வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/துன்பத்திலே இன்பம்

விக்கிமூலம் இலிருந்து

14
துன்பத்திலே இன்பம் காண்பவர்


ஹாவர்ட் தர்ஸ்டன் என்பவர் ஒரு சமயம் நியூயார்க் நகரத்திற்கு போக வேண்டியிருந்தது அவர் ரயில் நிலையத்துக்கு வந்து டிக்கெட் வாங்கப் போகும் சமயம், ஞாபக மறதியாக ஸிரகாஸ் என்ற இடத்திற்கு வாங்கி விட்டார். இந்தத் தவறு, அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அவரை பிரபல மாயாஜாலக்காரராக ஆக்கியதும் அந்தத் தவறுதான்.

ஹாவர்ட் தர்ஸ்டன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிறு பையனாக இருக்கும்போது அவர் வேலைகளைச் சரியாகவே செய்யமாட்டாராம். அதனால் கோபம் கொண்ட தகப்பனார் அவரை நன்றாக அடித்துவிடுவாராம். இதனால் சிலசமயம் ஏதாவது தவறு செய்துவிட்டால் அடிக்குப் பயந்து தர்ஸ்டன் சில நாட்களுக்கு எங்காவது ஓடிவிடுவாராம். பையனைக் காணாமல் பெற்றோர் தவித்துக் கொண்டிருப்பார்கள் அந்தச் சமயத்தில் பையன் வந்தால் அடி கிடைக்காமல் இருக்கும்.

ஒரு சமயம் தர்ஸ்டன் வண்டி ஓட்டிக்கொண்டு போயிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது பத்து தான். அவர் வேகமாகப் போக எண்ணி குதிரைகளை அடித்து ஓட்டினார். அடிதாங்காமல் குதிரைகள் மிரண்டு ஓடின. தர்ஸ்டன் சிறு பையனாதலால் குதிரைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவை ஒரு பெரியமரத்தில் போய் மோதி வண்டியையே உடைத்துவிட்டன. ஆனால், தர்ஸ்டன் தற்செயலாக உயிர்தப்பினார். மேலும் அவரது உடம்பில் ஒரு காயங்கூடப் படவில்லை. வண்டி உடைந்ததும் தர்ஸ்டன் பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு, நியூயார்க் நகரத்தை நோக்கி ஓடிவிட்டார்.

நியூயார்க் நகரத்தில் தர்ஸ்டன் கூட்ஸ்களில் சாமான்களைத் திருடியும், பத்திரிகை விற்றும் வயிறு வளர்த்து வந்தார். திருட்டுத் தொழில் செய்ததினாலும், கண்ட கண்ட இடங்களில் தூங்கினதாலும் போலீஸாரால் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறார். சுமார் பன்னிரண்டு முறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். அவருக்குப் பதிநேழு வயது அப்போது, அவர் சீட்டுக்கட்டுகளில் தந்திர வேலைகளைச் செய்து வந்தார். வேடிக்கை பார்க்கும் மக்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டு அவர் வாழ்க்கை நடத்தி வந்தார்.

ஒரு நாள் மதப்பிரசாரம் நடைபெறும் கூட்டத்திற்கு தர்ஸ்டன் சென்றார். அங்கு நடைபெற்ற பிரசங்கத்தைக் கேட்டதும் அவருக்கு மதத்தில் பற்று ஏற்பட்டது. உடனே மதப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பலவற்றைப் படித்து தேர்ந்து டாக்டர் படிப்புப் படிக்க நிச்சயித்தார். ஒரு சமயம், அவர் பென்ஸில்வேனியாவுக்குப் போகக் கிளம்பினார். மத்தியில் ஒரு ரயிலிலிருந்து மறு ரயிலுக்கு மாற வேண்டியதிருந்தது. இச்சமயத்தில் அலெக்ஸாண்டர் ஹெர்மன் என்ற பிரபல மந்திரக்காரர் அங்கு வந்திருக்கிறார். அவர் மந்திரக் காட்சிகளை நடத்தி வருகிறார் என்று தெரிய வந்தது. தர்ஸ்டனுக்கு சிறு வயதிலிருந்தே மந்திர வேலைகளில் ஆசையிருந்தது, அதனால், அவர் சொந்த ஊருக்குப் போகாமல் மந்திரக்காரரைக் காணச் சென்றார். ஆனால் அவரைக் கண்டு பேச தர்ஸ்டனுக்கு தைரியமில்லை, இச்சமயத்தில் மந்திரக்காரர் வாங்கிய இடத்திற்கே தானும் டிக்கட் வாங்கினார். பிறகு மந்திரக்காரருடன் அறிமுகம் ஏற்பட்டது. பிறகு இவரும் பிரபல மந்திரக்காரரானார். டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட இந்தத் தவறு தான் அவரைப் பெரிய மந்திரக்காரராக ஆக்கியது.

வயிறு வளர்ப்பதற்காக திருட்டுத் தொழிலிலிருந்து பல தொழில்களைச் செய்து வந்த தர்ஸ்டன் பிற்காலத்தில் செல்வந்தராக இருந்தார். ஆனால், அவ்வளவு செல்வத்தைச் சம்பாதித்தும் அவருக்கு மனம் திருப்தி அடையவில்லை. தம்முடைய இளமைக் காலத்தில் தாம் துன்பப்பட்டது தான் தமக்கு மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று அவர் கருதுகிறார்.