வேங்கடம் முதல் குமரி வரை 5/005-019

விக்கிமூலம் இலிருந்து
5. திருக்கண்ணமங்கை

த்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு நடன நிகழ்ச்சி. அங்கு நடந்த நடன நாட்டியங்களைக் காண நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். சென்று முன் வரிசையில் உட்கார்ந்திருந்தோம் பஸ்மாசுர மோகினிக் கதையை நடனம் ஆடிக்காண்பித்தார்கள் நடிகர்கள், அதை அடுத்து ஒரு நிகழ்ச்சி, கஜேந்திர மோக்ஷம் என்று கண்டிருந்தது, நிகழ்ச்சி நிரலில். பஸ்மாசுர மோகினியில் பஸ்மாசுரன், சிவன் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு எல்லோரும் மேடையில் தோன்றி நடனம் ஆடியது போல இந்த கஜேந்திர மோக்ஷத்தில் கஜேந்திரன், முதலை, கருடன், மஹாவிஷ்ணு எல்லோருமே மேடை மீது தோன்றப் போகிறார்களோ என்று எண்ணினோம்.

கருடன், மஹா விஷ்ணு வேஷத்தை வேண்டுமானால் மனிதர்களே போட்டுக் கொள்ளலாம். இந்த யானை, இந்த முதலையாக எல்லாம் மனிதர்கள் தோன்ற முடியுமா என்ன? ஏதோ பொம்மையை வைத்துத் தான் நாடகம் நடத்த முடியும்; கதையை ஓட்ட முடியும் போலும் என்று கருதினோம். ஆனால் நடந்தது எல்லாம். நாங்கள் நினைத்தபடி அல்ல.

ஒரே ஒரு நடிகர் மேடை மீது தோன்றினார். பின்னணி வாத்தியங்கள் அமைதியாக ஒலித்தன. மேடை மீது நின்ற நடிகர் இரண்டு கைகளையும் நீட்டி, அவைகளின் மூலமாக் நீர். நிறைந்த தடாகத்தில் அலை வீசும் மெல்லிய அலைகளைக் காண்பித்தார். பின்னர் அதே கைகளால் அல்லி மலரும் அற்புதக் காட்சியையுமே காண்பித்தார். இவற்றின் மூலமாக அல்லிக்குளமே எங்கள் கண் முன் வந்தது.

நடன அரங்கில் தடாகத்தையும் தாமரை மலரையும் இப்படி நம் கண் முன் கொண்டு வந்தவரே, பின்னர் மேடை மீது மெதுவாய் நடக்க ஆரம்பித்தார். இரண்டு காலாலே நடந்தாலும், அவர் நடந்த நடை நாலுகாலால் நடக்கும் பெரிய யானையின் காம்பீர்ய நடையாகயிருந்தது.

ஒரு கை, யானையின் தும்பிக்கை போல மெல்ல மெல்ல நெளிந்து கொண்டே யிருந்தது. இப்படி நடந்த யானை தடாகத்தில் இறங்குவதாகப் பாவனை. அங்கு நீர் உண்பதாகவும், தும்பிக்கையால் நீரை வாரி இறைப்பதாகவும் சிறப்பாகக் காட்டினார் நடிகர். இப்படி நடித்த சில நிமிஷ நேரங்களில் அவரே உடலை வளைத்த வளைப்பில் முதலை தண்ணீருக்குள் நீந்தி வருகின்ற காட்சி எங்கள் கண் முன் வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவரே, முதலை காலைப் பிடித்துக் கொள்ள அதனால் வீறிட்டு அலறும் யானையாக மாறினார்.

பின்னர் அவரே கருடனாக, கருடன் மேல் ஆரோ கணித்து வரும் பெருமானாக எல்லாம் மாறி விட்டார். மேடையில், ஆதிமூலமே என்றழைத்த கஜேந்திரனை முதலைப் பிடியினின்றும் விடுவித்து மோக்ஷமும் அளித்து விட்டார். இத்தனையையும் நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார் ஒரே ஒரு நடிகர், பத்து நிமிஷ நேரத்தில் மேடை மீது நின்று கொண்டே இந்த நடன நாடகத்தை ஆட, நடிகருக்கு எவ்வளவு கற்பனை வேண்டியிருந்ததோ, அதைப் போலவே நாடகத்தைக் காண்பவர்களும் கற்பனை பண்ணிக் கதை முழுவதையும் தெரிந்து கொள்ள, ஏன்? உணர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற் கடவுளாம் திருமாலாக, எல்லாம் ஒரு நடிகர் மாறி மாறி நடித்ததை எல்லாம் அன்று கண்டு களித்து மகிழ்ந்தேன். இன்றும் அதை எண்ணி மகிழ்கிறேன்.

இதே கலையழகைப் பின்னர்ச் சிற்ப உலகில் நான் கண்ட போது அப்படியே அதிசயித்து நின்றேன். தமிழ் நாட்டில் ஒரு சிற்பிக்கு ஒரு கல் கிடைக்கிறது. கல்லின் அளவோ நாலுக்கு இரண்டு {4அடி x 2அடி). அதன் கனமோ ஒன்றரை அடிதான். இந்தக் கல்லைப் பார்ப்பதற்கு முன், சிற்பி கஜேந்திர மோக்ஷத்தையே ஆம். அந்த அற்புதமான கதையைத் தான் தன் மனக் கண்ணில் கண்டிருக்கிறான்.

உள்ளக் கிழியில் உரு எழுதி வைத்திருந்ததைக் கல்லில் உருவாக்கிக் காட்டவும் முனைகிறான். இருப்பதோ ஒரு சிறு கல். அதில் உருவத்தால் பெரிய யானை, அந்த யானையையே பிடித்து இழுக்கும் முதலை, யானையைக் . காக்க வருகின்ற பெருமாள், அந்தப் பெருமாளைத் தூக்கி வருகிற கருடன் எல்லாம் உருவாக வேண்டுமே என்று கவலைப் படவில்லை சிற்பி. கிடைத்த கல்லிலே பெரும் பகுதியைக் கருடனுக்கும் பெருமாளுக்கும் ஒதுக்கி விடுகிறான்.

அடித்தளத்தில் ஒரு சிறிய இடத்தில் வீறிட்டு அலறும் யானை உருவாகிறது. அந்த - யானையின் காலைப் பிடிக்கும் முதலையுமே இருக்கின்ற கொஞ்ச இடத்தில் உடலை வளைத்துக் கொண்டு நெளிவதற்கு ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான், அதன்பின் பறந்து வருகின்ற கருடன்மேல் ஆரோகணித்து அவசரம், அவசரமாகவே வரும் அந்தப் பெருமாளின் கோலம் எல்லாமே உருவாகிறது கல்லில், சிற்பியின் சிற்றுளியால், என்ன வேகம்! என்ன வேகம்! இந்தப் பெருமாளின் வரவிலே என்று எண்ணும் படி செய்து விடுகிறான் சிற்பி. சங்கு சக்கரம் ஏந்திய இரண்டு கரங்கள் போக, இன்னும் இரண்டு கரங்களில் ஒன்று, அபயப்பிரதானம் அளிக்கிறது, மற்றொன்று வரதத்தைத் குறிக்கிறது.

கருடனது உடல் அமைப்பிலே ஒரு கவர்ச்சி, கடவுளின் வடிவிலே ஓர் அழகு எல்லாவற்றையும் உருவாக்கிய கலைஞன் யானை, முதலைகளை செதுக்குவதிலும் நிரம்ப கவனம் செலுத்தியிருக்கிறான். அதனால் உயிருள்ள முதலையையும் உணர்ச்சி மிகுந்த யானையையுமே காண்கிறோம் கல்லுருவில். அப்படி அற்புதமாக ஒரு கல்லில் உருவாகி இருக்கும் சிலையைக் கண்டபின் தான், ஒரே நடிகர் இத்தனையையும் நாம் கற்பனை பண்ணிப் பார்க்கும். அளவில் நடித்துக் காட்டுவது அவ்வளவு அதிசய மில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த அழகான சிலை இருப்பது திருகண்ணமங்கை பக்தவத்ஸலப் பெருமாள் கோயிலில். திருக்கண்ணமங்கை செல்லவேண்டுமானால், திருவாரூருக்குச் செல்ல வேணும். அங்கிருந்து நாலு, ஐந்து மைல் மேற்கே குடவாசல் - கும்பகோணம் போகும் ரஸ்தாவில் போக வேணும். அந்த ரோட்டை விட்டு இறங்கி இன்னும் கொஞ்சம் மேற்கே நகரவும் வேணும். அப்படி நகர்ந்தால் முதலில் தர்சன புஷ்கரணியைத் தரிசனம் பண்ணலாம். குளத்தில் இறங்கிக் குளிக்கத் துணிவில்லாதவர்கள் நீரைத் தலையில் தெளித்துக் கொள்வதுடன் திருப்தி அடைந்து கொள்ளலாம்.

அதன் பின் குடைவருவாயிலைக் கடந்து சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் பக்தவத்சலன் என்னும் பத்தராவிப் பெருமாளையே சேவிக்கலாம்,, பெருமாளைச் சேவித்த பின் கோயில் உட்பிராகாரத்தை வலம் வந்தால் காணலாம், அழகான சிற்பவடிவங்கள் சிலவற்றை. நீர் மல்கினதோர் மீனாய், ஓர் ஆமையுமாய், சீர் மலிகின்ற தோர் சிங்க உருவாகி கார்மலி வண்ணன் கண்ண மங்கைப் பெருமாள் காட்சிதருகிறான் என்று திருமங்கை மன்னன் பாடுகிறான்.

அந்தப் பெருமானின் பத்து அவதாரத்தையும் நாம் அங்குகாணமுடியாவிட்டாலும் "தாயெடுத்தசிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனாம்“ கண்ணனை வேணுகோபாலனாகவே காண்கின்றோம் ஒரு மாடக் குழியில். இத்துடன் பூமி தேவியையே காத்தளித்கின்ற வராக மூர்த்தியையும், இரணியன் குடல் கிழித்து உதிரம் உறிஞ்சிய நரசிம்மனின் பயங்கர உருவையுமே பார்க்கின்றோம் அங்கு.

இவர்களோடு சேம மதில் சூழ் இலங்கையர்கோன் சிரமும் கரமும் துணித்த அந்த ஸ்ரீராமனையே சோதண்டம் ஏந்திய கையனாய்க் காண்கிறோம், இன்னுமொரு மாடக்குழியில், இத்துடன் நான் முன்னரே குறிப்பிட்ட கஜேந்திர மோக்ஷக் காட்சியையும் காண்கிறோம். மகிழ்கின்றோம். நம்மைப் போலவே திருமங்கை மன்னனும் இத்திரு உருவைக் கண்டு மகிழ்ந்திருக்க வேணும், இல்லா விட்டால்

இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய்
முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக். --
குலைய அதனுக்கு அருள் புரிந்தான்.

என்று இந்த கண்ண மங்கைக் காராளனைப் பாட முடிந்திருக்குமா என்ன? இத்தனை சிலைகளையும் தூக்கியடிக்கும் சிலை ஒன்றும் இங்கு உண்டு, ஆதிசேஷனை நினைத்தால், அவன் விரித்த படுக்கையில் சுகமாகப் படுத்து, அறிதுயில் கொள்ளும் அனந்தசயனன் தான் ஞாபகத்துக்கு வருவான். “பாற்கடலில் பாம்பணை மேல் பையத்துயின்றான். பரமன்" என்பது தானே கலைஞன் கற்பனை.

ஆனால் இங்குள்ள பரமனோ, ரொம்பவும் உஷாராகப் படுக்கையை விட்டு, எழுந்தே உட்கார்ந்திருக்கிறான். பாயாகச்சுருண்டு கிடந்த பாம்பே இங்கு கோப்புடைய சீரிய சிங்காசனமாக அமைந்து விடுகிறது, இந்த வைகுண்ட நாதனுக்கு. ஒரு காலை ஊன்றி, ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருக்கும் தோற்றத்திலே ஒரு காம்பீர்யம். ஊன்றிய காலின் மேல் நீட்டிய திருக்கரம், அவன்றன் உல்லாசத்தையே காட்டுகிறது. சங்கு சக்ரதாரியாய் திருமாமணிமகுடம் தாங்கி, புன்னகை தவழ இருக்கும் இந்த வைகுண்டநாதனின் திருஓலக்கம் அழகுணர்ச்சி உடையார் காணும் கலைச்சிகரம். இன்னும் இது போன்ற பல சிற்ப வடிவங்கள். ஆம் இக் கோயிலையே ஒரு நல்ல கலைக் கூடமாக அமைத்து வைத்து விட்டார்கள் நம் நாட்டுச் சிற்பிகள்.

இப்படியே கண்ணமங்கைக் காராளனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீரே. இங்குள்ள தாயாரைப் பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே என்று தானே நினைக்கிறீர்கள். நான் மட்டு மென்ன, இந்தக் கண்ண மங்கை பக்தவத்ஸலனைப் பாடிய அந்தத் திருமங்கை ஆழ்வாரே, அங்குள்ள அபிஷேக வல்லித் தாயாரைப்பாட மறந்து விட்டாரே!

வண்டமரும் மலர்ப்புன்னை .
வரிநிழல் அணி முத்தம்
தென் திரைகள் வரத்திரட்டும்

திருக் கண்ணபுரத்து உறையும்
எண்திசையும் எழு கடலும்
இருநிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு
இழந்தேன் என் ஒளிவளையே.

என்று, இந்த மங்கை மன்னன் கண்ணபுரத்தானை நினைந்து நினைந்து, தான் வளை இழந்ததைச் சொல்லிச் சொல்லி புலம்புகின்றபோது, இக்கண்ணமங்கை அபிஷேக வல்லியை நினையாதது அதிசயம் இல்லை தானே. ஆனால் நான் மங்கை மன்னன் போல் ஒரு மங்கை அல்லவே, ஆதலால் அபிஷேகவல்லி சந்நிதிக்கும் சென்றேன். வணங்கினேன். துதித்தேன், அங்கும் ஓர் அதிசயம் காத்துக் கிடந்தது எனக்கு. இந்தத் தாயார் சந்நிதியிலே ஒரு பெரிய தேன் கூடு. இந்தத் தேன் கூடு, அங்கே எப்போது கட்டப்பட்டது என்று சொல்வார் ஒருவரும் இல்லை.

ஆனால் இந்தத் தேன் கூடு இங்கே கட்டப் பட்டிருப்பதற்குக் கதை மட்டும் உண்டு. கண்ணமங்கையானைப் பிரிய விரும்பாத முனி புங்கவர் பலர் தேனீயாகப் பிறக்கவரம் வாங்கிக் கொண்டார்களாம். அவர்களே இங்குக் கூடு கட்டி அனுவரதகாலமும் பக்தவத்சலன், அபிஷேக வல்லி இருவரையும் சுற்றி சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களுக்குத் தேன் கிடைப்பதும் சிரமமானதாக இல்லை. பெருமாளின் திருமார்பில் அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலேதான் அளவிறந்த தேன் உண்டே. அந்தத் தேனையே உண்டு உண்டு, திளைத்து எந்நேரமும் பாடிக் கொண்டே சுற்றிச் 'சுற்றி வருகிறார்கள். இத்தேன் கூட்டையும் தேனீக்கள் பாடும் பாட்டையும் கேட்டுத்தானே

பாட்டினால் உன்னை
என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய்

என்று பாடினானே மங்கை மன்னன், அது ஞாபகத்திற்கு வராமலா போகும்! இந்தத் தேன் கூட்டுக்கு, அதாவது இந்தக் கூட்டில் வாழும் முனிவர்களுக்கு, இன்று பூசை நடக்கிறது. திருக்கண்ண மங்கை செல்வோர் இதைக் கண்டு தொழாமல் இருப்பதில்லை. நாமும் செல்லலாம். அங்குள்ள கலைச் செல்வங்களை எல்லாம் கண்டு தொழலாம், முனிவர்கள் சேர்த்து வைத்திருக்கும் தேனைக் கூடக் கொஞ்சம் உண்டு மகிழலாம். இங்கு நடக்கும் உற்சவம், வைகுண்ட ஏகாதசி. வைகுண்டநாதன் பக்தவத்சலனாகக் கோயில் கொண்டிருக்கின்ற இடமல்லவா, வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் எல்லாம் செல்லலாம்.