விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/அதிசயமான ஓட்டப் பந்தயம்

விக்கிமூலம் இலிருந்து

32. அதிசயமான ஓட்டப்பந்தயம்

ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றால் புனித ஆலிவ் மலர் வளையத்தை தலையில் கிரீடமாக சூட்டிப் பாராட்டினார்கள் பழங்கால கிரேக்கர்கள். பின்னர், வெற்றி வீரர்களுக்கு வெள்ளித் துண்டுகளைப் பரிசாக அளித்து கெளரவித்தனர் ரோமானியர்கள்.

அதன்பின், தங்கப்பதக்கங்கள் தரும் பழக்கம் ஓட்டப் போட்டியில் நுழைந்துகொண்டது. ஆனால் நாம் இங்கே காணப்படும் போட்டியோ அதிசயமான போட்டியாகும்.

ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டவர் இருவர்தான். அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் நாடுகளின் ஒரே பிரதிநிதியாகக் கலந்துகொண்டதுதான் இதில் சிறப்பான அம்சம் ஆகும். யார் வெற்றி பெற்றாலும் அது தனிப்பட்ட 'அவருக்கு' வருகின்ற பரிசு அல்ல. அது அவருடைய நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய மாபெரும் பரிசாகும்.

அந்த மாபெரும் பரிசு என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இது, உண்மையிலேயே பரம்பரை பரம்பரையாக, வழிவழி வம்சாவளியினர் வாழப்போகின்ற இடங்களை வாங்கித் தருகின்ற அதிசய ஓட்டப் போட்டியாகவும் அற்புதப் பரிசாக வாழும் தீவாகவும்தான் அது அமைந்திருந்தது.

இந்த சுவையான சம்பவம் 1648ம் ஆண்டிலே நடைபெற்றிருக்கிறது.

கரிபியின் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவு. அதற்கு செயின்ட் மார்ட்டின் என்பது பெயராகும். அங்கேதான் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றது.

இந்தத் தீவினை ஆக்ரமித்துக்கொள்ள இரண்டு நாட்டினர் வந்துவிட்டனர். ஒரு பகுதியினர் பிரெஞ்சு நாட்டினர். மற்ற பகுதியினர் டச்சுக்காரர்கள். அந்த தீவினை யாருக்கு எவ்வளவு என்று பிரித்துக்கொள்ளும் பொழுதுதான் தகராறு ஏற்பட்டுவிட்டது.

அதனை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முற்பட்ட பொழுதுதான், இவ்வாறு ஓட்டப்பந்தயத்தினைத் தேர்ந்தெடுத்தனர். அந்த முடிவின்படி ஒவ்வொரு பிரிவிலும் இருந்து ஒவ்வொரு ஓட்டக்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்கள் அந்த சிறிய தீவின் மேற்குப் புறப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கேதான் ஓட்டப் போட்டியானது தொடங்கி வைக்கப்பட இருந்தது. ஆர்வமுள்ள அனைவரும் அதாவது தங்களுக்கே வெற்றி கிடைக்கப்பெறல் வேண்டும் என்ற ஆசை கொண்ட அனைவரும் அங்கே அலைகடலெனக் கூடியிருந்தனர்.

யார் இந்த ஓட்டப்போட்டியில் வெற்றியடைகின்றாரோ, அவரது நாட்டுக்கு அந்தத் தீவின் வளமான பகுதியாகப் பார்த்து அதிகமான நிலப்பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. தோற்றவருக்கோ அவர் எடுத்துக்கொண்டது போக மீதியுள்ள பகுதிதான் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஒட்டப் பந்தயம் தொடங்கியது. பதைபதைக்கக் காத்திருந்த கூட்டத்தை நோக்கி வெற்றி வீரராக ஓடிவந்தவர் பிரெஞ்சு நாடு, தீவினில் தங்களுக்குத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றது. இந்தத் தீர்ப்பை டச்சுக்காரர்களும் மனமார ஏற்றுக்கொண்டனர். முனுமுனுக்கவில்லை.

விளையாட்டுப் போட்டிகள் மனமகிழ்ச்சிக்காக மட்டுமல்ல, வாழ்க்கைப் போராட்டத்திற்கும், வளமான தீர்ப்பினை சுமுகமாக வழங்கவும் உதவியிருக்கிறது பார்த்தீர்களா? வரலாற்றிலேயே இது ஒரு அற்புதமான போட்டிதான். சுவையான சம்பவம்தான்.