வேங்கடம் முதல் குமரி வரை 5/013-019

விக்கிமூலம் இலிருந்து
13. திருமலை முருகன்

ன்று தமிழ் நாட்டில் பல கோயில் திருப்பணிகள் ஏராளமாக நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மீனாக்ஷி கோயிலில் இருபத்தி ஐந்து லக்ஷம் ரூபாய் செலவில் திருப்பணி நடந்தது. குடமுழுக்கும் நடந்தது. அதைப் பற்றியும் அப்பணியில் ஈடுபட்ட பெருமக்களைப் பற்றியும் விரிவாகப் பலர் பேசுகிறார்கள்.

இந்தத் திருப்பணிக்கே இத்தனை மகத்துவம் என்றால், ஒரு கோயிலையே கட்டியவர்களை கோயிலில் வைத்தே கும்பிடலாம் போல் இருக்கிறது. பல்லவ மன்னன் ராஜசிம்மன் காஞ்சியில் கைலாச நாதருக்கு ஒரு கலைக் கோயிலைக் கட்டியிருக்கிறான். தஞ்சையில் ராஜ ராஜ சோழன் பெரு உடையாருக்கு ஒரு பெரிய கோயிலையே கட்டியிருக்கிறான். மதுரை மீனாக்ஷி கோயிலின் பெரும் பகுதியை திருமலை நாயக்கரே கட்டியிருக்கிறார் என்றெல்லாம் சரித்திர ஏடுகள் பேசுகின்றன.

ஆனால், ஒரு கோயிலுக்குத் திருப்பணி செய்ததும், அக்கோயில் நிர்வாகங்கள் எல்லாம் சரிவர நடைபெற நூற்றைம்பது கோட்டை விரைப்பாடும், தோப்பும், நிலமும் தேடி வைத்தது ஒரு சாதாரணப் பெண் பிள்ளை என்று அறிகிற போது நாம் அப்படியே அசந்து விடுகிறோம். அப்படி ஒரு திருப்பணி செய்தவர்தான் சிவகாமி ஆத்தாள் என்னும் மறவர் குலப் பெண். அத்திருப்பணி. நடந்த தலம்தான் செங்கோட்டையை அடுத்த திருமலை முருகன் கோயில்.

இனி இக்கோயில் உருவான வரலாற்றையும், அங்கு திருமலை முருகன் கோயில் கொண்ட திறத்தையும், அக்கோயிலுக்கு சிவகாமி ஆத்தாள் செய்த சேவையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம் தானே.

திருமலை ஒரு சிறிய மலை தான். அந்த மலையிலே. ஒரு சுனை இருக்கிறது. அதனைப் பூஞ்சுனை என்கின்றனர். அச்சுனையின் கரையிலே ஒரு புளிய மரம் இருக்கிறது. அதனை அடுத்து சப்த கன்னிமார் கோயில், ஒன்றும் இருக்கிறது. அக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூசையை முடித்து விட்டுப் புளிய மரத்தடியில் வந்து இளைப்பாறுகிறார். அங்கு தலையைச் சாய்த்தவர் தூங்கிவிடுகிறார். அவரது கனவில் முருகன் தோன்றி, இந்த மலைக்கு வடபக்கம் ஓடும் அனுமன் நதிக்கரையில் கோட்டை மேடு என்ற இடத்தில் நாம் மண்ணுள் புதையுண்டு கிடக்கிறோம். நம்மை எடுத்து வந்து மலை மீது பிரதிஷ்டை பண்ணினால், உங்கள் அரசனது பிணீ தீரும் என்கிறார். இச்செய்தியை அர்ச்சகர் அரசனிடம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட இடத்தில் இருந்த மூர்த்தியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்கிறான் அரசன். ஆதியில் வேலும் மயிலும் கொண்ட கற்சிலையாகத்தான் முருகன் இருந்திருக்கிறான், அதனையே அர்ச்சகர் கனவு கண்ட புளிய மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறார்கள். அதனையே உத்தண்ட வேலாயுதம் - ஆதிமூல நிலையம் என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பல வருஷங்கள் கழிகின்றன. நெடுவேலி என்ற கிராமத்தில் மறவர் குலத்தில் ஒரு பெண் பிறக்கிறாள். அவளுக்குச் சிவகாமி என்று பெயர் சூட்டப்படுகிறது. நாளும் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள்.

அவளைக் கங்கை முத்துத் தேவர் என்பவர் மணக்கிறார். அவளுக்கோ முருகனிடத்தில் அபார பக்தி. ஆதலால், துறவறம் பூண்டு செவ்விய நெறியிலே வாழ்கிறாள். தன் கணவன் இறந்த பின் தன் சொத்து அத்தனையையும் திருமலை முருகனுக்கே சாஸனம் செய்து கொடுத்து விடுகிறாள். அவள்தான் இக்கோயிலைக் கட்ட முனைந்திருக்கிறாள். மலையடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டல் என்ற இடத்திலே ஒரு சத்திரம் அமைத்து, அதில் இருந்து மலைக்கு வருபவர்களுக்கு ஆகாரமும் நீர்மோரும் கொடுத்திருக்கிறாள். மலைமேல் செல்கிறவர்கள் கையில் ஆளுக்கு ஒரு செங்கல்லும், ஒரு ஓலைப் பெட்டியில் கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்து மலை மீது எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறாள்.

இந்த விதமாகவே செங்கல்லும் சுண்ணாம்பும் மலை மீது வந்து குவிந்து, கோயில் உருவாகியிருக்கிறது - (இன்றும் மலை மேல் நடக்கும் திருப்பணிக்குச் செங்கல்லை ஆண்களும் பெண்களும் சுமந்து செல்கிறார்கள். நூறு செங்கற்கள் கொண்டு செல்ல ஆறு தடவை மலை ஏறவேண்டியிருக்கிறது. அதற்குக் கூலி ரூ 1.25 என்கிறார்கள். ஆம். அன்று மதுரையில் உள்ள சொக்கலிங்கம் பிட்டுக்கு மண் சுமந்தார். இன்றோ நம் மக்கள் துட்டுக்கு மண் சுமக்கிறார்கள்!)

இப்படித்தான் திருமலைக் குமரன் கோயில் சிவகாமி ஆத்தாளால் முதலில் உருவாகியிருக்கிறது. அவள் கனவில் முருகன் தோன்றி, தனக்குச் சேரவேண்டிய சொத்தும் அதற்குரிய சாஸனமும் எங்கே புதைந்து கிடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறான். அதைக் கண்டெடுத்து, அந்த சொத்தை வைத்திருந்தவருடன் வழக்காடி கிட்டத்தட்ட 150 கோட்டை நன்செய் நிலங்களையும், தோப்பு முதலியவைகளையும் கோயிலுக்குச் சேர்த்திருக்கிறாள் இந்த அம்மையார். இப்படி இந்த அம்மையார் செய்த கைங்கரியத்தினால்தான் திருமலை முருகன், இம்மலை மீது நிலை பெற்றிருக்கிறான் என்று அறிகிறபோது நாம் பூரித்து விடுகிறோம்.

இத்திருமலை முருகனைக்காண நாம் நேரே செங்கோட்டை ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கட் எடுக்க வேணும். அங்கிருந்து ஐந்துமைல் வண்டி வைத்துக் கொண்டோ நடந்தோ செல்ல வேணும். அவகாசம் இருந்தால் காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்ஸிற்காகக் காத்து நிற்க வேணும். தென்காசியில் இறங்கினாலும், குற்றாலத்தில் தங்கி இருந்தாலும் அங்கிருந்து காலையிலும் மாலையிலும் செல்லும் பஸ்களிலும் செல்லலாம். சொந்தக்கார் உடையவர்கள் என்றால் ஜாம் ஜாம் என்று காரிலேயே சென்று மலையடிவாரத்தில் இறங்கலாம்.

அதன் பின் மலை ஏற வேணும். மலையடிவாரத்தில் ஒரு பெரிய மண்டபம். அதில் ஒரு கோயில். அங்கு இருப்பவர்தான் வல்லபை கணபதி. எல்லாம் வல்ல சக்தியையே தன் தொடை மீது தூக்கி வைத்துக் கொண்டிருப்பார் அவர். அவரைக் கண்டதும் நமக்கு வடநாட்டு ஞாபகம் தான் வரும். வடநாட்டில் கார்த்திகேயன் கட்டை பிரமச்சாரி, கணபதிதான் சித்தி புத்தி என்னும் இருவரை மணந்தவர். அதே போலத்தான் திருமலையிலும் கணபதிதான் வல்லபையுடன் இருக்கிறார். அவர் தம்பி திருமலை முருகனோ தனித்தே நிற்கிறான். வல்லபை கணபதியை வணங்கி விட்டு மலைமேல் ஏறவேணும்.

முன்னர் அமைத்திருந்த பாதையில் 544 படிகளே இருந்தன. சில பகுதிகள் செங்குத்தாக ஏற வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ நன்றாக வளைத்து ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள். இப்பொழுது மொத்தம் 615 படிகள் இருக்கின்றன. பழனி மலை ஏறும் தூரத்தில் பாதிதான். திருத்தணி மலை ஏறுவது போல் இரண்டு பங்கு ஏறவேணும்.

ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டு பழைய படிக்கட்டுக்களில் ஏறினால், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாரையும் வணங்கி விட்டு, திருமலை முருகனை வணங்கக் கோயிலுள் செல்லலாம். புதிய பாதையில் சென்றால் நேரே கோயில் வாயிலுக்கே வந்து சேர்ந்து விடலாம். கோயிலுள் நுழையுமுன் கோயிலை ஒரு சுற்று சுற்றலாம். அப்படிச் சுற்றினால் கோயிலின் கன்னி மூலையில்தான் ஆதிப்புளிய மரமும் அதன் அடியில் உத்தண்ட வேலா யுதமும்,' ஆதி மூலநிலையமும் இருக்கும்.

அங்கு நம் வணக்கத்தைச் செலுத்தி விட்டு, அதற்கு மேற்புறத்திலுள்ள பூஞ்சுனையையும் பார்த்து விட்டு கோயிலைச் சுற்றிக்கொண்டு திரும்பவும் கோயில் வாயிலுக்கே வந்து சேரலாம். பிராகாரம் முழுவதும் நல்ல சிமெண்ட் தளம் போட்டு வைத்திருக்கிறார்கள். இனி கோயிலுள் நுழையலாம். இங்குள்ள கோயில் அமைப்பு திருச் செந்தூர் செந்திலாண்டவன் சந்நிதியைப் போலத் தான். திருமலை முருகன் கிழக்கு நோக்கியும் சண்முகன் தெற்கு நோக்கியும் நிற்கிறார்கள்.

ஆதலால் முதலில் நாம் கோயிலுள் சண்முக விலாசத்தின் வழியாகவே நுழைவோம். அங்குதான் வசந்த மண்டபம், பெரிய அளவில் இருக்கிறது. அங்கு ஒரு தூணின் உச்சியில் குழந்தை முருகனை அன்னை பார்வதி தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலை இருக்கும்.

அதற்கு எதிர்ப் பக்கத்தில் உயரமான இடத்திலே சிவகாமி ஆத்தாளின் சிலையும் வைத்திருக்கிறார்கள். அவளுக்கு அருள் புரியவே குழந்தை முருகன் அவசரமாக அன்னை மடியிலிருந்து இறங்க முயல்கிறானோ என்னவோ. இருவரையும் வணங்கிவிட்டே உள்ளே சென்றால் உள் பிராகாரத்திற்கு வருவோம். அதையும் கடந்து உள்ளே சென்றால் ஒரே சமயத்தில் திருமலை முருகனையும், வள்ளி தெய்வயானை சகிதம் மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் சண்முகனையும் தரிசிக்கலாம்.

திருமலை முருகன் கம்பீரமான வடிவினன். சுமார் நான்கு அடி உயரத்தில் நல்ல சிலா விக்கிரகமாக நிற்கிறான். அவன் தனது வலது தோளில் ஒரு செப்பு வேலையும் ஏந்தியிருக்கிறான். கருணை ததும்பும் திருமுகம்.

அதனால்தான் அவன் சிறந்த வரப்பிரசாதியுமாக இருக்கிறான். சண்முகன் மிகச் சிறிய வடிவினனே. அவனுக்கும் அவன் துணைவி யாருக்கும் ஆடைகள் உடுத்து, அவர்கள் உருவம் முழுவதையுமே மறைத்து வைத்திருப்பார்கள் அர்ச்சகர்கள். அவன் மஞ்சம் மிகச் சோபையோடு விளங்கும். முருகன் சந்நிதியில் விழுந்து . வணங்கி எழுந்தால் அர்ச்சகர் விபூதிப் பிரசாதத்தை இலையில் வைத்தே கொடுப்பார்.

இப்படி இலை விபூதி கொடுப்பதற்கென்றே சொக்கம்பட்டி ஜமீன்தாராயிருந்த ஒருவர் 12 கோட்டை நன்செய் நிலங்களை மானியமாக விட்டிருந்தாராம். முருகனுக்குத் தினசரி எட்டுக்கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனி நைவேத்தியங்கள். உண்டு. பணம் கொடுத்து நைவேத்தியங்களை அருந்தி நம் வயிற்றுப் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம். ஆத்மப் பசிதான் முருகனை வணங்கி எழுந்ததுமே தீர்ந்திருக்குமே!

முருகனையும் - சண்முகனையும் வணங்கி விட்டு உட்பிராகாரத்தைச் சுற்றினால், ஈசான்ய மூலையில் ஒரு கம்பீரமான வடிவம் நிற்கும். எட்ட இருந்து பார்த்தால் அதுவும் முருகனோ என்றே நினைக்கத் தோன்றும். ஆனால் அது சிவனது பைரவ மூர்த்தம் என்பார்கள். அதற்குரிய சுணங்கள் அங்கிருக்க மாட்டான். இந்த பைரவன் மிக்க வரசித்தி உடையவராம். அதனால் அவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

மேலும் அவரே அக்கோயிலின் பிரதான நிர்வாகி, சந்நிதி வாயில்களை எல்லாம் பூட்டி, சாவியை அவர் முன்பு கொண்டு போய் வைத்து விடுவார்கள். அதன் பின் கோயிலையும் அங்குள்ள சொத்துகளையும் கண்காணிப்பது அவருடைய பொறுப்பு. கோயிலை விட்டு வெளியே வரும்போது ஒரு சிறு மஞ்சத்தில் எழுந்தருளியிருக்கும் திருமலைக் குமரனின் செப்புப் படிமத்தையும் பார்த்து விட வேண்டும். ஒன்றரை அடி உயரமே உள்ள வடிவம்தான் என்றாலும் மிக்க அழகான வடிவம் - இங்கு கோயிலுக்கு ராஜ கோபுரம் கிடையாது. முருகனும் பால்ய வயதே உடையவன் ஆனதால் வள்ளி தெய்வயானை சந்நிதிகளும் கிடையாது.

திருமலை முருகன் நல்ல இலக்கிய ரஸிகன் என்று தெரிகிறது. அவனைத் தனது திருப்புகழ் பாக்களில் அருணகிரியார் பாடி இருக்கிறார்.

எனது உயிர்க்கு உயிர் ஒத்த நவநீதா
சிவாகப் பரமற்கு இளையோனே
தினை வனத் தெரிவைக்கு உரியோனே
திருமலைக் குமரப் பெருமானே

என்பது பாடல். எனக்கு அருணகிரியார் பேரில் பொல்லாத் கோபம் வருகிறது. அவன் வள்ளியைக் கண்ணெடுத்தும் பாராத இளவயதினன் என்றாலும் அவனுக்கு அவளே உரியவள் என்று கோடி காட்டுகிறார். சரி, இது இருக்கட்டும். மங்கைப் பருவத்தின் அழகெல்லாம் திரண்டிருக்கும் வள்ளியை, தெரிவை என்று கிழவியாக்கி விடுகிறாரே அருணகிரியார் என்பது தான் என் கோபத்திற்குக் காரணம். குறிஞ்சிக் கிழவனுக்கு ஏற்ற கிழவியாக இருக்கட்டும் வள்ளி, என்று நினைத்தாரோ என்னவோ! இன்னும் திருமலை முருகன் பிள்ளைத் தமிழுக்கு உரியவனாகவும் இருந்திருக்கிறான். குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு, காதல், பிரபந்தங்களும், இந்த முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்தே பாடப்பட்டிருக்கின்றன.

ஐவர் சகாயன், மருகன்
திருமலை ஆறுமுகத்
தெய்வ சுகாயமுண்டே,
வருமோ கொடுந்தீவினையே

என்று பெரியவன் கவிராயர் பள்ளில் பாடி இருக்கிறார். அத்தகைய உறுதியான உள்ளத்தை அந்த முருகன் அளிக்கக் கூடியவன் என்பதற்காகவே ஒரு நடை அவன் சந்நிதிக்குச் செல்லலாம்.

ஒன்றே ஒன்று, சொல்ல மறந்து விட்டேனே எனது குடும்பத்தின் குலகுருவாய் விளங்கியவர் திருப்புகழ் சாமி என்னும் வண்ணச்சரபம் முருகதாச சுவாமிகள். அவர் திருமலை முருகனிடத்து ஆராத காதல் உடையவர். கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன் திருமலையில் ஏறி இருக்கிறார். திருமலை முருகனை வணங்கி இருக்கிறார்.

மலை மீதிருந்து கீழே தன் உடலை உருட்டியிருக்கிறார். குமரனும். அந்த உடலுக்கு யாதொரு தீங்கும் நேரிடா வண்ணம் காத்திருக்கிறார்.. இதை அவரே பாடுகிறார்.

வடதிசையில் தலை வைத்து
மறலி திசைகால் நீட்டி

உடலை அந்தத் திருமலையின் உச்சியில் நின்று உருட்டி விட்டேன்.

விடலை இடும் தேங்காய் போல்
வேறு பட்டுச் சிதறாமல்
மட மடெனக் கொண்டு ஆங்கோர்
மண்தரையில் விட்டதுவே

இந்தப் பாடலைப் படித்துக் கொண்டே திருமலையினின்றும் இறங்கினேன் நான். எனக்கு என் உடலை உருட்டத் தைரியம் இல்லை. ஆனால் அங்கு அடித்த காற்றில், நான் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி கழன்று படிகளில் உருண்டது. சரி, கண்ணாடி உடைந்திருக்கும், பிரேமாவது மிஞ்சட்டும் என்று ஆள் அனுப்பி உருண்ட கண்ணாடியைத் தேடி எடுத்துவரச் சொன்னேன்.

என்ன அதிசயம்! கண்ணாடி உடைந்து சிதறாமல் அப்படியே இருந்தது. அந்தக் கண்ணாடியை அணிந்து கொள்வதில் மிகுந்த ஆனந்தம் அடைகிறேன். என் குருநாதர் ஆசியையும் திருமலை முருகன் அருளையும் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன்.