வேங்கடம் முதல் குமரி வரை 4/030-032

விக்கிமூலம் இலிருந்து
30. சுசீந்திரம் தாணுமாலயன்

'உலகங்கள் எல்லாவற்றையும் இறைவன் உண்டாக்குகிறான் கொஞ்ச காலம் நிலைபெறச் செய்கிறான்; பின்னர் அவைகளை அழிக்கிறான்; இது அவனுக்கு விளையாட்டு. இந்த விளையாட்டானது காலத்தால் ஒரு தொடர்ச்சியாகவும், இடத்தினால் எங்கும் வியாபித்ததாயும் நடக்கிறது. நம்முடைய செயல் ஒவ்வொன்றும் அந்த விளையாட்டுக்கள் அடங்கியுள்ளளதுதான். அவனே நமக்குத் தலைவன். நமக்குப் புகலிடமும் அவனுடைய சரணங்களே' என்று விளக்கமாகக் கம்பன் ராமாவதாரம் என்னும் பார காவியம் எழுதத் தொடங்கும் முன்னர் பரம்பொருள் வணக்கம் செய்கிறான்.

உலகம் யாவையும்
தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும்
நீக்கலும் நீங்கலா
அலகிலா விளை
யாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே
சரண் நாங்களே.

என்பது அவனது பாட்டு. இதிலிருந்து உலகுக்கு எல்லாம் ஒருவனே இறைவன் என்பதை அறிகிறோம். அவனையே சிருஷ்டித் தொழில் செய்யும் போது பிரமன் என்கிறோம். காத்தல் தொழில் செய்யும்பொழுது விஷ்ணு என்கிறோம்; அழித்தல் செய்யும்பொழுது சிவன் என்கிறோம். இவர்களில் சிவன் விஷ்ணுவாக மாறுவதையும், விஷ்ணு சிவனாக மாறுவதையும் இருவரும் இணைந்து ஒரே கோலத்தில் இருப்பதையும் சில தலங்களில் முன்பே பார்த்திருக்கிறோம். ஆனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் ஒன்றாக இணைந்து நிற்கும் கோவத்தை-சிருஷ்டி திதி, சக்கரம் என்னும் முத்தொழில் செய்பவர்கள் மூவரும் இணைந்து நிற்கிற கோலத்தை நாம் இதுவரையில் காணவில்லை. அந்தத் தாணு, மால், அயன் மூவரும் இணைந்து நிற்கும் கோலத்ைைதக் காண்பதற்குச் சுசீந்திரம் என்ற தலத்துக்குச் செல்ல வேண்டும்.

சுசீந்திரம் செல்ல, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து முதலில் நாகர்கோயில் செல்ல வேணும். அங்கிருந்து கன்யாகுமரி செல்லும் பாதையில் நாகர்கோவிலிலிருந்து மூன்று மைல் சென்றால் சுசீந்திரம் வந்து சேரலாம். கார் வசதி உள்ளவர்கள் காரிலேயே செல்லலாம். இல்லையென்றால் பஸ்ஸிலேயே செல்லலாம். பழையாறு என்ற ஆற்றின் கரையில் இருக்கிறது சுசீந்திரம். ஆற்றின் தென் கரையிலிருந்து முந்நூறு அடி தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் வாயில் செல்லுமுன்பே கோயிலுக்கு உட்புறம் உள்ள தெப்பக் குளத்தைப் பார்க்கலாம். அங்கு இறங்கிக் கால் கைகளையெல்லாம் சுத்தம் செய்து கொள்ளலாம். கையில் காமரா இருந்தால் கோயில் கோபுரத்தையும் குளத்தையும் சேர்த்து ஒரு படம் பிடித்துக் கொள்ளலாம், நல்ல அழகான படமாக அது அமைவதைத்தான் பார்த்திருக்கிறோமே.

கோயில் வாயிலில் நூற்றி முப்பத்தி நான்கு அடி உயரமுள்ள கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கும். இங்கேயுள்ள கோபுரத்தின் முன்னர் உள்ள மண்டபத்தின் மேல் முகப்பில் சுதையால் செய்த சிலைகள் உண்டு. நடுவில் சிவ பெருமான் இடபாரூடராய் தேவியோடு எழுந்தருளியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் மகாவிஷ்ணு கருடாரூடராய்க் காட்சி அளிக்கிறார். இனி மண்டபத்துள் நுழையலாம். இது 132 அடி நீளமும் 32 அடி அகலமும் 24 அடி உயரமும் உள்ள பெரிய மண்டபம், பெரிய பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. தூண்களின் மேல், பாயும் சிங்கங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் மேற்குக்கோடி கூரைக்குக் கீழே பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து தவக்கோலத்தில் இருக்கும் சிலை ஒன்று இருக்கிறது. தேவியர் மூவரும் ஏன் தவம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத் தல வரலாற்றைக் கொஞ்சம் திருப்பவேணும்.

அத்திரி முனிவர் தம் மனைவி அனசூயாதேவியுடன் இங்குள்ள வனத்தில் வாழ்ந்திருக்கிறார். அனசூயை கற்பொழுக்கத்தில் சிறந்தவளாக இருந்திருக்கிறாள். அவளை ஆசிரமத்தில் விட்டு விட்டு அத்திரி இமயமலைக்குத் தலம் செய்யப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இச்சமயத்தில் நாரதர் கலகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இரும்புக் கடலைகளைக் கொண்டு வந்து பார்வதி, லக்ஷிமி, சரஸ்வதி மூவரிடமும் கொடுத்து வேக வைத்துத் தரச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அது இயலாது என்று சொல்லவே அந்த இரும்புக் கடலைகளை அனசூயையிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அந்த அம்மையார், தமது கற்பின் மகிமையால் வேக வைத்துக் கொடுக்கிறார். இதைப் போய் தேவியர் மூவரிடமும் சொல்லிவைக்கிறார் நாரதர், தேவியர் ஏவிய வண்ணமே தேவர்கள் மூவரும் அன சூயையின் கற்பைப் பரிசோதிக்க வருகின்றனர், அத்திரி ஆசிரமத்துக்கு அகதிகளாக வந்தவர்களை உபசரித்து உணவு பரிமாற அனசூயை முனைகிறபோது, தேவர் மூவரும் அவள் பிறந்த மேனியாகவே தங்களுக்கு அன்னம் பரிமாற வேண்டும் என்கின்றனர். அனசூயையோ தன் கற்பின் மகிமையால் தேவர் மூவரையுமே மூன்று குழந்தைகளாக்கி அவர்களுக்குச் சோறூட்டுகிறாள். நாரதர் மூலம் விஷயம் தெரிகிறார்கள் தேவியர் மூவரும். உடனே மூவரும் அனசூயையிடம் வந்து தங்கள் கணவர்கள் சுயரூபம் அடையத் தவம் கிடக்கின்றனர். அனசூயை தேவர் மூவரையும் பழைய உருவங்களைப் பெறும்படி அருளுகிறாள். அவள் வேண்டிக்கொண்டபடியே தேவர் மூவரும் இணைந்து, ஒரே உருவத்தில் அந்தத் தலத்தில் தங்கி விடுகின்றனர், என்பது கதை.

தேவியர் தவம் செய்த காரணத்தைத் தெரிந்த கொள்ள முனைந்த நாம், தாணு. மால், அயன் மூவரும் இணைந்து நிற்கும் காரணத்தையுமே தெரிந்து கொண்டோம். இனி கோயிலுள் நுழையலாம். வாயிலைக் கடந்ததும் ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது இம்மண்டபம் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே மன்மதன், ரதி, அர்ச்சுனன், கர்ணன், முதலியோரது சிற்ப வடிவங்கள் இருக்கின்றன, ஊஞ்சல் மண்டபத்திலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வந்து கிழக்குச் சுற்றுக்குச் சென்றால் அங்கே தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. தெற்குப் பிராகாரமும் கிழக்குப் பிராகாரமும் சந்திக்கும் இடத்தில் ஊட்டுப்புறை இருக்கிறது. தெற்குப் பிராகாரத்தின் ஆரம்பத்தில் வசந்த மண்டபம் உண்டு. அந்தப் பிராகாரத்தில்தான் நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர் முதலியோர் உள்ளனர். தெற்குப் பிராகாரத்தில் மேலக் கோடியில் ஐயனார் சந்நிதி. அதை ஒட்டியே ராமஸ்வாமி கோயில்.

ராமரும் சீதையும் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருக்கிறார்கள். லட்சுமணரும் அனுமாரும் கோயில் வாயிலில் நிற்கின்றனர். இந்த வடக்குப் பிராகாரத்திலே தான் சுப்பிரமணியர், காலபைரவர் எல்லாம். சங்கீதத் தூண்கள் வேறே இருக்கின்றன. இப்பிராகாரத்தின் வடகோடியில் சித்திர சபை. சித்திரசபையில் சுவரை ஒட்டிய பிராகாரத்திலே பெரிய ஆஞ்சநேயர் நிற்கிறார். கிட்டத்தட்ட பதினெட்டு அடி உயரத்தில் சிறந்த சிலை உருவில் கம்பீரமாக நிற்கிறார் அவர். சித்திர சபை ஆறடி உயரம் உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்திரண்டடி சதுரம் உடையது இம்மண்டபம், இங்கு கங்காளநாதர், காளி முதவியோர் கற்சிலைகளாக நிற்கின்றனர். இம்மண்டபத்தில் உள்ள சந்நிதியில் ஒரு கண்ணாடி வைக்கப்படிருக்கிறது. அதுவே நர்த்தன மூர்த்தியாகக் கருதப்படுகிறது.

ஊஞ்சல் மண்டபத்துக்குப் பின்னால் தாணுமாலயன் சந்நிதியை நோக்கி நந்தி இருக்கிறது. பன்னிரண்டு அடி உயரமுள்ள நந்தி சுதையால் அமைக்கப்பட்டதே. சந்தாசாகிபு இந்தப் பக்கம் வந்து இக்கோயிலில் உள்ள சிலைகளைப் பங்கப்படுத்தியபோது, இந் நந்தி அவன் கொடுத்த வைக்கோலைத் தின்று சாணம் போட்டது என்றும், அதன் பின்னரே அவன் சிலைகளை உடைப்பதை
சுசீந்திரம் கோயில் குளம்

நிறுத்தினான் என்றும் கர்ணபரம்பரை கூறுகிறது. நந்திக்குப் பக்கத்திலே கொன்றை மரத்தின் அடியிலே ஒரு லிங்கம். அனசூயையின் வேண்டுகோளுக்கிணங்கி மும்மூர்த்திகளே இங்கே லிங்கவடிவில் இருக்கின்றனர் என்பர். இந்தத் தலத்தின் தல விருட்சமும் கொன்றை மரம்தான்.

கொன்றை அடிநாதர் சந்நிதிக்குப் பக்கத்திலே கருடாழ்வார் சந்நிதி, இவற்றையெல்லாம் தரிசித்த பின்னரே துவஜஸ்தம்ப மண்டபத்தையும் கடந்து தாணுமாலயன் சந்நிதிக்கு வரவேணும், தாணுமாலயன் சந்நிதிக்குத் தென்புறமே விஷ்ணுவின் சந்நிதி, இங்கேதான் இங்குள்ள மண்டபங்களில் எல்லாம் பெரிய செண்பகராமன் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தை முப்பத்திரண்டு தூண்கள் தாங்குகின்றன. அத்தனை தூண்களிலும் அழகு அழகான சிற்பங்கள், செண்பகராமன் மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் எல்லாம் கடந்தே தாணுமாலயனைத் தரிசிக்க வேணும். கருவறையில் தாணுமாலயன் லிங்க வடிவில் இருக்கிறார். திருமஞ்சனக் காலம் தவிர, மற்றைய நேரத்தில் கவசத்தால் மூடப்பட்டேயிருக்கும். இங்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் பூமிக்குள் சென்று கன்னியாகுமரி தீர்த்தத்தில் கலந்து விடுவதாக நம்பிக்கை; இங்குள்ள கருவறையைச் சுற்றியே துர்க்கை, சங்கரநாராயணார் எல்லாம் இருக்கின்றனர்.

பக்கத்திலுள்ள வீரபாண்டியன் மண்டபத்தைக் கடந்தால் மகாவிஷ்ணுவின் சந்நிதிக்கு வருவோம். அவன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறான். எட்டு அடி உயரமுள்ள கம்பீரமான வடிவம். இந்த விஷ்ணு சிவ சந்நிதிகளுக்குப் பின்னுள்ள சுவரில் பள்ளிகொண்ட பெருமாள் வேறே இருக்கிறார். அவரையே அமர புஜங்கப் பெருமாள் என்பர். செண்பக ராமன் மண்டபத்துக்கு வடபுறம் இருக்கும் கோயில்தான் அறம் வளர்த்த அம்மையின் கோயில். இவள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறாள். தாணுமாலயனைத் தரிசிக்கப் பள்ளியறை நாச்சியார் என்ற வேளாள மாது தன் மகளுடன் வந்ததாகவும் அந்தப் பெண்ணைத் தாணுமாலயன் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டதாகவும் அவளையே அறம் வளர்த்தாள் என்னு பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் வரலாறு. ஒவ்வொரு வருஷமும் மாசி மகத்தன்று தாணுமாலயருக்கும் அறம் வளர்த்தாளுக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடக்கிறது.

கோயிலை எல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டோம், இனி வெளியே வரலாம். ஆமாம், இக்கோயிலிலுள்ள மூர்த்தி தாணுமாலயன் ஆயிற்றே. இத்தலம் மட்டும் சுசீந்திரம் என்று பெயர் பெறுவானேன் என்று கேள்வி எழும் நம் உள்ளத்தில், அகலிகை கதை நமக்குத் தெரியும். இந்திரன் கௌதமரின் மனைவியான அகலிகையை விரும்பியதால் கௌதமர் அகலிகையைக் கல்லாகவும், இந்திரன் உடல் முழுவதும் யோனியாகவும் ஆகும்படி சபிக்கிறார். பின்னர் தேவர்கள் பிராத்தித்தபடி தேவேந்திரன் உடல் எல்லாம் கண்களாகும்படி சாபத்தை மாற்றுகிறார். அந்த இந்திரன் இத்தலத்துக்கே வந்து தவம் கிடந்து சாப விமோசனம் அடைகிறான். அவன் உடலும் சுத்திகரிக்கப்பட்டுப் பழைய உருவை அடைகிறான். இந்திரன் சுசி பெற்ற தலம் 'சுசி இந்திரம்' என்ற பெயரோடு வழங்குகிறது.

இங்குள்ள தாணுமாலயனை ஒவ்வொரு இரவும் தேவேந்திரனே பூஜை செய்கிறான் என்று ஒரு நம்பிக்கை. இங்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. ஆனால் பூஜா திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர். அர்த்தஜாம பூஜை அமராபதியால் நடப்பதால் மாலை பூஜை செய்தவர் மறுநாள் காலை கடைதிறக்கக் கூடாது என்பது கட்டளை. இது காரணமாக இங்கு பூஜைக்கு இருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில் கடை திறக்கும்போது 'அகம் கண்டது புறம் கூறேன்' என்று சத்தியம் செய்தே வாயில் திறக்க வேணும் என்பது உத்தரவு. தேவேந்திரன் கட்டளையிட்டபடியே இங்கு தாணுமாலயருக்கு, இக்கோயிலைக் கட்டினான் என்பது கர்ணபரம்பரை.

சேர மன்னர் பலர் இக்கோயிலை விரிவாக்கியிருக்கின்றனர். மண்டபங்கள், கற்சிலைகள் எல்லாம் விஜயநகர நாயக்க மன்னர்களால் மேலும் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும், இத்தலத்தில் தங்கள் புனிதத்தன்மையை நிலை நிறுத்தக் கொதிக்கும் நெய்யில் கை முக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இல் வழக்கத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாங்கூரையாண்ட சுவாதித் திருநாள் ராமவர்ம ராஜாவே நிறுத்தியிருக்கிறார். இச்சுசீந்திரம் தாணுமாலயர் கோயில், திருவாங்கூர் மன்னர் ஆட்சியிலே இருந்து வந்திருக்கிறது. நாஞ்சில் நாடு தமிழ் நாட்டோடு இணைந்த போதுதான் இக்கோயிலும் தமிழகத்தோடு இணைந்திருக்கிறது. அது காரணமாகவே நாமும் இக்கோயிலுக்குச் சென்று, தாணு, மால், அயன் மூவரும் இணைந்த திருக்கோலத்தைக் கண்டு வணங்கும் பேற்றைப் பெறுகிறோம். கோயிலை விட்டு வெளியே வரும்போது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடிய சுசிந்தை மாலைப் பாடலையும் பாடிக் கொண்டே வரலாம்.

திங்கள் உன் கருணை காட்டும் - .
தீக்கண் உன் வெகுளி காட்டும்
கங்கை உன் பெருமை காட்டும்
கடுவும் உன் ஆண்மை காட்டும்
சிங்கம் நுண் இடையைக் காட்டச்
சிறையனம் நடையைக் காட்டும்
மங்கையோர் பாகா! தாணு
மாலயா சுசிந்தை வாழ்வே

என்பது பாடல் பாடலைப் படிக்கப் படிக்கச் சுவையாக இருப்பதில் வியப்பில்லை !