றாரைக் குத்தும் பொருட்டுச் செய்யப்பட்டதன்று என்பதை ஐயமற அறியலாம். மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த இத்தகைய உண்டவாள்களில் இரண்டே குறிப்பிடத்தக்கவை; ஒன்று 4.5 செ. மீ. நீளமும், 5.5 செ. மீ. அகலமும் 1 செ. மீ. கனமும் உடையது. மற்றொன்று அளவிற் சிறியது. இத்தகைய வாள்கள் சுமேரியாவில் கிடைத்தில; ஆயின், எகிப்து, சைப்ரஸ், சிரியா முதலிய நாடுக்ளில் கிடைத்தன. இவை யாவும் மரக் கைப்பிடி உடையனவே ஆகும்.

இடைவாள்களும் கத்திகளும்

இடுப்பில் செருகி வைக்கத்தக்க இடைவாள்கள் பல கிடைத்துள்ளன. அவற்றுள் சில நீண்டவை; சில குட்டை யானவை; சில இலைபோன்ற வடிவுடையவை; சில ஒரு புறம் கூரியவை.பல இருபுறம் கூரியவை. இவை அன்றிச் சிறிய கத்திகள் சில கிடைத்துள்ளன. கத்தி போலக் கல்லால் ஆன கருவிகள் சிலவும் கிடைத்திருக்கின்றன.

வேல்கள்

வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல்களே பலவாகும். அவை கூரிய முனையுடன் எளிதில் பாய்ந்தோடக் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.அவற்றுட் பெரியவை37.5 செ.மீ.நீளமும் 12.5 செ. மீ. அகலமும் பல்வேறு வடிவமும் கொண்டவையாக உள்ளன. சிறியவையும் கூர்மை பொருந்திக் காணப்படுகின்றன.

அம்பு முனைகள்

இவை மெல்லிய வெண்கலத் தகடு கொண்டு செய்யப் பட்டவை. இவையே நிரம்பக் கிடைத்துள்ளன. இவை வேட்டையாடுவோரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டன என்பது தெரிகிறது. இவற்றுட் பல இருபுறமும் இரம்பத்தின் அமைப்பை உடையவை. ஈட்டி முனைகளைப் போலவே இவையும் மரக் கைப்பிடி உடையனவாகும்.

இரம்பம்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த இரம்பங்கள் பல திறப்பட்டவை. ஒன்று அரை வட்ட வடிவத்தில் கூரிய பற்கள் வெட்டப்பட்டுள்ளது. வெண்கல இரம்பம் ஒன்று 38, 5 செ. மீ. நீளமும், 8.5 செ.மீ. அகலமும், 1 செ.மீ. கனமும் உடையது.இதற்கு அகன்ற மரக்கைப்பிடி இருந்திருத்தல் வேண்டும். கைப் பிடியை இரம்பத்தோடு பொருத்துதற்கென்று மூன்று துளைகள் இரம்பத்தில் அமைந்துள்ளன. இதன் பற்கள் வியப்புறு முறையில் அமைந்துள்ளன. இத்தகைய இரம்பம் சுமேரியாவிலும் எகிப்திலும் காணப்படவில்லை. இது சிந்துப் பிரதேசத்திற்கே தனிப்பெருமை தரவல்லதாக இருக்கின்றது. சிறிய இரம்பங்கள் சங்கறுக்கப் பயன்பட்டன போலும்! என்னை? இன்றும் வங்காளத்திற் சங்கறுப்பவர் இத்தகைய சிறிய இரம்பங் களையே பயன்படுத்துகின்றனர். ஆதலின் என்க. ‘சங்கறுப்ப தெங்கள் குலம், சங்கரனார்க் கேதுகுலம்’ என்று பாடிய நக்கீரர் பிறந்த தமிழகத்திலும் சங்கறுக்க இத்தகைய இரம்பங்களையே பயன்படுத்தியிருத்தல் கூடியதே அன்றோ?

உளிகள்

இவை பல வகைப்பட்டவை: பெரியவை 12, 5 செ. மீ. உயரத்திற்கும் மேற்பட்டவை; சிறியவை 4.5 செ. மீ. உயரமுடையவை. இவை இருபுறமும் கூர்மை உடையவை. பல உருட்டு வடிவில் அமைந்தவை; ஒன்று மட்டும் பட்டை வடிவில் அமைந்தது. இப்பட்டை வடிவ உளி சுமேரியா முதலிய அயல் நாடுகளில் கிடைத்திலது. இவ்வுளிகள் கல்லையும் மரத்தையும் செதுக்கப் பயன்பட்டவையாகும்; முத்திரைகளைச் செதுக்கு வதற்கென்றே மிக நுண்ணிய முனையுடன் கூடிய சிற்றுளிகளும் கிடைத்துள்ளன.

தோல் சீவும் உளிகள்

தோலைக் கொண்டு தொழில் புரிந்தவர் பயன்படுத்திய உளி தனிப்பட்ட முறையில் அமைந்துள்ளது. அக்காலத்தவர் செருப்புகளை அணிந்து இருந்தனர் என்பதற்குரிய சான்றுகள் இதுகாறும் கிடைத்தில. ஆயினும், மிருதங்கம் போன்ற சில வாத்தியங்கள் இருந்தன என்பதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே, தோல் வேலை அக்காலத்தில் இருந்தது என்பதை உணரலாம். அத்தோல்-தொழிலாளர் மேற்சொன்ன உளியைப் பயன் படுத்தினர் போலும்! அது கத்தி போன்ற தகடு கொண்டு உளி போல முனையில் மட்டும் கூர்மை உடையதாகச் செய்யப்பட்டுள்ளது. ஒர் உளி மரப்பிடியுடன் கிடைத்துள்ளது. அம்மரப்பிடி, இக்காலத்துக் கத்திப் பிடிகட்குப் பயன்படுத்தும் மரங்கொண்டே செய்யப்பட்டிருத்தல் மிக்க வியப்பூட்டுவதாகும்.

கோடரிகள்

கோடரிகள் நீண்டும் குறுகியும் அகன்றும் உள்ளன. இவை, அச்சுச் செய்து அதில் உலோகத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்டவை என்று அறிஞர் மதிக்கின்றனர்; வார்ப்படம் வார்த்த பிறகு எடுத்துச் சம்மட்டி கொண்டு அடித்துச் சரிப்படுத்தி ஒழுங்கான கோடரியாகச் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோபரி 27.5 செ.மீ நீளமும்: பவுண்ட் 3 அவுன்ஸ் நிறையும் உடையதாகும். இக்கோடரிகள் நடுவில் மரக்காம்பை துழைக்கத் துளைகள் பெற்றுள்ளன.

வாய்ச்சி

மொஹெஞ்சொ-தரோவில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வாய்ச்சி ஒன்று கிடைத்தது. அது மிகுந்த வேலைப்பாடு கொண்டது. அதன் நடுவில் மரக்காம்பு நுழைய இடம் விடப்ப்ட்டுள்ளது. அதன் நீளம் 25 செ.மீ. ஆகும். அது, காகஸஸ் மலைப் பிரதேசத்தில் கூபன் ஆற்றுப் படுகையிற் கிடைத்த வாய்ச்சியை ஒத்துள்ளது வியப்புக்குரியது.இதன் காலம் இன்னது என்பதை இன்று உறுதியாகக் கூறல் இயலவில்லை.

மழித்தற் கத்திகள்

மொஹெஞ்சொ-தரோவில் நான்கு விதமான மழித்தற் கத்திகள் கிடைத்துள்ளன: (1) அரை வட்ட வடிவில் நீண்ட கைப்பிடி கொண்டவை. இவையே மிகுதியாகப் பயன்பட்டவை. (2) ‘ட’ போன்ற வடிவில் அமைந்துள்ளவை. (3) வளைந்திருக்கும் கத்தி. இதன் கைப்பிடி கத்தி வளைவுக்கு ஏற்றவாறு பின்புறம் வளைந்து விரித்துத் தலைபோலச் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றவை, எகிப்தில் ‘பாரோ மன்னர்’ தம் 18ஆம் தலைமுறை ஆட்சியில் வழக்கில் இருந்தனவாம். (4) நான்காம் வகை மழித்தற் கத்தி நீண்டு நேராக முனையில் மட்டும் வளைவுடன் காணப்படுகிறது. இது மெல்லிய தகட்டில் மிக்க கூர்மையாகச் செய்யப்பட்டுள்ளது. இக்கத்தி பிறவற்றினும் அருகிக் கிடைத்திருத்தலால், மதிப்புடைய வகையாகக் கருதப்பட்டிருத்தல் கூடியதேயாம். இந்நான்கு வகை யன்றிச் சிறு மழித்தற் கத்திகளும் பல கிடைத்துள்ளன. இவை முகத்தில் மட்டும் இன்றி உடலிலும் மயிர் களையப் பயன்பட்டவையாகும். இவை மிகுதியாகக் கிடைத்தலால் இவற்றை ‘இருபாலரும் பயன்படுத்தினர் போலும்!’[6] என்று டாக்டர் மக்கே கருதுகின்றார்.

உழு கருவிகள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த ஒருவகைக் கருவிகள் கல்லாற் செய்யப்பட்டுள்ளன. அவை 27.5 செ.மீ. நீளமும் 8.5 செ. மீ. அகலமும், 7.5 செ.மீ. உயரமும் உடையன. அவை இருபுறமும் கூராக்கப்பட்டவை. அவை அமைந்துள்ள முறையிலிருந்தும், மிக்க கனமாக இருப்பதிலிருந்தும் கலப்பைக் கருவிகளாக இருத்தல் கூடும் என்று அறிஞர் அபிப்பிராயப்படுகின்றனர். இவை போல்வன செம்பிலும் செய்யப்பட்டுள்ளன.

தூண்டில் முட்கள்

சிந்து யாறு மீன்கள் நிறைந்ததாதலின், அக்கால மக்கள் மீன் பிடிக்குந்தொழிலில் பேரார்வம் காட்டினர் என்பதைமெய்ப்பிக்கக் கணக்கற்ற தூண்டில் முட்கள் கிடைத்துள்ளன. இவை வெண்கலத்தால் இயன்றுள்ளன. வளைந்த முட்களை உடையன. இவற்றின் மேல்முனையில் நூல் நுழையத் துளை உள்ளது. அத்துளையில் உறுதியான கயிற்றை கட்டி மீன் பிடித்தனர்.

பிற கருவிகள்

மேற்கூறியவற்றுள் அடங்காத தச்சர்கள் பயன்படுத்திய கொட்டாப்புளிகள், இழைப்புளிகள் கத்திகள், துளையிடும் கருவிகள், நெசவாளர் பயன்படுத்திய கருவிகள், ஊசிகள் முதலியன பலவாகக் கிடைத்துள்ளன. துணி தைக்கும் ஊசிகள் 5 செ.மீ நீளமுடையவை. அவை செம்பாலும் வெண்கலத் தாலும் செய்யப்பட்டவை. இவையன்றித் தந்தத்தால் இயன்ற தடிகள் சில கிடைத்தன. இவை 20 செ. மீ. நீளம் உடையவை; நன்கு வழவழப்பாக்கப்பட்டு இருபுறமும் கறுப்பு நிறம் பூசப்பட்டவை. இவற்றுள் சிறியவையும் காணப்படுகின்றன. இவை உடைகளை மாட்டி வைக்கச் சுவர்களில் செருகப் பயன்பட்டவை (Coal Stand) ஆகலாம். பளிங்குக் கல், சுண்ணாம்புக்கல், கறுத்த பச்சைக் கல் போன்ற கடின பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட கதாயுதம் போன்றவை கிடைத்துள்ளன. கொண்டை ஊசிகள், பொத்தான்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், கண்ணுக்கு மை தீட்டும் ஊசிகள், பதுமைகள், மணிகள், பாண்டங்கள் முதலியனவும் செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப் பட்டுள்ளன. பொன்னாற் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள் மூன்று கிடைத்துள்ளன. பொத்தான்கள் எலும்புகளாலும் செய்யப்பட்டுள்ளன. பொன், வெள்ளி, செம்பு, வெண்கல்ம், உயர்தரக்கல் முதலியவற்றால் அணிகலன்கள் செய்யப்பட் டுள்ளன. வெள்ளி, செம்பு, வெண்கலம், காரீயம், கல், மீண் முதலியவற்றால் பாத்திரங்கள் செய்யப்பட்டன. எனவே, சிந்துப் பிரதேச மக்கள் இந்த உலோகங்களைக் கொண்டு: தம் வீட்டிற்கு வேண்டிய பாத்திரங்களையும், தமக்கு வேண்டிய அணிகலன் களையும், கருவிகளையும் செய்து நாகரிக வாழ்க்கை நடத்தி வந்தனர் என்பது தெளிவாதல் காண்க.

சாணைக் கல்

மொஹெஞ்சொ-தரோ மக்கள் கத்திகளையும் பிறகருவி களையும் தீட்டிக் கூர்மை ஆக்குவதற்குங் பொதுவாகச் செங்கற்களையே சாணைக் கற்களாகப் பெரிதும் பயன்படுத்தினர்; சிறப்பாகக் கருங்கல், வழவழப்புள்ள கல் முதலியவற்றையும் சாணைக் கற்களாகப் பயன்படுத்தினர். வேறு சில கற்கள் உலோகங்களை மெருகிடுதற்கென்றே பயன்பட்டன.

எண் இடப்பட்ட கருவிகள்

இந்நகரத்திற் கிடைத்த செம்புக் கருவிகளின் குவியல் ஒன்றில் இருந்த பல கருவிகள் சித்திரக் குறிகள் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகையக் குறியுள்ளவை ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. “இவை அரசாங்கத்தார்க்கு உரியவை யாகலாம். அதனாற்றான். களவு போகாதிருக்க எண் இடப்பட்டுள்ளன. இங்ஙனம் கருவிகள் மீது எண் இடும் பழக்கம் பண்டை எகிப்திலும் கையாளப்பட்டது”, என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.




  1. Electrum.
  2. இச் சொல் ஆங்கிலத்தில் ‘oman’ எனப்படும்.
  3. Dr.Mackay’s, ‘The Indus Civilization’, p.122
  4. Patrick Carleton’s ‘Buried Empries’, p.155
  5. K.N.Dikshit’s ‘pre-historic Civilization ofthe Indus Valley’, p.54.
  6. His ‘The Indus Civilization’, p. 180