வேங்கடம் முதல் குமரி வரை 5/019-019

விக்கிமூலம் இலிருந்து
19. ஆலயங்கள் ஏனையா?

மீப காலத்தில் ஒரு பொருளாதாரப் பேராசிரியரைப் பார்த்தேன். நாட்டிலே பண வீக்கம் குறைவதற்கெல்லாம் பெரிய பெரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார் அவர். அதே சமயத்தில் பலரிடத்தே காணுகின்ற வறுமையையும் அவர் மறந்தாரில்லை. 'எவ்வளவு பொருள், கோயில் என்றும் கூத்து என்றும் தேவரென்றும், திருவிழா என்றும் விரயமாகிறது. இத்தனை பொருளையும் வைத்து ஒரு கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தினால் மக்களுக்கு எவ்வளவு பலன் தரும்! என்றெல்லாம் விளக்கினார். கடவுளைக் கண்டு தொழுவதற்கு கோயில் என்ற இடம் வேண்டுமா? என்ற பெரிய கேள்வியையே கிளப்பினார்.

கீழான மக்களே கடவுளைத் தண்ணீரில் காண்கிறார்கள் அறிஞர்களோ வானவீதிகளில் கடவுளைக் காண்பார்கள்
கல்லினும், மண்ணிலும், மரத்திலும் கடவுளைக் காண்பவர்கள் அறிவிலிகளே தன் உள்ளத்தின் உள்ளேயே கடவுளைக் காண்பவன் தான் மனிதன்

என்ற வேத உரையைக் கூட மேற்கோள் காட்டினார். அவருடைய எண்ணம் கோவில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கி மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம். இட நெருக்கடியும் தீரும். மக்கள் வாழ்வதற்கு நல்ல வசதியாகவும் இருக்கும். கல்லையும் கட்டையையும் விலைக்கு விற்றாலோ ஏராளமான பணம் சேரும். பொருளாதார நெருக்கடி கூடக் கொஞ்சம் குறையும் என்பது தான். இப்படியெல்லாம் திட்டங்கள் வகுத்து கூறும், அவருடைய திறமையான பேச்சைக் கேட்கக் அவர் சொல்லுவதெல்லாம் சரிதானே என்று கூடப் பட்டது எனக்கு.

ஆலயங்கள் ஏனையா?
அபிஷேகங்கள் ஏனையா?
கோலங்கொடிகள் ஏனையா?
கொட்டு முழக்கம் ஏனையா?
பாலும் பழமும் வைத்து நிதம்
பணிந்து நிற்பதேனையா?
சீலம் பேணும் உள்ளத்தைத்
தெய்வம் தேடி வராதோ?

என்றெல்லாம் சிந்திக்க விரைந்தது. என் மனம். உண்மை தானே. எதற்காக இத்தனை கோயில்களைக் கட்டினார்கள் நம் முன்னவர்கள்? எதற்காக இவ்வளவு பொருள்களை விரயம் செய்தார்கள்? கடவுள், கோயில் என்ற இடத்திற்குள் மட்டுந்தானா ஒளிந்து கொண்டிருக்கிறான்? பார்க்கும் இடங்களில் எல்லாம் அவள் பசிய நிறம் காண வில்லையா? கேட்கும் ஒலியிலெல்லாம் அவன் கீதம் இசைக்க வில்லையா? காக்கைச் சிறகினில் அவன் கரிய நிறத்தைப் பார்க்கிறோம். தீக்குள் விரலை வைத்தாலும் அவனைத் தீண்டும் இன்பம் அடைகிறோமே.

இப்படி இருக்க, எங்கும் நிறைந்துள்ள ஏகனுக்கென்று ஒரு தனி இடம் இருப்பானேன்? கடவுள் ஏதோ வானில் இருக்கிறார் என்றோ அல்லது தேவ தேவனாக இருக்கிறான் என்றோ எண்ணிக் கொள்பவர்கள் எண்ணிக் கொள்ளட்டும்.

அவன் நம் நெஞ்சத்துக்குள்ளே இருக்கிறான் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இப்படி நம் உள்ளத்தின் உள்ளேயே இருக்கும் இறைவனுக்கு கோயில் என்ற ஓர் இடம் எதற்கு? கும்பிடுவதற்கு ஒரு குறியீடு எதற்கு? இப்படி எல்லாம் கேட்பவர்களுக்கு பதில் சொல்லத்தானே வேண்டும். நாம் வீட்டின் தலை வாயிலில் நின்று தெருவில் போவோர் வருவோரை எல்லாம் பார்க்கிறோம் கொஞ்ச நேரம் கழித்து யார் யார் போனார்கள் என்று கேட்டால் விழிக்கிறோம்.

ஆனால் அதே சமயத்தில் வீட்டிற்குள் நின்று ஜன்னல் வழியாக தெருவில் செல்பவர்களைக் காணுகிறோம் . எவ்வளவு நேரம் கழித்தாலும் யார் யார் சென்றார்கள் என்று சொல்ல முடிகிறது. இதற்கு காரணம் என்ன? பலர் நம் கண்முன் வருகிற போது ஒருவருமே நிலைத்து நிற்பதில்லை.

ஆனால் ஜன்னல் வழியாகப் பார்க்கிற பார்வையில் அளவு ஒடுங்குகிறது. ஜன்னல் சட்டத்திற்குள் வரும்பர்கள் மாத்திரமே கவனத்தைக் கவருகிறார்கள். மற்றவர்கள் மறைந்து விடுகிறார்கள். இதுபோலத் தான் குடும்ப வேலை முதலிய தொல்லைகள் இருக்கும் போது இந்தப் பரந்த உலகில் எந்த இடத்திலும் மனம் ஒன்றி நிற்பதில்லை. எங்கெங்கோ ஓடுகிறது.

ஆனால் கடவுளை வந்தித்து வணங்க ஒரு இடம் என்று குறிப்பிட்டு விட்டால் அங்கு செல்லும் போதெல்லாம் ஜன்னல் வழியாய் தெருவைப் பார்க்கிற மாதிரி மனம் ஒன்றில் நிலைக்கிறது. கடவுளிடத்து தங்குகிறது. ஆதலால்தான் கோயில் என்று ஓர் இடம் வேண்டியிருக்கிறது. இறைவனை நினைக்க, தொழ எல்லாம். இப்போது விளங்குகிறதா. எதற்காக ஆலயங்கள் எழுந்தன என்று. அங்கு மூர்த்திகளும் ஏன் ஸ்தாபிக்கப் பெற்றார்க ளென்று.

சரி, ஏதோ இறைவனைக் கண்டு தொழ ஓர் இடம் வேண்டும். ஆனால் அதற்காக இத்தனை பிரம்மாண்டமான மதில்கள் வேண்டுமா? கோபுரங்கள் வேண்டுமா? மண்டபங்கள் வேண்டுமா? விமானங்கள் வேண்டுமா? எல்லாம் வல்ல இறைவன் எவ்வளவு பெரியவன்! அவன் கோமகனுக்கெல்லாம் கோமகன் அல்லவா? அக்கோமகனைக் குடியிருத்த அவன் தகுதிக் கேற்ற முறையில் அவன் இல்லம் அமைய வேண்டுமல்லவா? அது காரணமாகவே வானளாவ வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் கோயிலை. பழந்தமிழ் நாட்டில் இந்தக் கோயில்கள் ஒப்பற்ற நிலையங்களாக விளக்கியிருக்கின்றன.

கோயில்கள் எல்லாம் முதல் முதலில் சமயச் சார்புடையவைகளால் வேதான் உருவாகியிருக்கின்றன. கோயில் கட்டுவது ஒரு சிறந்த தருமம், கோயில் நிர்மாணம் சப்தசந்தானத்தில் ஒன்று என்றெல்லாம் மக்கள் நம்பியிருக்கிறார்கள். சாஸ்திரங்களை வேறே எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்படிச் சமயச் சார்பு பற்றி எழுந்த கோயில்களில் பழஞ் சரித்திரத்தைப் பார்த்தால், பல நூற்றாண்டுகளாக மக்களுடைய சமுதாய, பொருளாதார கலை வாழ்விற்கெல்லாம் அவை அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கின்றன. மன்னர்கள் மாறலாம். ஆட்சிகள் மாறலாம், நாடே நிலை பிறழலாம். அப்போதும் கூட மக்களின் நல்வாழ்விற்கு இந்தக் கோயில்கள் ஒரு நிலைக்களனாக நின்றிருக்கின்றன. மக்கள் தங்கள் தங்கள் வீட்டையும் தங்களை ஆளும் அரசனது கோட்டையையும் விட, கோயிலே சிறந்த பாதுகாப்புத்தளம் என்று நம்பியிருந் திருக்கின்றனர். இதையெல்லாம் நாட்டின் சரித்திரம் நன்கு எடுத்துக் கூறுகிறது.

நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்கியஸ்தானம். வகித்திருக்கின்றன. எந்த ஊரிலும், ஊருக்கு நடுவில்தான் கோயில். அதைச் சுற்றிச் சுற்றித்தான் வீதிகள் மதுரையைப் பாருங்கள் நகர நிர்மாணத்திற்கே சிறந்த எடுத்துக் காட்டு என்றல்லவா மேல் நாட்டு அறிஞர்கள் புகழுகிறார்கள். ஒரு குத்துக்கல்லை நாட்டியா அதைச் சுற்றி வீதி அமைப்பார்கள்? நகரத்திற்கே நடுநாயகமாய் எல்லா மக்களையும் தன்பால் இழுக்கவும், அங்கிருந்தே பல இடங்களுக்கு அனுப்பவும் உதவும் ஒரு ஸ்தாபனம் கம்பீரமாகத்தானே எழுந்து நிற்க வேண்டும்.

நான்கு திசைகளில் வாயில்கள் அமைத்து, வாயில்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்கள் எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடத்தையே அல்லவா உருவாக்கி விடுகிறார்கள். இந்தக் கோயில் நிர்மாணத்தில்.

கோயில்கள் எழுந்த உடனே அதைச் சுற்றி வீதிகள். எழுந்திருக்கின்ற வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக் கின்றன. வியாபாரம் வலுக்கவலுக்க நாட்டின் வளமும் பெருகியிருக்கிறது. பல நாட்டு வியாபாரிகள் தங்கள். தங்கள் நாட்டுப் பண்டங்களை கொண்டு வந்து கொடுத்து, தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப் போக வந்திருக்கிறார்கள். இப்படி வருகின்றவர்களுக்கு இன்ன காலத்தில் இன்ன பொருள் இங்கே கிடைக்கும், இந்தச் சமயத்தில் இந்த இடத்தில் இவர்கள் எல்லாம் கூடுவார்கள் என்று தெரிந்து கொண்டால் தானே, இந்தப் பண்ட மாற்றுக்கு வசதியாக இருக்கும். இப்படித் தானே சந்தைகள், திருவிழாக்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. கோயிலை ஒட்டி உத்சவங்களும் இதுகாரணமாகத்தான் வகுக்கப்பட்டிருக்கின்றன பொருளாதாரக் கண்கொண்டு நோக்கினால் ஒவ்வொரு உத்சவமும் ஒவ்வொரு பெரிய சந்தைதான், கூட்டுறவு 'கான் பரன்ஸ்' தான்.

பல நாட்டு மக்கள் இப்படி வந்து கூடக் கூட அவர்கள் தங்க சத்திரங்கள் எழுந்திருக்கின்றன. அவர்களுக்கு உணவளிக்க அன்ன தானங்கள் நடத்திருக்கின்றன. கோயிலை ஒட்டிக் குளங்களும், குளங்களை ஓட்டி தந்த வனங்களும் தோன்றியிருக்கின்றன. இதை யெல்லாம் நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாய் நடக்க பணத்தையும் பொருள்களையும், ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். நிலங்களை மான்யமாக எழுதி வைத்திருக்கிறார்கள். தேவதானங்களும், தேவ போகங்களும் நிலை பெற்றிருக்கின்றன. பல இடங்களிலிருந்து வந்தவர்களும் பொன்னையும் பொருளையும் காணிக்கையாக கொண்டு வந்து குவித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் பண்ட மாற்று கோயிலைச் சுற்றிச் சுற்றியே நடந்து வந்திருக்கிறது.

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கின்றது. கைத்தொழில் பெருகியிருக்கின்றது. கட்டிட நிர்மாணத்தில் கை தேர்ந்த கல் தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள், வல்லுநர்கள், கலைஞர்கள், வர்ண வேலைக்காரர்களுக்கெல்லாம் கோயில்கள் தக்க ஆதரவாய் இருந்திருக்கின்றன, இதனால் பரம்பரை வேலைக்காரர்கள் பெருகியிருக்கிறார்கள். இன்னும் கோயில்கள் கலாக்ஷேத்திரங்களாக, கலைப் பண்ணைகளாக வளர்ந்திருக்கின்றன, இசையும் நடனமும், கோயில்களின் நித்யோஸ் தவத்திலேயே பங்கு பெற்றிருக்கின்றன.

கல்விச்சாலைகளையும், பொருட்காட்சி சாலைகளையும் தன்னுள்ளேயே வைத்திருக்கின்றன இந்தக் கோயில்கள். வியாக்யான மண்டபம், வியாகரண மண்டடம், சரஸ்வதி பண்டாரங்கள் எல்லாம் இந்த கோயில்களுக்குள்ளேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

தென்னாற்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும் செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக் கூடலிலும் பெரிய பெரிய கலாசாலைகளே நடத்திருக்கின்றன. எண்ணாயிரம் கோவிலுக்கு முன்னூறு ஏக்கர் மான்ய நிலம் இருக்கிறது. எல்லாம் அங்கு நடந்த சமஸ்கிருத பாடசாலையை நடத்தத்தான், 340 மாணவர்களுக்கு, தங்க இடமும் உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாகவே அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த 340 மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க பதினைந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாணவருக்கும் தினசரி 4 1/2 சேர் படி நெல் வீதம் கணக்கிட்டு வழங்கியிருக்கிறார்கள். மற்றும் செலவுகளுக்கென வருஷத்திற்கு ஒரு முறை, அரைக் களஞ்சிப் பொன் வேறே வழங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் பொது மக்கள் கொடுத்த இனாம்களிலிருந்தே தான் நடந்து வந்திருக்கிறது. திருமுக்கூடலில் இருந்த பள்ளி இத்தனை சிறப்பு வாய்ந்தல்லாவிட்டாலும் 60 மக்கள் படித்துப் பலனடைய உதவியாயிருந்திருக்கிறது. ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், கோயிலைச் சேர்ந்த மற்ற பணிகளையும் செய்து ஊதியம் பெற்றிருக்கின்றனர். இப்படியே பல இடங்களில் பல கல்விச் சாலைகள் கோயில்களின் ஆதரவிலேயே நடந்து வந்திருக்கின்றன.

மக்களது அறிவு விருத்திக்குக் கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே உடல் நலம் கருதி, மருத்துவ சாலைகளும், கோயில்களுக்குள்ளேயே இருந்திருக்கின்றன. 11ம் நூற்றாண்டில் உள்ள சோழக் கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்தவர், ஒரு ரண வைத்தியர், இரண்டு தாதியர் இன்னும் இதர சிப்பந்திகள், எல்லோரையும் வைத்து மருத்துவசாலை ஒன்று நடத்தி வந்திருக்கிறது ஒரு கோயில். மருந்துகளும் மூலிகைகளும் கூட ஏராளமாக அங்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. இதோடு, கால்நடை மருத்துவத்திற்கு கூட மருத்துவ சாலைகள் இக்கோயில்களில் இருந்திருக்கின்றன என்றால் கேட்பானேன்.

கோயிலை ஒட்டி எழுந்த ஸ்தாபனங்களையும் நிர்வகிக்க ஸ்தானிகர்கள், காரியஸ்தர்களும் இருந்திருக்கின்றனர். பொருளைப் பாதுகாக்க பண்டாரிகள், பூஜைகள் எல்லாம் சரிவர நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், எல்லோருக்கும் மேலே அதிகார புருஷர்கள், அவர்களோடு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள், கோயில் நிர்வாக முறையை ஒட்டியே நாட்டின் நிர்வாகமும், அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி மக்களை எல்லாம் சமுதாய நிலையிலும் கலை வாழ்விலும் பொருளாதாரத் துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இந்தக் கோயில்கள் உருவாகியிருக் கின்றன, ஆலயங்கள் ஏனையா? என்று பொருளாதாரப் பேராசிரியர் கேட்ட கேள்விக்கு விடை இப்போது தெரிகிறதல்லவா?

என்னையா இதெல்லாம். இன்றையக் கோயில்களில் நடக்கக் காணோமே, அதைப் பற்றி என்ன சொல்லுகிறீர் என்று. என்னைக் கேட்காதீர்கள். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இன்றைய நாட்டின் நிர்வாகிகள், நானல்ல.