வெற்றி முழக்கம்/16. வேகத்தில் விளைந்த சோகம்

விக்கிமூலம் இலிருந்து

16. வேகத்தில் விளைந்த சோகம்

ழகிய பெருவயல்களிலே கொட்டும் பறையொலிக்குப் பயந்த பசியகண்களை யுடைய எருமை தன் கன்றை நினைந்து மடி நிறைந்த இனிய பாலை, தாமரைப் பொய்கையின் விரிந்த இலைகளில், எழில்இள அன்னங்களோடு நாரைக் குஞ்சுகளும் உண்ண எழுந்து வருமாறு சொரிந்தன. பெரிய பெரிய பாத்திகளில் ஓங்கி வளர்ந்த கரும்பின் மடல்களிலே கட்டப்பட்ட செறிந்த இனிய தேன் கூட்டில் இருந்து ஒழுகும் செந்தேன், கீழே பக்கத்தில் கவின் பெறக் காட்சி தரும் தாமரைச் செம்மலரில் தீயை வளர்ப்பதற்குச் செய்யும் ஆகுதி போலப் பொழிந்தது. இடமகன்ற சோலைகளிலே வெள்ளிக் கும்பமெனக் குலைதள்ளிய பாளைக் கமுகும், பச்செனப் பருத்த மூங்கிலும், பழுத்த கதலி மரங்களும், கொத்துத் கொத்தாகக் குலை தள்ளிய தென்னை மரக் கூட்டமும், இனிய தீம் பலாவும், தே மாமரங்களும், புன்னையும், செவந்தியும், பொன்னென இணர்த்த பூங்குவை ஞாழலும், இன்னும் பலபல மரங்கொடி செடிகளின் ஈட்டமும் கலந்த தோற்றம் எழுமையும் நுகர அரிய இன்பக் காட்சியாக விளங்கின. பகற்போதிலே கதிரவன் கிரணங்களும் உள்நுழைய இயலாத செறிவு பொருந்தி இருண்டவை, அச்சோலைகள். கழனிகள் தோறும் முற்றிச் சாய்ந்திருந்த விளை நெற்கதிர்கள் காற்றோடு அசைந்தாடின. அங்கங்கே உழவர் கூட்டம் செய்யும் ஆரவாரமும், களங்களில் நெல்லடிப்போர் செய்யும் களிச் செயல்களும் காட்சியளித்தன. வேளாள மகளிர் வளர்க்கும் இல்லுறை கிளிகளின் மழலைச் சொல்விருந்து ஒருபுறம்; தண்ணுமையும் தடாரியுமாக முழவுடன் முழக்கும் ஆடவர் நாதவெள்ளம் ஒருபுறம், களை கட்டும் கடைசியர்கள் வரிப் பாடல் பாடும் இசை விருந்து இன்னொரு புறம். இத்தகைய மருத நிலப் பெருவழியில் பத்திராபதி உதயணன் முதலியோரைச் சுமந்து விரைவாகச் சென்று கொண்டிருந்தது.

அவர்கள் அப்போது அருட்ட நகரத்தை அணுகிக் கொண்டிருந்தனர். எதிரே பெரிய கோட்டை கொத்தளங்களும், வானளாவிய கொடி மதில்களுமாகத் தெரிந்த அருட்ட நகரத்தின் புறக்காட்சி ஒரு தனி அழகுடன் விளங்கியது. தான் செல்வது அக்கம் பக்கத்திலுள்ளோர் அறிதற்கு அந்த இரவில் ஏதுவாகிவிடக் கூடாது என்பதற்காக அருட்ட நகரத்தை அணுகும்போது, பத்திராபதி அணிந்திருந்த மணியை ஒலிக்காதபடி செய்து நீக்கினான் உதயணன். தத்தையும் காஞ்சனையும் அணிந்திருந்த கிண்கிணிச் சிலம்புகளின் கீத ஒலியைக் கூடத் தடுக்குமாறு கூறினான். இருள் நேரமாகையால் ஏனையோர் ஐயுற நேரும். அதனால் யாது விளையினும் விளையும் என்று கருதியே உதயணன் இவ்வாறு செய்தான். அருட்ட நகரத்தை நெருங்கியதும் நகரின் வலப் பக்கமாக ஒரு பெருவழி சற்று ஒதுங்கிச் சென்றது. இடப் புறம் நகரை ஒட்டி அதேபோல் ஒரு வழி அமைந்திருந்தது. உடன் இருந்த வயந்தகன் உதயணன் நோக்கி, “இடப் பக்கமாகச் சென்றால் அருட்ட நகரத்தார் நம்முடைய செலவை அறிய நேரிடும். அதனால் நமக்குத் துன்பம் வரலாம். ஆகையால் ஒலிகளின்றி அமைதியாக வலப் புறம் செல்லும் பெருவழியிலே பிடியைச் செலுத்துக” என்றான். அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுக்கிக் கொண்டிருந்த நகரின் மாடப் பெருவிளக்குகள் இருளிடையே தெரிந்தன. கணீர் கணீரென்றுதேவ கோட்டங்களில் இருந்து மணியொலி எழுந்து பரவிய வண்ண மிருந்தது. உதயணன் வயந்தகன் கூறியவாறே பத்திராபதியை மெல்ல வலப் பக்கத்து வழியிற் செலுத்தினான். இடை யிடையே வயந்தகன் அங்குள்ள வழிகளைப் பற்றிய விரிவான செய்திகளை உதயணனுக்கு விளக்கிக் கூறினான். வழிகள் இரண்டாகப் பிரிவது மன ஒருமையில்லாதவர் களுடைய நிலையை ஒத்திருந்தது. வயந்தகன் துணை, வழி காட்டும் பெருந்துணையாக ஒளிகாட்டி அமைந்தது உதயணனுக்கு. நெடுநேரம் பயணம் செய்து கழிந்தபின் முல்லை நிலமொன்று எதிர்ப்பட்டது.

முல்லைக் கொடிகள், முல்லைநில மகளிர் இடை போலக் கொடி பரப்பி, நகை போல மலர்ந்து விளங்கின. குரவு தளவு குருந்தம் முதலியன மெல்ல மலர்ந்து தோன்றின. அவைகள் மலரும் செவ்வி நோக்கிக் காத்திருந்த வண்டுகள், மகிழ்ந்து தேன் விருந்துண்ணப் புறப்பட்டன. தினையும் சோளமும் வித்திட்டு விளைக்கும் முல்லை நிலமக்கள் அவற்றை வரிசையாகப் பயிரிட்டிருந்த காட்சி கவின் செறிந்து தோன்றியது. அந் நிலத்தில் விளையத்தக்க வேறு சில பல தானியங்களையும் பயிரிட்டிருந்தனர். முல்லை நில மக்கள் முயற்சிமிக்க பண்பினர் என்பதை அது விளக்கியது. கொல்லைப் புறங்களிலே மேய்ந்து கொண்டிருந்த முல்லை நிலத்துப் பசுக்கள் மடிநிறைந்த பாலைச் சேற்று நிலத்தில் பொழிந்தன. இரலையும் பிணையுமாகிய மான்கள் முசுண்டைக் கொடியின் பசிய தழையை மேய்ந்தவண்ணம் திரிந்தன. காயாம்பூவும் கொன்றையும் கவினிப் பூத்து விளங்கும் பொழில்களில் இடை இடையே சிறுசிறு தோட்ட வீடுகள் விளங்கின. குற்றமற்ற வாழ்க்கை கோவலர் வாழ்க்கை. பசுக்களைக் காத்து ஓம்பிப் பயன்பெறும் வாழ்க்கை அல்லவா அது? அத்தகைய நல்வாழ்வு படைத்த முல்லை நிலத்தைக் கடந்து குறிஞ்சி நிலப் பகுதியை அடைந்தது பிடி.

மலைச்சாரவை நெருங்கிவிட்டதற்கு அறிகுறியாகச் ‘சோ’வென்று வீழும் அருவிகளின் இன்னிசை செவிகளுக்கு விருந்து செய்தது. அங்குமிங்குமாகத் தாவி ஓடும் கவரிமான்களின் காட்சியில் மிக்க அழகைக் கண்டார்கள். செண்பகமும் அசோகமும் செறிந்து வளர்ந்திருந்தன. குறிஞ்சியும் வேங்கையும் குளிரப் பூத்திருந்தன. எங்கும் பூமணம், காற்றில் கலந்து வீசிற்று. அகில் சந்தனம் முதலிய மரங்கள் நன்றாக முற்றி வெடித்திருந்ததனால், அவற்றின் மணம்வேறு தம்மை நுகரச் செய்தன. எங்கு நோக்கினும் தீஞ்சுனைகள். மலையில் சிற்சில இடங்களில் வேடர் இட்டிருந்த தீ அந்தக் கங்குல் யாமத்தில் தோன்றிய புதியதொரு கதிரவன் என விளங்கியது. இவ்வளவு வளம் பொருந்திய குறிஞ்சி நிலத்தை நூற்றிருபத்தைந்து காத எல்லையும் கடந்து மேற்சென்றது பத்திராபதி. எதிரே அகன்ற பெருங்கரைகள் இரண்டிற்கும் நடுவே கலகலவென்ற ஒலியுடன் நருமதையாறு ஒடிக்கொண்டிருந்தது. நடுவில் இடைவெளி யின்றி இருமருங்கும் நீர் நிரம்பிக் கொண்டிருந்த நருமதை நதி, பலவகை வளங்களும் பொருந்தியது. பல வளங்களையும் அந்தப் பிரதேசத்திற்கு அளிக்கக் கூடியதும்கூட. அதன் இரு கரைகளிலும் அடர்ந்த மரக் கூட்டங்கள் அணிவகுத்து நிற்பனபோல அமைந்திருந்தன. அந்தக் கரைகளில் எப்போதும் ஆரவாரத்துக்குப் பஞ்சமிருக்காது. நீர்த் துறைப் பரதவர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பறவைகளின் குரல்கள் போட்டி போடும் இடம் அது. நறுமணம் பொருந்திய மலர்ச் சோலைகள் பலவற்றைக் கடந்து நருமதைக் கரையை அடைந்ததும் பின்புறமாக அமர்ந்திருந்த வயந்தகன் பிடியிலிருந்து கீழே இறங்கினான். நதியைப் பார்த்த வயந்தகன் தண்ணீர் அப்போது மிகுதியாக ஒடுகிறது என்பதை அறிந்துகொண்டான். பொய்ம் மணலால் உள்ளே ஆழ்த்திவிடாததும் சற்று ஆழம் குறைவானதுமான ஒரு பகுதியில் இறங்கி வயந்தகன் முன்னே வழிகாட்டி நீந்திச் சென்றான். பின்னே பிடிசென்றது. துக்க மயக்கத்தில் இருந்த வாசவதத்தையைக் கீழே நழுவவிடாதபடி இறுகத் தழுவிக் கொண்டு பிடியைக் கவனமாக ஆற்றில் செலுத்தினான் உதயணன். காஞ்சனை பின்புறமாகத் தத்தையைத் தாங்கிக் கொண்டாள். பிடி மெல்லக் கரையேறியது.

நருமதையின் அக் கரையை அடைந்ததும் வயந்தகன் நீரில் நனைந்திருந்த தனது உடலைத் துவட்டிக்கொண்டு பிடிமீது ஏறிக்கொண்டான். வானத்தில் விளங்கிய நட்சத்திரங்களைக் கூர்ந்து நோக்கியபின் அப்போது இரவு எவ்வளவு நேரமாகி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கூறினான் வயந்தகன். பிடியின் நிலையும் அது கடந்த ஆற்றின் அளவும் இவை யாவும் சேர்ந்து, வயந்தகனுக்கு ஓருண்மையைப் புலப்படுத்தின. எப்படியும் பத்திராபதி இன்னும் ஓரிரண்டு காதம் செல்வதற்குள் தங்களைக் கைவிட்டு விடும் என்பதுதான் அந்த உண்மை. நருமதையாற்றிற்கு அப்பால் ஒரு பெரிய பாலைவனம், சற்றுத் தொலைவில் இருந்தது. அந்தப் பாலைநிலம் பயங்கரத்திற்குப் பேர் பெற்றது. அங்கங்கே தோன்றிய பருக்கைக் கற்களின் கரடுமுரடான தோற்றமும் ஒரே மணற் பெருவெளியும் அந்தப் பாலைவனத்திற்கு வந்து விட்டோம் என்பதை வயந்தகனுக்கு அறிவுறுத்தின. அவன் மனத்திற் சில அச்சங்கள் எழுந்தன. ‘சுமந்து வந்த யானை விரைவில் சோர்ந்துவிடும்’ என்பதைத் தவிர, அந்தப் பாலை நில வழியின் பயங்கரமும் வயந்தகனுக்கு நினைவு வந்தது.

கொடுமை, கொலை, கொள்ளை இவைகளுக்கு அந்தப் பாலை நிலவழி இருப்பிடம். அங்கே வசிக்கும் ஆறலை கள்வர் ஈவிரக்கமற்ற கொலைஞர். வழி ஓரமாக அமைந்திருந்த பாழடைந்த துர்க்கை கோயிலில் பதுங்கியிருந்து வழியில் வருவோர் போவோரைக் கொள்ளையடித்துத் துன்புறுத்துவது அவர்கள் வழக்கம். கொல்லப்பட்ட உடல்களைப் பருக்கைக் கற்களால் மூடிவிடுவார்கள். வெட்டுண்ட உடல்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவர். அந்த வரண்டுபோன பாலை நிலத்தைப் போன்றதுதான் அவர்கள் உள்ளமும். கள்ளி, முள்ளி முதலிய பாலைநிலத்து மரங்கள் இடையிடையே வளர்ந்திருந்தன. குளிர்ப் பருவத்திலும் வெப்பக் கொடுமை தாங்க முடியாத இடம் அது. இத்தகைய துன்பங்கள் நிறைந்தது. ஆகையால் பொழுது புலர்வதற்குள் நல்ல இருளிலேயே அதைக் கடந்துவிட வேண்டுமென்று கூறினான் வயந்தகன். அதைக் கேட்ட உதயணன் பத்திராபதியை முன்னிலும் விரைவாக முடுக்கினான். பிடி காரெனக் கடிது சென்றது. அதன் அசுர வேகத்தில் வயந்தகன் கையிலிருந்த கோடபதி என்ற யாழ் கீழே வீழ்ந்து மூங்கிற் புதர் ஒன்றிலே சிக்கிக் கொண்டது. யாழ் விழுந்ததை வயந்தகன் உதயணனிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே, பிடி நூறு விற்கிடை தூரம் முன்னால் கடந்து சென்றுவிட்டது. பிரம சுந்தரமுனிவரால் தனக்கு அளிக்கப்பட்ட அற்புதமான தெய்வீக யாழாகிய கோடபதியை உதயணன் இழந்துவிட்டான்.

யாழைத் தவறவிட்ட இடத்தைக் கடந்து மிக்க தொலைவு வந்து விட்டதை அறிந்த உதயணன், “தந்த தெய்வம்தானே தரும்! அதற்காக மீண்டும் வழியில் திரும்ப முடியாது” என்றுரைத்துவிட்டுத் தயங்காமல் மேலே பத்திராபதியைச் செலுத்தினான். கோடபதிதான் உதயணனுக்குத் தெய்வ யானையைப் பணிபுரியச் செய்தது. நளகிரியின் மதத்தை அடக்கிப் பிரச்சோதனனிடம் நன்மதிப்புப் பெறவும், தத்தைக்கு யாழ் கற்பித்துக் காதல் கொள்ளவும் செய்தது. அந்த அரும் பொருள் கெட்டுப்போய் விட்டது. ஆனாலும் உதயணன் மனங் கலங்கினானில்லை. சிறு துயருக்கு வருந்திப் பெருந் துயரத்திற்கு நடுவே அகப்பட்டுக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே மனந்தேறி மேலே சென்றனர். வேகத்தில் விளைந்த சோகங்களை வேகத்தாலேயே மறக்க முயன்றான் உதயணன்.