விந்தன் கதைகள் 1/ஏழையின் குற்றம்

விக்கிமூலம் இலிருந்து


ஏழையின் குற்றம்

சித்திரம் சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளைச் சிலர் தங்கள் குல வித்தையாகக் கொண்டிருக்கிறார்களல்லவா? அதுபோலக் கூலிப் பிழைப்பைத் தன் குல வித்தையாகக் கொண்டிருந்தான் சின்னசாமி. அவன் அப்பன், பாட்டன், அந்தப் பாட்டனுக்குப் பாட்டன் எல்லாம் சீதாராமச் செட்டியாரின் முன்னோர்களிடம் பரம்பரை பரம்பரையாகவே கூலி வேலை பார்த்தவர்கள்.

செட்டியார் கடைக்கு வந்து இறங்கியதும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை யெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடை உள்ளில் அடுக்குவான். மூட்டைக்குக் காலனா வீதம், எந்தக் காலமா யிருந்தாலும் சரி - அதாவது, யுத்தக் காலமா இருந்தாலும் சரிதான்; சமாதானகாலமாயிருந்தாலும் சரிதான் எண்ணிக் கொடுத்து விடுவார் செட்டியார். ஆனால், என்றைக்காவது ஒரு நாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்குமேல் தூக்கி அடுக்கிவிட்டு, ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணிர் கீழே விழும்.

இந்தத் துக்க நிவர்த்திக்காக, அந்தக் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டனாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். “இகலோகத்திலுள்ள தன்னுடன் சமத்துவமாக வாழாவிட்டாலும் பரலோகத்திலாவது வாழட்டுமே!" என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்.

வழக்கம் போல் அன்றும் இரவு பத்து மணிக்குப் பிறகு, “நான் போயிட்டு வரேனுங்க" என்றான் சின்னசாமி.

“என்னடா, இத்தனை சீக்கிரம்?" என்று கேட்டார் செட்டியார்.

"இனிமேத்தான் என் கூலியை எடுத்துக்கிட்டு போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவவேறே காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைங்க வேறெ அழுதுக்கிட்டு இருக்கும்!" "அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது; வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்"

"கோவிச்சுக்காதீங்க, சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தாச் சொல்லுங்க; செஞ்சிட்டுப் போறேன்!”

"சரிதான்; இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப் போய் நம்ம வீட்டிலே போட்டுவிட்டுப் போடா!" என்று சொல்லி, அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவதொன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது; கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் ‘கொசுறு' வேலைகள்.

* * *

செட்டியார் ஜன்மம் எடுத்துத் தாம் விரும்பிய எத்தனையோ காரியங்களை இதுவரை சாதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒரே ஒரு காரியம் மட்டும் இன்னும் கைகூடவில்லை. அதாவது, தம்முடைய பெயர் வெறும் 'சீதாராமச் செட்டியார்’ என்றிருப்பதைவிட, ‘ராவ்பகதூர் சீதாராமச் செட்டியார்’ என்று இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று அவர் அல்லும் பகலும் அனவரதமும் கனவு கண்டுகொண்டு வந்தார். ஆனால், அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்வதற்குக் கையில் போதிய பணம் இல்லாமலிருந்தது.

இந்தக் குறையையும் நிவர்த்தி செய்து கொள்வதற்கு யுத்தம் என்று ஒன்று வந்து சேர்ந்தது. தான் மட்டும் வந்தால் போதாதென்று அது கட்டுப்பாடு’ என்றொரு தோழனையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு வந்தது. அதைக் காரணமாக வைத்துக்கொண்டு செட்டியார், தம்முடைய கடையை ‘கறுப்பு கடை'யாக மாற்றி விட்டார்.

அவ்வளவுதான்; அவருடைய பணப் பஞ்சம் இருந்த இடம் தெரியாமல் பறந்தது. முகத்திலும் அலாதிக்களை வீசிற்று. தன்னைப் போன்ற பெரிய மனிதர்களின் சிநேகத்தால் சுண்டெலியாயிருந்த அவர் பெருச்சாளியானார். அப்புறம் சந்தர்ப்பத்தைத் தானே சிருஷ்டித்துக் கொண்டு கண்ட இடங்களிலெல்லாம் கூட்டத்தைக் கூட்டி, “ஐயோ, ஏழைகள் ஐயோ, ஏழைகள்!" என்று அலற ஆரம்பித்தார். அவருடைய கூச்சலைக் கேட்டுக் கோஷம் செய்ய ஒரு சிறு கும்பலும் சேர்ந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? தாலுகா போர்டு மெம்பரானார்; பாங்கின் டைரக்டரானார்; பல கம்பெனிகளின் கூட்டு முதலாளியானார்; யுத்தக் கமிட்டியின் தலைவரானார்; கவர்னர் துரையை அடிக்கடி நெருங்கினார். இதனாலெல்லாம் அவருடைய ‘கறுப்பு மார்க்கெட்' விஷயம் அதிகாரிகளின் காதில் விழாமல் போயிற்று. தப்பித் தவறி விழுந்தாலும் அந்த விஷயம் அவர்கள் காதுக்கு எட்டாமல் போயிற்று.

* * *

செட்டியாரின் நிலை இப்படியென்றால் சின்னசாமியின் நிலை வேறாயிருந்தது. அவனுக்கு அஞ்சலை என்றொரு தங்கை. பிரசவத்துக்காக அவள் தன்னுடைய அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தாள். குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகி விட்டது. அவள் கணவன் தன் மனைவியை அனுப்பி வைக்கும்படி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். தாயும் பிள்ளையுமாக வெறுமனே எப்படி அனுப்பி வைப்பது? அந்தக் குழந்தையின் கால்களுக்கு ஒரு ஜதை வெள்ளிக்காப்புக்களாவது வாங்கிப் போட வேண்டும்; அஞ்சலைக்கு ஐந்து ரூபாயிலாவது ஒரு புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும்; இவை கூட இல்லாமல் சென்றால் அஞ்சலையின் மாமியார் சும்மா இருப்பாளா?

ஆனால், அவற்றிற்கெல்லாம் குறைந்தது பத்து ரூபாயாவது வேண்டுமே - இதுதான் சின்னசாமியின் தற்சமயக் கவலை, லட்சியம், மனோரதம், எண்ணம், ஆசை எல்லாம்!

இந்தக் குறையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அவன் என்னவெல்லாமோ யோசனை செய்து, கடைசியில் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டான். அந்தத் தீர்மானத்தின்படி, தான் மாலை வேளையில் வழக்கமாகத் தேநீர் அருந்தும் கடைக்குச் சென்று, ‘'என்ன, நாயர் சர்க்கரை ஏதாச்சும் வேணுமா?” என்று கேட்டான்.

"இருந்தா இப்பவே கொடு, அப்பேன் வீசை ஒரு ரூபாய்க்கு வாங்கிக்கிறேன்!” என்றான் நாயர்.

"தினசரி ஒரு வீசை சர்க்கரை, விலை ஒரு ரூபாய். பத்து நாட்களுக்குக் கொண்டு வந்து கொடுத்தால் பத்து ரூபாய். அடே, அப்பா போதுமே நமக்கு

* * *
சின்னசாமி, தன்தங்கை அஞ்சலையின் வாழ்க்கை நலனுக்காகத் திருட்டுத் தொழிலில் பிரவேசித்து அன்று பத்தாவது நாள். பொழுது விடிந்ததும் பல்லைதுலக்கிக் கொண்டு நெற்றியில் ‘சிவனே!’ என்று உச்சரித்தவண்ணம் விபூதி அணிந்து கொண்டான். கிழக்குத் திக்கை நோக்கி ஒரு முறை கைகூப்பிவிட்டு, அடுப்பங்கரைக்குச் சென்று உட்கார்ந்தான். பழைய சாதம் இருந்த பானையை எடுத்துக் கொண்டு, அவனுக்கு எதிரே வந்து உட்கார்ந்தாள் அவன் மனைவி. அவள் கையிலிருந்த இரண்டு பச்சை மிளகாய்களைத் தன் இடது கையில் பெற்றுக் கொண்டான் சின்னசாமி. அந்த மிளகாய் தான் ஏழைச் சின்னசாமிக்குப்பருப்பு, நெய், பொறியல், அவியல், கூட்டு எல்லாம். கையில் பழைய சாதத்தைப் பிழிந்து வைத்துக் கொண்டே, “மறந்துட்டேன், நேத்து ஒரு கடிதாசு வந்திச்சு, அதிலே பொங்கலுக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்குது; அனுப்பினா அதுக்குள்ளே அஞ்சலையை அனுப்புங்க, இல்லாட்டி அந்தப் பெண்ணே எனக்கு வேணாம்னு எழுதியிருக்காங்களாம்!” என்றாள் அவன் மனைவி.

அதற்காக ஏற்கனவே தான் திருட்டுச் சர்க்கரை வியாபாரத்தில் இறங்கியிருப்பதைப் பற்றி அவன் தன் மனைவியிடம் ஒன்றுமே சொல்லவில்லை. அவளிடம் அதைச் சொல்ல அவனுக்கே வெட்கமாயிருந்தது. இப்பொழுதும் அதை மனதில் வைத்துக் கொண்டே, "அதற்கென்ன, நாளைக்கே எப்படியாச்சும் அனுப்பி வச்சுடலாம்" என்றான்.

அவன் நினைத்தது இப்படி; ஆனால் தெய்வம் நினைத்ததோ? - அதற்குத்தான் நாம் நினைப்பது போல் நடக்கத் தெரியாதே!

* * *

செட்டியாரின் திருட்டு வியாபாரத்தை எத்தனையோ நாட்களாகக் காத்து வந்தவரும், சின்னசாமியின் திருட்டுத் தொழிலுக்கு ஒன்பது நாட்கள் துணையாயிருந்தவருமான கடவுள் பத்தாவது நாள் மட்டும் கறுப்பு மார்க்கெட்டின் மூலம் பணக்காரரான செட்டியாரை விட்டு விட்டு, ஏழைச் சின்னசாமியை மட்டும் ஏனோ காட்டிக் கொடுத்து விட்டது.

கடைசியில் என்ன? மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் நீதிநெறியைக் கஞ்சிக்கில்லாத நிலையிலும் காப்பாற்றி வரும் போலீசாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். அவன் மனைவி மக்களும், தங்கையும் இந்தச் செய்தியை முதலில் நம்பவே இல்லை. என்றைக்கும் திருடாதவன், இன்று திருடினான் என்றால் அவர்கள் நம்பினாலென்ன, நம்பாவிட்டாலென்ன? சின்னசாமியை நம்பியிருந்த அவர்கள் நடுத்தெருவில் நிற்க நேர்ந்து விட்டது.

* * *

இந்தச் சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாள், செட்டியார் தினசரியைப் பிரித்து, அதில் வெளியாகியிருந்த புது வருஷப் பட்டங்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய ஆசை நிராசையாய்ப் போய்விடவில்லை. அவருக்கும் ‘ராவ்பகதூர்' பட்டம் கிடைத்திருந்தது.

அந்தச் செய்திக்குப் பின்னாலிருந்த இன்னொரு செய்தியும் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது. அது சின்னசாமிக்கு ஆறு மாதம் சிறைவாசம் கிடைத்த செய்தி தான்!

பணம் படைத்த செட்டியார் செய்ததும் குற்றந்தான்; ஏழை சின்னசாமி செய்ததும் குற்றந்தான்! ஆனால் பலன்?