வேங்கடம் முதல் குமரி வரை 4/001-032

விக்கிமூலம் இலிருந்து
வேங்கடம் முதல் குமரி வரை
- பொருநைத் தரறையிலே -
1. பழநி ஆண்டவன்

'மணங் கமழ் தெய்வத்து இளநலம்' காட்டுபவன் முருகன் என்பார் நக்கீரர். இளைஞனாக, அழகனாக மட்டும் இருப்பவன் இல்லை முருகன். சிறந்த அறிஞனாசுவும் இருக்கிறான். ஞானப் பழமாக அன்னைக்கும், ஞான குருவாகத் தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய வரலாறுகள் கூறுகின்றன? ஞானப் பழமாக அவன் நிற்கிற நிலைக்கு ஒரு நல்ல கதை. அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் கயிலை மலையிலே அமர்ந்திருக்கிறார்கள் ஒரு நாள். அங்கு வந்து சேருகிறார், கலகப் பிரியரான நாரதர். வந்தவர் சும்மா வரவில்லை . கையில் ஒரு மாங்கனியையுமே கொண்டு வருகிறார். அதனை ஐயனிடம் கொடுத்து அவன்தன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம். அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்கவேண்டும் ஒரு நன்மை. நாரதர் தந்த கனியைச் சிவபிரான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஓர் ஆசை, மக்கள் இருவருக்கும் கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு களிக்கலாமே என்று. அந்த எண்ணம் தோன்றிய உடனேயே, மக்கள் இருவரும்-விநாயகரும் முருகனும்தான் வந்து சேருகின்றனர். அதற்குள் நினைக்கிறார் சிவபெருமான், அக்கனி மூலம் ஒரு பரீட்சையே நடத்தலாமே என்று. உங்கள் இருவருக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே இக்கனி என்கிறார் தம் பிள்ளைகளிடம்.

இந்தப் போட்டியில் மூஷிகவாகனனான விநாயகர் வெற்றி பெறுவது ஏது என்று நினைக்கிறான் முருகன். தன் மயில் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'ஜம்' என்று வான வீதியிலே புறப்பட்டு விடுகிறான் அவன். பிள்ளையார், நிறைந்த ஞானவான் அல்லவா? அவர் தம் வாகனத்தில் எல்லாம் ஏறவில்லை . மிக அமைதியாகக் காலால் நடந்தே அன்னையையும் அத்தனையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றுகிறார். மாங்கனிக்குக் கைநீட்டுகிறார். 'என்னடா? உலகம் சுற்றியாகி விட்டதா? என்று தந்தை கேட்டால், 'உலகம் எல்லாம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே! உங்களைச் சுற்றினால் உலகத்தையே சுற்றியதாகாதா? என்று எதிர்க் கேள்வி போடுகிறார். இந்தப் பதிலை எதிர்க்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார் அத்தனும், போட்டியில் வெற்றி பெற்ற மகனாம் விநாயகருக்கு. உலகம் எல்லாம் சுற்றி அலுத்து வந்த முருகன் விஷயம் அறிகிறான். 'அடே! இந்த அண்ணன் கனியைத் தன் மூளையை உபயோகித்து அல்லவா பெற்றுவிட்டான்? நாமும் இன்று முதல் ஞானவானாகவே விளங்க வேண்டும்' என்று நினைக்கிறான்.

ஞானம் பெறத் தடையாயிருக்கும் தனது உடைமைகளை எல்லாம் துறக்கிறான். கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு வெளியேறிவிடுகிறான். தாயாம் பார்வதிக்கோ தன் பிள்ளை இளவயதிலேயே காவி உடுத்திக் கோவணாண்டியாகப் போவதில் விருப்பம் இல்லை. அதனால் பிள்ளையைப் பார்த்து. 'அப்பா! நீயே ஞானப் பழமாக இருக்கும் போது நாங்கள் வேறு உனக்குப் பழம் கொடுக்க வேண்டுமா? என்று கூறிச் சமாதானம் செய்கிறாள். முன் வைத்த காலைப் பின் வாங்காத ஞானப்பழமான முருகன் பழநி மலை மீது நின்று விடுகிறார். பழம் நீ என்பது தான் பழநி என்று ஆகியிருக்கிறது என்பது புராண வரலாறு, இல்லை , இந்த இடம் பொதினி என்று இருந்திருக்கிறது. பொதினி என்ற பதமே மருவிப் பழநி என்று ஆயிற்று என்று கூறுவர் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர்கள். அதற்கு அகநானூற்றில் உள்ள,


வண்டு படத் துதைந்த கண்ணி யொண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கன்

என்னும் மாமூலனார் பாட்டையும் ஆதாரங்காட்டுவர். பொதினியாயிருக்கட்டும், இல்லை பழம் நீ எனவே இருக்கட்டும். பழநி ஒரு பழமையான தலம். அங்கே கோயில் கொண்டிருப்பவன் முருகன். அந்தப் பழநி ஆண்டவன் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

பழநி, திண்டுக்கல்-பொள்ளாச்சி லயனில் திண்டுக்கல்லுக்கு வட மேற்கே 36 மைல் தொலைவில் இருக்கிறது. ரயிலிலே செல்லலாம். கார் வசதியுடையவர்கள் காரிலும் செல்லலாம். மதுரையிலிருந்து, திண்டுக்கல்லிலிருந்து, கோவையிலிருந்து எல்லாம் பஸ் வேறே செல்கிறது. பழநியில் தங்குவதற்கும் நல்ல வசதிகள் நிறைய உண்டு, தேவஸ்தானத்தார் கட்டியிருக்கும் சத்திரம் விசாலமானது, வசதி அதிகம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்று பர்லாங்கு தூரத்தில் சத்திரம். அங்கிருந்து ஐந்து பர்லாங்கு தூரத்தில் அடிவாரம். அதுவரை வண்டியில் செல்லலாம். முன்னமேயே சொல்லியிருக்கிறேன், பழநி ஆண்டவன் மலை மேல் ஏறி நிற்கிறான் என்று. ஆதலால் மலை ஏறியே அவன் கோயில் செல்ல வேண்டும்.

மலை ஏறுமுன் மலையையே வலம் வருதல் வேண்டும் கிரிச்சுற்று என்பர் இதனை. இது அண்ணாமலையில் சுற்றியது போல் அவ்வளவு அதிக தூரம் இல்லை. ஒரு மைலுக்குக் குறைவாகவே இருக்கும். பழனிமலை சுமார் 450 அடி உயரமே உள்ளது. அதன் மீது ஏற 660 படிகள் நல்ல வசதியாக விசாலமான மண்டபங்களுடன் கட்டப் பட்டிருக்கின்றன. ஏறுவது சிரமமாக இராது. என்றாலும் வயோதிகர்களும், பெண்களும் சிரமமில்லாது ஏற யானைப் பாதை என்று ஒன்று இருக்கிறது. கொஞ்சம் அதிக தூரம் வளைந்து செல்லும். அதன் வழி ஏறினால் கொஞ்சமும் சிரமம் தோன்றாது. இப்பொழுது மலைக்கு செல்வதற்கு இழு மோட்டார் வண்டிப் பாதை அமைத்திருக்கிறார்கள். காசைக் கொடுத்து ஏறி அமர்ந்தால் சிரமமில்லாது மலை சேர்ந்து விடலாம். என்றாலும் படிக்கட்டுகளின் வழியாக ஏறுவதே முறை. வழியில் உள்ள இடும்பன் கோயில், குராவடிவேலவர் சந்நிதி எல்லாம் கண்டு தொழுது மேற்செல்லுதல் கூடும். அடிவாரத்தில் ஒரு பிள்ளையார். அவரை வணங்கியே மலை ஏறுவோம். முதலிலேயே ஒரு விசாலமான மண்டபம். கோலை பி.எஸ்.ஜி. கங்கா நாயுடு கட்டியது. அந்த மண்டபத்தில் இரண்டு மூன்று நல்ல சிலா வடிவங்கள்.

கண்ணிடந்து அப்பும் கண்ணப்பரும் காளத்திநாதரும் ஒரு தூணிலே, மாமயிலேறி விளையாடும் முருகன் ஒரு தூணில். இன்னும் தேவயானை திருமணம் என்னும் சிலைகள் உண்டு. இவை நிரம்பப் பழைய காலத்தியவை அல்ல என்றாலும், பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை.

இனி மலை ஏறலாம். பாதிப்படி ஏறியபின் வேள் ஆவி மரபில் வந்த வையாபுரிக் கோமான் உருவச் சிலை தாங்கிய மண்டபம் வரும், அங்கிருந்து பழநி நகரையும் மலையையும் அடுத்துள்ள வையாபுரிக் குளத்தையும் காணலாம். நல்ல அழகான காட்சி. மேலும் சில படிகள் ஏறினால் இடும்பன் கோயிலும் குரா அடி, வேலவர் கோயிலும் வரும். இடும்பன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

தமிழ் முனிவனான அகத்தியருக்கு ஓர் ஆசை, தாம் கையிலையிலே பூசித்த சிவகிரி, சக்திகிரி என்னும் குன்றுகளையும் தென் திசைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று. இது அவரால் முடிகிற காரியமாக இல்லை. அவரை வணங்க வந்த இடும்பாசுரன் என்பவனிடம் தம் விருப்பத்தை நிறைவேற்றச் சொல்கிறார்.

அவனோ மிக்க பலசாலி. இரண்டு குன்றுகளையுமே பேர்த்தெடுத்து அவற்றை ஒரு காவு தடியில் கோத்து, தன் தோளில் சுமந்து தென் திசை நோக்கி வருகிறான். தென் திசை வந்தவன் களைப்பாறக் காவு தடியை இறக்கி வைக்கிறான். இளைப்பாறிய பின் திரும்பவும் தூக்கினால் காவு தடியைத் தூக்க முடியவில்லை. மலைகளைப் பெயர்க்க முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபோது இந்த மலைகளில் ஒன்றின்பேரில் குராமர நிழலிலே மழலை முதிர்ந்த கனிவாயுடன் ஒரு சிறுவன் நிற்பதைக் காண்கிறான் இடும்பன்.

அவனாலேயே தன் காவு தடியைத் தூக்க முடியவில்லை என்று எண்ணிய இடும்பன் அவனை மலையைவிட்டு இறங்கி ஓடிப்போகச் சொல்கிறான், அவன் மறுக்க, இவன் அவன்மேல் பாய்கிறான். ஆனால் அடியற்ற மரமாக அங்கேயே விழுகிறான். இடும்பன் மனைவி ஓடி வந்து கதறுகிறாள், அகஸ்தியரும் வந்து சேருகிறார். இளங்குமரனோ அதுவே இருப்பிடம் என்று கூறுகிறான். அன்று முதல் இடும்பனைப்போல் யார் காவு தடி. தூக்கிவருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பதாகக் குமான் வாக்களிக்கிறான். இடும்பன் எடுத்துவந்த சிவகிரி, சக்திகிரியே இன்று பழநிமலை, இடும்பன் மலையென நிற்கிறது அங்கே. காவு தடிபிலிருந்தே காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இப்படித்தான் இடும்பன், அருள் பெற்றுப் பழநி மலையிலே பாதி வழியிலே நிற்கிறான். குராவடி வேலவருமே அங்கே கோயில் கொள்கிறார். இவர்களையெல்லாம் வணங்கி விட்டு மேலும் படி ஏறினால் மலைமேல் விரிந்திருக்கும் விசாலயான பிராகாரத்துக்கு வந்து சேருவோம். மலை மேல் கட்டிய கோயில் என்றாலும் பெரிய கோவில்தான். தென்றல் அடிவருட அக்கோயிலுள் மேற்கு நோக்கியவனாகப் பழநி ஆண்டவர் நிற்கிறார். மில்காரர்கள் கட்டியிருக்கும் வித்யாதர மண்டடத்தைக் கடந்தே கோயிலுள் செல்லவேணும். அங்குள்ள மணி மண்டபத்தைக் கடந்துதான் மகா மண்டபத்துக்கு வந்து சேர வேணும். அங்கு இடப்பக்கத்தில் சுப்பிரமணிய விநாயகர் சிலை ஒன்று ஐம்பது வருஷங்களுக்கு முன் நகரத்தார்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அங்கு விநாயகருக்கு வணக்கம் செலுத்திவிட்டே ராஜகோபுரவாயிலைக் கடந்து செல்ல வேண்டும், கோபுரம் 63 அடி உயரமே உள்ள சின்னக்கோபுரம்தான். இனத அடுத்துத்தான் மாரவேள் மண்டபம். இதனை 34 கற்றூண்கள் தாங்கி நிற்கும். இதை அடுத்தே தட்சிணாமூர்த்திக்கும் மலைக் கொழுந்தீசருக்கும் மலைநாச்சியம்மைக்கும் தனித்தனி சந்நிதிகள்.

இதைக் கடந்தே நவரங்க மண்டபம். இதே மண்டபத்தின் வடபக்கத்திலேதான் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே விழாக் காலங்களில் எழுந்தருளும் சின்னக் குமாரரும் இருக்கிறார். இங்குள்ள சண்முகர் வெளியில் எழுந்தருளுவதே இல்லை. இந்த மண்டபத்தையெல்லாம் கடந்தே அர்த்த மண்டபம் வரவேணும், அங்கிருந்தே கருவறையில் தண்டேந்திய கையனாய் நிற்கும் தண்டாயுதபாணியைத் தொழவேண்டும். தண்டாயுத பாணியின் முகத்தில் ஒரு கருணா விலாசம். அருள் கலந்த திருநோக்கு, புன்னகை தவழும் உதடுகள், மதாணி விளங்கும் மார்பு. ஒரு கையை அரையில் வைத்து ஒரு கையில் தண்டேந்தி நிற்கும் நேர்த்தியெல்லாம் கண்குளிரக் கண்டு மகிழலாம். இவர் அபிஷேகப் பிரியர். காலை உதயமானது முதல் இரவு எட்டு மணி வரையில் அபிஷேகங்கள் நடந்து கொண்டிருக்கும். பன்னீர், சந்தனம், திருநீறு என்று மாத்திரம் அல்ல. நல்ல பஞ்சாமிர்த அபிமேகம் அவருக்குப் பிரீதியானது. அவருக்குப் பிரீதியோ என்னவோ பக்தர்களுக்குப் பிரீதியானது. அந்த மூர்த்தி போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராயிற்றே, அவர் சிலை வடிவில் இருந்தாலும் அது சிலையல்ல. ஒன்பது வகை மருந்துச் சரக்குகளால் ஆகிய நவ பாஷாணத்தை ரஸக் கட்டாய்த் திரட்டிச் செய்யப்பட்டவராயிற்றே. அவர் மேனியில் வழிந்து வரும் எப்பொருளுமே மக்களது நோய்களையெல்லாம் தீர்க்கவல்லது. உயிர்களின் பிறவிப் பிணியையே நீக்கவல்ல ஆண்டவன் உடற்பிணி தீர்ப்பது என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமே இல்லைதானே?

இந்த ஆண்டவனைப் பற்றி ஓர் ஐயம் அன்பர்களுக்கு. இவன் மொட்டை ஆண்டியா, சடை ஆண்டியா என்று. சாதாரணமாக வெளியிட்டிருக்கும் படங்கள் எல்லாம் இவனைத் தலையை முண்டிதம் செய்து கொண்ட மொட்டையாண்டியாகத்தான் காட்டுகின்றன. அது காரணமாகவே அந்தப் படங்களைப் பூசையில் வைத்துக்கொள்ளப் பலர் துணிவதில்லை. அவன் மொட்டையாண்டியாயிற்றே. நம்மையும் மொட்டை அடித்து விடுவானோ என்று. ஆனால் மூர்த்தியின் வடிவை அபிஷேக காலத்தில் கூர்ந்து நோக்குவோர்க்குத் தெரியும். அவன் மொட்டை ஆண்டி அல்ல சடையாண்டியே என்று. மேலும் அவனை வணங்குபவர், அவனிடம் பிராத்தனை செய்து கொள்பவர் எல்லா நலங்களும் பெறுகிறார்கள் என்பதும் கண்கூடு. தமிழ்நாட்டு அறிஞன் அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான். 'மக்கள் இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால் இவ்வுலகத்தில் தாம் உடைமை என்று கருதுகிற பொருள்களில் உள்ள ஆசையை விட்டுவிட வேண்டும்; அப்படி ஆசையை விடவிடத்தான் பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டு இயற்பால பல.

என்பதே அவர் சொன்ன அருமையான குறள். உண்மைதானே? உலக மக்களுக்கு எல்லா நன்மைப் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன் அந்த உலகத்து உடைமைகளிலேயே பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும்? ஆதலால்தான் அவன் தன் உடைமைகளை யெல்லாம் துறக்கிறான். அவன் துறவு கோலம் பூணுவது மக்களுக்கு அவர்கள் வேண்டும் பேறுகளையெல்லாம் அளிப்பதற்காகவே. அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதினாலே தான் நாம் பெறற்கரிய பேறுகனை எல்லாம் பெற முடிகிறது. அவன் துறலியானது நம்மையெல்லாம் துறவிகளாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக்கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று, துறவு என்றெல்லாம் உண்டா?

இந்தப் பழநி ஆண்டவர் வழிபாடு வேறொரு வகையில் சிறப்புடையதும் ஆகும். இங்கு வருவார் தொகையில் தமிழர்களைவிட அதிகம் மலையாள நாட்டினரே. மேலும் இந்துக்களே அன்றி முகம்மதியர்களும் குடும்பத்துடன் வந்து சந்நிதிக்குப் பின்புறத்தில் சந்தனக் காப்பிட்டுத் தூபம் காட்டி பாத்தியா ஓதி வணங்கிச் செல்கின்றனர். இப்படி எல்லாம் சர்வ சமய சமரசம் வளர்ப்பவனாகப் பழனி ஆண்டவன் அங்கு நின்று அருள் புரிகிறான் என்றால் அது போற்றுதற்குரியதுதானே? பழனி ஆண்டவருக்கு மாதம் தோறும் திருவிழாக்களும் உண்டு. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் முதலிய விழாக்களில் எல்லாம் திருத்தேர் - சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுத் தெருவீதியில் உலா வரும். தங்கத் தேர் ஒன்று ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று மலைமீது உள்ள பிராகாரத்திலேயே உலா வரும்.

எல்லாம் சரிதான், நக்கீரர் பாடிய அந்தத் திரு முருகாற்றுப் படையில் வரும் ஆவினன் குடிதான் பழநி என்பார்களே அதைப்பற்றி ஒன்றுமே கூறவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள். அந்த ஆவினன் குடிக்கோயில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. இதுவே ஆதி கோயில். நக்கீரரால் மாத்திரமல்ல, ஒளவையாராலும் சிறப்பித்துப்பாடப் பெற்றது. ஒளவையார் காலத்தில் இதனைச் சித்தன் வாழ்வு என்று அழைத்திருக்கிறார்கள்.

நல்லம்பர் நல்லகுடி
உடைத்து; சித்தன் வாழ்வு
இல்லம் தொறும் மூன்று
எரி உ.டைத்து; - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன்
வழிவந்த பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்

என்று நல்ல தமிழ்ப் பாட்டிலேயே அல்லவா இந்தச் சித்தன் வாழ்வு இடம் பெற்று விட்டது? திருவாவினன் குடிக் கோவிலிலேதான், திருமகள், காமதேனு, சூரியன், நிலமகள், அக்னி முதலிய ஐவரும் தொழுது பேறு பெற்றிருக்கிறார்கள், ஐவருக்கும் கற்சிலைகள் இன்னும் இருக்கின்றன கோயிலில், இங்குள்ள மூர்த்தி குழந்தை வேலாயுதசாமி. இக்கோயில் ஐம்பது வருஷங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழநி ஆண்டவனைப் பாடிய பெருமக்களுக்குள்ளே மிகச் சிறப்பு வாய்ந்தவர் அருணகிரியார் தான்.

பழனம் உழவர் கொழுவில் எழுது
பழப் பழநி அமர்வோனே.

என்று மலைமேல் உள்ள ஆண்டவனையும்,

ஆவல் கொண்டுவிறாலே சிராடவே
கோமளம் பலசூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

என்று ஆவினன்குடி மக்களையும் பாடி மகிழ்ந்திருக்கிறார். பழநியைப் பற்றிக் கந்தர் அவங்காரத்திலும் ஒரு நல்ல பாட்டுப் பாடி இருக்கிறார் அருணகிரியார்.

படிக்கின்றிலை பழநித் திருநாமம்
படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை
மூசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம்
மேற்கொள விம்மி, விம்மி,
நடிக்கின்றிலை நெஞ்சமே
தஞ்சம் எது? நமக்கு இனியே.

என்ற பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பரவலாம்

என்ன, இங்கு சிற்பச் சிறப்புகள் ஒன்றுமே இல்லையா, என்று நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. பழங்காலத்துச் சிற்பங்கள் அதிகம் இல்லைதான் என்றாலும், ஊருக்கு மேல்புறமாக ஓடும் சண்முக நதிக்கரையிலே பழநிக்கு வடக்கே மூன்று கல் தொலைவில் ஒரு பெரிய தோப்பினிடையே பெரியாவுடையார் கோயில் என்று ஒன்று இருக்கிறது அதனைப் பழநியில் உள்ளவர்கள் பிரியாவுடையார் கோயில் என்பார்கள். சிறிய கோயிலே என்றாலும் சமீபகாலத்தில் உருவான நல்ல கற்சிலைகள்

கிருஷ்ணாபுரம்

பல இருக்கின்றன. அவற்றில் தட்சிணாமூர்த்தி மிகமிக அழகு வாய்ந்தவர். அவகாசம் உடையவர்கள் வண்டி வைத்துக் கொண்டு அங்கு சென்று கண்டு தொழுது திரும்பலாம்.

கோயில் பழைய கோயில் என்று அங்குள்ள 16 கல்வெட்டுகள் கூறும். இது தவிர, பழநியின் சுற்றுக் கோயில்களும் பல உண்டு, பட்டத்து விநாயகர், வேணுகோபாலப் பெருமாள், சங்கிலி பரமேசுவரர், வேளீசுவரர் எல்லோரும் இருக்கிறார்கள் இங்கே. எல்லோருமே ஆண்டவனை மலைமேல் ஏற்றிவிட்டு அவன் கால் நிழலில் ஒதுங்கி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். பழநிமலையில் நல்ல மூலிகைகள் பல கிடைக்கின்றன. அதனாலேயே வைத்தியசாலைகள் பல இவ்வட்டாரத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்த வைத்திய நாதர்களுக்கெல்லாம் மேலான வைத்திய நாதன்தான் மலை மீதே ஏறி நிற்கிறானே! அவனை வணங்கி அருள் பெறுவதை விட உடலுக்கும் உயிருக்கும் வைத்தியம் வேறே செய்து கொள்ள வேண்டுமா என்ன?