விளையாட்டு உலகம்/விதி விளையாடுகிறது!

விக்கிமூலம் இலிருந்து
விதி
விளையாடுகிறது!

குத்துச்சண்டை மேடையிலே கொடூரம் கண்களிலே கொப்பளிக்க நின்று கொண்டிருக்கின்றார்கள் இரு வீரர்கள். அது பேரெடைப் பிரிவில் உலக வெற்றி வீரன் பட்டத்திற்கான போட்டி. ஏற்கனவே வெற்றியைப் பெற்றிருந்த வீரன், தன் பட்டத்தைக் காக்கப் போராடுகிறான். பட்டத்தைப் பறிகொடுத்திருந்த வீரன், மீண்டும் அதைப் பெற்று தன் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காகப் போராடுகிறான்.

மானத்திற்காகப் போராடுகின்றார்கள். அதைக்காண லட்சக்கணக்கான கூட்டம். வெறிகொண்ட வேங்கையென இரண்டு வீரர்களும் மேடையிலே பாய்கின்றார்கள். முகத்திலே முரட்டுத்தனமாகக் குத்திக்கொள்கின்றார்கள். மூர்க்கத்தனத்தின் எல்லை யிலே தாக்குதல் நடைபெறுகின்றது. என்றாலும்; இருவரும் சளைக்கவில்லை. களைக்கவில்லை.

6 ரவுண்டுகள் முடிகின்றன. குத்துக்கள் தான் விழுந்தனவே தவிர, எதிர்பார்த்த எதுவும் நடக்கநடக்கவில்லையே என்ற ஏமாற்றம் ரசிகர்கள் மனதிலே அலை பாய்ந்து கொண்டிருந்தது. இல்லைஇல்லை. கனலாகக் காய்ந்து கொண்டிருந்தது.

7வது ரவுண்டு மணியொலிக்குப் பிறகு, வீராவேசமாகப் போட்டி தொடங்கியது. தோற்றிருந்த வீரன், ஜேக்டெம்ப்சி என்ற வீரன்தான். வெற்றி விரன் என்ற பட்டத்தைக் கொண்டிருந்த ஜீன்டன்னி என்பவன் முகத்திலே நான்கைந்து குத்துக்களை பலமாகக் குத்திவிட்டான். சரமாரியாக விழுந்த குத்துக்களினால் அதிர்ச்சியடைந்த ஜீன்டன்னி, தற்காப்புக்காகத் தடுத்துக் கொள்ள முடியவில்லை.

தாக்குதலின் வேகம் தாங்க முடியாமல், மேடையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிற்றிலே சாய்ந்தான். சாய்ந்த நிலையிலிருந்து மெதுவாக சரிந்தான். சரிந்ததுமில்லாமல், கால்கள் நிலை கொள்ளாமல் மேடைத் தரையிலே விழவும் செய்தான். இதுதான் எதிரியைத் தாக்க நேரம். ஒரே குத்தில் அவனை ‘நாக்அவுட்’ செய்துவிட வேண்டும் என்று ஜேக்டெம்ப்சி (Jack dempsey) ஆடிக்காற்றாக விரைந்து வந்தான். முனைந்து நின்றான்.

போட்டிக்கு நடுவராகப் பணியாற்றியவர் தாவே பாரி (Dave barry) என்பவர். விழுந்து புரளும் வீரனை வெற்றியுடன் தாக்க முனையும் முயற்சியைத் தடுத்தார். விழுந்தவனுக்கு இரக்கம் காட்டும் எண்ணத்தால் அல்ல. அதுதான் ஆட்டத்தின் விதி.

கீழே கிடக்கும் வீரனைத் தாக்கக் கூடாது. அவன் கீழே விழுந்த பிறகு, மீண்டும் தன்னை சமாளித்து எழுவதற்கு 10 எண்ணிக்கை (10 Counts) அவகாசம் உண்டு. அந்த எண்ணிக்கைக்குள் விழுந்தவன் எழுந்து, நின்றால் போட்டியை மீண்டும் தொடங்கலாம். இல்லையென்றால், விழுந்தவன் தோற்றான் என்று முடிவு செய்யப்படும்.

கீழே விழுமாறு குத்திய வீரன் விழுந்தவன் அருகிலேயே நின்று கொண்டிருந்தால், நடுவர் எண்ணு. வதைத் தொடங்கமாட்டார். அவர் தனது நிற்கும் இடத்திற்குப் போனவுடன் தான் எண்ணிக்கையைத் தொடங்குவார். ஜின்டன்னி கீழே விழுந்து கிடக்கிறான். அவனைச் சுற்றிச் சுற்றித் தாக்கிட ஜேக்டெம்ப்சி வந்து நிற்கிறான்.

நடுவர், டெம்ப்சியை இடத்திற்குப் போகச் சொல்லி எச்சரிக்கைத் தருகிறார், டெம்ப்சியோ ஆவேசத்தில் எழுந்த ஆக்ரோஷத்தில், இருந்த இடம் விட்டுச் செல்லாமல் நிற்கிறான் . அதனால் நடுவர் அந்த பத்து எண்ணிக்கையை எண்ணாமல் இருக்கிறார். அதனால், மேடைப் புறத்து 'நிறுத்துக் கடிகாரங்கள்’ (Stop watches) ஓட விடப்படாமலேயே இருக்கின்றன. இவ்வாறு பல வினாடிகள் வீணுகிக் கொண்டிருந்தன. அதாவது 14 வினாடிகள் கழிந்து போயின.

அதற்குள் அந்த ரவுண்டும் முடிந்துவிடுகிறது. இடைவேளை நேரம் வருகிறது. அதற்குள் நிலைமையில் சற்று மாறுதல். ஜுன்டன்னி மீண்டும் போரிடுவதற்குத் தயாராகிக் கொள்கிறான். பிறகு, மூன்று ரவுண்டுகள் குத்துச் சண்டை தொடர்ந்து நடந்தது. அதில் ஜேக்டம்ப்சி எவ்வளவோ முயன்றும், முன்போலவே எதிரியை வீழ்த்த முடியவில்லை.

இறுதியில் என்ன நடந்தது என்று நினைக்கின்றீர்கள்? நெருப்பாகத் தாக்கும் ஜேக்டெம்ப்சி நிலை மாறிக்கிடந்த ஜீன்டென்னியிடம் தோற்றுப்போனான். வெற்றியின் விளிம்பிலே வீராவேசத்துடன் நின்று கொண்டிருந்த ஜேக் ஏன் தோற்றுப்போனான்?

விதியை மதிக்காத காரணத்தால்தான். தன் எதிரியை அடித்து வீழ்த்திய உடனேயே தனது இடத்திற்குப் போய் நிற்க வேண்டும் என்ற விதியை ஜேக் மதித்திருந்தால், தன்னுடைய இடத்திற்குப்போய் நின்றிருந்தால், நடுவரும் எண்ணிக்கையைத் தொடங்கியிருப்பார். 10 எண்ணிக்கையையும் முடித்திருப்பார். எதிரியை ‘நாக் அவுட்’ செய்த வீரன் என்ற முடி வினையும் அறிவித்திருப்பார்.

இப்பொழுது என்ன நடந்தது பார்த்தீர்களார் 10 எண்ணிக்கைக்குள் முடிந்துவிட வேண்டிய நிகழ்ச்சி யானது தொடர்ந்தது. 14 வினாடிகளும் கீழே கிடந்த பிறகும் தோல்வி பெறாமல் இருந்தானே ‘ஜீன்டென்னி’, அங்கேதான் விதி விளையாடியது. ஆமாம் அவனது விதியும் அதில் விளையாடியது.

மீண்டும் வெற்றி வீரன் பட்டத்தைப் பெற்றுவிட்டான் ஜீன்டென்னி. 1927ம் ஆண்டு செப்டம்ப? மாதம் 22ந்தேதி சிகாகோ நகரில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியிலே, விதி எவ்வாறு விளையாடி இருக்கிறது பார்த்தீர்களா?

விளையாட்டின் விதியும் வாழ்க்கை விதியும் ஒன்றுதான் என்று நம்மை எண்ணத் துாண்டுகின்ற தல்லவா? வாழ்க விளையாட்டு விதி என்று வாழ்த்துவோம். மதிப்போம். வழி நடப்போம். விதி கடப்போம். வெற்றியில் திளைப்போம்!