வேங்கடம் முதல் குமரி வரை 5/002-019

விக்கிமூலம் இலிருந்து
2. திருவலத்து வல்லநாதர்

றைவனைத் தேடி மனிதன் செல்கிறானா, இல்லை மனிதனைத் தேடி இறைவன் வருகிறானா என்று ஒரு கேள்வி. உண்மைதான். நம் நாட்டில் தோன்றிய அடியார்கள் பலரும் இறைவனைத் தேடி ஓடி இருக்கிறார்கள். அவன் பாதங்களைக் கட்டிப்பிடித்து, 'சிக்கெனப் பிடித்தேன்: எங்கெழுந்தருளுவதினியே' - என்று கதறியிருக்கிறார்கள்.

இதைப் போலவே இறைவனும் தன்னிடமிருந்து விலகி, பொன்னையும், பொருளையும், மண்ணையும், பெண்ணையும், மக்களையும் மனையையும் நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதனை, சரி அவன் அப்படியே போகட்டும் என்று விட்டுவிடுகிறானா? இல்லை. அப்படி விலகி விலகி ஓடும் மனிதனையும் தொடர்ந்தே ஓடிவந்து அவனுக்கும் அருள் புரிபவனாக இருக்கிறான் இறைவன். அப்படித்தானே பாடினான் பிரான்ஸிஸ், தாம்ஸன் என்ற அறிஞன், 'அருள்வேட்டை' என்ற பாடலிலே. இறைவன் தன்னைவிட்டு விலகி ஓடும் மனிதனை வேட்டை நாயுருவில் துரத்தி வந்து பிடித்து அருள் புரிகிறான் என்பதுதானே அவனது கற்பனை. இதே கற்பனையை இந்த தாம்ஸனுக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னே தமிழ் நாட்டில் தோன்றிய அப்பர் பெருமான்,

சொல்லாதன எல்லாம் சொல்லி
அடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்

என்றுதானே பூந்துருத்தி புஷ்பவன நாதரைப் பாராட்டிப் பாடியிருக்கிறார். இந்தச் செய்தி, வரலாறு எல்லாம் எனக்கு வட ஆர்க்காட்டில் உள்ள திருவலம் என்னும் தலத்திற்குச் சென்றிருந்தபோது ஞாபகத்துக்கு வந்தது. அத்தலத்தைப் பற்றிய வரலாறு இதுதான்:

அன்றொரு நாள் நாரதர் ஒரு கனியைக் கொண்டு வந்து சிவபிரானிடம் கொடுக்கிறார். அந்தச் சமயத்தில் உமை யுடன் புதல்வர் இருவருமே வருகிறார்கள். இருப்பது ஒரு கனி. அதை யாருக்குக் கொடுப்பது என்பது பிரச்சனை இப்போது.

இப்பிரச்சனைக்கு முடிவுகாண சிவபெருமான் மக்களுக்குள்ளே ஒரு போட்டியை ஏற்படுத்துகிறார். இந்த அகண்ட அண்டம் முழுவதையும் யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களே கனியைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறார். சரி என்று போட்டியில் முனைகிறார்கள் இருவரும். முருகன் நினைக்கிறான், வெற்றி நமக்குத் தான் என்று. தன் மயில் மீது ஏறிக்கொண்டு ககன வீதியில் புறப்பட்டு விடுகிறான்.

ஆனால் மூத்த பிள்ளை பிள்ளையாரோ தன் வாகனமான மூஞ்சூறுவைக் கூடத் தேடவில்லை. விறு விறு என்று தன் அன்னையையும் அத்தனையுமே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறார். கனிக்கு கையை நீட்டுகிறார். 'என்னடா? அண்டங்களை எல்லாம் சுற்றியாகி விட்டதா?' என்று தந்தை கேட்கிறார். இதற்குச் சளைக்கவில்லை அந்தப் பிள்ளையார். 'அண்டங்கள் எல்லாம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே! உங்களைச் சுற்றி வந்தால் இந்த அண்டங்களையே சுற்றிய தாகாதோ?' என்று எதிர்வாதம் செய்கிறார்.

அத்தனும் வேறு வழியில்லாமல் கனியை அந்த மூத்த பிள்ளையிடமே கொடுத்து விடுகிறார். ஆனால் ஓடி ஆடி அண்டங்களை எல்லாம் சுற்றி வந்து முருகன் ஏமாந்து போகிறார். அதனாலேயே கோபித்துக் கொண்டு ஆண்டி வேடத்தில் போய் விடுகிறார். சரி இந்த முருகன் சென்று நிற்கிற இடம் பழநி என்பதை அறிவோம். அன்று வெற்றி பெற்ற விநாயகர் எங்கிருக்கிறார் என்று கேட்கத் தோன்றுமல்லவா. இதற்கு தமிழ் நாட்டில் உள்ள தல வரலாறுகள் எல்லாம் உதவி செய்யவில்லை.

கொம்பனைய வன்னி
கொழுநன் குறுகமே
வம்புனைய மாங்கனியை
நாறையூர் - நம்பனையே
தன்னை வலம் செய்து கொளும்
தாழ் தடக்கையான்

என்று நம்பியாண்டார் நம்பி பாடுவதால் இக்கதை நித்யத்வம் பெற்று விடுகிறது. இப்படி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் நான் அந்தத் திருவலம் என்னும் தலத்திற்குச் சென்றேன். அங்கு வலம் வந்த விநாயகரைக் கண்டேன். அங்குள்ள மக்கள், அன்று இறைவனை வலம் வந்த விநாயகர் அங்கு தங்கியிருப்பதால்தானே, அத்தலத்திற்கே திருவலம் என்று பெயர் வந்திருக்கிறது என்று கூறுவதையும் கேட்டேன்.

இப்படி விநாயகரே இறைவனைத்தேடி, அவரை வலம் வந்து அருள் பெற்ற தலம்தான் திருவலம் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தபோது அந்தக் - கோயில் வாயிலில் உள்ள நந்தி மற்ற கோயில்களில் இருப்பதைப் போல இறைவனை நோக்கி நிற்காமல் அவர் இருக்கும் திசையை விட்டுத் திரும்பி கிழக்கு நோக்கி ஓடுங்கோலத்தில் இருப்பதையும் கண்டேன்.

தல வரலாற்றைப் புரட்டினால் ஏதோ கஞ்சாசுரனை விரட்டிக் கொண்டு ஓடுகிறது. நந்தி என்று கதை சொன்னாலும் எனக்கென்னவோ பசுவாகிய உயிரின் பதியாகிய இறைவனை விட்டு விலகி ஓடும் நிலையைத் தான் இந்த நந்தி குறிப்பிடுகிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆம், தாம்ஸன், அப்பர் போன்றவர்கள் எல்லாம் விளக்கிய உண்மைக்கே உருவம் கொடுத்து நிறுத்தியது போல் இருந்தது.

இந்தத் திருவலம் ஒரு சிற்றூர். சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பெரு வழியில், சென்னையிலிருந்து - எழுபத்தி ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. ஊரை அடுத்து பொன்னை என்னும் நீவாநதி ஓடுகிறது. அந்த ஆற்றைக் கடக்க ஒரு பெரிய பாலம் ஒன்றும் கட்டியிருக்கிறார்கள். இந்தப் பாலம் முழுவதும் உருக்குச்சட்டத்தால் கட்டி ஈயவெள்ளை வர்ணமும் அடித்திருப்பதால் சினிமாப்படம் பிடிப்பவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

  • பல படங்களில் இப்பாலத்தைப் : பார்த்துக் - களித்திருக்கிறோம். இந்தப் பாலத்தைப் படம் பிடித்த கலைஞர்கள் எல்லாம் பாலத்தோடு நின்று விட்டார்களே ஒழிய, அதற்கு மேலும் நடந்து பாலத்திற்கு மேற்கே ஒன்றிரண்டு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கோயிலுக்குச் சென்றதாகத் தெரியவில்லை. 1958 - ல் நான் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கு பல பாகங்களில் புதர் மண்டிக்கிடந்தது. பல பாகங்கள் இருட்டடித்தும் கிடந்தது. நாலு வருஷம் கழித்து நான் அங்கு சென்றிருந்த போது, கோயில் புத்தம் புதிதாய் கட்டியது போல் புதுமையுற்றுத் திகழ்கிறது.

இவ்வளவு சிறப்பாக இத்திருப்பணியைச் செய்தவர் யார் என்று விசாரித்தபோது, அங்குள்ள அன்பர்கள், என்னை கோவில் பக்கத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ராஜராஜேஸ்வரிக்கும் ஒரு சிறு கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அக்கோயில் பக்கத்தில் ஒரு சிறு குடிலில் ஒரு சாமியார் இருந்தார். அவர் கௌபீனம் ஒன்றை மட்டும் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரது பக்கத்தில் வில்வ இலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஓர் உடைந்த சட்டியில் திருநீறும் இருந்தது. எண்ணற்ற மக்கள் அங்கு குழுமியிருந்தனர்.

எல்லோரும் அங்குள்ள சாமியார் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தனர். விழுந்தவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் வில்வ தளமும் விபூதியும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் அவர்களும் ஒரு நயாபைசா முதல் அவர்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வைத்து வணங்கிக் கொண்டிருந்தனர். அப்படி வணங்கி வில்வதளம் பெற்றுச் செல்பவர்களுக்கு எல்லாம் அவர்களைப் பீடித்திருந்த வியாதி நீங்குகிறது. இப்படி தீராத நோய் தீர்த்தருள வல்லானாக அச்சாமியார் அந்தத் திருவலம் என்னும் தலத்தில் வாழ்கிறார். பைசா பைசாவாக அவர் சேர்த்த தொகையை வைத்தே இக்கோயில் திருப்பணி நிறைவேறி இருக்கிறது. .

இன்றுவரை ஐம்பதினாயிரத்திற்கும் மேல் திருப்பணிக்குச் செலவாகியிருக்கிறது, என்று அறிந்த போது அப்படியே மெய்சிலிர்த்தது. வல்லநாதர் இப்படி ஒரு சாமியார் வடிவில் அல்லவா மக்களைத் தொடர்ந்து வந்து அருள் புரிகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. சாமியாரோ மௌனி. அவரை சிவானந்த மௌன சுவாமிகள் என்று மக்கள் அழைக்கிறார்கள்.

கோயில் பிராகாரம், கோபுரம், பாண்டங்கள் எல்லாம் நன்றாய் வர்ணம் தீட்டப்பட்டிருக்கின்றன. மின்சார விளக்குகள் போடப்பட்டிருக்கின்றன. கோயிலுள் நுழைகிற போதே, உள்ளத்தில் ஓர் எழுச்சி உண்டாகிறது.

முன் வாசல் கோபுரம் தெற்கு நோக்கிய வாசலில் இருக்கிறது. அதைக் கடந்து கொஞ்சம் தாழ்ந்த இடத்தில் இறங்கியே கோயிலுக்குள் செல்ல வேணும். அந்தப் பாதையிலேயே வலப்பக்கம் ஒரு சிறுகுளம். இடப் பக்கம்தான் புதிதாகக் கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரியின் சந்நிதி, அங்கெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டே. இடைநிலைக் கோபுரத்தைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேணும்.

அங்கு வலப் புறத்திலேதான் வலம் வந்த விநாயகர் கோயில் கொண்டிருக்கிறார். அவரை வரசித்தி விநாயகர் என்றே அழைக்கின்றனர். அவரை வணங்கிவிட்டே மேற்புறமாக நகரவேணும். அந்த மேல் பிராகாரத்தில்தான் ஒரு சிறு கோயிலும் பக்கத்தில் வில்வமரமும் இருக்கிறது. இந்த வில்வமரத் தழைகள்தான் இன்று சிவானந்த மௌன சாமியின் பிரசாதமாக மாறிக் கொண்டிருக்கிறது. இங்குள்ள கோயிலிலேதான் ஆதி வில்வவரைநாதர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் சந்நிதியிலே பவள மல்லிகை ஒன்று பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னும் இதே சந்நிதியில் பெரிய கோயிலை ஒட்டி ஒரு பலq. பலாவில் இரண்டு வகை. ஒன்று வேரிலேயே! பழங்களை உதிர்க்கும். மற்றொன்று கிளைகளில் பழங்களைத் தரும். இந்தப் பலா கிளைகளிலும் வேரிலுமே பழங்களைக் காய்த்துக் கொண்டிருக்கிறது. பழம் என்றால் ஒன்றிரண்டு அல்ல. ஏதோ கொடி முந்திரிப்பழம் போல கொத்து கொத்தாய், பலாப் பழங்களை ஏந்தி நிற்கிறது. எண்ணற்ற பழங்கள் இருப்பதால் எல்லாம் சிறிய அளவிலேயே இருக்கின்றன.

இங்குள்ள வில்வநாதர் சந்நிதிக்கு மேற்பக்கம் தான் நூற்றுக்கால் மண்டபம், அதற்கு வடபுறமே வல்லாம்பிகை கோயில். இங்குள்ள வல்லாம்பிகையே தனுஷ்மத்ஸ்யாம்பாள் என்கின்றனர். அந்த வல்லாம்பிகையையும் வணங்கிவிட்டு பாதாள கோயிலை வலம் வந்து கீழ்புறம் உள்ள வாயில் வழியாக நுழைந்துதான் வல்லநாதரை தரிசிக்க வேணும்! இந்த வாயிலிலேதான் நந்தி கிழக்கு நோக்கிய வண்ணம் படுத்திருக்கிறது. கருவறை யிலே வல்லநாதர் லிங்க வடிவிலே கோயில் கொண்டிருக் கிறார். இவரையே நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் பாடியிருக்கிறார்.

சார்ந்தவர்க் கின்பங்கள்
தழைக்கும் வண்ணம்
சேர்ந்தவன், நேரிழை
யோடும் கூடி
தேர்ந்தவர் தேடுவார்
தேடச் செய்தே

சேர்ந்தவன் உறைவிடம்
திருவல்லமே!

என்பது சம்பந்தர் தேவாரம். இன்று சார்ந்தவர் துன்பங்கள் துடைத்து இன்பங்கள் தழைக்கும் ஆற்றலோடு விளங்கும் ஒரு முனிவரும் தங்கும் தலமாக இருக்கிறது இத்திருவலம். இக்கோயில் திருப்பணி இப்போது முடிவு பெற்றிருக்கிறது. இத்திருப்பணியைச் செய்தவர்கள் பிரபல பணக்காரர்கள் அல்ல. அந்த வட்டாரத்தில் மிகசெல்வாக்கு உடையவர்களும் அல்ல.

ஓர் ஏழைப் பரதேசி, வல்லநாதர் என்னும் வில்வாரண்யராம் சித் புருஷராக வாழ்கிறார். பலரது நோயைத் தீர்க்கிறார். அதன் மூலம் பைசா பைசாவாக பணம் திரட்டி, ஒரு பெரிய திருப்பணியையே முடித்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு சிறப்புடையதாகிறது. வல்லநாதருக்குத் தெரியாதா தனக்கு வேண்டியதைத் தானே தேடிக் கொள்ள. ஆம், எவ்வளவுதான் அவரை விட்டு விலகி ஓடினாலும் நம்மைத் தொடர்ந்து வந்து அருளுகிறவர் ஆயிற்றே!

நினையாத நெஞ்சை நினைப்பித்து, கல்லாததைக் கற்பித்து, காணாததைக் காட்டி, சொல்லாதன எல்லாம் சொல்லித் தொடர்ந்து வந்து அடியவர்களை ஆட்கொள்ளுபவராக அல்லவா விளங்குகிறார்? வசதி உடையவர்கள் எல்லாம் சென்று வணங்கி வல்ல நாதர் அருள் பெறுமாறு வேண்டிக்கொண்டு நான் நின்று கொள்கிறேன்.