ரோஜா இதழ்கள்/பகுதி 6

விக்கிமூலம் இலிருந்து

6

னராஜுடன் கூடிவாழ்ந்து ஒரு மகவுக்குத் தாயாகி யிருந்தால் மதுரத்தைப்போல் அவளும் ஒரு விதியில் சிக்கி நிலைகுலையத் தடுமாறிக் கொண்டிருப்பாளோ? தன் மானத்தை, புருஷனின் மானத்தை, உடன்பிறப்பின் மானத்தை, தான் பிறந்த குலத்தின் மானத்தை, அவள் விட்டுக் கொடுக்காமலிருப்பதற்காகச் சிரிக்கிறாள்; குழைகிறாள்; வேதனைகளைப் போர்த்துக்கொண்டு குனியவேண்டிய இடத்தில் குனிந்து நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்து நடமாடுகிறாள். இருளின் தனிமையில் அந்தப் போர்வைகள் ஊசிக்குத்தல்களாகப் பிடுங்குகின்றன; கண்ணீர் வடிக்கிறாள்.

மைத்ரேயி அதுவரையிலும் தனக்கு அறிமுகமான, பார்த்த, உறவாடிய, இரத்தக் கலப்புடைய பெண்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.

அவளுடைய அம்மா...அம்மா யார்?

அகங்காரமும் ஆணவமுமே உருவான புருஷனின் அடிமை; கைப்பொம்மை.

அடுத்தடுத்துப் பிள்ளை பெறும் கருவி.

அந்தத் தாயைத் தந்தை ஒரு நாளும் மனைவி என்ற மதிப்புக் கொடுத்தே நடத்தியவரல்ல என்பதையே அவள் தன் நினைவு தெரிந்தபின் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவள் உடல் நலிந்து சக்கையானதும் தன் போகக் கருவியாக அவர் இன்னொருத்தியைத் தேடிக் கொண்டார். அந்த இன்னொருத்தி மட்டும் குன்றேறி நின்றாளா? ஐந்து ஆண்டுகளுக்கு விளையாட்டுப் பொம்மை. பிறகு அவளை வைத்துக்கொண்டு பணத்தைப் பெற யாரோ சகோதரன் உறவில் முளைத்தானாம். கட்டியவளையும் குழந்தைகளையும் வஞ்சித்து, இளையவளுக்கே அவர் எழுதிக் கொடுத்த பொருளை அந்தச் சோதரன் பெற்றுக் கொண்டு அவளையும் ஏமாற்றி நடுத்தெருவில் விட்டான். கோடம்பாக்கம் பிராந்தியத்தில் அவள் அம்மா, பாட்டி தோழி என்ற சில்லறை வேடங்களுக்குத் தவம் கிடந்து எப்படியோ வயிறு நிரப்புவதைப் பற்றி அற்பத் திருப்தியுடன் அக்கா சொல்வது வழக்கம்.

அக்கா... அந்த அக்கா மட்டும் எப்படியாம்?

சொந்தத் தாயின் வயிற்றில் தன்னோடு பிறந்த தங்கைகளைச் சிறுமைப்படுத்தி, கட்டியவனின் மனிதர்களுக்குமுன் குழைகிறாள். என் தங்கைகள், என்னுடன் பிறந்தவர்கள், என் தந்தை வாங்கிக் கட்டிய வீடு, எனக்கு அவர்களைக் காப்பாற்ற, இரக்கம் காட்ட, ஈரம்கொண்டு கசிய உரிமை இருக்கிறது என்று ஏன் சொல்லக் கூடாது?

திருவள்ளூரிலிருந்து முன்பு ஒரு முறை அவளுடைய தாய்க்கு எட்டிய உறவில் சின்னம்மாவாகக் கூடியவள் வந்தாள். மைத்ரேயியைப் பார்த்து திருஷ்டி வழித்துச் சொடுக்கிக் கொண்டு கண்ணீர் உகுத்தாள். பிறகு அக்காவைப் பார்த்து, “இப்ப நன்னாயிருக்கிறயாடி குழந்தே? மாமியார்க்காரி போய்ச் சேந்தாளா? எமகாதகி, உடன் பிறந்தவன் சொத்லெல்லாம் வாங்கிண்டு, அவன் பெண்ணையே படுத்தி எடுத்தாளே!” என்று பிரலாபித்தது அக்காவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மூடிய பெட்டிக்குள்ளிருந்து பாம்பின் வால் வெளியே தெரிந்தாற் போலிருந்தது.

அத்திம்பேரை அவள் முன்பெல்லாம் உறவு முறை குறிப்பிட்டு அத்தான் என்றுதான் கூப்பிடுவது வழக்கமாயிருந்தது.

அவளுக்குப் பன்னிரண்டு வயசுகூட நிரம்பியிருக்கவில்லை. அத்தான் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கையில் அவள் தோட்டக் கிணற்றில் குளித்துவிட்டு ஈரப் பாவாடையும் சோப்புப் பெட்டியுமாக வந்தாள்.

சோப்புப் பெட்டியை வைத்துவிட்டு, உயரக் கொடியில் இருந்த பாவாடையைக் கோல்கொண்டு தள்ளினாள். கோல் அவளுக்குச் சிறியதாக இருந்ததால் பாவாடையைத் தள்ளுவது கடினமாக இருந்தது.

“அத்தான், இந்தப் பாவாடையைத் தள்ளிக் கொடுங்களேன்?” என்று அவரிடம் வந்து அவள் கேட்டாள்.

அன்று அவளுடைய அக்கா, சமையலறையில் கூப்பிட்டு வைத்து அவளை அதட்டினாள். அந்தச் சொற்கள் அவளுடைய மலர் நெஞ்சில் தீக்கோடுகள் போல் பதிந்தன.

“ஏண்டி வயசாச்சு, கடாமாடுபோல வளர்ந்தாச்சு, அத்திம்பேர் உக்காந்திருக்கச்சே ஈரத்தோடு அங்கே என்ன வேலை? அத்தானாம் அத்தான்! நீ ஒண்ணும் உறவு சொல்லிக் கூப்பிட வேண்டாம்! அத்திம்பேர் உனக்கு அவர்.

வெக்கம், நாணம் ஒண்ணு கிடையாது. நீ இனிமே கூடத்திலே புருஷா உட்கார்ந்திருக்கறச்சே அரைகுறைத் துணியோடு வரக்கூடாது. கொல்லைப் புறமா வரதுக்கென்ன கேடு?”

ஒரு பெண் வளர்வது குற்றத்துக்குரிய செயல் என்று அவள் அன்று அறிவுறுத்தினாற் போலிருந்தது. அன்று மைத்ரேயி தனிமையில் அதை நினைத்து நினைத்து அழுதாள். அவளுக்கு வயசுக்கு ஒத்த தோழியரோ சகோதரிகளோ கூடக் கிடையாது. ரஞ்சனியோ அவளைவிட எட்டு வயசு மூத்தவள். அவளுக்கும் ரஞ்சனிக்கும் இடையில் அடுத்தடுத்து கருச்சிதைவுக்காளானாளாம் அவள் தாய். ஒரு குழந்தை பிறந்து இறந்து போயிற்றாம். அத்திம்பேரின் சகோதரி மக்கள் நீலாவும் மாதவியும் மைத்ரேயியைவிடப் பெரியவர்கள். அவர்கள் கொழு கொழுவென்றிருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் விடுமுறைக்கு அவர்கள் வடக்கிருந்து வருவார்கள். நீலா கையில்லாத ரவிக்கையும் சேலையுமாக அத்திம்பேருடன் குதித்துக் குதித்துத் தோட்டத்தில் பந்தாடுவாள். மாதவி முழங்கால் மேலோடு ‘ஸ்கர்ட் ப்ளவுஸ்’ ஃபிராக் போன்ற உடைகளே அணிவாள். அவர்களுடன் அத்திம்பேரின் தந்தை வழியில் ஒன்றுவிட்ட சகோதரர் மக்களும் விடுமுறைக்கு வருவார்கள். கல்லூரியில் படிக்கும் பையன்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ‘காரம்’ ஆடுவார்கள். ஒருவர்மீது ஒருவர் விழாத குறையாகச் சண்டை போடுவார்கள்; தொட்டுப் பேசுவார்கள். வீடே அதிரும் படியாகச் சிரிப்பார்கள். ஆண்வர்க்கம் என்ற கூச்சம் இயல்பாகவோ, செயற்கையாகவோ, நீலாவுக்கும், மாதவிக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.

மைத்ரேயி எந்த ஆணோடு அப்படிப் பழகியிருக்கிறாள்? தனக்கு முன் அம்மாவுக்குப் பிறந்த ஆண் குழந்தை உயிரோடிருந்திருந்தால் என்று எத்தனையோ நாட்கள் அவள் எண்ணிப் பார்த்து ஏங்கியிருக்கிறாள். அவளுடைய மாமா, எப்போதோ அவளை அழைத்து உறவு கொண்டாடியதுடன் சரி; அக்கா குடும்பத்தினருக்கும் அவருக்கும் விரோதம் இருந்ததால் ரஞ்சனி, சுமதி கல்யாணங்களுக்கு மட்டும் வந்து உடனே திரும்பிவிட்டார். ஒன்றுவிட்ட, இரண்டு விட்ட சகோதரர்கள், மாமன் மகன் என்று சகஜமாக உறவும் நட்பும் கொண்டு பழகவும் அவளுக்கு யாருமே இல்லை. வயசுக்கு வருமுன்பே, ஆடவரின் முன் கூச்சப் போர்வையின்றி வந்து பழகக்கூடாது என்ற கண்டிப்பு வலைகளை நெருக்கமாக அக்கா பின்னியிருந்ததால் தான் அவள் அவற்றை அறுத்துக் கொண்டு தனராஜின் கவர்ச்சிச் சிரிப்புக்கு அடிமையாய், அவனைத் தொட்டுத் தன்னை இழக்கும் அளவுக்குப்போக நேர்ந்ததாக இப்போது மைத்ரேயி நினைக்கிறாள்.

அக்கா, தன்னுடன் பிறந்த சகோதரியையே ஏன் மாற்றந்தாய் மகளைப்போல் நடத்தினாள்?

அந்தத் திருவள்ளூர்க் கிழவி சொன்னாற்போல், அடி நாட்களில் அவளுக்கு அத்தையே மாமியாராகிக் கொடுமை காட்டியிருக்கிறாள். பெற்ற தகப்பன் குடும்பத்தை மறந்து வஞ்சகம் செய்தது அவளுக்குச் சிறுமைதானே? அந்தச் சிறுமையே அவளுக்கு வெறுப்பை வளர்த்திருக்கக்கூடும்; மணவாழ்வில் அவளுக்கென்று குழந்தை பிறந்து பாசத்தையும் அன்பையும் பெருக்கக்கூடிய பேறு கிட்டியிருக்கவில்லை. தன் ஏமாற்றங்களை அவள் விழுங்கிக்கொள்ள நேர்ந்ததால் இரக்கமும் பரிவும் வற்றிப்போயிருக்கலாம். அவளுக்கு இத்தனை நாட்கள் சென்ற பின் மகப்பேறு வாய்த்திருக்கிறது என்று மதுரம் மாமி கூறியதை அவளால் நம்ப இயலவில்லை.

பல மருத்துவர்களிடம் அக்கா மகப்பேற்றுக் குறைக்காக போய் வந்திருக்கிறாள். மதுரம் மாமி கூறியது உண்மையாக இருந்திருந்தால், அத்திம்பேர் அவ்வளவு கடுமையாக நிச்சயம் அவளை விரட்டியிருக்க மாட்டார். எனவே அக்காவின் உடல் நிலையில் ஏதேனும் கோளாறாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

சிந்தனைக் கொடி இவ்வண்ணம் நீண்டுகொண்டு செல்லுகையில், மைத்ரேயிக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்குகிறது.

பெண்ணுக்குச் சுயமாக எழுந்து நின்று உலகை வளைத்துக் கொண்டோ, எதிர்த்துக் கொண்டோ வாழத் தெரியவில்லை. மதுரத்தைப்போல், அக்காவைப்போல், அவளுடைய அம்மாவைப்போல், ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள் எல்லாருமே வெவ்வேறு அச்சில் பட்ட ஒரே களிமண்ணாகத்தான் இருக்கிறார்கள். அவளே, அவள் மட்டும் என்ன? ஒரு குறிப்பிட்ட வடிவத்துள் பத்திரமாக, வெளிநோக்கும் அழகு வாய்ந்ததாக இருக்கலாம் என்று பெரியோர் வகுக்கக் கூடிய நியதிக்கப்பால் சென்று எந்த வடிவத்தையும் சார்ந்து பெற இயலாதவளாகியிருக்கிறாள். தனித்து நின்று வடிவமாக இயங்கவும் துணிவும் உறுதியும் இல்லை.

அவளுக்கு என்ன வடிவம்? திருமணமாகி ஒருவனுடைய விருப்பு வெறுப்புக்களுக்கு வளைந்து கொடுத்துப் பெறுகின்ற குடும்ப நெருக்கத்துக்கோ, வாழ்வின் வளமைக்கோ ஏற்ற வகையில் உருவாகும் வடிவம்; ஒரு நல்ல குடும்பப்பெண் என்ற பெயரில் அடிபணிந்து தரையோடு தாழ்தல்; கணவனைக் கண்களுக்குத் தெரியாமல் சூத்ரக் கயிறுகளால் ஆட்டுபவள்; அல்லது தன் ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் கிளர்ந்து கொதித்து, அதை வேறொரு முனையில் கொட்டிக்கொண்டு தன்னைத்தானே மறந்து வாழும் வடிவம்.....

மதுரம் மாமி ஏன் கட்டுக்களை அறுத்துக்கொண்டு வெளியேறி விடக்கூடாது? கணவனிடம் காதலா, மகனிடம் பாசமா?

வெளிப்பார்வைக்கு வெறுப்பூட்டக்கூடியதாக அழகற்று இருந்தாலும் அந்தப் பிணைப்புகள் உறுதியாக இருக்கின்றன. தன் தாயானாலும் பெற்றுப் பெற்றுப் பலவீனமாய் நைந்தவள். உடலுழைத்துப் பிழைக்கவும் இயலாமல் கல்வித்தரம் கொண்டு காலூன்றி நிற்கவும் இயலாமல் கட்டுண்டிருந்ததாகச் சொல்லலாம்.

மதுரம் மாமியோ உடலுழைப்பினால் தனித்துப் பிழைக்கக் கூடியவள். அப்படியும் இந்தப் பிணைப்பை அவள் அறுத்துக் கொண்டு செல்லவில்லை. வறுமையிலும் பாரம்பரியத் தொடர்பாக வந்திருக்கும் நம்பிக்கைகளும், கோட்பாடுகளும், அவளையும் கணவனையும் பிணைத்து வைத்தபோது உள்ளுணர்வோடு செய்த சடங்குகளும், அந்தப் பிணைப்பை வலிமை வாய்ந்ததாகச் செய்திருக்குமோ?

அதிகாலையில் மதுரம் எப்போது எழுந்தாள் என்பதை மைத்ரேயி அறியவில்லை. லோகாவின் குரல் கேட்டுத்தான் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

“அவ ஹோம்ல சேர்ந்துடுவேன்னுதான் சொல்றா. ஆனா எனக்கு மனசுவரல லோகாம்மா. கண்முன் தெரிஞ்சு நல்லகுலம். ஏதோ தெரியாம கண்ணை மூடிண்டு குழியில் விழப்போயிட்டுத்து. அவளே திரும்பி வந்திருக்கறதால தப்பை உணர்ந்து திருந்திடுவ. இப்போதைக்கு இருக்கட்டும். நான் இங்கே இருக்கறதைப்பத்தி இல்லே. எனக்கு என்னிக்கும் இந்த உறவு நிலைக்கணும் லோகாம்மா, நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது, அதுக்காகவே போறேன்...”

மைத்ரேயி படுக்கையிலிருந்து விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்ததை மதுரம் மாமி கவனித்திருக்க வேண்டும். பின்னால் பேச்சை மாற்றியிருக்கிறாள்.

“அது சரி. எனக்குப் புரியறது. அங்கே போனால் எல்லாம் ஒண்ணுதான். எனக்கு வீட்டிலே ஆள் சரியாக இல்லாம வெளியே போகவே அச்சமா இருக்கு” குரல் தாழ்ந்து போகிறது லோகாவுக்கு.

“அதுவும், சேதுவுக்கும் அப்பாவுக்கும் நான் பயப்படறேன். சேது எல்லாத்திலும் எதிர்த்து எதிர்த்துப் பேசறான். பாலாவுக்கோ எதை வெளியில் சொல்லலாம் சொல்லக் கூடாதுன்னே தெரியல. வரமாசம் யோகத்துக்கு வளைகாப்பு அடுக்கணும். அவள் பிரசவத்துக்கும் லண்டன்லேயே இருக்கப் போறேன்னு எழுதியிருக்கா, அப்படீன்னா நான் அங்கே போகணும்னு தோணறது. ராஜா கூட, ‘சோஷியல் வொர்க்கர்’ மகாநாடு வரது, நீதான் டெலிகேட்டாப் போக வேண்டியிருக்கும்னார். இங்கே மனிதர் யாருமில்லாம நான் எப்படிப் போறது? அவப்பாவைக் கிராமத்துக்கே போகச் சொல்லலாம்னா, அங்கே வெட்டுப்பழி குத்துப்பழி சம்பாதிச்விண்டிருக்கார். நீ வந்து இருந்தா நான் கவலையில்லாம இருப்பேன்..

“பாத்துண்டே இருங்கோ லோகாம்மா, இந்த சொர்ணத்தை ஒத்தன் கையில் புடிச்சிக் குடுத்து, பெரிய பையனுக்கும் ஒரு தொழில்னு ஊணிட்டா, சிவனேன்னு வந்திருப்பேன்...” என்று கூறுகிறாள் மதுரம்.

“அது சரி, அப்ப கீழ்களை எல்லாம் என்ன பண்ணுவே? நான் அப்பவே ஆபரேஷன் பண்ணிக் கோடின்னேன், நீ இன்னும் பண்ணிக்கலே....”

“இப்ப அதெல்லாம் ஒண்ணும் கிடையாதக்கா....”

“ஆமா, நீ சொல்லி நான் கேக்கறேன்...”

“அது பண்ணிண்டா காது செவிடாப்பூடுதாம்; பைத்தியம் பிடிக்கறதாம்....”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மாப் புரளி. உன்னைப் போல இருக்கிறவா இப்படிப் பேசிப் பேசித்தான் குட்டிச் வராப் போகிறது.”

“அப்ப நான் இப்ப போயிட்டு வரட்டுமா?..”

“சரி, பின்ன என்ன பண்றது?” 

“....எனக்கு ஒரு அம்பது ரூபாய் குடுக்கணும் நீங்க...”

“அம்மாடீ...? அஞ்சு ரூபாய்கூட எங்கிட்ட இப்ப இல்லே மன்னி ...”

“அரிசி வாங்கியே கடனாயிடறது அக்கா. என்ன வயத்தை வாயைக்கட்டினாலும் முடியல இப்பல்லாம். ஒரு இடலினாலும் போடலாமான்னு பாக்கறேன்.”

“அஞ்சுபடி அரிசி எடுத்துண்டுபோ. புடவை ரவிக்கை படுத்து வச்சிருக்கேன். சேதுவோட டிரௌசர் ஷர்ட்கூட இருக்கு, பாலாட்ட சொன்னா எடுத்துக்குடுப்ப. நீ இந்தப் பொண்ணுக்கு எல்லாம் சொல்லிட்டுபோ...”

மைத்ரேயி குளியலறையிலிருந்து சமையலறைக்கு வந்து விட்டதை மதுரம் அப்போதுதான் கவனிக்கிறாள்.

“கேட்டியா? லோகாம்மாவே, உன்னை ஹோம்ல சேர வேண்டாம்னுட்டா...” என்று மென்னகையுடன் மதுரம் அவளிடம் தெரிவிக்கிறாள்.

லோகா திரும்பியவள் சமையலறை வாயிற்படியில் வந்து நிற்கிறாள். மைத்ரேயியை நோக்கி, “உனக்கு ஒரு பண்டிகை பருவம் வந்தால் சமாளிக்க முடியுமா? கணேச சதுர்த்தி வரும்; ஆவணி அவிட்டம் வரும். கொழுக்கட்டை, பாயசம், வடை என்று பண்ணவேண்டிவருமே? தெரியுமா?”

“நானாக முழுசும் பண்ணினதில்லே. சொல்லிக் குடுத்தால் செய்வேன்....”

“சரி, நீ காப்பி குடிச்சிட்டு குளி. குளிச்ச பின்னதான் சமைக்கணும். நான் உனக்குப் புது ஸ்டவ், பிரஷர்குக்கர் இரண்டையும் வைச்சுச் சமைக்கச் சொல்லித்தரேன்..” என்று கூறுகிறாள் லோகா.

நின்றுகொண்டே சமையல் செய்யத் தோதாக உயரமாக இருக்கிறது அந்த அடுப்பு. அந்த மாதிரி எண்ணெய் அடுப்பை மைத்ரேயி அதற்குமுன் பார்த்ததில்லை.

லோகா பர்னரை எடுத்து வெளியில் வைத்துவிட்டு வட்ட வடிவமான திரியைக் கெளுத்துகிறாள். அது பற்றிக் கொண்டதும் பர்னரை வைக்கிறாள். அடர்த்தியாக நீலச் சுடர் வருகிறது. லோகா அழுத்தக்கலனில் நீரைப் பிடித்து வைக்கிறாள்.

“நானும் எல்லாம் பார்த்துக்கறேன். இதெல்லாம் புதிசா லோகாம்மா?”

“ஆமாம். ராஜா போன மாசம் ஜப்பான் போயிட்டு வந்தாரில்லையா? ஸ்டவ் அங்கேந்து வாங்கிண்டு வந்தார். பிரஷர் குக்கர் முன்னமே வாங்கினதுதான். ரொம்ப செளகரியம் நம்மூர் ஸ்டவ்களைப்போல் கரியே பிடிக்கிறதில்லை.”

“அதுவும் பிரஷர் ஸ்டவ்வை வச்சிண்டு அடிச்சு அடிச்சு தோள்பட்டை கழண்டு போயிடும். இதில் பாரு பருப்பும் சாதமும் ஏழு நிமிஷத்தில் ஆயிடும்.”

“அப்படியா? என்ன அதிசயம்! வெள்ளைக்காரன் நாள்ள கூட இதெல்லாம் வந்திருக்கலே. காங்கிரஸ்காரா காலத்தில் என்னெல்லாம் வந்திருக்கு!”

மைத்ரேயி அரிசி கழுவிக் கொடுக்கிறாள்; பருப்பு சுத்தமாக்கிக் கொடுக்கிறாள். “கவனமாகப் பார்த்துக்கோ, ஸ்...னு ஓசைவந்த உடனே வெயிட்டைப் போட்டு மூடிடனும். பின்னால வெயிட்டை ஆறவச்சுத் திறந்த பிறகுதான் மூடியைத் திறக்கணும். அதைத் திறக்காமல் மூடியைத் திறந்து தான் பாலா கையில் கட்டுப்போட்டுண்டு துன்பப்படறா. நான்தான் ரெண்டு நாள் சமைச்சேன் இதுலே...”

மைத்ரேயி பார்த்துக்கொண்டே நிற்கிறாள். அவளுக்கு எல்லாம் கனவில் நடப்பதைப்போல இருக்கிறது.

பெரிய ஸ்டவ்விலும் அழுத்தக்கலனிலும் சமைக்கும் நவீன சமையற்காரி! பொட்டின்றி, ரவிக்கையின்றி, கட்டுடலின் தோளைக் காட்டிக்கொண்டு அழுக்கு நூல் சேலையைக் கொசுவம் வைத்த முறையில் உடுத்திக் கொண்டு, கரண்டியும் சிப்பலுமாக நிற்கும் ஒரு உருவத்தைத்தான் சமையற்காரி என்ற நிலையில் அவள் சித்திரித்திருக்கிறாள். அது மதுரத்துக்கு முக்காலும் பொருந்தும்.

கோகிலாவைப் பத்துப் பாத்திரம் துலக்கும் வேலைக்காரி என்று கூற இயலுமா? அப்படி அவளும் நவீனமான சமையற்காரி.

லோகா சோறும் பருப்பும் பதமாகும் நேரத்தைக் கணக்கிட்டுக் காட்டிவிட்டுக் குளிக்கச் செல்கிறாள்.

காலை நேரத்து அலுவல்கள் பரபரப்பாகப் பொழுதைத் துரத்துகிறது.

எட்டேமுக்கால் மணிக்கு லோகா வெளியே செல்லத் தயாராக வரும்போது, சேது இரண்டாந்தடவையாகக் காபி பருந்திக் கொண்டிருக்கிறான்.

“இப்ப காபி குடிச்சா எப்படிச் சாப்பிடுவது ஒன்பது மணிக்கு?” என்று கடிந்து கொள்கிறாள். “நீயே வீணாக உடம்பை கெடுத்துக்கறே. சாப்பிடாமல் காலேஜுக்குப் போறது; கான்டீனில் கண்டதைத் தின்பது, வயிறு வலிக்காமல் என்ன செய்யும்?”

“நான் காண்டீனுக்குப் போறேனா? நீ பாத்தியா? நீ சுத்த தொண தொணப்பாயிட்டேம்மா! என் ஹெல்த்தைப் பாத்துக்க எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டாம்!” என்று கத்துகிறான்.

லோகா முறைத்துப் பாத்துவிட்டுச் சமையலறைக்குள் வருகிறாள். மெல்லிய பூக்கள் அச்சிட்ட கதர்பட்டுச் சேலையில் அவள் வயசு குறைந்து போயிருக்கிறது. கூந்தலில் ஓர் நரை இழை கூடத் தெரியவில்லை. அரைக்காது மூடத் தளர்த்தியாக, வடைக் கொண்டை போட்டுக் கொண்டு, சாய்வாக ஒரு மலர்ந்தும் மலராததுமான பட்டு ரோஜாவை செருகியிருக்கிறாள். முகத்தில் மெல்லிய பவுடர் பூச்சு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. செவிகளில் நான்கு வயிரப் பொடிக் கற்களும் நடுவில் சிவப்பும் வைத்த தோடு. கையில் மெருகு மின்னும் கைப்பை.

“ராஜா வராராம். சாப்பாட்டுக்கு வந்திடுவார். அவருக்குச் சப்பாத்தி பண்ணனும். மாவு ரொம்ப பழசாயிருந்தது. உள்ளே கோதுமை இருக்கு. குப்புசாமியிடம் எடுத்துக் கொடுத்து அரச்சிண்டு வரச்சொல்லி ரொட்டியோ, பூரியோ பண்ணிவை. பூரியாகவே இருக்கட்டும். இங்கிலீஷ் காயாப் பார்த்து வாங்கிண்டு வரச்சொல்றேன். மசாலா போட்டு ஒரு கூட்டு பண்ணணும். மன்னி, நீ கொஞ்சம் கூட இருந்து சொல்லிக் கொடுத்துட்டுப் போ.”

“ஆகா. நான் பன்னண்டு ஒரு மணிக்குத்தான் கிளம்பலான்னு இருக்கேன்...” என்று கூறுகிறாள் மதுரம்.

“ஒண்ணு ஒண்ணரை மணியாகும் நாங்கள் வர. குக்கரைத் திறக்காமல் சாதத்தை சூடாக வச்சிரு..” என்று சொல்லி விட்டுக் குளிரலமாரியைத் திறந்து மோர் எடுத்துக் குடிக்கிறாள் லோகா. அவள் வெளியே செல்வதை மைத்ரேயி படியில் நின்றபடியே பார்க்கிறாள்.

“ந்தா மைத்தி, வேடிக்கை பார்க்காதே. கோதுமையை கல்லிருக்கான்னு பாரு, மடமடன்னு...”

“ராஜா யாரு மாமி?”

“குமாரபுரம் ஜமீன்தார். இவர் பிள்ளை, பெரிய ஜமீன்தாரும் லோகாவின் அப்பாவும் ரொம்ப சிநேகம். அவர் காலம் ஆயிட்டது. இவர் வந்தா இங்கேதான் தங்குவார்; எம் பி. யோ என்னமோ சொல்றாளே, அது. இங்கேயே மந்திரியா வர்ப்போறார்னுகூட முன்ன சொல்லிண்டா.”

“பெரிய இடத்திலே யார் யாரோ வருவா, போவா, என்னென்னமோ நடக்கும். அதெல்லாம் கண்டும் காணாமலும் நம் காரியத்தைக் குறியாப் பாத்துண்டு போகணும். இத நீ முக்கியமாகத் தெரிஞ்சிக்கணும்.”

“சரி மாமி...”

பாலா சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்குச் செல்கிறாள். அநுசுயா முந்தைய நாளைய வேலைகளை முடிக்க வருகிறாள்.

மணி பத்தரை.

“தட்டில் சாப்பாடெல்லாம் எடுத்துவை. உப்பு, ஊறுகாய், மோரெல்லாம் நான் கொண்டுவரேன். அவருக்குச் சாதம் போட்டுடலாம்....” என்று பணிக்கிறாள் மதுரம்.

மைத்ரேயி தட்டில் சாப்பாட்டை வைக்கவில்லை. சிறு அடுக்குகளில் சோற்றையும் காய் குழம்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறாள். வளைவான வராந்தாவில் நுழைந்ததும் மொஸைக்தளம் வியப்பூட்டுகிறது. வராந்தாவில் சாய்ந்து உட்கார வசதியாகப் பிரம்பு நாற்காலிகள் இருக்கின்றன. உள்ளே புத்தக அலமாரி தெரிகிறது. சுவரில் காந்தியடிகள், நேரு, விஜயலட்சுமி, வல்லபாய்படேல் ஆகியோருடன் விவேகானந்தரும் வளைவாக அமைந்த சுவரின் படங்களில் விளங்குகின்றனர். உள் வட்டத்தை ஓர் திரை இரு பகுதிகளாக்குகிறது. ஒரு பாதியில் புத்தக அலமாரி, ஓர் மேசை, இரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. இன்னொரு பாதி படுக்கையறை என்று நினைக்கிறாள். பின்புறத்து வராந்தா இரு கூறுகளாகப் பிரிந்து, ஒருபுறம் குளியலறையாயும், மறுபுறம் கழிவிடமாகவும் உதவுகின்றன.

நாற்காலியிலமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பவர், அவர்களைக் கண்டதும் திரும்பி உட்காருகிறார்.

ஐம்பது வயசுக்குத்தான் மதிக்கலாம். வழுக்கை மொட்டை உடல் உழைப்பின்றிப் பருத்துக் கிடக்கிறது. பருமனிலும் ஓர் ஒழுங்கு இல்லை. சதை இழிந்து வழிகிறது என்றால் பொருந்தும். வெற்றிலை புகையிலை மெல்லும் வாய். வெளுத்த வேட்டியும் ஒரு மல்ஜுப்பாவும் அணிந்திருக்கிறார். இடக் கையில் பச்சைக்கல் மோதிரம் மின்னுகிறது. கண்கள் கூரிய கழுகின் பார்வையை நினைப்பூட்டுகின்றன.

“அடடே.... இவதான் புதிசா? சமையக்காரியாட்டமே இல்லையே? உம்பேரென்ன?”

கண்ணபிரானின் நினைவு வருகிறது; அம்மணியம்மாளுக்கும் லோகாவுக்கும்.... ஒற்றுமை...? சீ....

‘மைத்ரேயி’ என்று மெல்லிய குரலில் கூறிக்கொண்டே, மேசையை நகர்த்திப் போட்டுத் தட்டை வைக்கிறாள்.

“என்னது? மைதிலியா? ஐயங்காரா?”

“இல்லே ....”

“கல்யாணம்...”

மதுரம் பதில் கூறுகிறாள். “ஆகலே மாமா. கல்யாணமானா எதுக்கு இப்படி வரா? ஒண்ணுமில்லாதவனெல்லாம் நாலைக்கொடு அஞ்சைக் கொடுன்னுனா எங்கே போறது, சொல்லுங்கோ?”

அவர் கை கழுவிக்கொண்டு உண்ண அமருகிறார். மைத்ரேயியே பரிமாறுகிறாள்.

“எல்லாம் இவள்தான் சமைத்தாள். எப்படி இருக்கு?...”

“நீ போகப்போறியா என்ன?”

“பின்ன என்னால இருக்க முடியுமா?”

“கேட்டுக்கோ வீடுகிடந்து நாறுது- இவ சோஷியல் வொர்க் பண்ணப் போறா. இவ பசங்களே இவளை மதிக்கல. இந்த பாலா, ராத்திரி பத்துமணிக்கு சினிமாக்குப் போயிட்டு வருது, கண்டிக்கிறதில்ல. நாளைக்கு அவ எவனையானும் காதலிச்சிண்டுதான் போவ. இல்லையா, சொல்லு?”

அவர் மதுரத்தை மட்டும் பார்க்கவில்லை. மைத்ரேயியையும் பார்க்கிறார்.

“சமையல் எப்படி இருக்குன்னு நீங்க சொல்லலியே?” என்று நினைவூட்டுகிறாள் மதுரம்.

“சமையல் பகு நன்னாத்தான் இருக்கு. ஆனா, இவளை எல்லாம் நாலுநாள் இங்கே தங்கவிடமாட்டா. தாம்தூம்னு பீடியைக் குடிச்சிப் போட்டுண்டு அட்டகாசம் பண்ணிட்டு வர தடிப்பசங்கதான் இங்கே தங்குவாங்க. நம்ம தலைவிதி, ருசிருசியா சாம்பார், கூட்டு, ரசம்ங்கற சாப்பாடுக்கு லாட்ரி. சோம்பு பூண்டு மசாலா எல்லா இழவையும் போட்டுத் தொலைப்பான். அதுவும் அந்த ராஜா வந்துட்டான்னா வீடு திமிலோகப்படும்... நான் கிடக்கிறேன் இங்கே, என்னை யாரு லட்சியம் பண்றா?”

மைத்ரேயியினால் ஒன்றையும் கேட்டுக்கொள்ள இயலவில்லை.

“இவளை வச்சுப்பா பாருங்கோ. அப்படியெல்லாம் போக மாட்டாள்” என்று மதுரம் ஆறுதலளிக்கிறாள்.

“அதென்னாமோ, அன்ன மயம் பிராணமயம். ஒருத்தருடைய சாப்பாடு புலனைத் திருப்திப்படுத்தறதுக்காக இல்லே. இந்த உடம்பை, உடம்பெடுத்த உன்னதமான நோக்கத்துக்குக் காப்பாற்ற வேண்டித்தான் சாப்பாடு. என்ன செய்யட்டும்? ஊருக்குப் பெரியவன்னு இவளுக்காக என்னை மத்தவா மதிக்கக் கூடாதுன்னே அந்த நாளிலேயே ஒதுங்கிட்டேன். அப்புறம்கூட என்ன? அப்பாவும் போயிட்டார், ஊரிலே நாலுபேர் நாலு தினுசாப் பேசறாளேன்னு காலில் விழுந்து அழுதாள். நமக்கும் இளகிப் போச்சு. ஊரைவிட்டு வாசலைவிட்டு இந்த மூலையில் வந்து முடங்கியிருக்கேன்.”

மைத்ரேயி இலையைப் பார்த்துப்பரிமாறுவதைத் தவிர வாயே திறக்காமல் நிற்கிறாள்.

“நான் கொஞ்சம் சாஸ்திரம் தர்மம் ஆசாரமெல்லாம் வச்சிண்டிருக்கிறவன். இங்கே வந்து அநாசாரச் சூழலைப் பார்த்தால் பித்தர்ப்பணமே பண்ண முடியாம இருக்கு. இந்தத் தோட்டத்திலே மாட்டுக்கறி சமைக்கிறான், நாய்க்குப் போட. தெவசம் எப்படிப் பண்றது?”

“ஏம்மா? நீ ஸ்நானம் பண்ணாம சமைக்கப் போயிடாதே!”

“இல்லை” என்று அவள் தலையை ஆட்டுகிறாள்.

“கிரஸின் ஸ்டவ்வில் சமைச்சியோ?”

“ஆமாம்...”

“கர்மம். வாசனை சொல்றதே? எல்லாத்தையும் சாணி ஜலம் போட்டுத் துடச்சிட்டு மறுநாள் உபயோகிக்கணும். முள்ளங்கி வெங்காயம் ரெண்டும் ஏகாதசி அமாவாசையில் தள்ளுபடி. நாலுநா முன்ன இருந்துட்டுப் போனானே ஒரு பீடித்தடியன், அவன் அமாவாசையன்னிக்கு முள்ளங்கி சாம்பார் பண்ணிட்டு, முள்ளங்கியைப் பொறுக்கிவச்சிட்டுக் கொண்டு வந்தான். நான் என்ன செய்யட்டும்? ராத்திரிப் பலகாரத்துக்குப் பூரி போடறேன்னான். பாலில் நனைச்சுக் கொண்டாடான்னிருக்கேன்; மசாலா வச்சு சோமாசு மாதிரி பொறிச்சிண்டு வந்துட்டான். நான் என்ன செய்யறது? கர்மமேன்னு தின்னு தொலைச்சேன். சாப்பிடாட்டி காலையிலே மயக்கம் வந்துடும். இதெல்லாம் வீட்டுப் பெண் பிள்ளை கவனிக்கிறாளா?”

“அப்படித்தான் மாமா இருக்கும். எல்லாத்துக்குமா காசில போயி ஒரு முழுக்குப் போட்டுட்டு வந்துடுங்கோ” என்று ஆறுதல் கூறுகிறாள் மதுரம்.

“வைத்தி நேத்து வந்தானா? வரேன்னு அன்னிக்குச் சொல்லிட்டுப் போனான்.”

“அப்படியா? தெரியாதே?”

“சொல்லு. நான் பார்க்கணும்னு சொன்னேன்னு.”

“அது சரி, அவர்ட்ட உங்களுக்கு என்ன காரியமோ?”

“ஒண்ணுமில்ல. நீ லோகாட்டச் சொல்லிடாதே, அவ டாக்டர் மருந்து வயிறெல்லாம் புண்ணாயிடுத்து. வைத்தி அன்னிக்கு யதேச்சையாக வந்தப்ப அதுக்குன்னு ஒரு மருந்து குடுத்தான். ரொம்பக் குணம். அதைத் திரும்பக் கேக்கத்தான்...”

மதுரம் தலையை ஆட்டுகிறாள்.

சாப்பிட்டுக் கைகழுவும்வரை மைத்ரேயி நிற்கிறாள். எல்லாவற்றையும் எடுத்துத் துடைத்துவிட்டு வருகிறாள்.

மதுரம் திடுமென்று மௌனமாகிவிட்டாற் போலிருக்கிறது.

“நீங்க போயிட்டா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாது போலிருக்கிறது மாமி!”

“பயப்படாதே. தைரியமாயிரு. இது இப்படித்தான் தொணதொணக்கும். நீ ஒண்ணும் இது சொல்றதுன்னு தலை குளிக்க வேண்டாம் நிதம். ஈரத்துணிய நனைச்சுத் தலையில் வேடு கட்டிண்டு வெறும் புடவை மாத்திண்டு சமைப்பேன். எல்லாம் முடிஞ்சப்புறம் கடைசியிலே வெந்நீர் நிறைய வச்சிண்டு குளிச்சிட்டு வருவேன். பின்ன மார்கழி மாசத்திலே நாலு மணிக்குப் பச்சைத் தண்ணியில் குளிச்சிட்டுச் சமைக்க முடியுமா? போன வருஷம் நான் ராதா கல்யாணம் கழிந்து வந்தப்ப தைமாசத்துக் குளிர்வேற. இப்படி எலக்ட்ரி பாயிலர் வேற இல்ல. என்ன பண்ணுவதாம்?”

அன்றாடப் பழக்கவழக்கத்தில் கூடப் பாசாங்கா? கடவுளே!

“ராதா யாரு?”

“மூத்த பொண்னு. போன வருஷம் கல்யாணமாயி லண்டன்ல குடித்தனம் பண்றா. பெரிய வீட்டிலே எத்தனையோ நடக்கும். நான் முன்ன சொன்னாப்பல இருந்துக்கோ. லோகாவுக்கு நல்ல மனசு. உனக்குச் சம்பந்தமில்லாதது எதிலும் தலையிடாதே. நான் வரட்டுமா?”

மதுரம் உள்ளே வந்ததும் தயாராக வைத்திருந்த அரிசிப் பையையும் துணி மூட்டையையும் சுமந்து கொண்டு செல்கிறாள்.

மைத்ரேயி அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நிற்கிறாள். நெஞ்சு கனக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_6&oldid=1115342" இலிருந்து மீள்விக்கப்பட்டது