விளையாட்டு உலகம்/வாழ்க நின் வலிமை!

விக்கிமூலம் இலிருந்து

வாழ்க நின்
வலிமை!



நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏன் ஒலிம்பிக் பந்தயம் நடந்து வருகிறது என்ற கேள்விக்கு, கிரேக்க நாட்டில் உலவி வரும் கதை ஒன்றைப் பதிலாகக் கூறுவார்கள்.

ஒலிம்பிக் பந்தயம் தொடங்கிய காலத்துக் கதை இது. புனிதமான ஓட்டப் பந்தயங்களில் அல்லது மல்யுத்தப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற பெண் ஒருத்தி, அந்நாட்டின் ராணியாகிவிடுவது மரபாக இருந்து வந்தது.

ஒரு முறை ராணியாகிவிட்டால், இறக்கும் வரை அவளே ராணியாக இருப்பாள் என்பதும் சம்பிரதாயம். ஆண்களுக்கான ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெறுகிற வீரனையே, அந்த ராணி மணந்து கொண்டு, மன்னனாக்கி விடுவாள்.

49 அல்லது 50 முழு நிலாக் காலம் முடிவடைந்த பிறகு, மீண்டும் ஒரு விளையாட்டுப் பந்தயம் நடக்கும். அதில், கிரேக்க நாட்டு வீரர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். நான்காண்டு காலம் மன்னனாக வாழ்ந்த வீரனும், போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுகிற வீரனையே ராணி தன் கணவனாகத் தோந்தெடுத்துக் கொள்வாள். தோற்றுப் போகின்ற பழைய மன்னன் கதி என்னவாகும் என்றால், இரண்டு காரியங்களில் ஒன்றை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒன்று தலைமைக் கடவுள் பீடத்திலே தன் தலையை வைத்துத் துண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளலாம். அல்லது மலை உச்சியில் வைத்துத் தள்ளிவிடும்படி மன்றாடலாம்.எப்படியும் அவன் இறக்க வேண்டியவனே.

இவ்வாறு இந்திராணியாக அந்த ராணி சிரஞ்சீவியாக வாழ, நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய வீரன் கொல்லப்பட, புதிய வீரன் மாலை சூட என்ற வழக்கம் இருந்து வந்த தாம்.

நான்காண்டுகளுக்குள் ஒரு வீரனின் அல்லது மனிதனின் பலம் குறைந்துபோய்விடுகிறது என்ற கிரேக்கர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்த, இந்தக் கதை உருவாக்கப்பட்டதோ அல்லது உண்மையாக நடந்ததோ நாமறியோம். வரலாற்றிலே இக்கருத்து காணப்படுகிறது. அந்த அடிப்படையில்தான், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டிலே நடத்தப்பெற்றன.

அதே கிரேக்க வரலாற்றில், மிலோ என்ற மல்யுத்த வீரன் தொடர்ந்தாற்போல் 6 ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி வீரனாக விளங்கினான் என்ற ஓர் குறிப்பினையும் நம்மால் காண முடிகிறது.

படிக்கின்ற கருத்திலே, பற்றும்பிடிப்பும் இல்லாமல் போகலாம் என்பதனாலாே என்னவோ, நாம் வாழ்கின்ற காலத்திலேயே வலிமை மிக்க மிலோ போன்ற வீரன் ஒருவனைக் காண்கிறாேம். அவனது ஆற்றல்மிகு சாதனையைப் பார்த்து வியந்து மகிழ்கிறாேம்.

19 வயது இளைஞனாக மெல்போர்ன் ஒலிம்பிக் பந்தயப் போட்டிக்கு 1956-ம் ஆண்டு வருகிறான். தட்டெறியும் போட்டியில் ஒலிம்பிக் சாதனை செய்து தங்கப் பதக்கம் பெறுகிறான். 23 வயது இளைஞனாக 1960ம் ஆண்டு ரோம் நகரில் நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்திற்கு வருகிரறான். 194 அடி 2 அங்குலம் எறிந்து புதிய சாதனை நிகழ்த்தி, தங்கப் பதக்கத்தோடு செல்கிறான்.

27 வயது வீரனாக 1964ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் பந்தயத்திற்கு வருகிறான். 200 அடி 1½ அங்குலம் எறிந்து வெற்றி வீரனாகச் செல்கிறான்.

திருமணம் நடக்கிறது. விமானக் கம்பெனியில் பணி புரிகிறான்.சாதாரண மனிதனுக்குரிய அன்றாட செயல் முறைகளிலும் ஈடுபடுகிறான். என்றாலும் தன் குறிக்கோளை மறக்கவில்லை. உடல் வலிமையை இழக்கவில்லை.

31 வயது விவேகம் நிறைந்த வீரனாக மெக்சிகோ நகரில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்திற்கு வருகிறான். 212 அடி 6 ½ அங்குலம் தட்டெறிந்து உலக சாதனை புரிந்து உலகையே வியப்பில் ஆழ்த்திவிடுகிறான்.

அந்த அமெரிக்க மாவீரனின் பெயர் ஆல்பிரட் ஓர்ட்டர் என்பதாகும். திருமண வாழ்க்கை அவனை திசை திருப்ப முடியவில்லை. பணிபுரிந்த உத்தியோக வாழ்க்கையால் அவன் கவனத்தை மாற்றமுடியவில்லை. ஏறிக் கொண்டிருக்கும் வயதும் அவனது வலிமையை இறக்கிவிட முடியவில்லை. 1968ம் ஆண்டு மெக்சிகோ நகரில், தோள்பட்டையில் காயமுற்றதற்காக, இரும்புக் காலரை அணிந்து கொண்டு தட்டினை எறிந்துதான் வெற்றி பெற்றான். அந்த காயமும் வேதனையும் கூட அவனது வெற்றியை மாற்றியமைக்க முடியவில்லை.

16 ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், 4 ஒலிம்பிக் பந்தயங்களில் தட்டெறியும் போட்டியில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தைக் கொண்டோடிச் சென்ற மாவீரன், 1972, 1976ம் ஆண்டு நடந்த போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. காரணம் பயமல்ல! வலிமை குறைந்து போய்விட்டது என்பதனாலும் அல்ல! பிறகு ஏன் கலந்து கொள்ளவில்லை?

"தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே வந்தால், போற்றுவதற்குப் பதிலாக மக்கள் வெறுக்கத் தொடங்கிவிடுவார்களோ என்ற அச்சம்தான்" என்று ஆல்பிரட் ஓர்ட்டர் கூறுவதைக் கேட்கும்போது, பதில் சரியானதுதான் என்று தோன்றுகிறது.

1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடக்க இருக்கும். ஒலிம்பிக் பந்தயத்தில் மீண்டும் தட்டெறியும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புகின்ற ஓர்ட்டருக்கு அப்பொழுது வயது 43 ஆக இருக்கும்.

'வயது என் செயும், வளையம் வரும் முதுமை என் செயும்? நயமாய் உடல்தனை நாளெல்லாம்.